Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Monday, 25 May 2020

The Tell-Tale Brain - V. S. Ramachandran


             வி.எஸ்.ராமச்சந்திரன்  பத்தொன்பதாம்  நூற்றாண்டை நினைவு கூர்கிறார்.அப்போது ஒருவர் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த பெரிதாக  எந்தவித ஆய்வக  வசதிகளும் தேவைப்படவில்லை!மைக்கேல் ஃபேரடே ஒரு காந்தம் மற்றும் காப்பர் காயில் கொண்டு டைனமோ/மின் மோட்டார் கண்டுபிடிக்க காரணமாக இருந்தார்.ஆனால் தற்காலத்தில் எந்த துறையிலும் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட ஆய்வகங்கள், விலையுயர்ந்த கருவிகள் தேவை என்ற நிலையே உள்ளது.அப்படியாக இல்லாமல் 19 ஆம் நூற்றாண்டின் அடிப்படை அணுகுமுறை கொண்டு தற்கால மருத்துவ சவால்களை எதிர்கொள்ள முடியுமா?என்று இவர்  சோதித்ததன் விளைவுகளை, வெற்றிகளை இதில் பதிவு செய்துள்ளார்!
.
இப்புத்தகத்தின் அத்தனை தலைப்புகளையும் பற்றி இங்கே விவரித்தால் வாசிப்பவருக்கு ஒவ்வாமை உண்டாகலாம்!அதனால் சில  தலைப்புகளோடு நிறுத்திக்கொள்கிறேன்.
.


Phantom Limbs.
          உதாரணமாக ஒருவரின் வலது கை விபத்தில் சேதமாகி முற்றிலும் எடுக்கும்படி ஆகிறது.அதான் கையை எடுத்தாச்சே!அடுத்த வேலையை பார்ப்போம் என்று அந்த நபர் நினைத்தாலும் அவரின் மூளை நினைப்பதில்லை.கையில் ஏற்படும் உணர்வுகள் மூளைக்கு சென்று பதிவாகி அதற்கு தகுந்தாற்போல் மூளை ஒரு குறிப்பிட்ட உணர்வை உணரவோ அல்லது அந்த உணர்வின்படி அந்த கைக்கு சமிக்ஞ்சை அனுப்பவோ செய்யும்.
           இப்போதோ கை துண்டிக்கப்பட்டுவிட்டது.மூலையில் வலது கைக்கான இடங்கள் என்பது அப்படியே உள்ளன.ஆனால் அதிலிருந்து வரும் உத்தரவுகளை ஏற்க கை இல்லை.இந்நிலையில் மூளை அந்த கைக்கான உணர்வுகளை உடலின் வேறொரு பகுதிக்கு மாற்றி பதிவு செய்கிறது.
வி.எஸ்.ராமச்சந்திரன்
             உதாரணமாக கை துண்டிக்கப்பட்ட ஒரு நோயாளி இவரிடம்  துண்டிக்கப்பட்ட கை பயங்கரமாக அரிக்கிறது என்கிறார்.வி.எஸ்.ஆர். அவரது முகத்தின் ஒரு பகுதியில் இந்த கைக்கான கட்டளைகளை பெறும் இடங்களாக  மாற்றப்பட்டுள்ளதை அறிகிறார்.முகத்தில் ஒரு பகுதியில் உள்ள ஒவ்வொரு சிறு புள்ளியிலும் ஒவ்வொரு விரல்கள் உள்ளங்கை போன்றவை உள்ளதை அறிகிறார்.பிறகு முகத்தின்  அந்த பகுதியை சொரிவதன் மூலம் வெட்டப்பட்ட கையின் ஒரு விரலில் உள்ள அரிப்பு உணர்வு தீர்ந்து போகிறது.
                 ஒரு கை விளங்காமல் போய் பிறகு துண்டிக்கப்படும் வேறொரு சந்தர்ப்பத்தில் வேறுமாதிரியான நிகழ்வை காண்கிறார் வி.எஸ்.ஆர்.அங்கே அந்த கை செயலிழந்து போய் பல நாள் கழித்தே  துண்டிக்கப்பட்டுள்ளது.அதனால் துண்டிக்கப்பட்ட பிறகும் அந்த கை செயலழிந்த நிலையிலேயே இருப்பதாக மூளை சொல்கிறது.அப்போது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் நன்றாக இருக்கும் வலது கையை காட்டி அதன் நேர் பின்புறம் துண்டிக்கப்பட்ட(அதாவது இல்லாத) இடது கையை சரியான நிலையில் வைத்துக்கொண்டு வலது கையை அசைப்பதன் மூலம் இல்லாத இடது கையின் இறுக்கங்கள்&வலிகள் காணாமல் போவதை கண்டுபிடிக்கிறார்.
துண்டிக்கப்பட்ட இடது கையை கண்ணாடியின் பின்பக்கம் வலது கையின் பிம்பத்தோடு ஒன்றிப்போகும் வண்ணம் வைத்திருத்தல்

               ப்ராக்ச்சர் ஆன கை.கை அசைத்தால் வலிக்கும் என்பது நிரந்தரமாக பதிவாகி கை குணமான பின்பும் கையை அசைத்தால் வலி!A-B நிரந்தரமாக பதிவாகிறது.பிறகு மேற்சொன்ன கண்ணாடி டெக்னிக் மூலம் வலது கையை அசைப்பதன் மூலம் உடைந்து சேர்ந்த இடது கை அசைவதாக மூளை உணர்ந்து வலி இல்லையா?சரி அப்போ அசைச்சிக்க! என்று கட்டளையிட பிறகு இடது கையில் வலி இல்லை!

மிரர் ந்யூரான்- மற்றவரின் வலி உணர்தல்  

.
                ஸ்லாப்ஸ்டிக்.

ஒருவர் வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்து மண்டை உடைந்தால் நாம் சிரிப்பதில்லை.அதே அவர் விழுந்து எந்த சேதாரமும்  இல்லை என்பதை மூளை உணரும்போதே சிரிக்கிறோம்.இத்தகைய நமது மனப்போக்குதான் ஸ்லாப்ஸ்டிக் காமெடிக்கு........உதாரணமாக செந்தில் கவுண்டரிடம் அடிவாங்குதல்,வடிவேலு சேரிலிருந்து சேற்றில் விழுதல்,குண்டு வெடித்தாலும் கருப்பாக நிற்கும் நடிகர்களை பார்த்து சிரித்தல்......இவை அனைத்தும் மேற்சொன்ன மூளையின் கட்டளைப்படியே நிகழ்கிறது.இதை விளக்கிய வி.எஸ்.ஆர். Black Humor களுக்கு நாம் ஏன் சிரிக்கிறோம் என்பதை விளக்காமல் விட்டுவிட்டார்.
           ஒரு குரங்கு இன்னொரு குரங்கை  எதிரில் காணும்போது அதை அச்சுறுத்த பற்களை காட்டியபடி வரும்.பிறகு அது தன நண்பன் என்பதை உணர்ந்ததும் அந்த பற்களை காட்டிய நிலை என்பது சற்று தளர்ந்து அதுவே நமக்கு பரிச்சயமான நபரை பார்க்கும்போது சிரிக்கிறோம் என்கிறார் வி.எஸ்.ஆர்
.
                     பார்வை  


பார்வை என்ற அளவில் நமது மூளையை பொறுத்தளவில் நாம் இன்றும் கற்கால மனிதர்கள்தான்! எந்த செயற்கை விளக்கு,எண்ணெய் விளக்கு,தீப்பந்தம் போன்றவை இல்லாத காலத்தில் மனிதகுலத்திற்கு வெளிச்சம் தந்தது சூரியன் மற்றும் சந்திரனே!அவை இரண்டும் நமது தலைக்கு மேலே உள்ளன.அதனால் மூளையை பொறுத்தளவில் இன்றும் அதற்கு வெளிச்சம் என்றால் நமது தலைக்கு மேலிருந்து வரும் வெளிச்சம் என்பதாகவே அது உணரும்!நீங்கள் உங்கள் தலையை தொண்ணூறு டிகிரி வலது/இடது பக்கம் சாய்த்து பார்க்கும்போதும்மூளைக்கு வெளிச்சம் என்பது தலைக்கு மேலிருந்து வருவதுதான்!அதாவது நீங்கள் தலையை வலதுபுறம் தொண்ணூறு டிகிரி சாய்த்து பார்க்கும்போது வெளிச்சம் என்பது வலது புறத்தில் இருந்து வருவதாகவே மூளை கருதும்.

உதாரணமாக கீழுள்ள படத்தை பார்க்கவும்.முதல் வரிசையை நீங்கள் இட்லி தட்டு போல குழியாக கண்டால் கீழ் வரிசை புடைப்பாக தெரியும்& vice versa.இதற்கு காரணம் மூளையை பொறுத்தளவில் ஒளி என்பது நம் தலைக்கு  மேலிருந்து வரும் ஒன்று!



 அதே காரணத்தால் கீழுள்ள படத்தில் பாதி இட்லி தட்டுகளாகவும் மீதி புடைப்புகளாகவும் கலந்து தெரியும்.
.

 மேலும் நமது மூளையானது அதுவாகவே கோடிட்ட இடங்களை நிரப்பும் தன்மை வாய்ந்தது.உதாரணமாக கீழே உள்ள இருபடங்களை காணும்போது இரண்டிலுமே பெரிய வட்டம், இரு புள்ளிகள், இரண்டு கோடுகள் கொண்டதாக இருந்தாலும் முதல் படத்தை நமது மூளை ஒரு முகமாகவே பதிவு செய்கிறது.இரண்டாம் படத்தில் அப்படி ஒரு ஒழுங்குமுறைசட்டகத்துள் கொண்டுவர இயலாததால் தனித்தனி புள்ளிகளும் கோடுகளுமாக தெரிகிறது.



இதுபோலஒரு அடர்ந்த பச்சைப்புதர் ஓவியம்/புகைப்படத்தில் மெலிதான மஞ்சள் கீற்று தெரிந்தால் இயல்பாகவே நமது மூளை அதை ஒரு புலி/சிங்கமாக பதிவு செய்யும்!

Tuesday, 12 May 2020

மானசரோவர்-அசோகமித்திரன்


      நட்பை மையமாக கொண்டு எத்தனையோ கதைகள் சினிமாவிலும் பிற வகையிலும் வந்துள்ளன.அவற்றில் பெரும்பாலான கதைகள் மிகையுணர்ச்சி நிரம்பித்தளும்புவதாகவே இருக்கும்.அதிலும் தமிழ் சினிமா என்றால் கேட்கவே வேண்டாம்!”குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்ல கூடாது” மாதிரியான அதீத உணர்ச்சிப்பெருக்கில் எழுதப்பட்ட வசனங்களே படம் நெடுக விரவி கிடக்கும்!
                அவ்வகையான மிகையுணர்ச்சி சுழல் எதிலும் சிக்காத ஒரு கதையாக இதை கூறலாம்.வழக்கமாகவே அசோகமித்திரன் கதைகள் என்றாலே விலகல் தொனி என்பதே பிரதானம்.
                   இது சத்யன்குமார் என்ற ஒரு ஹிந்தி ஸ்டாருக்கும்  கோபாலன் என்ற கதை இலாகாவில் பணிபுரியும் ஒரு சாமானியனுக்குமான நட்பை பற்றியது!எந்தவொரு அசோகமித்திரன் கதையிலும் அவரே ஒரு கதாபாத்திரத்தில் தனது தன்மைகளை வெளிப்படுத்துவதுண்டு.அவ்வகையில் இதில் கோபாலின் கேரக்டரில் அவரை காணலாம்.அதற்காக தனது தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இந்த கதாபாத்திரத்தை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை(இந்தக்கதை என்றல்ல.அவரின் மற்ற கதைகளிலும் அப்படித்தான்).
   இந்த இருவரையும் நட்பு என்ற புள்ளியில்  இணைக்கும் இரு புள்ளிகளாக மெஹர் பாபா மற்றும் சித்தர் கதாபாத்திரங்களை கூறலாம்.சத்யன் குமார் கோபாலை நோக்கி நட்பு ரீதியாக ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாக  மெஹர்  பாபா இருக்கிறார்.அவரை போலவே சலனமற்ற அந்த கண்கள் கோபாலுக்கும் இருப்பதாக சத்யன் உணரும் தருணத்தில் அந்த நட்பு உருவாகிறது.
   கோபாலை பொறுத்தளவில் சத்யன் அளவு நட்பில் ஆழ்ந்து திளைக்கும் நபராக இல்லை.உண்மையில் அவன் சத்யனை மதித்து பேசிக்கொண்டிருப்பதற்கு காரணம் சத்யன் பெரிய ஸ்டார் என்பதால் அல்ல.அதிலும் கொஞ்சம் தன்னலமுண்டு.கோபாலுக்கு அவனது  முதலாளி மூன்றுமாத சம்பள பாக்கி வைத்துள்ளார்(தமிழ் சினிமா என்றாலே கதை இலாக்கா நபர்கள்/ரைட்டர்கள் எவ்வளவு மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுவார்கள் என்பதை நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை).உண்மையில் தயாரிப்பாளர்  கோபாலை வேலையை விட்டே தூக்க நினைத்த  அந்த சமயத்தில்தான் சென்னைக்கு படப்பிடிப்பிற்காக வரும் சத்யனுடனான நட்பு துவங்குகிறது.பட தயாரிப்பாளரிடம் “கோபால்ஜி எங்கே?” என்று கேட்டுக்கொண்டே இருப்பதால் முதலாளியும் வேறு வழியின்றி கோபாலை வேலையில் இருந்து நீக்காமல் விட்டுவைக்கிறார்.
    உண்மையில் கோபால் கதை இலாக்காவில் தவிர்க்க முடியாத ஆளுமை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.தமிழ் சினிமாவில் எவருமே அப்படி இல்லை!ஒருவர் இல்லாவிட்டால் வேறு ஒருவரை வைத்து ஒப்பேற்றுவார்கள்.எதுவுமே இல்லாவிட்டாலும் வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குனரின் கதைகளை களவாண்டு ஒருமாதிரி படத்தை எடுத்துவிடுவார்கள்!
    ஹிந்தி சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் பலர் சென்னையில் தயாரிக்கப்படும் ஹிந்தி படத்தில் பணத்திற்காக நடிக்க ஆசைப்பட்டு பிறகு ஹிந்தியில் மார்க்கெட் போன பல உதாரணங்கள் சொல்லப்படுகின்றன.சத்யன் எந்த துணிச்சலில் அது தெரிந்தும் இங்கே படத்தில் நடிக்க வருகிறான் என்பதை ஓரளவிற்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.
    சத்யன் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பெஷாவரில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவன்.குடும்பத்தை விட்டு தனியே மும்பைக்கு வந்து போராடி ஸ்டார் ஆனவன்.பெரும் பேரும் புகழும் இருந்தாலும் வேர்களை தொலைத்து, உறவுகளைத்தொலைத்து அல்லாடும் கதாபாத்திரம்.தனது பேர் புகழ் போய்விட கூடாது என்று மெனக்கெடும் ஆளல்ல.பத்திரிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறான்.அவர்கள் இவனைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதுகின்றனர்.ஒருவகையில் அவன் சென்னையில் தயாரிக்கப்படும் படத்தில் நடிக்க வந்ததே மும்பையில் அந்த வெறுப்பு சூழலில் இருந்து தப்பிக்கத்தான் என்று புரிகிறது.

         ஆனால் கோபால் இதற்கு நேர்எதிர்! குடும்பம், உறவினர் என்று இருந்தாலும் அவற்றில் இருந்து தள்ளியே இருக்கிறான்!ஒரு ரயில் பயணத்தில்  தன் மனைவி மற்றும் மகனை ரயிலில் வேண்டிய தின்பண்டம் வாங்கிகொடுத்து சந்தோஷமாக என்றைக்குமே  அழைத்து சென்றதில்லை என்பதை உணர்கிறான்.
             வேர்களை தேடிக்கொண்டிருக்கும் சத்யனுக்கு நேர்மாறாய் தன் ஊர் ஆசாமிகள் பார்வையில் படாமல் இருக்கவே விரும்புகிறான் கோபால்!அப்படியே யாரேனும் இவனை அடையாளம் கண்டுகொண்டாலும் அவர் என்ன பேசினாலும் அதை உள்வாங்காது ஒப்புக்கு பதில் சொல்லிவிட்டு நழுவுகிறான்.
“அவர்கள் சொல்கிறார்கள் இவர்கள் பேசுகிறார்கள் அவர்களுக்கு கோபம் இவர்களுக்கு வருத்தம் என்ற கட்டுகள் இல்லாமல் ஒருவன் தன் பிறந்த ஊரில் வசிக்க முடியுமா?இதுதான் காரணமோ விடுதலையை தேடி போனவர்கள் அனைவரும் தம் ஊர் தம் சுற்றுப்புறத்திலிருந்து வெகுதூரம் சென்று அனாமதேயர்களாக இருக்க முயன்றது?”

    கதையில் நிஜ வாழ்வின் கதாபாத்திரங்களும் வருகின்றன.சத்யன் குமாரின் அசல் பெயர் யூசுப்.நடிகர் திலீப் குமாரின் அசல் பெயரும் அதுவே!தேவதாஸ் மாதிரியான ஒரு படத்தில் சத்யன் நடித்தது குறித்தும் கதையில் வருகிறது!அதுபோல நௌஷாத்தும் வருகிறார்.சத்யன் தனது மனைவியோடு வந்து அழைத்தால்தான் அவனது இல்லத்திற்கு வருவேன் என்கிறார்.



நேருவின் மரணம் கதையின் ஒருபகுதியில் வருகிறது.நேருவின் மரண செய்தி நாடு முழுக்க தெரிந்த நிலையில் சென்னை சாலையில் செல்லும் ஒரு சவ ஊர்வலத்தில் சென்றுகொண்டிருக்கும் ராமச்சந்திரனை துரத்தி பிடித்து சத்யன் “கோபால் எங்கே?” என்று வினவுகிறார்.”நானே ஹோட்டலுக்கு வந்து சொல்கிறேன்” என்கிறான் ராமச்சந்திரன்.காரில் ஏறி சவ ஊர்வலத்தின் ஊடே புகுந்து முன்செல்வது குறித்து வெட்கப்படுகிறான் சத்யன்.
திலீப் குமார்
    கதைக்கு முக்கியத்துவமற்ற சிறு சிறு சம்பவங்கள் கதையில் விளக்கமாக சொல்லப்படுகிறது.அதன்மூலம் வாழ்வின் அபத்தத்தை உணர்த்துகிறார் அசோகமித்திரன்.உதாரணமாக காரில் கோபாலை தேடிக்கொண்டிருக்கும் சத்யன் சட்டென்று டிரைவரிடம் ஒரு பார்க்கில் நிறுத்துமாறு சொல்கிறான்.ஆள் அரவமற்ற பார்க்.தரையெங்கும் காய்ந்த சருகுகள்.அங்கெ ஒரு மேடையில் அமர்ந்து புகைக்கும் சத்யன் சிகரெட்டை அணைக்காமல் சருகுக்குவியலில் போட்டுவிடுகிறான்.பிறகு திடீரென்று இதனால் பெரும் காட்டுத்தீ போல பரவிவிடுமோ என்ற கவலையில் அந்த சிகரெட் துண்டை தேடுகிறான்.டிரைவர் வந்து கேட்கும்போது வெள்ளி மோதிரம் விழுந்துவிட்டதாக பொய்சொல்கிறான்.டிரைவரும் தீவிரமாக தேடி வேறு ஏதோ ஒரு மோதிரத்தை காட்டி "இதுவா சார்?" என்று கேட்க ஆமாம் என்றபடி யார் மோதிரத்தையோ அணிந்துகொண்டு காரில் ஏறி செல்கிறான்.
  
சத்யன் படப்பிடிப்பு இடைவெளியில் சினிமாவில் வரும் அபத்தக்காட்சிகள் பற்றி நினைப்பதாக பல இடங்கள் வருகிறது.உதாரணமாக...

      “இன்றும் நான் கதாநாயகியை சந்திக்கும் காட்சிதான்.அந்தக்காட்சியில் என் வயது ஐம்பத்தாறுதான் இருக்க வேண்டும்.ஆனால் சினிமாக்காரர்களுக்கு கதாநாயகனை கிழவனாக காட்ட வேண்டும் என்றால் அவனைப் படுகிழவனாகத்தான் காட்டுவார்கள்.தலையும் மீசையும் தாடியும் காட்டேரி போல இருக்க வேண்டும்.அது எப்படி சினிமா கதாநாயகர்களுக்கு என்ன வயதானாலும் தலை வழுக்கை விழுவதில்லை?”

“எனக்கு முகமெல்லாம் மயிர்.கண்ணுக்கு கீழ்  சுருக்கங்களுக்கு  பதில் கருப்பு கோடுகள்.நெற்றியிலும் அவ்வாரே.கிழிந்து போல கொட்டு பாண்ட்.எல்லாப்பணமும் போய் பிச்சைக்காரனாக வாழும் கதாநாயகனுக்கு இப்படிக்கோட்டும் பாண்ட்டும் எங்கு கிடைத்தது?”

பத்தடி உயரத்தில் நின்று ஒளிப்பதிவு செய்பவன் தன் கண் பார்வையில் இருக்கும்போது மேலே இருந்து  விழுந்து விட  கூடாது என்று பயந்து முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்கிறான்.ஏற்கெனவே அதுபோன்ற ஒரு சமயத்தில் ஒருவர் மேலிருந்து  விழுந்து முறிந்த எலும்புகளோடு அதிர்ஷ்டவசமாக பிழைத்த சம்பவத்தையும் குறிப்பிடுகிறான்.

இன்று இரவு இந்த குட்டிச்சுவர் காட்சிகளை முடித்துவிட வேண்டும்.இது படம் பார்க்க வருபவர்களை தொண்டையடைய செய்யும் கட்டம்.படம் முடியும் பொது எல்லாரும் அழுதுகொண்டு வீட்டுக்கு கிளம்பு வேண்டும்.என்னுடைய இந்த சீன்கள் பிரபலமானவை.படத்தின் ஆரம்பத்தில் மூச்சு விடுவதெல்லாம் காதல்.இடைவெளியின்போது காதல் பறிபோதல் அல்லாது நான் தியாகம் செய்துவிடுவேன்.படத்தில் முடிவில் நான் என் காதலிக்கு நேரும் மிகப்பெரிய இக்கட்டை தீர்ப்பேன்.சில படங்களில் உயிரையும் விட்டுவிடுவேன்.நான் உயிர் விடும்போது திணறித்திணறி  பொன்மொழிகளாக உதிர்ப்பேன்.அதை கதாநாயகியும் அவளுடைய கணவனும் அவர்களுடைய பிள்ளை பெண் மாப்பிள்ளை பேரக்குழந்தைகள் கிராமத்தை சேர்ந்த  எல்லாருமாக கேட்டுக்கொண்டு கண்ணீர்விடுவார்கள்.அவர்களுடைய கண்ணீர் வெள்ளத்தில் கொப்புளித்து கொண்டு என் உயிர் சொர்க்கத்துக்கு செல்லும்.







சினிமாவுக்கு எழுதும் வேலையை விட்டால் வேறு வேலை கோபாலுக்கு கிடைப்பது சிரமம் என்பதை உணர்கிறான்.சினிமாவுக்கு எழுதி எழுதி பழகிவிட்டதால் பத்திரிக்கைகளிடம் முன்பணம் வாங்கியும் ஒருவரி எழுத முடியவில்லை.தமிழில் நூறு பக்கங்களை ஒரே மூச்சில் படிக்க முடிவதும் ஆங்கிலத்தில் பத்திருபது பக்கங்கள் படித்தாலும் எதுவும் மனதில் தங்காமல் போவதை உணர்கிறான்.


   தான் எழுதத்தொடங்கிய நாட்களை நினைத்துப்பார்க்கும் கோபால் அந்த கடுமையான நெருக்கடி மனநிலையிலும் கிண்டலாக தமிழ் சினிமா வசனங்களை கிண்டல் செய்கிறான்:
   
 “தஞ்சாவூர் ஜில்லாவில் அனேகமாக மின்சாரமே கிடையாது எனலாம்.ஆனால் நாங்கள் எங்கள் கதைகளில் மின்சாரத்தை தாராளமாகவே பயன்படுத்துவோம்.”அவளுடைய தாவணி நுனி ஒரு வினாடி அவன் மேல் பட்டது;அவனுக்கு உடலெல்லாம் ஷாக் அடித்தது””அவன் விரல்நுனி அவளுடைய கையை தீண்டியபோது அவனுக்கு தலையிலிருந்து கால்வரை மின்சாரம் பாய்வது போல இருந்தது” 

நவீன வாழ்வின் எல்லைகளை வைத்துக்கொண்டு விளக்க முடியாத சம்பவங்கள் கதையில் உண்டு.
     சித்தர் ஒரு வினோத பிறவி.கோபால் கடும் மன நெருக்கடியில் நள்ளிரவில் தெருவில் சுற்றிக்கொண்டிருக்க திடீரென்று ஒரு சந்திலிருந்து வெளிப்படும் சித்தர் “புகையிலை இருக்கா?” என்று கேட்கிறார்.இவர் "இல்லை" என்று சொல்ல ஒரு கடையை சொல்லி அங்கு வாங்கிவர சொல்கிறார்.இந்நேரத்தில் எவன் கடையை திறந்து வைத்திருப்பான்? என்ற சந்தேகத்தில் செல்லும் கோபால் அங்கு சித்தர் சொன்ன கடை திறந்திருப்பதை கண்டு துணுக்குறுகிறான்.அங்கு அவர் புகையிலை வாங்கியதுமே கடையை அடைத்துவிட்டு கடைக்காரன் சென்றுவிடுகிறான்.இப்படியாக பல வினோத சம்பவங்கள்.
                கல்லீரலில் ரத்தக்கசிவு இருந்தாலும்(தேசிய ஊடகங்கள் சத்யனுக்கு குஷ்டரோகம் என்கிறது) கோபாலை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பையில் இருந்து காரில் சென்னை வருகிறான் சத்யன்.நடுவில் கார் ப்ரேக் டவுன் ஆகி நின்றுவிட அங்கு சுகந்த மணம் வீச சித்தர் அங்கு காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய உதவுகிறார்.
பிறகு வேறொரு இடத்தில் சத்யன் மயக்கமடைந்து கண் திறந்து பார்க்கும்போது ஒரு அறையில் படுத்திருக்க அங்கு சுகந்த மணம் வீசுகிறது.சித்தர் திரும்பவும் அவனை பார்க்கிறார்.கதையின் இறுதியில் அவன் சித்தரை சந்திக்கும் போது "உனக்கு நீண்ட ஆயுள் உண்டு.மும்பைக்கு போ" என்கிறார்.

விஞ்ஞானத்தின் போதாத தன்மை குறித்து சத்யன் சிந்திப்பதாக  கதையில் வருகிறது. 
         “விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது.என்னுடைய வாழ்நாளிலேயே எத்தனை மாறுதல்களை கண்டுவிட்டேன்!.....பத்தாண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாததெல்லாம் இப்போது சாத்தியமாகிறது.இதோ இந்த பால் பாயின்ட் பேனா!ஒரு பந்தை உருளவைத்து எழுத முடியும் என்று என் அப்பா நினைத்துப்பாத்திருக்க முடியுமா?ஆனால் மனிதன் தலையில் எதை வைத்து எழுதியிருக்கிறது?என் தலையில் என்ன எழுதியிருக்கிறது?”
கோபாலின் மகளை பதினேழு வயதிலேயே ஜம்பகத்தின் நிர்பந்தத்தின் பேரில் திருமணம் செய்துகொடுக்கிறான் கோபால்.ஆனால் அவளது வாழ்க்கை அப்படியொன்றும் சுகமில்லை.ஒருநாள் தன் வீட்டிற்கு வரும் மகளைக்கண்டு
“பேய் பிசாசுகளை விட பீதி விளைவிக்கும்படி மனிதர்களால் நடந்துகொள்ள முடியும் என்பதை நான் அறிந்திருந்தேன்” என்கிறான் கோபால்.
       

   
               கோபாலின் மனைவி ஜம்பகம் முதலில் சிறிதளவு மனப்பிறழ்வு கொண்டவாளாக காட்டப்பட்டு பிறகு ஒரு நிலையில் மகனையே தலையணை அமுக்கி கொல்லும் நிலைக்கு செல்கிறாள்.அந்தப்பகுதி நேரடியாக விளக்கப்படாமல் அசோகமித்திரனுக்கே உரிய மொழிநடையில் சொல்லப்படுகிறது.அதாவது “மனைவி மகனை கொன்றுவிட்டு நிர்வாணமாக நின்றபடி கத்தினால்.அதை தெரு மக்கள்  வேடிக்கை பார்த்தனர்” என்று எழுதாமல்- எழுதப்படாமல் விட்ட பகுதிகளை வைத்து வாசகன அதை உணரும் வண்ணம் சொல்லியுள்ளார். சத்யன் ஏன் கோபாலை அத்தனை பிரச்சனைகள், உடல் உபாதைகளை தாண்டி சந்திக்க விரும்பினான் என்பதுகூட மேற்சொன்ன சொல்லாமல் விளங்கவைத்தல் பாணியில் கதையின் முடிவில்  சொல்லப்படுகிறது. 
                   சத்யன் குமார் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையிலும் கோபாலை சந்திக்க காரணம் அவன் மனைவி இவன் கையை பிடித்து இழுத்தது."பாபி வேண்டாம்!!!" என்று கெஞ்சியதாக கதறுகிறான் சத்யன்.ஆனால் கோபால் அந்த லௌகீக எல்லைகளை தாண்டி  வேறொரு நிலைக்கு சென்று விட்டான்.
“இந்தப்பக்கம் பத்து மைல் போனால் என் பெண்ணின் கணவரின் கிராமம்.எதிர்ப்பக்கம் இருபது மைல் போனால் என் மாமியார் மாமனார் இருக்கும் ஊர்.ஆனால் நானும் போகவில்லை .அவர்களும் வரவில்லை” என்கிறான் கோபால்.

“இந்த சாயபுவை இங்கே குளிச்சிட்டு போகச்சொல்லு.இதுதான் அவனுக்கு கிடைக்கக்கூடிய மானசரோவர்னு சொல்லு” என்றபடி சித்தர் சென்றுவிடுகிறார்.
அது என்ன மானசரோவர் என்று சத்யன் கேட்க "வடக்கே பனி சூழ்ந்த  ஹிமாலய மலைகளுக்கு நடுவே ஓர் ஏரி.அங்கே குளித்து வந்தால் மனம் சுத்தமாகிவிடும்.மனம் சுத்தமானால் யோகம் சித்திக்கும்.யோகமெல்லாம் நமக்கெதற்கு?மனம் கொஞ்சமாவது சுத்தமானால் போதாதா?” என்கிறான் கோபால்.
    நவீன வாழ்க்கை -இருபத்தியோராம் நூற்றாண்டு என்கிறோம்!அதிநவீன தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த நவீன வாழ்வு உருவாக்கித்தரும் சிக்கல்களை அதே நவீன அணுகுமுறை கொண்டு தீர்க்க முடியாமல் போவதை பல தருணங்களில் காண்கிறோம்!("ஏண்டா பாபு,காலத்திலே அந்தக்காலம் இந்தக்காலம்னு ரண்டு உண்டா?காலம் ஒரே காலம்தான்" -வைத்தி,மோகமுள்) கோபால்  அத்தகைய நவீன வாழ்விற்கு வெளியே அத்தகைய ஒரு தீர்வை கண்டடைகிறான்.சத்யன் நவீன வாழ்வினுள்ளேயே சிக்கி தவிக்கிறான்.


Saturday, 28 September 2019

11/22/63-Stephen King


       ஸ்டீபன் கிங் கதைகள் சிலவற்றோடு பரிச்சயம் உண்டு.ஆரம்பத்தில் இயல்பாக துவங்கி செல்லும் கதை ஒருகட்டத்தில் அமானுஷ்ய சக்திகள்-நிகழ்வுகள் என்று  சென்றுவிடும்.உதாரணமாக The Shining மற்றும் சென்ற வருடம் வந்த The Outsider.இவற்றை ரசிப்போருக்கு இவை நிச்சயம் திருப்தியை தரும் என்றாலும் இம்மாதிரி அமானுஷ்ய தன்மைகள் இல்லாமல் அவர் எழுதிய கதைகள் பற்றி தேடிக்கொண்டிருந்தபோது கண்டடைந்ததே இந்த நாவல்.

    பொதுவாக ஒரு சாமானியனின் கொலை சம்பவத்தை எடுத்துக்கொண்டாலே நேரடியாக சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட வழக்குகள் தவிர்த்து பல்வேறு குழப்பங்கள் நிறைந்த வழக்குகளை சுற்றி எப்போதுமே விலகாத மர்மங்கள் இருந்துவந்துள்ளன. ஒரு சாமானியனின் கொலைக்கே இவ்வளவு சந்தேகங்கள் கேள்விகள் எழும்போது உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பதவி எனப்படும் அமெரிக்க அதிபர் கொலை என்பது எவ்வளவு சந்தேகங்கள்-கேள்விகள்- ஊகங்கள்-குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கமுடியும் என்று விளக்கிசொல்ல தேவையில்லை.
   அத்தகைய கொலைவழக்குகள் குறித்த பல்வேறு சந்தேகங்கள் சதித்திட்டங்கள் குறித்த கோட்பாடுகள் காலம் தோறும் மாற்றத்துக்கு உட்பட்டவாறே இருக்கும்.இந்நாவலில் ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி சுட்டு கொல்லப்பட்ட 22 நவம்பர் 1963 ஐ மையமாக வைத்து எழுதப்பட்டதால் அதையே தலைப்பாக கொண்டுள்ளது.
இறுதி பயணம்!

   கென்னடி கொலை குறித்து அறுபதுகள் தொடங்கி இன்றுவரையிலும் பல்வேறு சதித்திட்டங்கள் குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவாறே இருந்துவருகிறது.அவ்வப்போது இந்த வழக்கில் நேரடியாகவோ மறைமுகமாகவோ  சம்பந்தப்பட்ட நபர்கள் கொடுக்கும் பேட்டிகள்; எழுப்பும் கேள்விகள்; சிஐஏ மற்றும் எப்பிஐ வெளியிடும் ரகசிய  ஆவணங்கள்  இந்த சதித்திட்ட சந்தேகங்களை மென்மேலும் வலுப்பெற செய்கின்றன.
   கென்னடியை சுட்டுகொன்றதாக கைது செய்யப்பட்டவன் லீ ஹார்வி ஆஸ்வால்ட்.டெக்சாஸ் ஸ்கூல் புக் டெபாசிட்டரி எனப்படும் பள்ளி புத்தகங்கள் வைக்கும் அந்த கட்டிடத்தில் தற்காலிக பணியாளனாக வேலைபார்த்துக்கொண்டிருந்த ஆஸ்வால்ட் கென்னடி அந்த கட்டிடத்தின் முன்னே உள்ள பிரதான சாலை வழியே திறந்த காரில் பயணம் செய்வதை தெரிந்துகொண்டு ஆறாவது மாடி ஜன்னலருகே துப்பாக்கியால் செய்து சுட்டதில் கென்னடி மூளை சிதறி பலியானதாக சொல்வார்கள்.
ஆஸ்வால்ட் 

  ஆஸ்வால்ட் கென்னடியை சுட்டுவிட்டு கட்டிடத்தின் வெளியே வந்துகொண்டிருந்தபோது அவனை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அவன்மேல் சந்தேகம் வராததால் அவனை விட்டுவிடுகிறார்கள்.பின்பு  ஜே.டி.டிப்பிட் எனும்  போலீஸ்காரர் வேறொரு இடத்தில்  அவனைக்கண்டு சந்தேகப்பட்டு நிற்க சொல்ல அவரை சுட்டுவிட்டு தப்பிக்கிறான்(என்றுதான் அதிகாரப்பூர்வ தகவல் சொல்கிறது.உண்மை என்னன்னு இன்னமும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.உதாரணமாக டிப்பிட்டை கொன்றதே ஆஸ்வால்ட்தானா?)
 
J.D.Tippit

.பிறகு அவனை ஒரு தியேட்டரில் வைத்து கைது செய்கிறார்கள்..அதாவது கென்னடி கொலை நடந்து நாற்பது நிமிடங்கள் கழித்தே அவன் சிக்குகிறான்.அந்தளவு டெக்சாஸ் போலீஸ் அலட்சியமாகவும் திறனற்றும் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.அதற்கு சிகரம் வைத்தாற்போல் ஆஸ்வால்டை காவல் நிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவரும் போது ஜாக் ரூபி  என்ற பார் ஓனர் அவனை சுட்டு கொல்கிறான்.
ஆஸ்வால்டை  சுடும் ஜாக் ரூபி


           கென்னடியை கொன்றவனை மனசு ஆறாமல் கொன்றதாகவும் இதன்மூலம் போலீசுக்கும் கென்னடியின் மனைவிக்கும் பெரும் சுமையை தான் அகற்றியதாகவும் கூறினான்.அவனுக்கு சிறை தண்டனை பிறகு நுரையீரல் புற்றுநோய் வந்து(??!!) இறந்துபோகிறான்.ஆனால் உண்மையில் அவன் தானாக அதை செய்யவில்லை என்றும் வேறொரு பெரும் கை அவனை இயக்கியதாகவும் இன்றளவும் சொல்வோர் உண்டு,
    இந்நாவலில் ஜேக் எப்பிங்  ஒரு பள்ளி ஆசிரியர்.ஆல் டெம்பிள்டன் என்பவர் ஆல்ஸ் டைனர் என்று  ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அவர் உணவகத்தில் மிக குறைந்த விலையில் பேக்கன் ஹேம் சிக்கன் உணவு வகைகள் விற்கப்படுகிறது.நாய்க்கறியை சமைத்து  விற்கிறார் என்று மக்களுக்கு ஒரு சந்தேகம்.உண்மையில் அவர் உணவகத்தின் பின்புற படிக்கட்டுகள் வழியே(Rabbit hole!) 1958 க்கு சென்று அங்கே பன்றி,கோழி,ஆடு,மாடு மாமிசங்களை 1958 ன் விலையில் வாங்கிக்கொண்டுவந்து 2011(நாவலில் தற்காலம்) ல் சமைத்து கொடுப்பதே அந்த குறைந்த விலைக்கு காரணம்!
   அப்படி அவர் வெறுமனே கறி மீன் வாங்க மட்டும் இதை பயன்படுத்தாமல் வேறு பயனுள்ள வகையில் ஏதேனும் செய்யலாமே என்று நினைக்கிறார்.தந்தையோடு வேட்டைக்கு செல்லும் மகள் காட்டுக்குள் வேட்டையில் மும்முரமாக இருக்கையில் காட்டின் மற்றொரு புறத்தில் வேட்டையாடிக்கொண்டிருக்கும் ஒருவன் மான் என்று நினைத்து சுட இவளின் ஸ்பைனல் கார்ட் சேதமடைந்து காலம் முழுதும் சக்கர நாற்காலியில் இருக்கும்படி ஆனதை தற்காலத்தில் கண்டுகொண்ட ஆல் காலத்தில் பின்சென்று அந்த தினத்தில் வேட்டைக்கு செல்லும் அந்த நபரின் காருக்கு முன்பு மாரடைப்பு வந்தது போல நடித்து அவனை வேட்டைக்கு செல்லவிடாமல் தடுக்கிறார்.அதன்மூலம் அந்த பெண் காப்பாற்றப்படுகிறாள்.
         இது கடந்தகாலத்தின் ஒரு மாற்றம்!அது நிகழ்காலம் வரையில் எதிரொலிக்கிறது.இதேபோல கென்னடி கொல்லப்படுவதை நாம் தடுத்தால் என்ன?என்று நினைக்கிறார்.கென்னடி கொல்லப்பட்டதும் அதிபரான லிண்டன் ஜான்சன் வியத்நாமுடன் போரை மேலும் தீவிரபடுத்துவதாக   அறிவிக்க லட்சகணக்கான அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிர் போகிறது.பல ஆயிரக்கணக்கானோர் ஆயுளுக்கும் முடமாக்கப்படுகிறார்கள்.
கென்னடி இறந்து இரண்டு  மணி நேரம் கழித்து   ஜான்சன் பதவியேற்கிறார்..அருகில் கணவன் மூளை சிதறி இறந்ததை மிக  அருகில் பார்த்த அதிர்ச்சியில் ஜாக்குலின் கென்னடி

        கென்னடி கொலையை தடுத்தால் இத்தனை லட்சம் பேரை காப்பாற்றலாமே!என்று ஆல் நினைக்கிறார்.ஆனால் அதற்குள் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் வந்துவிட அந்த பொறுப்பை ஜேக் எபிக்கிடம் ஒப்படைக்கிறார்.ஜேக் தனது பள்ளியில் பழைய மாணவர் ஒருவர் எழுதிய கட்டுரை கண்ணில்பட அதை வாசிக்கையில் பள்ளி வாட்ச்மேனாக உள்ளவனின் தந்தை பிரான்க் டன்னிங் தனது தாய் மற்றும்  சகோதரிகளை கொலை செய்து தன்னையும் கொல்லும் முயற்சியில் தோல்வியடைந்த (அதனால் தான் ஆயுசுக்கும் நொண்டியே நடக்க வேண்டிய அவல)சம்பவத்தை எழுதியதை வாசிக்கிறான்.
நாவலில் ஒரு கதாபாத்திரம்போலவே வரும் Texas School Book  Depository Buliding
            
         கென்னடி கொலையை தடுப்பதற்கு முன் இவற்றை தடுத்து பரிசோதித்து பார்க்கிறான்.இதில் ஒரு சாதகமான விஷயம் என்னவெனில் டைனருக்கு பின்புற படிக்கட்டில் எப்போது வெளியே சென்றாலும் செப்டம்பர் ஒன்பது  1958 தேதிக்கே செல்ல முடியும்.கடந்த காலத்தில் எத்தனை வருடங்கள் இருந்துவிட்டு திரும்பவும் டைனருக்கு வந்தாலும் தற்காலத்தில்(நாவல்படி 2011) இரண்டு நிமிடங்களே கடந்திருக்கும்!
        ஆனால் ஒருமுறை கடந்த காலத்திற்கு சென்று எதையேனும் மாற்றிவிட்டு வந்தால் பிரச்சனை இல்லை.ஆனால் திரும்பவும் கடந்த காலத்திற்குள் நுழைந்தால் முன்பு செய்த மாற்றங்கள் அத்தனையும் ரீசெட் ஆகிவிடும்!ஆக கடந்த காலத்தில் ஒரு கொலை நிகழாமல் தடுத்துவிட்டு நிகழ்காலத்திற்கு வரலாம்!ஆனால் திரும்பவும் கடந்த காலத்திற்குள் நுழைந்ததுமே அந்த கொலை திரும்பவும் நடக்கும்!   அந்த பெண்ணை காப்பாற்றுகிறான்.பிரான்க் டன்னின்கை கொல்கிறான்.தற்காலத்திற்கு வருகிறான்.ஆனால் டன்னிங் குடும்பத்தை சேர்ந்தவன் ராணுவ வீரனாக வியத்நாமுக்கு சென்று உயிரை விட்டதை அறிந்து வேதனை அடைகிறான்.இப்போது திரும்பவும் கடந்த காலத்திற்கு செல்ல வேண்டும்.

              இம்முறை அந்த பெண்ணை திரும்பவும் காப்பாற்ற வேண்டும்.பிரான்க் டன்னின்கை திரும்பவும் கொல்ல வேண்டும்.பிறகு கென்னடியை காப்பாற்ற வேண்டும்!ஆனால் 1958 ல் நுழைபவன் ஐந்து வருடங்கள் காத்திருந்தே கென்னடியை காப்பாற்ற இயலும்.காரணம் கென்னடியை கொன்றவன் ஆஸ்வால்ட் என்று சொல்லப்பட்டாலும் வேறு யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளனரா என்று தெரியாததால் ஆஸ்வால்டை மட்டும் கொல்லுவதால் கென்னடியை காப்பாற்ற இயலுமா என்ற சந்தேகம் ஜேக்கிற்கு உள்ளது.ஜார்ஜ் ஆம்பர்சன் என்ற போலி பேரில்(போலி ஓட்டுனர் உரிமம் ஐம்பதுகளில் புழக்கத்தில் இருந்த டாலர்கள்,மேலும் பண தேவையை பூர்த்தி செய்ய கால்பந்து, மல்யுத்த போட்டி முடிவுகள்(அதை வைத்து பெட்டிங் கட்டி பன்மடங்கு சம்பாதிக்க)என்று அனைத்தையும் கொடுக்கிறார் ஆல்.பின் அவர் இறந்து போகிறார்.
    ஐந்தாண்டுகள்  சும்மா உட்காந்திருக்க மனமில்லாமல் பள்ளி ஆசிரியர் வேலையில் சேர்கிறான்.ஒருபள்ளியில் தற்காலிக பணி செய்து வெளியே வந்து சிறிது காலம் கழித்து வேறொரு பள்ளியில் சேர்கிறான்.அங்கு அனைவரது மனதையும் கவர்கிறான். ஸேடி டன்ஹில் எனும் நூலகரை காதலிக்க துவங்குகிறான்.
          ஒருகட்டத்தில் ஸேடி இவன் வருங்காலத்தில் இருந்து வந்தவன் என்பதை அறிந்துகொள்கிறாள்.ஜேக் அனைத்து உண்மைகளையும் சொல்கிறான்.தானும் கென்னடியை காப்பாற்ற வருகிறேன் என்கிறாள்."வேண்டாம்!அது ஒரு ராட்சச எந்திரம்.அதன் அருகில் வேறு நபர்கள் வந்தால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும்" என்ற எச்சரிக்கையையும் மீறி அவள் அவனோடு செல்கிறாள்.
             கென்னடி காபாற்றபட்டாரா?ஸேடிக்கு என்ன நடந்தது?ஜேக் திரும்ப 2011 க்கு வந்தானா?கென்னடி காப்பாற்றப்பட்டதால் தற்காலத்தில்  எத்தகைய மாற்றங்களை அவன் கண்டான்...என்பதை மிக சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார் கிங்.குறிப்பாக கென்னடி கொலையை தடுக்க முயலும் அந்த பகுதி Prison Break டிவி சீரிஸ் ஏற்படுத்திய பரபரப்பையும் பதைபதைப்பையும் தருவதாக உள்ளது.மேலோட்டமான பரபரப்புணர்வை  மட்டுமே நாவல் தராமல் கடந்த காலத்தில் வாழ்ந்த (கென்னடி கொலையை சுற்றிய வட்டத்திற்குள் உள்ள)நிஜ மனிதர்களை நேரிலேயே கண்ட உணர்வை தருவதாக உள்ளது.
             குறிப்பாக ஆஸ்வால்ட் சோவியத்திலிருந்து அமெரிக்காவுக்கு வருவது தொடங்கி,ஆளுமை மிக்க-மகனை சபித்துக்கொண்டே இருக்கும் அவனது தாய்,தண்ணீருக்கு வெளியே விழுந்த மீன் போல அமெரிக்காவில் அன்னியமாக உணரும்  மனைவி மரீனா,
மரீனா ஆஸ்வால்ட் 
அவளை அவ்வப்போது  அடித்து உதைத்து கொண்டிருக்கும் ஆஸ்வால்ட், அவர்களது குழந்தை ஜூன் அவனை பார்க்க வரும் ஜார்ஜ் டிமோரென்ஸ்சில்ட்  உள்ளிட்ட பரிச்சயங்கள் இவை அனைத்தும் மிக துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது.நாமே அங்கு சென்று இவற்றை காணும் உணர்வை தருகிறது(இதைத்தாண்டி இந்த உணர்வை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை).அவன் மெர்சிடிஸ் தெரு வீட்டிற்கு வாடகைக்கு வந்ததும் எதிர் வீட்டை வாடகைக்கு எடுத்து தாங்கும் ஜேக் டேபிள் லாம்பில் bug வைத்து அவர்களது உரையாடல்களை ஓட்டு கேட்பது, பைனாகுலர் வைத்து அவர்களது வீட்டை கண்காணிப்பது...இவை எல்லாமே வாசகனையே ஜேக்கின் இடத்தில் நிறுத்திவிடுகிறது .

   நாவலுக்கு அப்பால் கென்னடியை கொன்றது ஆஸ்வால்ட் மட்டும்தானா?இரண்டாவது ஆசாமி புல்வெளியில் இருந்து சுடவில்லையா?சோவியத்தில் இருந்துவந்த ஆஸ்வால்ட் எப்பிஐ மற்றும் சிஐஏ கண்காணிப்பிலிருந்து தப்பித்து இந்த கொலையை எவ்வாறு திட்டமிட முடிந்தது?மேலும் நான்கரை வினாடிகளில் மூன்று முறை எவ்வாறு குறி தவறாமல் சுடமுடிந்தது?ஆஸ்வால்ட் மரீனஸ்ல் இருந்தவன் என்றாலும் இத்தனை துல்லியமாக எவவாறு சுடமுடிந்தது?(இந்த சந்தேகத்தை திசைதிருப்ப ரெண்டே ரெண்டுமுறை தான் சுட்டான்.அந்த ஒரு புல்லட் கென்னடி தொண்டை வழியே வெளியேறி டெக்சாஸ் ஆளுநர் நெஞ்சு வழியே வந்து அவரின் மணிக்கட்டை துளைத்து தொடையில் தஞ்சமடைந்து பின்னர் வெளியே விழுந்ததாக சொல்வார்கள்).இதெல்லாம் நம்பும்படியாக இல்லை.
புல்வெளியின் பின்னணியில் இருந்து துப்பாக்கி வெடிக்கவில்லையென்றால்  இவர்கள் ஏன் இப்படி பதுங்கினார்கள்?


           கென்னடியை கொன்றது ஆஸ்வால்ட் மட்டும்/தான் என்பதை கொஞ்சம் மூளை சரியாக இருக்கும் ஆசாமி கூட நம்ப மாட்டான்.ஆனால் அந்த குழப்பத்திற்குள் போனால் நாவலின் கதை முடிவேயில்லாத ஒரு limbo விற்குள் சிக்கிக்கொண்டுவிடும் என்று ஸ்டீபன் கிங் நினைத்திருக்கலாம்.அதனால் ஆஸ்வால்ட் மட்டுமே கொலைகாரன் என்ற எளிய உத்தேசத்தை வைத்துக்கொண்டு கதை எழுதியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
அந்த தவறை தவிர்த்து இந்நாவல் ஒரு துணிச்சலான முயற்சி என்றே சொல்லவேண்டும்.நம்ம ஊர்லயும் பல தலைவர்களின் மர்ம மரண வரலாறுகள் உண்டு.அதையெல்லாம் வைத்துக்கொண்டு இப்படி ஒரு கதை எழுதினால் அந்த எழுத்தாளரின்  கதி என்ன என்று நினைத்து பார்க்கவே பயமா இருக்கு!
வெட்டி ஒட்டப்பட்ட முகம்?


                           இந்த கால பயணத்தில் ஜேக் உணர்வது ஒரு உண்மையை.கடந்த காலத்திற்கு சென்று அப்போது நிகழ்ந்த ஏதேனும் ஒரு சம்பவத்தை நிகழாமல் செய்தோ வேறுமாதிரி நிகழ வைப்பதோ வெறுமனே அந்த சம்பவத்தோடோ அந்த கால கட்டத்தோடோ முடிந்துவிடுவதில்லை.அந்த மாற்றம் ஏற்படுத்தும் அதிர்வுகள் என்பது காலம்தோறும் நீடிக்கும் ஒன்று.
        அந்த அதிர்வின் வீச்சு என்பது மாற்றப்படும் சம்பவத்தை பொறுத்து.உதாரணமாக 1958  பிராங்க் டன்னிங்கை கொன்று அவன் குடும்பத்தை காப்பாற்றுதல் என்பது தற்காலத்தில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும்   குறிப்பிடத்தகுந்த அதிர்வுகளை உண்டாக்கவே செய்கிறது.ஒரு சாமானிய நபரின் வாழ்வை முடித்துவைக்கும் போதே இத்தகைய அதிர்வுகள் இருக்குமானால் உலகின் சக்திவாய்ந்த அமெரிக்க அதிபரை காப்பாற்றினால் அது எத்தகைய அதிர்வுகளை கால இழைகளில் உண்டாக்கும்?அதன் பின்விளைவுகள் எத்தகையவை?
             காலத்தில் பின்னோக்கி சென்ற பின் அந்த கால கட்டத்திய நடை உடை பாவனைகளை மாற்றிகொண்டாலும் கூட சில நபர்கள் ஜேக்கை ஒரு அந்நியனாகவோ அல்லது  வேறு உலகில் இருந்து வந்தவனாகவே பார்க்கிறார்கள்.came out of nowhere என்கிறார் எப்பிஐ அதிகாரி.1958 க்கு சென்றாலும் அடுத்த ஐம்பதாண்டு வரலாற்று  நிகழ்வுகள் குறித்த பிரக்ஞை என்பது ஒரு மனிதனை 1958 ஐ சேர்ந்தவனாக ஏற்க மறுக்கிறதா?
டயம் ட்ராவல் குறித்த பல படங்கள் குறிப்பாக சில தமிழ் படங்கள் வரை விளையாட்டாக கடந்த காலத்திற்கு சென்று சகட்டு மேனிக்கு நிகழ்வுகளை மாற்றுதல் என்பது உண்மையில் சாத்தியமில்லை.கால இழைகளில் கடும் அதிர்வுகளை உண்டாக்காமல் அது சாத்தியமேயில்லை !(அந்த Green/Yellow/Black card man  ஜேக்கிடம்  பேசும் அந்த தருணங்கள் இதற்கு சாட்சி).


              கடந்த காலம் என்பது தன்னை சுற்றி ஒரு கடினமான தற்காப்பு வளையத்தை கொண்டது.

அதை கிழித்துக்கொண்டே ஒவ்வொரு முறையும் கால பயணத்தை மேற்கொள்கிறார்கள்.பல நூறு முறை கடந்த காலத்திற்கு சென்றுவந்த ஆல்(மலிவு விலையில் மாமிசம் வாங்க சென்றாலுமே)அந்த பாதிப்பு அவரின் உடலை பாதித்து நுரையீரல் புற்றுநோய் வந்து இறக்கிறார்.ஜேக் அத்தனை முறை சென்று வராததால் உடல்ரீதியாக பெரிய பாதிப்பு இல்லை (இரண்டு நிமிடத்தில் முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயதுக்கு போய்விட்டாலும்).ஆனால் மனதளவில் அது பல பாதிப்புகளை குழப்பங்களை உருவாக்கவே செய்யும் என்பதை உணர்கிறான்.தனக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர கடந்த காலத்தை மாற்றியமைப்பதால் கடந்த கால மனிதர்களின் நினைவு இழைகளிலும் ,பொதுவாக  உலகம் முழுமைக்குமே பெரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதை காண்கிறான்(பட்டர்பளை எபெக்ட்).
.
இத்தகைய ஒரு நாவல் கடும் உழைப்பைக்கோருவது.இதை சிரமேற்கொண்டு முடித்த ஸ்டீபன் கிங் பாராட்டுக்குரியவர்.

ஸ்டீபன் கிங் 
ஆனால் இது  முற்றிலும் அசல் வரலாற்று தகவல் அடிப்படையில் எழுதப்பட்டது  என்பதை ஏற்க முடியவில்லை.தவிர கிங் நாவல்களில்(Carrie,The Outsider ..etc..) அடிக்கடி வரும் பள்ளிச்சூழல், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான உறவு,ஆசிரிய-மாணவ உறவு போன்றவைகளை இதிலும் காணலாம்(இரண்டு பள்ளிகள்).சில நேரங்களில் அதுவே நாவலின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டதோ என்ற எண்ணத்தையும் தவிர்க்க இயலவில்லை. மற்றபடி இது ஒரு நல்ல முயற்சி. காலநிலை பயணத்தை நாமே மேற்கொண்ட உணர்வை தருகிறது.

.
 P.S - In Cold Blood நாவலை(இந்நாவல் பற்றிய பதிவினை படிக்க இடதுபுற லிங்கை க்ளிக்கவும்) படித்த உடனே ஹெர்பர்ட் க்ளட்டர் குடும்ப போட்டோக்கள்,கொலை செய்த டிக் பெர்ரி புகைப்படங்கள் அந்த வீடு அதற்கு செல்லும் வழி எல்லா புகைப்படங்களையும் சில நிமிடங்களாவது பார்க்காமல் இருக்கமுடியாது.

அதுமாதிரி இதை படித்ததும் கென்னடி கொலை தொடர்பான புகைப்படங்கள் என்று ஆரம்பித்து மேலும் ஆர்வம் அதிகரிக்க வீடியோக்கள், ஆவணங்கள், கென்னடியின் பிரேத பரிசோதனை அறிக்கை என்று விடாமல் தேடி பார்க்க வைத்தது.இந்த புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோக்கள் இவைகளை பார்க்க பார்க்க கென்னடி கொலை என்பது பூசி மெழுகப்பட்ட ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதியாகிறது.இதில் ஆஸ்வால்ட்க்கு எந்தளவு பங்கு என்பதை உறுதிபடுத்த முடியவில்லை(ஆஸ்வால்ட் வெறும் பலியாடாக கூட இருந்திருக்கலாம்) என்றாலும்  பலரது பங்கு(சிஐஏ எப்பிஐ,மாபியா,நாஜிக்கள்????) இருந்திருப்பதை மறுக்க முடியாது.
.