Sunday, 31 May 2026

சினிமா சீக்ரெட் - கலைஞானம்

 

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவ் ஆனந்த் சென்னை வந்திருந்தார். இரு கூட்டங்கள். ஒன்று சினிமாத்துறையினர் நடத்தியது. இரண்டாவது, கிட்டத்தட்ட பொதுக்கூட்டம்போல. அன்றுதான் சென்னையில் அவரால் படைக்கப்பட்ட ரொமான்சிங் வித் லைஃப் (வாழ்க்கையோடு விளையாடியபடி) நூல் வெளியிடப்பட்டது. அதில் புகைப்படங்கள் இருந்தன. முன்னூறு பக்கப் புத்தகத்தில் இருபது படங்கள்; மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்ட குறிப்புகள். நூலே பொறுப்போடு எழுதப்பட்டிருந்தது. தேவ் ஆனந்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் இருந்திருக்கும். வாக்குக் கொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லை. ஆனால், புத்தகத்தில் ஓரிடத்தில்கூட கசப்பு இல்லை. குறைகூறல் இல்லை. அவருடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை - அசோகமித்திரன்,திரைக்குப்பின்.
 

 
கலைஞானம் என்றாலே சாமானியர்களுக்கு "இது நம்ம ஆளு படத்தில் வந்த ஐயர்" என்று சொன்னால்தான் தெரியும்.ஆனால் அதற்கு பலகாலம் முன்பிலிருந்தே பல்வேறு திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை அமைத்து கொடுத்தவர்,முடிக்கப்பட்ட படத்தில் ஏதோ ஓட்டை இருக்கே என்று இயக்குநர்கள் கலங்கி நின்றபோது அதை நிவர்த்தி செய்ய வழி செய்தவர், சாண்டோ சின்னப்பா தேவர் குடும்பத்தின் வாழ்நாள் விசுவாசி,கடும் நிதி நெருக்கடி நேரங்களில் தனது கதைகளையே அடமானம் வைத்தவர்,அப்பாவித்தனமாக இவர் பல இடங்களில் கதையை சொல்லிவைக்க இவருக்கே தெரியாமல் அதை படமாக்கி இவருக்கு காசு கொடுக்காமல் ஏமாற்றிய பலர் என்று பல்வேறு விரிவான அனுபவ தொகுப்பாக இப்புத்தகம் ஐந்து பாகங்களாக உள்ளது
.மேலே அசோகமித்திரன் தேவ் ஆனந்த் பற்றி குறிப்பிட்டது அப்படியே கலைஞானத்துக்கும் பொருந்தும்.ஐந்து பாகங்கள் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள்.எங்கும் ஒரு வெறுப்பு வன்மம் விரோதம் தென்படவில்லை! நேரில் சந்தித்தே இராத மனிதர்கள் பற்றியெல்லாம் வன்மத்தை கொட்டிவரும் இணைய போராளிகள் இவரிடம் கற்க நிறைய உள்ளது!


  - தேவர் மகன் கதை இவருடையது.ஆனால் அதற்கு கிரெடிட் கொடுக்காமல் காசர் வெறும் 25000 கொடுத்து இவரை அனுப்பி விடுகிறார்.தனது உதவியாளருக்கு தான் அப்போது கொடுத்த சம்பளமே அவ்வளவு என்கிறார் கலைஞானம்.

 
-புதுப்பட்டி பொன்னுத்தாயி படம் அசல் பொன்னுத்தாயி எனும் நாதஸ்வர கலைஞர் தனது கணவரின் மறைவுக்கு பிறகு வாசிப்பதையே நிறுத்தி விட்டதை கற்பனை கலந்து சொன்ன படம்.அப்பட பாடல் ஒலிப்பதிவில்  திருவிழா ஆர்.ஜெய்சங்கர் என்ற நாதஸ்வர கலைஞர் மொட்டையின் பூங்காற்று திரும்புமா பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க மொட்டை அப்படியே அசைவற்று கண்கலங்கி ரசிக்கிறார்.கலைஞானத்திடம் மெதுவாக "மீண்டும் அவரை அதே பாடலுக்கு வாசிக்க சொல்லுங்கள்" என்று சொல்லி 'கண்ணீர் வழிய அப்படியே கலங்கி நின்றபடி ரசித்தார் ' என்கிறார் கலைஞானம்.அதே பட பாடல் பதிவின்போது நாதஸ்வரம் வெடித்து இரண்டாக பிளக்கிறது.மொட்டை ஞானோதயமாக "மங்கல கருவி உடைந்தது நல்லதா படல அண்ணே" என்று கலைஞானத்திடம் சொல்கிறார்.சொன்னபடியே படம் பெட்டிக்குள் போகிறது.
 

திருவிழா ஜெய்சங்கர்

   - ரஜினியை வில்லனாக மட்டுமே சித்தரித்து வந்த இயக்குநர்களுக்கு மத்தியில் இவர் ஏன் ஹீரோவாக கூடாது? என்று பைரவி படத்தில் ரஜினியை ஹீரோவாக்குகிறார்.இதை கேள்விப்பட்ட தேவர் "டேய் வேண்டாம்டா! அதே படத்தில் ஶ்ரீகாந்த் செஞ்ச கேரக்டருக்கு வேணும்னா ரஜினியை போடு.விஷப்பரிட்சை பண்ணாத" என்று எச்சரித்ததையும் மீறி படமெடுக்கிறார்.அதன்பின் நடந்தது வரலாறு!"அந்த ரஜினி உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையா?நீங்கள் ஏன் இப்படி ஒரு பொந்தில் வாழ்கிறீர்கள்" என்று பலரும் கேட்டதற்கு ரஜினியை குறை கூறாமல் "கொடுப்பதும் கொடுக்காததும் அவரது விருப்பம்.அதைப்பற்றி நான் விமர்சிக்க மாட்டேன்" என்று பெருந்தன்மையாக சொல்கிறார்.இப்புத்தகம் வெளியான காலத்திற்கு சில ஆண்டுகள் கழித்து ரஜினி கலைஞானத்துக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசளித்தார் என்று செய்தி வந்தது!

 
 -இளஞ்சோடிகள் படம் இவருக்கே தெரியாமல் ஹிந்தியில் லவ் 86 என்று கோவிந்தாவை அறிமுகம் செய்து வெளியிடப்பட்டு மெகா ஹிட் ஆகிறது.தற்செயலாக டிவியில் அப்படத்தை பார்க்க நேரும் கலைஞானம் பிலிம் சேம்பர் தலைவராக இருந்த முக்தா சீனிவாசன் மூலம் மும்பை சென்று அங்குள்ள தயாரிப்பாளரிடம் இதுபற்றி கேட்க அவர் கதறி அழுதபடி இவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.நிதி நெருக்கடியால் இதை செய்துவிட்டதாக சொல்கிறார்(இவர் ஏற்கெனவே இளஞ்சோடிகள் பட உரிமையை வாங்க கலைஞானத்தை சந்தித்து பிறகு நிதியில்லை என்று மும்பை திரும்பியவர்) .பிறகு அறுபதாயிரம் தான் தன்னால் தர முடியும் என்று சொல்லி மன்னிப்பு கேட்க இவர் பெருந்தன்மையுடன் அதை ஏற்கிறார்.


 
-மிஸ்டர் இந்தியா படத்தை பாலாஜி தமிழில் தயாரிக்க முடிவுசெய்து பாக்யராஜை அணுகுகிறார்.இந்த மாயாஜால கதைகள் எல்லாம் தனக்கு சரியா வராது என்று சொன்னவர் பிறகு ஒருமாதிரி ஒப்புக்கொண்டு "வசனப்பகுதிகளை மட்டும்தான் நான் எடுப்பேன்.மாயாஜால பகுதிகளை வேறு யாரையாவது வைத்து இயக்கி கொள்ளுங்கள்.எனக்கு அது சரி வராது" என்கிறார்.அந்த மாயாஜால காட்சிகளை எடுப்பதற்கான பட்ஜெட்டும் இல்லை தொழில்நுட்பமும் இங்கில்லை என்பதை பாக்யராஜ் உணர்கிறார்.இடையில் பாலாஜிக்கும் இவருக்கும் பெரிய முட்டல் மோதல்.ரஜினி வந்து சமாதானம் முயன்றும் தோல்வி."பாலாஜி துப்பாக்கி எல்லாம் வச்சிகிட்டு மிரட்டுகிறார்" என்கிறார் பாக்யராஜ்.பிறகு பூர்ணிமா பாக்யராஜின் தலையீட்டால் சமாதானம் ஏற்படுகிறது.பாக்யராஜும் பாலாஜியும் ராசியாகி போகிறார்கள்!படம் வெளியாகி படத்தில் பாக்யராஜுக்கு பெரிய பங்கில்லை என்று தெரிந்ததும் மக்கள் கூட்டமும் வருவது நிற்க பெருத்த தோல்வி.
 


    போனி கபூர் தனது தம்பி அனில் கபூரை பெரிய ஹீரோ ஆக்கியே தீர்வது என்ற வெறியில் இருநூறு பிலிம் ரீல்களில் (ஒரு ரீல் ஆயிரம் அடி!!!!!) படமாக்கி அதை பதினான்கு ரீல்களாக எடுத்த படத்தை குறைந்த பட்ஜெட் வச்சு எப்படி எடுக்க முடியும் என்று கேட்கிறார் கலைஞானம்.

 
- கே.பாலச்சந்தரை ஒருமுறை சந்தித்து ஒரு 'கண் மாற்று ' கதையை சொல்கிறார் கலைஞானம்.அதாவது ஒரு  பெண் தனது காதலனை சந்தர்ப்பவசத்தால் பிரிந்து வேறு ஒருவனுக்கு மனைவி ஆகிறாள்.அவனுக்கு விபத்து ஏற்பட்டு பார்வை போகிறது.அப்போது அந்த காதலன் வேறு ஏதோ ஒரு வகையில் இறந்துவிட அவனது கண்களை கணவனுக்கு பொருத்தி விடுகிறார்கள்.அந்த கண்ணின் வெண் விழி படலத்தில் மச்சம் போன்று ஒரு புள்ளி.கணவனின் கண்களில் காதலனின் கண்களை ஒவ்வொருமுறை கண்டதும் அலறியபடி மயங்கி விழுகிறாள் என்பதாக கதை செல்கிறது."கண்களை இவ்வளவு க்ளோசப்பில் படமாக்குற அளவுக்கு கேமரா வசதியெல்லாம் இல்லையே" என்று சொல்லி அனுப்புகிறார் கேபி.பல ஆண்டுகள் கழித்து சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் பத்து கதைகள் சொல்ல வேண்டும் என்று இவரிடம் கேட்க இவர் கடகடவென பத்து கதைகள் சொல்கிறார். அதில் இந்த கண் கதையும் ஒன்று!இதை சொல்லி அடுத்த ஆண்டே அந்தக்கதையை இவரிடம் சொல்லாமல் வேறொரு இயக்குநர் படமாக்கி விட்டதையும் குறிப்பிடுகிறார்!
 

அது என்ன படமென்று உடனே புரிந்திருக்குமே! (ஆனால் இதில் ஒரு தவறாக கண் மாற்று சிகிச்சை என்றால் விழிப்படலத்தை மட்டும் தான் மாற்றுவார்களே அன்றி மொத்த கண் உருண்டையையும் மாற்ற மாட்டார்கள்).
 - ஶ்ரீதர் இயக்கத்தில் அண்ணா நீ என் தெய்வம் நாலாயிரம் அடி எடுத்ததோடு எம்ஜியார் முதல்வர் ஆகிவிட்டதால் நின்றுபோனது.சில ஆண்டுகள் கழித்து அப்படத்தின் தயாரிப்பாளர் நலிந்த நிலையில் இருப்பதை அறியும் எம்ஜியார் பாக்யராஜிடம் அந்த ஃபுடேஜ் ஐ கொண்டு ஒரு முழுநீள படம் எடுத்து தர சொல்கிறார்.அகமகிழும் பாக்யராஜ் கலைஞானம் உதவியுடன் அவசர போலீஸ் படத்தை எடுக்கிறார்.முதல் இரண்டு நாட்கள் திரையரங்கில் கடும் கூட்டம்.அதன்பின் ஒருவரையும் காணோம்! படம் பிளாப்.காரணம் எம்ஜியார் மறைந்த பின்னர் வந்த படமென்பதால் "தலைவரை" காண எம்ஜியார் ரசிகர்கள்  அடித்து மோதி வந்து பார்த்தால் அது பாக்யராஜ் படமாகவே இருந்ததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்!  சம்மந்தமே இல்லாமல் ஒரு பாக்யராஜ் தெலுங்கு பேசி நடித்தது ஒருவித அந்நிய தன்மையை உண்டாக்கி விட்டது மற்றொரு காரணம் என்பது நம் கருத்து!

 
 
- தான் எடுத்த மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் உமையாள்புரம் சிவராமனின் இறுதி காட்சி மிருதங்க வாசிப்பை கேட்டு யாரையுமே எளிதில் பாராட்டாத சங்கீத விமர்சகர் சுப்புடு "இந்தமாதிரி உலகத்திலேயே வேறு யாராலும் வாசிக்க முடியாது" என்று பாராட்டியதை சிவராமன் நன்றியுடன் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டதை குறிப்பிடுகிறார்.இதே படத்தை பார்க்கும் அப்போதைய முதல்வர் எம்.ஜி. ஆர் சிவராமனிடம்  அந்த வாசிப்பை சிலாகித்து சொல்லி "என்ன பிரமாதமா வாசிச்சிருக்க!உனக்கு என்ன வேணும்?" என்று கேட்க "உங்க அன்பிருந்தா போதும்" என்று சிவராமன்  சொல்கிறார்.படத்தை பார்த்துவிட்டு தம்பி சிவாஜி மாதிரி உலகத்திலேயே யாராலும் நடிக்க முடியாது" என்று எம்ஜியார் மனமார பாராட்டியதையும் சொல்கிறார்.
உமையாள்புரம் சிவராமன் 


 

-வேதம் புதிது கண்ணன்  என்ற பெயர் வெகு பிரபலம்.ஆனால் உண்மையில் வேதம் புதிது கதையை ஒருமாதிரி தயார் செய்து பாரதிராஜாவிடம் சொல்கிறார் கண்ணன்.அது ஒரு ஹோட்டல் அறை. அதில் பாரதிராஜா சில மாற்றங்களை சொல்ல கண்ணன் அதை மறுக்க வழக்கம்போல கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் பாரதிராஜா அந்த கதை பேப்பர்களை கண்ணனின் முகத்தில் விட்டெறிந்து விட்டு "கலைஞானம் நாளைக்கு நீங்க இன்னொரு கதை ரெடி பண்ணி கொண்டுவாங்க.இவன் வேண்டாம்" என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறார்.

வேதம் புதிது கண்ணன்

    
 மற்றொருவராக இருந்தால் 'இதான்டா ஜாக்பாட்' என்று பாரதிராஜாவுக்கு தனியாக கதை பண்ணி கொடுத்து எங்கோ சென்றிருப்பார்.ஆனால் கலைஞானம் ஒரு சக படைப்பாளி இப்படி அவமானப்படக்கூடாது என்று நினைத்து கண்ணனிடம் " தம்பி நா இந்தக்கதையை மாத்தி தரேன்.நீ எழுதுனதா சொல்லி எடுத்துட்டுப்போய் முதல்ல அவர் கால்ல விழுந்துடு.அப்பத்தான் அவர் அமைதி ஆவார்" என்று சொல்லி கதையில் திருத்தங்கள் செய்துகொடுத்து அனுப்புகிறார்.பிறகு நடந்தது எல்லாருக்கும் தெரியும்!
-யேசுதாஸ் இவரது படத்திற்கு பாட வருகிறார்."பொதுவாகவே யேசுதாஸ் பாடுகிறார் என்றால் இசையமைப்பாளர் பயத்தில் அவர்கள் வராமல் உதவியாளரை அனுப்பி வைப்பார்கள்.அந்தளவு நுட்பமாக பாடலில் உள்ள ராகத்தில் சந்தத்தில் பல்லவியில் சரணத்தில், வார்த்தைகள் ராகத்துக்குள் மிகச்சரியாக பிசிரில்லாமல் உட்காருகிறதா என்றெல்லாம் நுட்பமாக குறைகளை கண்டுபிடித்து துளைத்து எடுப்பார்" என்கிறார் கலைஞானம். சங்கர் கணேஷ் வராமல் அவரது உதவியாளர் சொல்லி கொடுக்கிறார்.அப்படித்தான் அன்றும்!கலைஞானம் இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய பாடலுக்கு மெட்டமைத்திருந்தார் சங்கர் கணேஷ்.அதை பாடும் முன்பு  குறிப்பிட்ட சில வரிகள் சந்தத்துத்துக்குள் வரவில்லை என்று கடிந்து கொள்கிறார் யேசுதாஸ்.

 

     கலைஞானத்துக்கு திடீரென்று ஒரு கோபம் அவர் பதிலுக்கு திட்டுகிறார். வார்த்தைகள் தடிக்க கடும் சொற்போர்!பிறகு கலைஞானம் கோபித்து கொண்டு ஸ்டுடியோவின் வேறொரு அறைக்கு சென்றுவிட பிறகுதான் யேசுதாசுக்கு தான் சண்டை போட்ட நபர்தான் படத்தின் தயாரிப்பாளர் என்று தெரிகிறது.அவரே ஓடிவந்து மன்னிப்பு கேட்கிறார். ஜீசஸ் தனக்கு இதன்மூலம் பெரிய பாடம் புகட்டிவிட்டதாக சொல்கிறார்.கலைஞானம் அந்தக்கணமே உருகிப்போய்  கண்ணீர் விட்டு ஒரு மகா கலைஞனை தான் அப்படி பேசி இருக்க கூடாது என்று அவரும் வருந்த நட்பு உறுதியாகிறது.
    "சார் இனி நீங்க தயாரிக்கும் எல்லா படத்திலும் நான் பாடுவேன். ஜீசஸ் மீது ஆணையாக அதுக்கு சம்பளமும் வாங்க மாட்டேன் " என்று உறுதி அளிக்கிறார் யேசுதாஸ்.அகமகிழ்ந்து போகிறார் கலைஞானம்.
    ஆனாலும் அவருக்கு மனசு கேட்கவில்லை.எப்படியாவது இவர் பாடிய பாடல்களுக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்துவிட வேண்டுமென்று முடிவெடுக்கிறார்.மற்றொரு சொந்த தயாரிப்பு படத்திற்கு யேசுதாஸ் பாடவரும் போது அதற்கு இராம.நாராயணன் தான் தயாரிப்பாளர் என்று நம்ப வைத்து அவர் கையாலேயே ஒரு பெரிய தொகையை யேசுதாசிடம் கொடுக்க வைக்கிறார் கலைஞானம்!

- கே. பி.சுந்தராம்பாள் வயதான காலத்தில் இவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கிறார்.சுந்தராம்பாள் தினமும் ஒருவேளை மட்டுமே உணவருந்துவார்.சரியாக மதியம் பனிரெண்டு மணிக்கு சாப்பாடு கொடுத்துவிட வேண்டும்.சில நிமிடங்கள் தாமதமானாலும் அன்று முழுவதும் உபவாசம் போல இருந்துவிடுவார் என்கிறார் கலைஞானம். 
 

சுந்தராம்பாளின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது குடும்பத்தினர் சிலரே அவருக்கு எதிராக செய்வினை வைத்தது; கலைஞானம் தனக்கு தெரிந்த ஜோதிடர் மூலம் அதை எடுத்து காப்பாற்றியது, சுந்தராம்பாளின் கொடுமுடி சொத்துக்கள் (கொடுமுடி பேலஸ் மர்மங்கள் என்று மர்மப்படம் போல விளக்குகிறார்)அனைத்தையும் முறையாக மதிப்பீடு செய்து அதை அவரது வாரிசுகளுக்கு சரியான விகிதப்படி சொத்துக்களை பிரித்து கொடுத்தது என்று அனைத்தையும் செய்கிறார் கலைஞானம்.
- சிறுமி மீனா தனது தாய் ராஜ்மல்லிகாவுடன்ஒருமுறை இவரை சந்திக்கிறார்.அப்போது மீனாவின் முன் பற்கள் சற்று தெத்தலாக இருப்பதை கவனித்து ஒரு பல் மருத்துவரை குறிப்பிட்டு அவரிடம் சென்றால் இதை சரி செய்வார் என்கிறார்.மீனாவின் தாயும் அதை மதித்து மருத்துவரிடம் சென்று மீனாவின் பற்களை செம்மையாக்குகிறார்.இதையே தயங்கி தயங்கி தான் மீனாவின் தாயாரிடம் சொல்கிறார்.
 

அதற்கு ராஜ்மல்லிகா " என்னண்ணே இதுக்கு ஏன் இவ்வளவு தயங்கிறீங்க?" என்று கேட்க கலைஞானம் முன்பு ஒருமுறை ஶ்ரீதேவியின் தாயிடம் ஒரு யோசனை  சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்ட அனுபவத்தையும் சொல்கிறார்.ஶ்ரீதேவியின் மூக்கை சரி செய்யும் விதமாக இவர் ஒரு மருத்துவரை குறிப்பிட்டு யோசனை சொல்ல ஶ்ரீதேவியின் தாய் கொதித்துப்போய் உங்க படமே வேண்டாமென்று கதை சொல்லவந்த இவரை வீட்டை விட்டே அனுப்புகிறார்.சில ஆண்டுகள் கழித்து ஶ்ரீதேவி நடித்த ஏதோ ஒரு ஹிந்தி படத்தை இவர் பார்க்கும்போது இவர் சொன்ன மூக்கு தொடர்பான மாற்றங்களுடன் அவர் இருப்பதை காண்கிறார்!

 
- அண்ணாவின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்துவந்த தருணம். எஸ்.ஏ.சந்திரசேகர் நேரடியாக கலைஞானம் அலுவலகத்திற்கு சென்று காத்திருக்கிறார்.கலைஞானம் பதறிப்போய் "என்ன சார் நீங்க சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்திருப்பேனே!" என்று கேட்க "இல்லண்ணே நா வர்றதுதான் முறை" என்று சொல்லிவிட்டு அண்ணாவின் படங்கள் தொடர் தோல்வி அடைவதை சொல்லி "நீங்கதான் ஒரு படத்தை பாத்துட்டு அதுல உள்ள குறைகள் இல்லாம விஜய்க்கு தகுந்தமாதிரி ஒரு கதை பண்ணி கொடுக்கணும்" என்று கேட்க தேவா படத்தை பார்த்துவிட்டு தோல்விக்கு இதெல்லாம் காரணம் என்று குறிப்பிட்டு பிறகு விஷ்ணு படத்தின் கதையை சொல்ல அது வெற்றி பெற்றதாக குறிப்பிடுகிறார்.
 

.
இவ்வளவு வருட அனுபவங்கள் இருந்தாலும் பிழைக்கத்தெரியாத ஒருவனாகவே தான் திரையுலகில் இருந்து விட்டதாக சொல்கிறார்.பெரிதாக காசு பணம் சம்பாதித்தில்லை என்கிறார்.இவரின் கதைகளை வாங்கிக்கொண்டு சில்லறை காசாக கொடுத்தவர்கள்,பைசா கொடுக்காமல் இவர் கதைகளை களவாடி எடுத்து பல லட்சம் பார்த்தவர்கள்,இவரால் ஆதாயம் பல பெற்று இவரை கண்டுகொள்ளாமல் போனவர்கள் என்று எவரை பற்றியும் இந்த புத்தகத்தொகுப்பில் அவர் குறையாக கூறவில்லை."அவர்களது சூழ்நிலை அப்படி!" என பெருந்தன்மையாகவே கடந்து செல்கிறார்!

 

No comments:

Post a Comment