Showing posts with label ஹேன்கி. Show all posts
Showing posts with label ஹேன்கி. Show all posts

Thursday, 3 May 2018

Stalker 1979

          ....if 300 people are in a cinema watching it, they will all see a different film, so in a way there are thousands of different versions of "Caché -Michael Haneke


                           சாதாரண வணிக சினிமாக்களுக்கு இது பொருந்தாது என்றாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுமுறைகளை கோரும் திரைப்படங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.இப்படமும் அப்படியே!
              ஆன்மீகம் எனும் வார்த்தையே கேலி கிண்டலுக்கு மட்டுமல்லாது தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது ஆன்மீகத்தையும் பக்தியையும் போட்டு குழப்பும் சிலர் ஒருபுறம் இன்னொரு புறம் அரசியல் ஆசையில் சிலர் அதை கேலிகூத்தாக்குவது மறுபுறம்  என்று அவலம் தொடர்கிறது.
         ஒரு திரைப்படமோ புத்தகமோ  இசையோ ஓவியமோ அல்லது வேறு வகையான கலை படைப்போகூட  ஆன்மீக உணர்வைத்தரலாம்!
            அவ்வகையில் என்வரையில் ஆன்மீக உணர்வைத்தந்த சில திரைப்படங்கள்/டிவி தொடர்கள் என்றால் Spring,Summer,Fall,Winter,Twin Peaks, Solaris,Apocalypse Now என்று சிலவற்றை குறிப்பிடலாம்!அவ்வகையிலேயே இப்படத்தையும் சேர்க்கலாம்.
            இப்படம் புறம் சார்ந்தது என்பதைவிட அகம் சார்ந்த ஒரு பயணமாகவே நான் பார்த்தேன்.டர்கோவ்ஸ்கியின் படங்களில் காட்சிகள் மிக மெதுவாக நகரும் என்ற குற்றச்சாட்டு உண்டு.உண்மையில் எதிலும் வேகம் வேகம் என்று ட்யூன் செய்யப்பட்ட ஒரு பரபரப்பான மனநிலையின் ஓட்டத்தை குறைப்பதற்காகவே அத்தகைய காட்சிகள் என்பதை அவர் படத்தை சரியான நோக்கத்தில் அனுகியோர் உணர்வர்!மேலும் முந்தைய காட்சியின் பரிணாமங்கள்,அது உண்டாக்கிய ஆழ்மன  உணர்வு போன்றவற்றை அசைபோடுவதற்காகவும் இந்த நீண்ட மெதுவான காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டதாகவே காண்கிறேன்.

               அனைத்தையுமே கேள்விகளுக்கு உட்படுத்தி உட்படுத்தி எதன் மீதும் நம்பிக்கை இல்லாதோர் குறித்து பொருமுகிறான் ஸ்டாக்கர்.

               Zone எனும் பகுதியில் விண்கல் விழுந்ததாகவும்,அதன் பின்னர் அங்கிருந்த மக்கள் காணாமல் போனதாகவும் தகவல் பரவ அதைக்காண மக்கள் முண்டியடிக்க அவர்களும் ஆபத்தில் சிக்குகிறார்கள்.அரசு அப்பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாய் அறிவிக்கிறது.ராணுவ பாதுகாப்போடு!


          அதையும் மீறி அப்பகுதிக்கு மனிதர்களை அழைத்து செல்கிறான் ஸ்டாக்கர்.ஸ்டாக்கராக இருப்பவர் தனது சொந்த விருப்பத்திற்காக அங்கே செல்லக்கூடாது.நேர்வழியில் செல்ல முடியாது.கண்ணெதிரே தெரியும் இடத்திற்கும் சுற்றி வலைத்துதான் செல்லவேண்டும்.போன வழியில் திரும்ப வர முடியாது.அதற்கு வேறு வழியை கண்டுபிடித்து வர வேண்டும்.பழைய பொறிகள் மறைந்து புதிய பொறிகள் தோன்றும் ஸோன்!
           ஆனால் ஸோனில் ரூம் எனும் பகுதிக்கு செல்வோரின் ஆழமான விருப்பங்கள் நிறைவேறும்!இதிலும் ஒரு புள்ளி!என்னவெனில் ஒரு நபரின் ஆழ்மன விருப்பங்கள் இருவகைப்படும்.
-ப்ரக்ஞைபூர்வமான விருப்பங்கள்
-ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்கள்.
     ரூம் எனப்படும் பகுதியானது ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்களையே நிறைவேற்றக்கூடியது.நமக்கே ப்ரக்ஞைபூர்வமான விருப்பங்களாக நல்ல வீடு மனைவி மக்கள் பேர் புகழ் விருதுகள் என்று பல்வேறு விருப்பங்கள் உண்டு.

        ஆனால் ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்கள் என்னவென்று நமக்கே தெரியாது!"அவனை புரிஞ்சிக்கவே முடியல" என்று நாம் இன்னொருவனை பார்த்து சொல்கிறோம்.ஆனால் நாம் நம்மை எந்தளவு புரிந்துவைத்துள்ளோம்? என்ற கேள்விக்கு பலரால் பதிலே அளிக்க முடியாது.
           நம்மை நாமே முழுமையாக புரிந்துகொள்ள முடியாத நிலையில் ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்கள் குறித்த சிறு ஊகத்தையும் கூட நம்மால் செய்ய முடியாது என்பதே உண்மை!
          அறிவியல் விஞ்ஞானம் எல்லாம் உச்சகட்ட வளர்ச்சியை தொட்டுவிட்டதாக காலம் தோறும் சொல்லப்பட்டாலும் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு அவைகளாலும் எந்த உறுதியான பதிலையும் அளிக்க முடியவில்லை என்பதே உண்மை.
        படத்தில் மக்கள் வாழும் நகரம் என்பது அழுக்கடைந்து மாசுபடிந்து எந்திர இரைச்சலோடு இருப்பதாக காட்டப்படுகிறது.அதேநேரம்  ஸோன் பகுதியானது பச்சை பசேலென்று அமைதி தவழும் மனிதர்களால் வன்புணர்வு செய்யப்படாத ஒரு பகுதி போல காட்டப்படுகிறது.அதற்கு காரணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்!ஸோன் தவிர்த்த பிற பகுதிகள் மனிதனின் அராஜகத்திற்கு எதிர்வினை ஆற்றும் வல்லமை இல்லாதவை!ஆனால் ஸோன் என்பது அப்படியல்ல!அதன் விதிகளுக்கே மனிதன் கட்டுப்பட்டாக வேண்டும்.

          ஸோன் பகுதியிலும் கூட மனித அராஜகத்தின் சின்னமான பீரங்கிகள் துப்பாக்கிகள் போன்றவை ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகின்றன.ஸோன் என்பது உருவாவதற்கு இருபதாண்டுகளுக்கு முன் வரை அங்கு மனிதன் உண்டாக்கிய சேதாரங்கள்  அப்படியே இருக்கின்றன.
             இங்கே படத்திலும் ஒரு ப்ரொபசர்  ஒரு எழுத்தாளர் இருவரும் ஸ்டாக்கரோடு ஸோனுக்குள் செல்கிறார்கள்.எழுத்தாளன் ப்ரொபசர் இருவருமே ஸோன் பகுதியை அலட்சியமாகவே அணுகுகிறார்கள்.ஸோனின் சில பகுதிகள் மதிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாக்கர் சொல்வதை அவர்கள் கேட்பதில்லை.
             இந்த ஸ்டாக்கருக்கு (இங்கே ஸ்டாக்கர் என்பது பெயரல்ல!சட்ட விரோதமான செயலுக்கு உதவுவோரை குறிக்கும் ஒரு பணி) முன்னர் ஒருவன் ஸ்டாக்கராக(Porcupine என்று அழைக்கப்படுகிறான்) இருந்திருக்கிறான்.தனது சகோதரனை ஸோனுக்கு அழைத்து சென்றபோது சகோதரன் இறந்துவிட இவன் ரூமுக்குள் செல்கிறான்.
         எந்த எண்ணத்தோடு?தனது சகோதரன் மீண்டும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஆழ்மன எண்ணத்துடன்!ஆனால் அவன் ஸோனில் இருந்து திரும்பியதும் நடப்பது வேறு.பெரும் பணக்காரன் ஆகிறான்.

         ஏற்கெனவே சொன்னது போல ரூம் என்பது ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்களை மட்டுமே நிறைவேற்றக்கூடியது.அதுவும் நேர்மறையான விருப்பமாக இருந்தால் மட்டுமே!உலக அழிவை ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பமாக கொண்ட ஒருவன் ரூமுக்குள் சென்றால் அவனின் அழிவுக்கே அது இட்டுசெல்லும்.
        Porcupine ன் ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பம் என்பது பெரும்  செல்வந்தனாவது!ஆனால் அவன் ப்ரக்ஞைபூர்வமாக விருப்பப்பட்டதோ தனது சகோதரனின் உயிர்! சகோதரன் மீதான தனது பாசம்/அக்கறை என்பது மேலோட்டமான போலித்தன்மை கொண்டதே என்ற உண்மையை அவன் உணர்ந்ததும் அந்த குற்ற உணர்ச்சி தாளாமல் தற்கொலை செய்துகொள்கிறான்.
            எனவே ஸோன் என்பதும் ரூம் என்பதும் எவ்வகையிலும் விளையாட்டுத்தனமாக  அணுகிவிடமுடியாத ஒரு பகுதி.

              ப்ரொபசரின் விருப்பம் என்பது ஸோன் குறித்த ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி நோபல் பரிசு பெறுவது.அதேநேரம் அந்த ரூம் எனப்படும் பகுதி இங்கே வரும் மனிதர்களால் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற கவலையையும் அவர் கொண்டுள்ளான்.அதற்காக தனது பையில் சிறு அணுகுண்டு எடுத்து வந்துள்ளான்.ரூமை நிரந்தரமாக அழிக்க.அவரை பொறுத்தளவில் ஸோன் என்பது ஒரு ஆராய்ச்சிக்கான ஒரு இடம்.அதன் மர்ம பகுதிகள் பற்றியெல்லாம் அவர் காதில் போட்டுக்கொள்வதில்லை.
               எழுத்தாளனோ பேசிக்கொண்டே இருக்கிறான் .அவனுக்கு எதன் மீதும் நம்பிக்கை இல்லை.A cynic to the core!தொடர்ந்து எழுது எழுது என்று ஊடகங்கள் விமர்சகர்கள் நிர்பந்திப்பதாக புலம்புகிறான்.ஒரு ரத்த கட்டியை பிதுக்கி எடுப்பது போன்றதே தான் எழுதும் எழுத்து என்கிறான்.ஸோனுக்கு அவன் வந்தது கூட ஒருவித உத்வேகத்தை அது கொடுக்கும் என்ற கடைசி நம்பிக்கையில்தான்!இந்த ஸோன் என்ற மிக புதிரான பகுதி கூட அவனுக்கு எவ்வித ஆர்வத்தையோ நம்பிக்கையையோ எழுதுவதற்கான உத்வேகத்தையோ  ஏற்படுத்தவில்லை.இனிமேல் எந்த ஆதாரத்தில் தான் எழுதப்போகிறோம் என்று அழுகிறான்


          ஆனால் தவறான ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பத்தோடு ரூமுக்குள் நுழைவோர் அழிவையே சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து அந்த குண்டை டிஃப்யூஸ் செய்து தண்ணீரில்  எறிகிறான்.
          எழுத்தாளன் ப்ரொபசர் இருவருமே ரூமுக்குள் நுழைய தயங்குகிறார்கள்.Porkupine கதையை கேட்டபிறகு தங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள் எத்தகையதாக இருக்கக்கூடும் என்ற தயக்கமோ அல்லது தனக்கே தெரியாமல் தவறான ஆழ்மன விருப்பத்தோடு உள்ளே சென்றால் தனக்கே அழிவு என்ற பயம் காரணமோ!
            இங்கே வரும் கதாபாத்திரங்கள் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை.அவரவர் தொழில் சார்ந்த பெயர்களாலேயே அழைக்கப்படுகிறார்கள்.உலகில் மனிதர்கள் எடை போடப்படுவது குணம் சார்ந்து அன்றி  அவரவர் தொழில்/பணி சார்ந்தே என்பதை நாம் மறுக்க முடியாது!
     ஸ்டாக்கரின் நோக்கம் என்பது தன்னலமற்றது.தனக்கான சொந்த விருப்பத்தோடு  ஒரு ஸ்டாக்கர் ரூமுக்குள் நுழைய முடியாது என்ற வரைமுறையால் அது வந்ததல்ல!அவன் இயல்பிலேயே அவ்வாறு நல்ல மனம் கொண்டவனாக இருக்கிறான்.அர்த்தமற்ற நகர வாழ்க்கைக்கு முரணாய் அர்த்தமுள்ள ஒரு பயணமாகவே ஸோனுக்கு செல்லும் பயணத்தை அவன் கருத்துகிறான்.வாழ்வில் ஒரே பிடிப்பாக அப்பயணம் இருப்பதாய் கூட சொல்லலாம்!

       அகத்திலிருந்து புறம் வரை வெறுமையைக்கொண்டவர்களை இங்கே வழிநடத்தி அழைத்து வருவதிலேயே மன நிறைவைக்கொண்டவனாக இருக்கிறான்.'இங்கே அழைத்து வந்து திரும்ப அவர்களை ஊருக்குள் விட்டதும் அவர்கள் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியாது' என்கிறான்.ஆக அவர்களிடம் எந்தவித பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவில்லை.அவன் மிக மிக வறுமையான நிலையில்தான் இருக்கிறான்.ஸோன் உடன் ஒருவித உளவியல் ரீதியான பிணைப்பை கொண்டவனாகவே நாம் ஸ்க்கரை காண முடிகிறது!இதை வார்த்தைகளில் விளக்க முடியவில்லை!
         படத்துவக்கத்தில் ஸ்டாக்கரின் மனைவி அழுது புலம்பி அவனை ஸோனுக்கு போக வேண்டாம் என்கிறாள்.ஏற்கெனவே ஸோனுக்கு போனதற்காக சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தவன் அவன்.எனக்கு எங்குமே சிறையில் இருப்பது போலத்தான் என்று சொல்லி அவள் பேச்சை கேட்காமல்  செல்கிறான்.பட முடிவில் தான் ஸோனுக்கு செல்ல விரும்புவதாக அவள் தெரிவித்ததும் "உனது ஆசைகள் நிறைவேறாது" என்கிறான் ஸ்டாக்கர்.
                மிக களைப்பாக இருப்பதாக சொல்வதுடன் மனிதர்கள் அனைத்தின் மீதான நம்பிக்கையையும் இழந்து விட்டதாக புலம்புகிறான்.
                      ஸ்டாக்கர் ஸோனுக்கு அடிக்கடி சென்று வந்ததாலேயே அவர்களின் பெண் குழந்தைக்கு கால்களே இல்லை என்ற பேச்சும் ஊருக்குள் உலவுகிறது.அவளும் வாக்கிங் ஸ்டிக் வைத்துதான் நடக்கிறாள்.ஆனால் பார்வையிலேயே பொருட்களை நகர்த்தும் திறன் அவளிடம் உள்ளதாக படம் நிறைவடைகிறது.

             படம் நெடுகவுமே பலவேறு ஆழமான கருத்துக்களை ஆன்மீக  சிந்தனைகளை காண முடிகிறது.மனிதன் பிறக்கும் போது வலுவற்று நெகிழ்வுத்தனமையோடு இருக்கிறான்.வளர வளர இறுக்கமும் நெகிழ்வற்ற தன்மையும் நிறைந்து இறுகிப்போய் சாகிறான்!
           ஹாலிவுட் ஆக்ஷன் படங்களையே பார்த்து பழக்கப்பட்ட ஒரு நபர் இப்படத்தை பார்க்கும்போது "இவ்வளவு சஸ்பென்சாக நகருதே!திடீர்னு ஏதாவது மனிதனை விட ஆயிரம் மடங்கு பெரிதான ஒரு ஜந்து தரை அதிர வரும் என்றோ திடீரென்று கொழ கொழவென்று ஏலியன்கள் வானத்தில் இருந்து குதிக்கப்போகிறார்கள் என்றோ கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள்.அவர்களுக்கான படமல்ல இது!
       அடுத்து என்ன ?அடுத்து என்ன? என்று இந்த தருணத்தை மதிக்காமல்   எதிர்பார்க்க வைக்கும் படமல்ல இது!இந்நொடியை  இத்தருணத்தை முழுமையாக எதிர்கொண்டு உள்வாங்க சொல்லும் ஒரு படமே இது !
                  

Sunday, 6 August 2017

Caché (2005)


    இப்படம் ஜாலியாக பாப்கார்ன் கொறித்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தபடியோ படுத்தபடியோ பார்க்க முடிகிற படமல்ல!அவ்வளவு ஈசியாக எல்லாம் தனது பார்வையாளனை உணர அனுமதிப்பதில்லை ஹேன்கி.
         பொதுவாக  ஒரு சினிமாவில் ஒரு கதாபாத்திரம்/குடும்பம் கடும் நெருக்கடியில் இருப்பதாக காட்டினால் உடனே சற்று ஆசுவாசப்படுத்தும்படியான காட்சி அதை தொடரும்.நமது இந்திய சினிமாக்களில் நகைச்சுவை ட்ராக் வரும்.ஹாலிவுட் படங்களில் வேறு வகையான திருப்பம் வரும்.இவ்விரண்டுமே ஹேன்கியின் படங்களில் காணமுடியாது!

Michael Haneke


        மிகக்கடுமையான உளவியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்தை டைட் போகஸில் அப்படியே விட்டுவிடுவார்!பார்வையாளன் வேறு எந்த வகையிலும் தப்ப முடியாது!அந்த கதாபாத்திரத்தின் ஐம்பது  விழுக்காட்டு வேதனையாவது/உளவியல் நெருக்கடியாவது  பார்வையாளனுக்கு கடத்தப்படும். மெல்லிய மனம் கொண்டோர் அவர் படங்களை பார்க்காமல் இருப்பது நல்லது!
           இப்படத்தில் ஜார்ஜ்ஸ் அவரது மனைவி ஆன், மகன் பியர்ரே  ஒரு பிளாட்டில் வசிக்கிறார்கள்.தொடர்ந்து அவர்கள் வீட்டு முகப்பை படம் பிடித்து ஒரு வீடியோ கேசட் அவர்களுக்கு அனுப்பபடுகிறது.இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய கேசட்டை பாஸ்ட் பார்வர்ட் செய்து பார்க்கும்போது ஜார்ஜ்ஸ் வீட்டுக்குள் வருவது வீட்டிலிருந்து தெருவுக்கு வந்து காரை கிளப்பி அலுவலகம் செல்வது போன்ற  காட்சிகள்.

            இந்த தொடர் கேசட்டோடு சில கிறுக்கல் ஓவியங்கள்.ஒரு சிறுவனின் வாயில் இருந்து ரத்தம் வருவது,கோழியின் கழுத்து அறுபட்டு ரத்தம் தெறிப்பது என்பதாக....
             ஜார்ஜ்ஸ் இதை ஒரு prank என்பதாகவே கருதுகிறான்.இதை யாரிடமும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் அவன் மனைவியோ நண்பர் குடும்பத்தோடு உணவருந்தும்போது அவர்களிடம் சொல்லிவிடுகிறாள்.அப்போதுதான் காலிங் பெல் அடித்து ஜார்ஜ்ஸ் எழுந்துசென்று கதவருகே கேசட்டை கண்டு விருந்தினர்களுக்கு தெரியாமல் கோட்டில் கேசட்டை வைத்துவிட்டு அமர்கிறான்.ஆன் "யார் வாசலில்?" என்று கேட்க 'யாருமில்லை!' என்று மழுப்ப மேற்சொன்னவாறு கேசட் விவகாரத்தை அவள் நண்பர் குடும்பத்திடம் அம்பலப்படுதிவிடுகிறாள்.
            கடுப்பான ஜார்ஜ்ஸ் அந்த கேசட்டை போட்டு காட்டுகிறான்.போலீசுக்கு செல்லுமாறு நண்பர் சொல்கிறார். போலீசு இதை பெரிதாக பொருட்படுத்தாமல் உங்கள் குடும்பத்தின் மீது யாராவது தாக்க முயன்றாலோ தாக்கினாலோதான் தங்களால் எதுவும் செய்யமுடியும் என்று கைவிரித்ததை ஆன் சொல்கிறாள்.
           இதற்குப்பின் முழுக்க முழுக்க நாம் ஜார்ஜ்ஸ் -உடன் பயணபடுத்தப்படுகிறோம்.
               'தனியார் துப்பறியும் நிபுணரை நியமிக்கலாமே' என்று ஆன் கேட்க அதை மறுக்கிறான் ஜார்ஜ்ஸ்.காரணம் இப்போது ஜார்ஜ்ஸ்க்கு பிரச்சனை யாரோ கேசட் அனுப்புகிறார்கள் என்பதைக்காட்டிலும் அதிலுள்ள காட்சிகள் தன்னில் உண்டாக்கும் பாதிப்பையே பெரிதாக நினைக்கிறான்.
             9/11 தாக்குதல் நிகழ்ந்த பிறகு Noam Chomsky   ஒரு விஷயம் சொன்னார்-"பின்லேடன் விரித்திருப்பது ஒரு diabolical trap.நாம்(அமெரிக்கா)உணர்ச்சிவசப்பட்டு போர்தொடுப்போம்;அதனால் பேரழிவு உண்டாகும்;
அந்தப்பேரழிவை காரணம் காட்டி மேலும் தனது இயக்கத்தை வலுப்படுத்தவும்,
இயக்கத்திற்கு ஆதரவாக பலப்பல நாடுகளும் தன்னுடன் இணையும் என்பதே லேடனின் திட்டம்".அதற்காக விரித்த வலையில் அமேரிக்கா மட்டுமல்லாது பிற நேட்டோ நாடுகளும் சிக்கிக்கொண்டு இன்றுவரை அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
           அதுபோல தினம் ஒரு கேசட்&கிறுக்கல் ஓவியங்கள் அனுப்பப்படுவதும் ஒருவித trap தான்.அதில் ஜார்ஜ்ஸ் சிக்கவேண்டும்.அதனால் அவனுக்கு கடும் உளவியல் நெருக்கடி&குற்ற உணர்வை உண்டாக்கி அதன்மூலம் குடும்பத்தில் சரிசெய்ய முடியாது  விரிசல் உண்டாக்குவது என்பதே இதை அனுப்பியவனின் நோக்கம்.



            தான் சிறுவயதில் வளர்ந்த வீடு கேசட்டில் காட்டப்பட தனியாக வசிக்கும் வயோதிக தாயை வெகுகாலம் கழித்து சந்திக்கிறான்!தாய் ஆச்சரியப்படுகிறாள்.அவளிடம் 'மஜீதை நினைவிருக்கா?நீங்கள் கூட அவனை தத்தெடுக்க நினைத்தீர்களே?' என்று கேட்க "அதெல்லாம் நினைவில்லை!" என்கிறாள்.
            மஜீத்!ஒரு அல்ஜீரிய குடும்பத்தை சேர்ந்தவன்.அவனது பெற்றோர்கள் ஜார்ஜ்ஸ்ன் குடும்பத்திற்காக பணிபுரிபவர்கள்.பாரிஸ்ல் அல்ஜீரிய விடுதலை அமைப்பை சார்ந்தவர்கள் கொன்றிழக்கப்பட்ட பேரழிவில் அவர்கள் இருவரும் மரிக்கிறார்கள்.மஜீத் தனித்து விடப்பட, ஜார்ஜ்ஸ்ன் தந்தையும் தாயும் அவனை தத்தெடுக்க முடிவெடுக்கிறார்கள்.மஜீத்துக்கு தனி அறை அதை ஜார்ஜ்ஸ்ம் பகிர்ந்துகொள்ள வேண்டும்!ஆறுவயது சிறுவனுக்கு இதெல்லாம் கடும் எரிச்சலை உண்டாக்குகிறது.சிறுவன் ஜார்ஜ்ஸ் ,மஜீதிடம் கோழியின் தலையை வெட்ட சொல்லி, பிறகு தனது பெற்றோரிடம்  தன்னை பயமுறுத்தவே இதை அவன் செய்தான் என்று இட்டுகட்டி அவனை வீட்டை விட்டே துரத்தும்படி செய்கிறான்.அனாதை இல்லத்தில் கடுமையான சூழலில் வளர வேண்டிய கட்டாயத்தில் மஜீத்.ஜார்ஜ்ஸ்க்கு கிடைத்த உயர்தர கல்வி உயர்குடி வாழ்க்கை எதுவும் மஜீத்துக்கு கிடைக்காமலே போக ஜார்ஜ்ஸ் காரணம்.
         சிறுவன் ஜார்ஜ்ஸ் சொல்லும் இத்தகைய சிறு புகார்களை அப்படியே நம்பிய ஜார்ஜ்ஸ்ன் பெற்றோர்கள் எத்தகையவர்கள்?அல்ஜீரியர்களுக்கு எதிரான முன்முடிவு கொண்டவர்களா?அவர்கள் வன்முறை ஆசாமிகள் என்பது மனதில் ஆழ பதிந்தவர்களா?இல்லாவிட்டால் எப்படி ஒரு சிறுவன் சொன்ன புகாரை நம்பி மஜீதை அவர்கள் அனாதை இல்லத்தில் சேர்க்க முடிவெடுத்தார்கள்? என்று இங்கேயும் பல கேள்விகள்!
           மஜீதை ஜார்ஜ்ஸ்ன் வீட்டில் இருந்து அனாதை இல்ல நிர்வாகிகள் அழைத்து செல்லும் காட்சி தூரக்காட்சியாக எவ்வித ஓசையும் இல்லாது மவுனமாக காட்டப்படுகிறது.மஜீதின் போராட்டம்.அடம் பிடிக்கும் மஜீதை அமுக்கிபிடித்து வண்டியில் ஏற்றும் அனாதை இல்ல நிர்வாகி என்பதாக அக்காட்சி பார்வையாளனை சலனப்படுத்துகிறது.எதையும் செய்யாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளனாகிய நம்மை ஒருவித குற்ற உணர்விற்கு உள்ளாக்குகிறது(நான் முதலில் சொன்னபடியே ஹேன்கியின் ஸ்டைல் இதுதான்!)

                  மீண்டும் இன்னொரு கேசட்.அதில் ரோடில் காரின் ஊடே ஒரு கேமரா படம் பிடித்தபடியே சென்று மலிவான ஒரு குடியிருப்பில் குறிப்பிட்ட எண் வீட்டில் கதவில் போய் முடிகிறது.அங்கே சென்று ஜார்ஜ்ஸ் பார்க்கிறான்.அங்கெ மஜீத்!மஜீத் பழைய சம்பவங்கள் எதனாலும் பாதிக்கப்படாத பழையவன்மங்கள் எதுவுமே இல்லாத ஒரு நபராகத்தான் காட்டப்படுகிறார்.ஜார்ஜ்ஸ்-ஐ அன்போடும் ஆச்சரியத்தோடும் வரவேற்கிறார்.ஆனால் ஜார்ஜ்ஸ் கடும் வன்மத்தோடு மஜீத்தை வார்த்தைகளால் புண்படுத்திவிட்டு செல்கிறான்.அடுத்தநாள் கேசட்டில் இந்த உரையாடலும் ஜார்ஜ்ஸ் சென்றபின் மஜீத் கதறி அழுவதாகவும் கட்சிகள் ஓடுகிறது.மஜீதின் வீட்டுக்குள்ளேயே எங்கோ ஒரு இடத்தில் மறைவாக வைக்கப்பட்ட கேமரா மூலம் படமாக்கப்பட்ட காட்சிகள் அவை.
மஜீத்

              அப்போ மஜீத் நடித்தாரா?உண்மையில் படம் பிடித்து அனுப்பியது அவரா?அவரது மகனா? என்ற கேள்விகளெல்லாம் இறுதிவரை தொக்கி நிற்கிறது.ஜார்ஜ்ஸ் இருவரையும் போலீசில் மாட்டிவிடுகிறான்.எந்த காத்திரமான ஆதாரங்களும் அவர்களுக்கெதிராக இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
             பிறகு மஜீதின் மகன் ஜார்ஜ்ஸ்ன் அலுவலகத்தில் வந்து பேச முயல்கிறான்.அவனையும் கடுமையாக வசைபாடி துரத்துகிறார் ஜார்ஜ்ஸ்.
பிறகு மீண்டும் மஜீத் தன் இல்லத்திற்கு ஜார்ஜ்ஸ்-ஐ அழைக்கிறார்.கடுமையான எரிச்சலில் இருக்கும் ஜார்ஜ்ஸ் பேச முயல திடீரென்று மஜீத் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தம் பீய்ச்சியடிக்க இறக்கிறார்.
             உண்மையில் இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும்.வன்முறை காட்சிகள் என்றால் நொடிக்கு நொடி மிசின் கன் சுடுவது,குண்டுகள் எறிவது,அரிவாள் வெட்டு,கத்திக்குத்து என்பவை மட்டுமல்ல.அதைவிட வலுவான அதிரவைக்கும் வன்முறை காட்சி உண்டு.படம் முழுக்க எல்லாருமே மிக மெல்லிய தொனியில் பேசிக்கொண்டிருக்க ஒரே ஒருவரி வசனத்தை ஒருவன் சத்தமாக பேசினால் அதுவும் வன்முறைதான்!அதுபோல இப்படத்தில் எவ்வித அதிரடி கேமரா நகர்வுகள் ஆக்ஷன் காட்சிகள் இல்லாத நிலையில் திடீரென்று மஜீத் கழுத்தை அறுத்துக்கொண்டு இறப்பது மிகக்கடுமையான வன்முறையை பார்வையாளனுக்கு கடத்துகிறது.
ஜார்ஜ்ஸ்

        மஜீத் கழுத்தை அறுத்துக்கொன்டதும் உடனே வழமையாக கேமரா ஜார்ஜ்ஸ்ன் முகத்திற்கு க்ளோசப் செல்லவில்லை.மஜீத்தையே அசையாமல் காட்டிக்கொண்டிருக்கிறது.நாமும் மவுன சாட்சியாக அதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.தனது மரணத்திற்கு ஒரே சாட்சியாக ஜார்ஜ்ஸ்ஐ இருக்க வைப்பதன்மூலம்(அங்கே கதவை தாழித்துவிட்டு அங்கேயே சரிந்து மரிக்கிறார் மஜீத்.அந்த உடலை தாண்டி செல்லாமல் ஜார்ஜ்ஸ்-ஆல் வெளியே செல்ல முடியாது) மஜீத் சொல்லவருவது என்ன?
           "எனக்கு கிடைக்கவேண்டிய உயர்குடி வாழ்க்கையை தட்டிப்பறித்த உன் கண் முன்னேயே என் உயிரை விடுகிறேன்.இந்த மரணத்தின் குற்ற உணர்வு உன் வாழ்நாள் முழுவதும் உன்னையே சுற்றிக்கொண்டிருக்கும்" என்று மஜீத் சொல்லாமல் சொல்கிறாரா?ரகசிய கேமரா கொண்டு படம் பிடித்து கேசட் அனுப்பியது மஜீதின் மகனா?அப்போது மஜீத் சிறுவயதில் துரத்தப்பட்டது அவர் மகனுக்கு தெரியுமா?இப்படி பல கேள்விகள் பார்வையாளனை நோக்கி கேட்கப்படுகின்றன.
            இடையில் ஜார்ஜ்ஸ்ன் மகன் பதின்ம வயதினருக்கே உரிய ஒருவித விரக்திநிலை,பெற்றோரை கண்டாலே எரிச்சல்,பெற்றோரின் கேள்விகள் அக்கறைகள் மீதான ஒவ்வாமை இவை தாங்காமல் நண்பன் வீட்டில் ஓரிரவு பெற்றோரிடம் சொல்லாமல் தங்குகிறான்.பதட்டமடையும் ஜார்ஜ்ஸ் மற்றும் ஆன் எங்கு தேடியும் பிள்ளை கிடைக்காததால் மீண்டும் மஜீத் மற்றும் அவரது மகன் மீதே சந்தேகப்படுகின்றனர்.அடுத்தநாள் கூலாக வீட்டிற்கு வந்துவிடுகிறான் பியர்ரே.அவனுக்கு தனது பெற்றோரை ஓரிரவு முழுக்க  பதட்டமடைய செய்ததன் மூலம் தான் அனுபவிக்கும் விரக்திநிலைக்கான சிறு ஆசுவாசமாய் சிறு மருந்தாய் அதை  அவன் உணர்கிறான்!இது சாடிசமா என்றால் ஆம் இல்லை என்று தெளிவாக சொல்லிவிட முடியாத ஒரு கேள்வி.
பியர்ரே

             அவிழ்க்கப்படாத முடிச்சுகள்; தீர்க்கப்படாத மர்மங்கள்; தண்டிக்கப்படாத குற்றங்கள் எதுவும் மிச்சமிருந்து பார்வையாளனை குழப்பி விடவேகூடாது என்று உறுதியாக  இருக்கும் ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில் பல்வேறு கேள்விகள்,சந்தேகங்கள்,தீர்க்கப்படாத மர்மங்களோடு படத்தை முடிப்பார் ஹேன்கி.மேற்சொன்னவாறு  எல்லா குழப்பங்களையும் தீர்ப்பதாக  முடித்தால் படம்  முடிந்ததுமே பார்வையாளன் அந்த சினிமாவை மறந்துவிடுவான்.இந்தமாதிரி தொக்கி நிற்பது போலவும்; பல்வேறு அணுகுமுறைகள் கொண்டதாக  (ambigious) முடிப்பதன் மூலம் பார்வையாளன் படத்தை மறக்காது இருப்பான்  என்பது  அவர்  வாதம்!
        மேலும் படம் டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது.சினிமா என்று தெரியாது நிஜத்தில் ஜார்ஜ்ஸ்ன் குடும்பத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்!மேலும் ஜார்ஜ்ஸ்ன் குடும்ப நடவடிக்கைகளை படமாக்கி அனுப்பப்பட்ட கேசட்டுகளை பார்க்கும்போது எப்படி காட்சியமைப்பு உள்ளதோ அதேபோலத்தான் படம் முழுவதும் உள்ளது.அதற்காகவே டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்.அதாவது நாமே ஜார்ஜ்ஸ்ன் வாழ்வை ஒளிந்திருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துதல்.
                 படம் முடியும் காட்சியில் நமக்கு யாரென்றே தெரியாத இருவர் பேசிக்கொண்டிருப்பதாக முடிகிறது.அப்படி பார்த்தால் ஜார்ஜ்ஸ் ஆன்ஆகியோருமே நமக்கு யாரென்று தெரியாதவர்கள்தான்!அவர்களின்  எந்த பரிமாணத்தை இயக்குனர்  நமக்கு காட்டினாரோ  அந்தளவே அவர்கள் பற்றி தெரியும்!அவர்களுமே  நமக்கு  அன்னியர்கள்தான்!