Saturday, 1 November 2025

கொரியர் அலப்பறைகள்!

 கொரியர் சேவைகள் நாட்டில் பிரபலமாகத்துவங்கியிருந்த நேரம்.மக்கள் ஆச்சரியத்தில் இருந்தார்கள்."அதெப்படி இன்னைக்கு போட்டா நாளைக்கு போயிடுமா?" 

பலர் இதை நம்பி உடனடி பணம் அனுப்ப வேண்டியவர்களுக்கு உறையில் பணத்தை மட்டும் வைத்து கொரியர் செய்தார்கள்.அந்த உறை மிக பத்திரமாக போய் சேர்ந்தது.ஆனால் உள்ளே பணம் இருக்காது!
  இன்னும் சிலர் தங்களை மேதாவியாக கருதிக்கொண்டு உறையில் ஒரு புத்தகத்தை வைத்து அதனுள் ரகசிய அறை உண்டாக்கி அதில் பணத்தை வைத்து அனுப்பினார்கள்.வழக்கம் போல புத்தகம் ரகசிய அறை எல்லாம் பத்திரமாக போய் சேர்ந்தது.பணத்தை தவிர!
    பல வாடிக்கையாளர்கள் இதுகுறித்து கொரியர் அலுவலகத்தில் தகராறு செய்ய, முதலில் "இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை.நீங்கள் கொடுத்த உறையை பத்திரமாக சேர்த்துவிட்டோம்.அவ்வளவுதான்", என்றவர்கள் பிறகு பருப்பு சாரி பொறுப்புத்துறப்பு என்ற வகையில் "பணம் நகை விலை மதிப்புள்ள பொருட்களை அனுப்பினால் நிர்வாகம் பொறுப்பல்ல" என்று அறிவிப்பு பலகை வைத்தார்கள்.
     ஒருவேளை இதே நிகழ்வு ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ நடந்திருந்தால் அத்தனை கொரியர் நிறுவனங்களுக்கும் நிரந்தர திண்டுக்கல் பூட்டு தான்!ஆனால் இந்தியாவாச்சே!எந்த நிறுவனம் வாடிக்கையாளரை எப்படி கசக்கி பிழிந்தாலும் நிவாரணமோ பாதுகாப்பு கிடையவே கிடையாது!எத்தனை வழக்குகளை போட்டாலும் நிலை இதுதான்.ஏதோ அத்தி பூத்தார்போல ஒரு வழக்கில் வாடிக்கையாளருக்கு பொருளின் விலை+ அபராதம் விதிக்கும் நிகழ்வு நடக்கும்.அப்படி நடக்காமல் போல ஆயிரக்கணக்கான சம்பவங்களும் உண்டு.
   தற்காலத்தில் வேறுவகை சேட்டை செய்கிறார்கள்.ஒருகாலத்தில் பதினைந்து பைசா தபால் அட்டையில் "தலைவெட்டியாம்பட்டி P.O" என்றெழுதி பின் கோட் சரியாக போட்டால் வாரம் பத்து நாளில் கண்டிப்பாக உரியவரிடம் ஒப்படைக்கப்படும்!அப்போது எந்த மொபைலும் கிடையாது.ஏன் லேன்ட்லைன் கூட இல்லை!

   ஆனால் கொரியர் சேவைகள்???அதில் குறிப்பிட்டுள்ள மொபைல் போனுக்கு ஒருமுறை மட்டும் அழைப்பு விடுக்கப்படும்.இரண்டு ரிங் தாண்டி எடுக்காவிட்டால் மேட்டர் ஓவர்!அந்த பார்சல் கொரியர் அலுவலகத்தில் விட்டெறியப்படும்(காதல் மன்னன் பட நாயகி போல போன் அடித்த நொடியே எடுக்க வேண்டும்)!அதன்பிறகு அவரவர் சாமர்த்தியம்.இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு டெலிவரி ஹப் எங்கே என்று கண்டுபிடித்து "அய்யா சாமி போனை எடுக்காம போனது என்னோட தப்புதான் சாமி" என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பெற வேண்டும்.
போன் எடுக்க முடியல சாமி!பார்சலை கொடுங்க சாமி!

 
   அதிலும் டெலிவரி ஹப் எங்கே என்று கண்டுபிடிப்பதற்கு வேட்டையாடு விளையாடு ராகவன் லெவலுக்கு யோசித்து-விசாரித்து-ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டும்.ஏனெனில் பல கொரியர் நிறுவனங்கள் தங்கள் அலுவலக தொடர்பு எண்ணையோ, முகவரியையோ ,டெலிவரி செய்ய வந்த பிரகஸ்பதி எண்ணையோ கொடுப்பதில்லை.இணையத்தில் தேடினாலும் கிடைப்பது ஒரு டப்பா டோல் ஃப்ரீ எண்தான்.அது எப்போதுமே வேலை செய்யாது.மின்னஞ்சல் முகவரியும் அவ்வாறே!

  

 இங்க ஒரு கொரியர் கம்பெனி இருந்துச்சே?அது எங்க?
.
இப்படியே அந்த குட்டி யானை டயர் மார்க்கை ஃபாலோ பண்ணிக்கிட்டு போ!

    இதுகூட பரவாயில்லை இன்னும் சில கொரியர் நிறுவனங்கள் போனும் செய்யாமல் வீட்டுக்கும் வராமல் "fake delivery updates" என்ற வகையில் ஒவ்வொரு நாளும் காலையில் "Out for delivery " என்றும் இரவில் "Consignee not available" "Door locked" " Consignee dead.Oor singing Alaala Kanda around his body" என்றெல்லாம் வெக்கமே இல்லாமல் போலி அப்டேட்ஸ் கொடுப்பார்கள்.அப்படி வந்தால் மீண்டும் ராகவனாக மாறி அந்த டெலிவரி ஹப் எங்கே என்று தேடி அங்கே போனால் "போன் பண்ணா எடுக்க மாட்டீங்களா?தினம் விடாமல் செய்தோம்" என்று வாய் கூசாமல் அடித்து விடுவார்கள்!

     பெரும்பாலான டெலிவரி ஆசாமிகளுக்கு ஒரு முகவரியை சொந்தமாக கண்டுபிடித்து வரும் திறன் சுத்தமாக இல்லை.நாம் தான் போன் வரும்போது இரண்டாவது ரிங்கில் எடுத்து " ஜே பூர்லேந்து சூர்யா பேசறேன்!அந்த சாக்கடையை தாண்டி ஜம்ப் பண்ணி இடதுகை பக்கம் திரும்பி அண்ணாந்து பார்த்து....etc...etc.." என்று உச்ச ஸ்த்யாயில் வழி சொல்ல வேண்டும். சிம்பிளாக அனைத்தையும் கேட்டுவிட்டு "நான் வேற ஏரியாவுல இருக்கேன். அந்தப்பக்கம் நாளைக்கு வரேன்" என்று பதில் அளிப்பார்கள்.மீண்டும் அடுத்தநாள் "ஜே பூர்லேந்து சூர்யா பேசறேன்.... " என்று கத்த வேண்டும்!

 

     பல தபால்கள் மொத்தமாகவே காணாமல் போய்விடும்."எங்களுக்கு தெரியாது.ஆட்டையாம்பட்டி ஆபீசில் கேளுங்கள்..." அப்படி இப்படி என்று வாடிக்கையாளனை பிங்க் பாங் விளையாடுவார்கள்!
   லண்டனில் டாக்சி ஓட்டுநராக மிக கடுமையான சோதனை ஒன்றுண்டு.
The Knowledge என்று அழைக்கப்படும் அந்த பல்வேறு கட்டங்களை கொண்ட தேர்வு முறையில்
 லண்டன் நகரத்தின் அத்தனை சந்து பொந்துகளும் மனப்பாடமாக தெரிந்திருக்கிறதா என்ற சோதனை உண்டு.ஆனால் இங்கே எதற்கும் எந்த சோதனை பரீட்சை கிடையாது!
   ஆனால் மக்களுக்கு எல்லாமே அதிவிரைவாக நடக்க வேண்டுமே!அதனால் தனியார் கொரியர் கொண்டுவரப்பட்டது."தனியார் கிட்ட கொடுத்தாத்தான் வேலை ஒழுங்கா நடக்கும்" என்ற மக்களின் மூட நம்பிக்கை  பொய்த்துப்போனது!
     சமீபத்தில் கூட ஏர் இந்தியா டாடா வசம் ஒப்படைக்கப்பட்டபோது மக்கள் ஆர்கஸம் அடைந்தார்கள்.ஆனால் இப்போ சேவையின் லட்சணம் என்ன? யார் மனதும் புண்பட்டுவிட கூடாது என்று கவனமாக ஒவ்வொரு வாரத்தைக்கு இடையேயும் பன் பட்டர் ஜாம் வைத்து எழுதும் பாடகர்  ஹரீஷ் ராகவேந்திராவே ஏர் இந்தியா அடாவடிக்கு எதிராக பொங்கினார்!
   தனியார் நிறுவனம் அரசு நிறுவனம் என்பதையெல்லாம் விட அது எப்படி நடத்தப்படுகிறது என்பதே முக்கியம்! நாம் தொடர்ந்து அரசின் தபால் சேவையை மட்டுமே பயன்படுத்துகிறோம்.தபால்காரருக்கு இன்றளவும் இந்த வீட்டில் இன்னார் என்ற விவரம் தெரியும் என்பதால் போனை எடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அல்லது அண்டை வீட்டாரிடம் கொடுத்து விடுவார்கள்!
ஆனால் நமக்கு அனுப்பும் ஆசாமி அதை செய்யாமல் நம்மை பாடாய் படுத்தி விடுகிறார். 

   கொரியர் தபால்கள் அதிகம் ஆட்கள் குறைவு என்கிறார்கள்.அப்படியே தேவையான அளவு ஆட்களை போட்டுவிட்டாலும்..... ஏனய்யா ஒரு நாளைக்கு மூன்று முறை சாதா சைக்கிளில் தபால் டெலிவரி ஆன காலங்கள் உண்டு.சைக்கிள் பின் பக்கம் முழுக்க தபால்கள்.அது தவிர கையில் முழுங்கை முழுக்க தபால்கள் அடக்கிக்கொண்டு மிகச்சரியாக டெலிவரி செய்த தபால்க்காரர்கள் உண்டு!இந்த வெட்டி சாக்கு எதுக்கு?

 
   GDP இல் இந்தியா ஜப்பானை மிஞ்சியது ஜெர்மனியை மிஞ்சியது என்றெல்லாம் மார்தட்டி கொள்கிறார்கள்.ஆனால் நுகர்வோர் பாதுகாப்பு நுகர்வோருக்கு மரியாதை ,கண்ணியமாக நடத்தப்படுதல், நுகர்வோர் உரிமை இதில் எல்லாம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மேற்சொன்ன நாடுகளை இந்தியா தாண்டாது!

.

P.S: "டேய் பாசிஸ்டு!முதலாளித்துவ திமிரில் ஆடாதே! ஒரு தொழிலாளி படும்பாடு தெரியுமாடா? " என்றெல்லாம் பொங்கல் வைத்தால் அவர்களுக்கு தொடர்ச்சியாக பத்து கொரியர் தபால் அனுப்பி தொடர் மண்டைக்குடைச்சல் கொடுக்கப்படும்! ஜா.. ..ஆ.. ஆ.. ஆ..க்கிரதை!
 

 

    

Sunday, 26 October 2025

Eureka!

 இண்டர்ஸ்டெல்லர் படத்தில் ஜோசப் கூப்பர் ( Matthew McConaughey) அயல்வெளியில் இருந்து தனது மகள் மர்ஃபி கூப்பருக்கு(Jessica Chastain) தந்தி சமிக்ஞை மூலம் தொடர்பு கொண்டு புவியீர்ப்பு தொடர்பான சமன்பாடுகளை நிறைவு செய்து அதன் மூலம் மனிதகுலத்தை காப்பாற்றுவதற்கான ஒருவழி கிடைப்பதாக 
ஒரு காட்சி வரும்.படத்தில் மிக முக்கிய காட்சிகளுள் ஒன்று.

 
   அதில் ஒரு கைக்கடிகாரத்தின் முட்கள் தந்தி சமிக்ஞைகளுக்கு ஏற்ப துடிப்பதாகவும் மர்ஃபி அவற்றை குறிப்பெடுத்து சாதாரண மொழிக்கு மாற்றம் செய்வதாகவும் வரும்! Eureka!



அந்தக்காட்சியில் பயன்படுத்தப்பட்ட கடிகாரம் உண்மையில் அப்போது தயாரிப்பில் இல்லாத ஒரு மாடல். நோலன் விருப்பப்படி ஹாமில்டன் நிறுவனத்தின் பிற தயாரிப்புகளில் ஒரு கடிகாரத்தின் முட்கள் மற்றொரு கடிகாரத்தின் டயல் என்பதாக ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு prop! அவ்வளவே!
 

   ஆனால் அந்தக்காட்சி கடிகார ஆர்வலர்கள் உட்பட அனைவரிடமும் ஒரு உணர்வெழுச்சியை உண்டாக்கியிருந்தது.
   பொதுவாக ஒரு கடிகார நிறுவனம் இம்மாதிரி வெட்டி ஒட்டப்பட்ட மாடல்களை பொது சந்தையில் விற்க விரும்பாது.ஹாமில்டன் நிறுவனமும் அவ்வாறே பிடிவாதம் செய்தது.பிறகு கடிகார ஆர்வலர்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக Hamilton  Khaki Field "Murph" version ஐ அந்த மகள் கதாபாத்திரத்தின் பெயரிலேயே வெளியிட்டது. பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் என்பார்களே! அப்படி விற்று தீர்ந்தது.

   அதில் வினாடி முள்ளின் மேல் Eureka என்பதைக்குறிக்கும் தந்தி சமிக்ஞை இடம்பெற்றிருக்கும்.இது 40mm டயல் மாடல்.பிறகு 38mm டயல் மாடலை வெளியிட்டது.ஆனால் அதில் தந்தி சமிக்ஞை இருக்காது.

 
   எப்படி இருந்தாலும் மக்களின் நிற்பந்தத்தால் ஒரு கடிகார நிறுவனம் பணிந்து ஒரு மாடலை வெளியிட்டது பெரிய சாதனை தான்.அந்த மாடல் கடிகாரத்தை எப்போது பார்த்தாலும் ஹான்ஸ்  சிம்மர் அமைத்த அந்த ஆர்கன் பின்னணி இசை(First step OST) தானாக மனதிற்குள் ஒலிக்கும்!  


    இப்போது அந்த மாடலின் பல்வேறு வகையான சிறு மாறுபாடுகளைக்கொண்ட கடிகாரங்களை ஹாமில்டன் அறிமுகம் செய்து வைத்தாலும் (சென்ற வாரம் கூட வெள்ளை நிற டயல் மாடல், ஸ்டீல் பிரேஸ்லெட் மாடல் உள்ளிட்ட மூன்று மாடல்களை அறிமுகம் செய்தது) கடிகார ஆர்வலர்கள் மத்தியில் அந்த அசல் 40mm "Eureka" Murph model என்றும் முதன்மை இடத்தை பிடித்திருக்கும்!

    இது இந்தியாவில் கிடைக்காது.அமெரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டும்.சுங்கவரி அது இதுவென்று விலை எகிறிவிடும்!அமெரிக்கா ராஜீவ் தயவிருந்தால் சல்லிசாக வாங்கி விடலாம்! 
      




Tuesday, 5 August 2025

Alappuzha Gymkhana

 வழக்கமான விளையாட்டு சார்ந்த படங்கள் என்றாலே ஒரு ஊசிப்போன டெம்ப்ளேட் இருக்கும்.ஒரு கோச்.எப்போதும் தண்ணியில் அல்லது விரக்தியில் பார்ப்பவர்கள் எல்லாரிடமும் சிடுசிடுத்தபடி(அல்லது இரண்டுமாக) இருப்பார்.அப்புறம் அவர் தலையில் தண்ணி கொட்டி அல்லது வேறு எப்படியோ உசுப்பிவிட்டு பழையபடி கோச் வேலையை பார்க்க வைப்பார்கள்
  அவருக்கொரு பின்னணி!இளம்வயதில் ஆகச்சிறந்த விளையாட்டுத்திறன் கொண்டவராக இருந்தும் ஏதோ  சதி வேலையால் அவர் ஒரு சாம்பியன் ஆவது தடைபட்டிருக்கும். விரக்தியில் குடி குடி குடி என்று இருப்பார்.
    அப்புறம் இவரிடம் பயிற்சி பெற வருபவர்களிடம் எறிந்து விழுதல் அப்புறம் அவர்கள் இவரின் பரிதாப பின்னணி தெரிஞ்சு அனுதாபப்படுதல் என்று செல்லும்.இறுதியில் கோப்பையை வாங்க வைத்துவிடுவார்!
   ஆலப்புழா ஜிம்கானா படத்தில் அதெல்லாம் இல்லை என்பதே பெரும் ஆறுதல்! அந்த இளைஞர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு குத்துச்சண்டை பயிற்சியில் சேர்கிறார்கள். அந்த கோச் நிகழ்கால சாம்பியனாக உள்ளார்!



     இது தவிர மேற்கூறிய டெம்ப்ளேட்படி பயிற்சி பெறவரும் ஒவ்வொருவரின் பின்னணியும் "ஏ .... ஆயி" என்ற ஒப்பாரியின் பின்னணியில் காட்டப்படும்! அதெல்லாம் இப்படத்தில் இல்லை.
   தள்ளுமாலா படத்தில் இருந்த அதே எனர்ஜி லெவல் இதிலும் படம் முழுக்க விரவிக்கிடக்கிறது! மூக்கு சிந்துதல் சுய பச்சாதாபம் அனுதாப அலை என்று எந்த சீரியல் ஐட்டமும் இதில் கிடையாது!
   ஒவ்வொரு குத்துச்சண்டை போட்டியும் படமாக்கப்பட்ட விதம் அருமை! ஜோபில் லால் மற்றும் கலை கிங்ஸன் ஆகியோர் சண்டைப்பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர்.அவர்கள் பணி மகத்தானது!உண்மையில் குத்துச்சண்டை பயிற்சி பெற்றவர்களாக இருக்கக்கூடும் என்று தோன்றியது!அவ்வளவு இயல்பான சண்டைக்காட்சி அமைப்பு!
    Good Bad Ugly படத்தில் இளமை இதோ இதோ பாடலின் தாள லயத்தோடு ஒன்றியதாக சண்டைக்காட்சி ஒன்று வரும்.பாடலின் ஒவ்வொரு டிரம் பீட்ஸ்க்கும்  ஒத்திசைந்து அஜீத் எதிரிகளை அடிப்பதாக இருக்கும்(Stunts: Kaladian Vodenchardy & Supreme Sundar).
  அதைவிடவும் இன்னமும் நளினமாக இன்னும் லயத்தோடு இன்னும் ஒத்திசைவோடு பின்னணியில் ஓடும் ஒரு பாடலுக்கு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அனகா ரவி சிரித்தபடி குத்துச்சண்டை போடுவதாக  வந்த காட்சி அட்டகாசம்!

   

     நஸ்லென் இப்படத்திற்காக கடும்பயிற்சி எடுத்திருப்பது தெரிகிறது. ஆனால் அவரைத்தவிர மற்ற எல்லாரும் அவ்வளவு மெனக்கெடவில்லை.அது இயல்பானதே.காரணம் ஹீரோவாக நடிப்பவருக்கு அந்தப்படம் மட்டும்தான்.ஆனால் துணை நடிகர்களுக்கு பல படங்களுள் இது ஒன்று என்பதால் உடல் ரீதியாக பெரிய மாற்றங்களை செய்துவிட்டு ஷூட்டிங் வருவது சாத்தியமில்லை.தமிழில் என்றால் இதையெல்லாம் பட ரிலீசுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே BTS workout videos என்ற பேரில் ஓவர் பில்டப் கொடுத்திருப்பார்கள்!ஆனால் இவர்கள் அதை எதையும் செய்யவில்லை. படம் நடக்கும் அந்தந்த இடங்களிலேயே படமாக்கியுள்ளனர்.இதுவே மணிரத்னமாக இருந்தால் ஆலப்புழாவில் படமாக்கினால் செலவு!( MBA! MBA!! என்று மனோபாலா ஸ்டைலில் படிக்கவும்) என்று ஆழ்வார்பேட்டையில் படமாக்கியிருப்பார்!

 

   தமிழ் சினிமா கடந்த பதிமூன்று ஆண்டுகளாக வடசென்னையை தாண்டிப்போகாமல் குண்டுசட்டியில் குதிரை ஓட்ட மலையாளத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஊர் சார்ந்து எடுக்கிறார்கள்!இதில் ஆலப்புழா!

    இதில் மற்றுமொரு விந்தை ஹீரோ உட்பட செல்லும் குழுவில் உண்மையில் ஜெயிப்பது ஹீரோ அல்ல!அவனது சோகை  நண்பன் (Franco Francis)! கில்லி படத்தில் தேசிய அளவில் தமிழ்நாட்டுக்காக கபடி விளையாடும் அணியில் அண்ணாவை தவிர மற்ற எல்லாரும் டம்மி என்று காட்டிய அவலம் இதில் இல்லை! 

 

        தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் சிலாகிக்கப்பட்ட படங்கள் எல்லாமே  மிதமிஞ்சிய சென்டிமென்ட் தளும்பும் படங்களே! பார்க்கின்ற பார்வையாளனின் மூக்கை திரையில் இருந்து கையை நீட்டி  சிந்திவிடும்படியான தருணங்கள் இடம்பெறக்கூடிய இடங்கள் பல சாத்திக்கூறுகள் இருந்தாலும் அதை எதுவுமே செய்யாத இயக்குனருக்கு பாராட்டுகள்!
   

Sunday, 22 June 2025

சுஜாதா-50

 சுஜாதா மோகன் திரையுலகில் பாடவந்து ஐம்பதாண்டுகள் என்றதும் பல பாடல்கள் பல நினைவுகள் & சில வருத்தங்கள் நினைவுக்கு வந்தன.

 
    ஜானி படத்தில் ஒரு இனிய மனது பாடலை ஶ்ரீதேவி படுவதாகவும் அதை ரஜினி கேரக்டர் ஒரு இனிமையான குரலை தவற விட்டுவிட கூடாது என்று தனது வாக்மேனில் பதிவு செய்வதாகவும் படமாக்கி இருப்பார்.

 

  ராசையா அதைப்பார்த்தாவது "இவரது அற்புத குரலில் இன்னும் பல பாடல்களை பதிவு செய்ய வேண்டும்" என்ற எண்ணம் உண்டாகியிருக்க வேண்டும்!

ஆனால் அவர் என்ன செய்தார்?இந்தப்பாடல் சேர்த்து விரல் விட்டு எண்ணக்கூடிய சில பாடல்களை மட்டுமே சுஜாதாவுக்கு  கொடுத்தார்.அத்தோடு சரி.எண்பதுகளில் அவர் காணாமல் போனார்!

 
 ஒவ்வொருமுறை ஜானி பாடலை கேட்கும்போதும் வருத்தமும் கோபமுமே மிஞ்சி நிற்கிறது!பன்னிரண்டு வயதில் பாடவந்து பதின்ம வயதுகளில் அத்தனை அற்புதமாக பாடும் திறனெல்லாம் எல்லாருக்கும் வாய்க்காது!


    மீண்டும் ரோஜா படத்தில் ரஹ்மான் உன்னி மேனன் &  சுஜாதா இருவரையும்  மறு அறிமுகம் செய்தார் என்றே சொல்ல வேண்டும்!அதன் பிறகே சுஜாதாவுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்கினார்கள்!  பூப்பூக்கும் ஓசை பாடியதற்கு தேசிய விருது வாங்கினார்.காற்று குதிரையிலே(காதலன்),முதன்முறையே(சங்கமம்) ,காதல் ரோஜாவே ஹம்மிங் என்று மறக்க முடியாத பாடல்கள் உண்டு!

 
 
நேற்று இல்லாத மாற்றம் பாடல் உருவாக்கம்
 

   வித்யாசாகரின் இசையில் அவரது குரல் தனித்தன்மையாக ஒலிக்கும்! ஆனந்தம் ஆனந்தம்(முறைமாமன்), உன் சமையல் அறையில்,ஆசை ஆசை ,அழகூரில் பூத்தவளே என்று தொடர்ந்து மெலடி பாடல்களை பாட வைத்தார்.மலையாளத்திலும் அப்படியே!



   செங்கோட்டை படத்தில் வரும் பூமியே பூமியே பாடலே ஒரு மெலடி தான்.எஸ்பிபி பாடியிருப்பார்.அதை மலையாளத்தில் யத்ரையோ ஜென்மமாய் (Summer in Bethlehem) என்று இன்னும் மென்மையான பாடலாக மாற்றி ஶ்ரீனிவாஸ் சுஜாதா ஆகியோரை பாட வைத்திருப்பார்.ஶ்ரீனிவாஸ் சும்மா ஆரம்பத்தில் பாடிவிட்டு செல்ல முழு பாடலும் சுஜாதாவின் ராஜ்ஜியம் தான்!
   ராரா(சந்திரமுகி) முதலில் கேட்டபோது சுஜாதா பாடியது என்றே நினைத்தோம்.ஆனால் பின்னி கிருஷ்ணகுமார் பாடியிருந்தார்.இதில் ஒரு வினோத ஒற்றுமை சந்திரமுகியின் அசல் மூலமான மணிச்சிதிரதாழ் படத்தில் ராரா பாடல் வரும் இடத்தில் வந்த ஒருமுறை வந்து பார்த்தாயா? பாடல் தமிழில் வரும்.முழுப்பாடலாக வரும் பாடலை சித்ரா பாட சின்னதாக வரும் பாடலை சுஜாதா பாடியிருப்பார்!
     லோகேஷால் மீண்டும் பிரபலமான சக்குசக்கு வத்திக்குச்சி & தாமர பூவுக்கும் பாடல்களை பாடியவரும் அவரே!அடுத்து அதைப்போல் மீண்டும் பிரபலமாக்கப்பட போகும் "வாடி வாடி நாட்டுக்கட்ட" பாடியவரும் அவரே!

   எஸ். ஏ.ராஜ்குமார் இன்னும் தாராள மனதுக்காரர்.தனது படங்களில் வந்த அத்தனை முக்கிய பாடல்களையும் சுஜாதாவையே பாட வைத்தார்.

 

    கண்ணாளனே பாடலையே கொஞ்சம் அப்படி இப்படி போட்டு கேட்பதற்கு அசல் பாடல் போலவே இனிமையாக அமைத்த சொல்லாமலே யார் பார்த்தது (பூவே உனக்காக)  பாடலை பாடியிருப்பார்.பிறகு சூரிய வம்சம் படத்தில ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் ஏதோ ஒரு பாட்டு,வானம்பாடியின் வாழ்விலே,மல்லிகை பூவே,எங்கள் வீட்டில்(வானத்தை போல),நிலவே வான் நிலவே(மாயி) என்று கொடுக்க அந்தப்பக்கம் சிற்பி சிட்டு சிட்டு குருவிக்கு(உள்ளத்தை அள்ளித்தா),காற்றுக்கு பூக்கள்(கண்ணன் வருவான்), உனக்கென உனக்கென(விண்ணுக்கும் மண்ணுக்கும்),என்னை தாலாட்டும் பூங்காற்று(உன்னை நினைத்து) என்று  பல பிரபல  பாடல்களை கொடுத்தார்.

   தொண்ணூறுகளில்  திரும்பவும் ராசையா அதே தவறை செய்தார்.எழுபதுகளின் இறுதியில் எப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய பாடல்களை மட்டுமே அவருக்கு பாட கொடுத்தாரோ அதே போல அப்போதும் அப்படியே கொடுத்தார்! ஒரு பட்டாம்பூச்சி(காதலுக்கு மரியாதை), மஞ்சள் பூசும் - ஃப்ரெண்ட்ஸ்,சரணம் பவ(சேது),தாலாட்டும் காற்றே (தேவன்) என்று வெகுசில பாடல்கள் மட்டுமே!குறிப்பாக மஞ்சள் பூசும் பாடலின் இரண்டாவது பத்தியில் தென்றல் வந்து ஜன்னல் திறந்தது என்று பாடுவதை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் "இதுபோன்று எத்தனை பாடல்களில் ராசையா இவரை பாட வைத்திருக்கலாம்!" என்று அங்கலாய்ப்பு தோன்றும்!


 தேவா முற்றிலும் புதிதான முறையில் அவரது குரலை பயன்படுத்திய பாடலொன்று உண்டு.என் உயிர் நீதானே படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய ஜனகனின் மகளே பாடலில் "பொய் சொல்லாதே" என்பதையே பாடல் முழுக்க பல்வேறு உணர்வுகளில் தொனிகளில் ராகங்களில் பாடி இருப்பார்!

 

  அப்புறம் எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் இவர் பாடிய நல்ல பாடல்கள் உண்டு.சரவணபவகுக (காதலா காதலா),நிலவே நிலவே(பெரியண்ணா),சோலைக்குயில் பாடும் (ஆனந்த பூங்காற்றே),ஹே மோனா (கண்ணோடு காண்பதெல்லாம்),உன் பேர் சொல்ல (மின்சார கண்ணா),நீதானா(உன்னை தேடி) என்று எப்படி  எண்பதுகளின் திரையிசைக்குரலாக எப்படி ஜானகி இருந்தாரோ அப்படி தொண்ணூறுகளின் குரலாக இவர் இருந்தார்!

இதையெல்லாம் விட மறக்க முடியாத பாடல்கள் என்றால் காதல் வேதம் என்ற ஆல்பம் தான்.ஏதோ ஒரு கம்பெனி கேசட் வாங்கப்போய் அப்போது கடையில் இந்த கேசட் பார்த்ததும் அத்தனை பாடல்களையும் ஹரிஹரன் பாடியுள்ளாரே (பிறகு ராசையாவின் காசி படத்தில் அதுவே நடந்தது) வித்தியாசமா இருக்கே என்று வாங்கினோம்.இத்தனைக்கும் இசை அமைத்த உத்பல் பிஸ்வாஸ் யாரென்றே நமக்கு தெரியாது.ஆனால் அத்தனை பாடல்களும் அட்டகாசம்.அதில் இரண்டு பாடல்களை சுஜாதா பாயிருப்பார்.என் நெஞ்சில் தூங்கவா நிலாவே கேட்டால் ஆளில்லாத தீவில் நிம்மதியாக சஞ்சரிப்பது போன்ற உணர்வைத்தரும்.இந்த ஆல்பம் அவ்வளவாக மக்களுக்கு தெரியாது என்பதால் வந்த உணர்வாக இருக்கலாம்!

 

    இப்போதும் சுஜாதா என்றால் நினைவுக்கு வரும் பல பாடல்களில் இந்த ஆல்பத்தின் பாடல்களும் அடக்கம்!
    இப்போது இவரது மகள் ஸ்வேதா மோகனும் பாட வந்துவிட்டார். அவர் பாடும் முறை குரல் வளம் எல்லாம் சுஜாதாவிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று!
சூழல்கள் மாறி சுஜாதாவின் குரலை சரியாக பயன்படுத்தும் அளவுக்கெல்லாம் இப்போது நல்ல நிலையில் திரையிசை இல்லை!இப்போதெல்லாம் யாரும் பாடுவதில்லை!  வரி வரியாக பாடல் வரிகளை படிக்க பின்னணியில் இசைக்கருவிகளை உருட்டி ஆட்டோ ட்யூன் ரிக்ஷா ட்யூன் என்று ஒருமாதிரி எதையோ கொடுத்து விடுகிறார்கள்!ராசையா பாடத்தெறிந்த சுஜாதாவுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்காமல்  பாடவே வராத தனுசை எல்லாம் வைத்து மன்னாடி கொண்டிருக்கிறார்!
   
  

Sunday, 15 June 2025

வடக்குபட்டி பஸ் ஸ்டாப்

 படத்தை பார்த்ததற்கு முக்கிய காரணம் அஜூ வர்கீஸ்.சமீபத்தில்  ஐடென்டிட்டி படத்தில் சீரியஸான அதுவும் வயதான தோற்றத்தில் நடித்ததை பார்த்ததும் "என்னாத்துக்கு இப்படி ரிஸ்க் எடுக்கிறார்?" என்று தோன்றியது.விளையாட்டான - பெரிய அறிவாளியாக எல்லாம் இல்லாமல் - சிறு சிறு அபத்தமான தவறுகளை செய்து பல்பு வாங்கி பேந்த பேந்த முழிக்கும் - அந்த அஜூ வர்கீஸ் தான் இயல்பானவர்.

 

    கிளி போயி என்றால் கிளிக்கு றெக்க மொளச்சு பறந்து போச்சு என்பதாக அல்லாமல் மலையாள பேச்சு வழக்கில் வாய்ப்பு பறிபோனது,மன நிம்மதி போனது(துடரும் படத்தில் ஷோபனா தனது மகளிடம் மோகன்லாலுக்கு மன நிம்மதி குலைந்தது பற்றி கிளி போயி என்று பேசுவதாக காட்சி வரும்) என்று அர்த்தமாகும்.காசர்கோல்ட் படம் போலவே தான் இதுவும்.அதில் தங்க கடத்தல்.இதில் [(கிங்ஸ் லெவன்)^n] கடத்தல்.ஆனால் அதைவிட இந்தப்படம் கொஞ்சம் பரவாயில்லை.அதில் விநாயகனை வீணடித்திருப்பார்கள்!இதில் அதுபோன்றதொரு கேரக்டரில் சம்பத்!படத்தில் முக்கியமான கேரக்டர் அவரே!

 

      அவருக்கு வரும் தமிழ் வசனங்களை அவரையே பேச சொல்லிவிட்டார்கள் போலும்.மனிதர் ******  ..கோ** என்று பின்னி பெட்டல் எடுத்து விட்டார்.அதிலும் வெற்றிமாறன் கௌதம் மேனன் பாணி  வசைகளாக இல்லாமல் தொண்ணூறுகளில் டப்பிங் ஆகிவரும் சுரேஷ் கோபி நடித்த ஆக்ரோஷமான ஆக்ஷன் படங்களில் வருவது போன்ற வசைகள்!மகாத்மா பட ஆரம்ப காட்சியில் சுரேஷ் கோபி பேசும் அந்த வைரமான வசனத்தை நினைவுபடுத்தியது! 😜


வாழ்க்கை படத்தில் மெல்ல மெல்ல என்னைத்தொட்டு பாட்டில் ஆடிய அதே ரவீந்திரன் இதில் அந்தப்பாட்டுக்கே டான்ஸ்ஆடும் காட்சியில் "இவன் என்னையா ஆடுறான்?" என்று ஆசிப் நக்கலாக கேட்கும் காட்சியும் உண்டு! 
 

மலையாளம் தவிர்த்து தமிழ் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழி வசனங்களும் சரளமாக வருகிறது.

படம் ஓடும் நேரம் குறைவு என்பதால் திரைக்கதை சொதப்பல்கள் பெரிதாக உறுத்தவில்லை.இன்னும் பத்து நிமிடங்கள் நீண்டிருந்தால் தாங்க முடியாமல் போயிருக்கும்!
      காவல் அதிகாரி அறிவுரை சொல்லும்போது அவர் பேசுவதற்கு பதில் பின்னணியில் கிங்ஸ் லெவன்  எச்சரிக்கை வாசகம்(படங்களின் துவக்கத்தில் வருமே!) ஒலிக்க அது தாங்காமல் ஆசிப் அலி தன்னைத்தானே சுட்டுக்கொள்வது போல வரும் காட்சி மலையாளிகளுக்கே உரிய குசும்பு வெளிப்பட்ட தருணம்! 

  டாய்லெட்டில் இரு பெண்கள் மோதிக்கொள்ளும் சண்டை காட்சி இன்ப அதிர்ச்சி! இன்னும் கொஞ்ச நேரம் அதை எடுத்திருக்கலாம்.அவ்வளவு இயல்பான சண்டைக்காட்சிகள் அமைத்த அன்பறிவ் இப்ப கிரீன் மேட் ரோப் என்று அந்தப்பக்கம் போனது பெரிய அவலம்!இந்தமாதிரி மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் தான் சண்டைக்காட்சிகள் தரமாக வருகிறது.

 

   ரொம்ப பெரிய பட்ஜெட் என்றாலே க்ரீன் மேட் தான்!
          கொரிய படங்களில் வரும் உக்கிரமான சண்டைக்காட்சிகள் போல அமைக்கக்கூடிய திறமைசாலிகள் இங்கும் உள்ளனர்.குறிப்பாக இந்திய அளவில் தமிழ் சினிமாவில் தான் அத்தனை திறமை கொண்ட சண்டைபயிற்சியாளர்கள் சண்டை கலைஞர்கள் உள்ளனர்.
   அவர்களை சரியாக பயன்படுத்திக்கொள்வதில் இயக்குநர்களுக்கு அப்படியென்ன சிரமம் என்று தெரியவில்லை!
     கதை காட்சி என்று எல்லாமே குப்பையாக இருக்கும் படங்களில் கூட சில சமயம் அற்புதமான சண்டைக்காட்சிகள் அமைந்துவிடுவதுண்டு.

   நாம் பலமுறை குறிப்பிட்ட அசுரவதம் ஹோட்டல் வராண்டா சண்டைக்காட்சி(திலீப் சுப்பராயன்); முகமூடி படத்தில் நரேன் மற்றும் செல்வா மோதிக்கொள்ளும் அந்தக்காட்சி!  வெறும் உடல் ரீதியாக  செல்வாவை தோற்கடிக்கவே முடியாது என்று புரிந்துகொள்ளும் நரேன் உளவியல் ரீதியாக வீழ்த்தி அந்த பலவீன தருணத்தில் செல்வா இருக்கும்போது மொத்தமாக வீழ்த்திவிடுவார்
திலீப் சுப்பராயன் 

 
   முகமூடி படம் குப்பைதான்.ஆனால் அந்தப்படத்தின் இந்த குறிப்பிட்ட சண்டைக்காட்சி தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஒன்று. புரூஸ்லீ ஜாக்கிசான் போன்றோருடன் பணியாற்றிய  Tony Leung Siu Hung இப்படத்தில் சண்டைக்காட்சி அமைத்திருப்பார்.அது output ல நல்லாவே தெரியும்.சண்டைக்காட்சிகள் என்றால் அப்படி இருக்க வேண்டும்!
 


    ஒரு படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக ஹீரோ(அல்லது பிரதானமாக யார் சண்டை போட போகிறார்களோ அவர்கள்), இயக்குனர் ,சண்டைப்பயிற்சியாளர் ஒளிப்பதிவாளர் ஆகியோர் ஒரு ஒருமித்த நிலையில் முன்பே விவாதித்து சரியாக திட்டமிட்டு  அதை படமாக்கினால் அற்புதமாக அமையும்!
                       Tony Leung Siu Hung
 

   கேப்புடன் பற்றி மற்றவர்கள் கூறும்போது சண்டை கலைஞர்களிடம் "நீங்க வேணும்னா ரோப் கட்டிக்குங்க.ஆனா நா ரோப் போட்டு நடிச்சா இத்தன வருஷம் பண்ணது எல்லாம் போலின்னு ஆகிடும்" என்று சொன்னதாக கேள்விப்பட்டதுண்டு.ஆனால் அவரே பிற்காலத்தில் ரோப் போட்டு நடித்து நம்மை பெரும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தினார்!
   விவேக் அடிக்கடி கேப்புடன கிண்டல் செய்ய சொல்லும் "செவுத்துல லெஃப்ட் லெக்க வச்சு ரைட் லெக்கால சுழட்டி சுழட்டி அடிப்பார்" வசனம் பலருக்கும் நினைவிருக்கும்.

  ஸ்டண்ட்மேன்  அழகு சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் "அப்படி எல்லாம் ஒரு காலை செவுத்துல வச்சிட்டு இன்னொரு கால்ல லேண்ட் ஆகிறது அவ்வளவு சுலபமில்ல.ஆனா அவர் அதை செஞ்சார்".அழகு முறைப்படி களரி பயின்றவர்.
 

    கேப்புடனின் தோள்பட்டை மூட்டு அவ்வப்போது கழண்டு விடும் என்பதால கால்களாலேயே சண்டையிடும் விதத்தில் தனது பாணியை மாற்றிக்கொண்டார் என்றும் சொல்வதுண்டு.

   ஆனால் அலெக்சாண்டருக்கு பிந்தைய படங்களில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி என்றாலே காற்றில் எல்லாரும் பறக்க வேண்டும் என்பதாக மாறிப்போனதில் ஏற்பட்ட வீழ்ச்சி! அந்தப்பாணியில் கேப்புடனும் சென்று நகைப்புக்குரிய காட்சிகளாக இன்று பார்க்கப்படும் சில சண்டைக்காட்சிகளில் நடித்து ஏற்கெனவே உயிரை பணயம் வைத்து நடித்த பல சண்டை காட்சிகளுக்காக பாராட்டு பெற்றதை விட இம்மாதிரி பறக்கும் காட்சிகளுக்காக கேலி கிண்டலுக்கு அதிகமாக உள்ளானார்!

 

  ஜான் விக் படத்தில் யாரும் ஆகாயத்தில் பறப்பதில்லை!ஆனாலும் அந்த பிரம்மாண்டத்தை சண்டைக்காட்சிகளில் காணலாம்!சும்மா ரோப் க்ரீன் மேட் சிஜி இருக்குன்னு சகட்டுமேனிக்கு படமாக்கி அதை பிரம்மாண்டம் என்று சொல்லக்கூடாது!
    

Tuesday, 3 June 2025

ஆயிரத்தைநூறு கலோரி பிரியாணியும் இன்வெர்ட்டர் ஏசியும்

 யூ ட்யூப் தமிழ் வீடியோக்கள்  குறிப்பாக சிலவற்றை மட்டுமே பார்ப்பதுண்டு.சித்ரா  லட்சுமணன் பேட்டிகள் கூட பேட்டி கொடுக்கும் நபர் சார்ந்தே இருக்கும்.பயில்வான் திரை விமர்சனம்  மிஷ்கின் பேச்சு, ராதாரவி பேச்சு  (இதெல்லாம் எங்க உருப்பட போவுது? - த.மணியன்)   என்று மட்டுமே பார்ப்பதுண்டு.

      அதையும் தாண்டி சில குப்பைகள் காற்றில் எழும்பி புழுதி கிளப்பி பல நாட்கள் ஒவ்வாமையை உண்டுபண்ணி விடுகிறது.
   அப்படியான ஒரு சேனல் LEMS.Let's make Engineering Simple. சரி ஊர்ல தடுக்கி விழுந்தால் ஒரு என்ஜினியர் என்று இருக்கும் நிலையில் இது மற்றுமொரு வேலையற்ற என்ஜினியர் உருவாக்கிய சேனல் என்று விட்டுவிடலாம் தான்.ஆனால் இவர்கள் இன்று பல பள்ளிகளில் நாங்கள் workshop நடத்துகிறோம் ; தனியாக கோடை விடுமுறை வகுப்புகள் உண்டு என்றெல்லாம் சொல்லும்போது தான் பீதி கிளம்புகிறது.
    காரணம் இவர்களின் லட்சணம் எத்தகையது? என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் சொல்கிறோம்.
ஒரு நாளைக்கு ஆயிரத்தைநூறு கலோரிகள் சாப்பிட்டால் உடல் எடை குறையும்(அதாவது ஒரு நாள் தேவை இரண்டாயிரம் கலோரி என்பதை கணக்கில் கொண்டு) என்றொரு மருத்துவ ஆய்வு சார்ந்த முடிவு உண்டு.
    அதை மையமாக வைத்து LMES சேனலில் ஒரு வீடியோ.பொரியல் சாரி பொறியியலுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம் என்று யாரும் கேட்க கூடாது.நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஐயாயிரம் வருட இரும்பு பதிவின்படி ஒரு சேனலை உருவாக்கிவிட்டு வானத்திற்கு கீழே மேலே சைடில் என அனைத்தைப்பற்றியும் பேசுவது புதிதல்ல.

   அதாவது ஒரு நாளைக்கு ஆயிரத்தைநூறு கலோரிக்கு மூன்று வேளையும் பிரியாணி மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம் என்றொரு வீடியோ .ஆகா! இதல்லவோ இஞ்சி-ன்-earring தகவல்! இந்த சொறிய சாரி அரிய கண்டுபிடிப்பை ஹார்வர்ட் மருத்துவர்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை! மருத்துவ உலகே யோசிக்காத இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியது இந்த LEMS! இப்படியான அரிய கண்டுபிடிப்பாளர் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் வகுப்பு எடுத்தால் அவர்கள் எப்படியாக வளர்வார்கள்????????
 

 

    இந்த அவல நகைச்சுவை ஒருபக்கம் என்றால் இந்த LEMS கரகாட்ட கோஷ்டியில் இருந்து விலகிச்சென்ற மற்றொரு பக்ரா buying facts & engineering facts என்று இரு சேனல்கள் ஆரம்பித்துள்ளது.

    அதுவும் இப்படித்தான்.சாதா ஏசிக்கும் இன்வெர்ட்டர் ஏசிக்கும் மின்சார பயன்பாட்டில் எந்த வித்தியாசமும் இல்லை என்றொரு வீடியோ!

 

   அடங்கப்பா! இன்வெர்ட்டர் ஏசி என்பதே மிக சிக்கலான ஒரு சாதனம்.நீங்கள் எந்தமாதிரி அறையில் இதை மாட்டுகிறீர்கள் என்பதை பொறுத்தே மின் பயன்பாடு இருக்கும்.
   உதாரணமாக அதிகமான ஜன்னல்கள்,நேரடி சூர்ய வெளிச்சம் அறையின் மேற்கூரையில் விழுதல் அடிக்கடி அறையின் கதவுகள் திறந்து மூடப்படுமா? ஜன்னல் கதவுகள் இடுக்குகளில் சரியான இன்சுலேஷன் உள்ளதா என்று ஏகப்பட்ட காரணிகள் உள்ளன.
     மேற்சொன்ன இருக்க கூடாது பட்டியல் உள்ள ஒரு அறையில் இன்வெர்ட்டர் ஏசி போட்டால் கண்டிப்பாக சாதா ஏசி அளவுக்கு மின் பயன்பாடு இருக்கும்!

  அறை எத்தகையது?பயன்பாடு எவ்வளவு நேரம்?தொடர்ச்சியாகவா அல்லது விட்டு விட்டு பயன்பாடா? என்பதெல்லாம் கவனித்தே இதை பொருத்த....ஆம்... ஏசி மாடல் எந்த மாடலாக இருந்தாலும் அது எந்த லட்சணத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே அதன் செயல்பாடு அமையும்.காப்பர் குழாய்களை வளைக்க bender பயன்படுத்தாமல் கையால் வளைத்து அதனால் ஒரே வாரத்தில் கேஸ் லீக்கான சம்பவங்கள் உண்டு!
    மேலும் புதிதாக ஏசி பொருத்தும்முன்
 Indoor unit ஐ vacuum செய்தல்,காப்பர் குழாய்கள் மேல் காட்டன் சுற்றுதல்,இதுதவிர தரமான ஸ்டெபிலைஸர் பொருத்துதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறையாவது சர்வீஸ் செய்தல்,Outdoor unit ஐ சீதோஷ்ண மாறுதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் டாப்  போடுதல் என்று ஏற்கப்ப சமாச்சாரங்கள் உண்டு. இன்வெர்ட்டர் ஏசி பென்ஸ் கார் மாதிரி.பக்காவாக பராமரிக்காமல் போர்டு போச்சு என்று புலம்புவதில் நியாயமில்லை!

    இத்தனை விஷயங்கள் இருக்க இது எதைப்பற்றியும் கவலையேபடாமல் ஏதோ சொந்தமா ஒரு ஆய்வு(!!??)முடிவு என்று அடித்து விட்டுள்ளார்கள்!

    இதே சேனலில் முடி உதிர்தல் பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் வீடியோவும் உண்டு!

 

   அப்புறம் வழக்கம்போல எந்த யூ ட்யூப் சேனலாக இருந்தாலும் கொஞ்சம் வளர்ந்தால் செய்வதை இந்த சேனலும் செய்கிறது.கண்ணாடி கடை விளம்பரம் சுத்தமான முறையில் புட்டியில் அடைக்கப்பட்ட இளநீர் விளம்பரம் என்று இவர்களுக்கு பிழைப்பு நன்றாகவே ஓடுகிறது!
   மொத்தத்தில் இவர்கள் இன்ஜினியரிங் கத்து கொடுக்காட்டியும் எப்படி மக்களிடம் குறளி வித்தை காட்டி அதிக பார்வையாளர்கள்,அதிக விளம்பரதாரர்கள்,அப்புறம் அந்த யூ ட்யூப் வெள்ளி கேடயம் தங்க கேடயம் இவைகள் மூலம் அதிக டப்பு பெறுவது என்று டெமோ காட்டியுள்ளார்கள்!
   பள்ளி கல்லூரிகளில் இவர்கள் கேம்ப் அது இதுவென்று நடத்துவதை பார்த்தால் 
இந்த சேனல்களை பார்ப்பவர்களை விட பரிதாபத்துக்குரியவர்கள் அந்த 
மாணவ -மாணவிகள்தான்!
.
டிஸ்கி
உதயா: ஆமா இவங்க பொறியியல் வல்லுநர்கள் தானே?அப்புறம் ஏன் எந்த பொறியியல் கம்பெனியும் இவர்களுக்கு வேலை கொடுக்கல?

கும்மாங்கோ : அவர்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கு!
    
      

Tuesday, 27 May 2025

மரணமாஸ் - சுராத்து'ஸ் day out!

 படம் நம்மை ஈர்த்ததில் முக்கிய பங்கு பசில் ஜோசப்பின் கெட்டப்புக்கே.அசல் சுராத்தை படத்தில் இரு ரூபங்களில் காணலாம்.

   தோற்றத்தில் மட்டுமல்லாது ; காலி பெருங்காய டப்பாவாக இருந்தாலும் ஓவர் பில்டப் & பந்தா ,தன்னை சுற்றி ஒரு துதி பாடும் கூட்டத்தை தயார் செய்து வைத்திருத்தல்,ஏடாகூடமாக ஏதாவது செய்து ஊரை அலற விடுதல் என்று லூக் (பசில் ஜோசப்) நடத்தையிலும் அசல் சுராத்துதான்.

 

 
    
தனது தந்தையைக்காணோம் என்றதும் பெண்கள் கழிப்பிடத்தில் மகன் தேடும் காட்சி,பட்டாயா தொடர்பான உரையாடல்,அந்த கண்டக்டர் அருவி கேசவ குரூப் மார்பில் குத்தப்பட்ட பச்சை போலவே தனது மார்பில் இருக்க "யப்பா!" என்று உணர்ச்சிவசப்படுதல் அதகளம்!             
           பார்க்கும் எல்லோருக்கும் அதேமாதிரி பச்சை குத்திவிட்ட குரு சோமசுந்தரத்தை ஜோசியராக காட்டியதும் வந்த பீதி ஒரே ஷாட்டோடு அவரை அனுப்பி வைத்து இயக்குனர்  பால் வார்த்தார்! ஒரு பஃப் கிங்ஸ் லெவன் மற்றொரு பஃப் ஆஸ்த்துமா இன்ஹேலர் என்று கேசவ குரூப் இழுப்பதாக காட்டி கீழே எச்சரிக்கை வாசகம் போடும்  சென்சாருக்கே சவால் விட்டுள்ளார்கள் ! 😃
  சீரியல் கொலையாளி வேடம் செய்த ஶ்ரீகுமார்(ராஜேஷ் மாதவன்) மற்றும் கேசவ குரூப்( புலியனம் பௌலோஸ்) ஆகிய இருவருமே பார்க்க ஏதோ  AI உருவாக்கிய உருவம் உயிர்பெற்று வந்ததுபோல இருக்கிறார்கள். குறிப்பாக நேரு உடை அணிந்து வரும் SK   surreal அனுபவத்தை உண்டாக்குகிறார்!
      நமதபிமான சைத்ரா ஆச்சார் நடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்த படம்  Happy Birthday to me .கிட்டத்தட்ட அந்தப்படம் தந்த அனுபவம் இதிலும் கிடைத்தது.பல இடங்களில் விடாது சிரிப்பு தான் 😃 ( உதயா சீரியஸ் காட்சிகளைக்காணும் போதே சிரிப்பான்.இப்ப சிரிப்புக்கு கேட்கணுமா? - கும்மாங்கோ).

     சீரியல் கொலையாளி சுற்றி வளைப்பு என்றதும் வரும் சுராத்து அறிமுக காட்சி அட்டகாசம்! சுராத்து அண்ணாயிஸ்ட்டாக காட்டப்படுகிறார்.அறிமுக காட்சியும் மெர்சல் அண்ணா ஸ்டைல் தான் 😃 . தியேட்டராக இருந்திருந்தால் ஃபயர் விட்டிருக்கலாம்! 



 

    கிராமபஞ்சாயத்து தலைவரின் கூகுள் சர்ச் ஹிஸ்டரியை  பிரிண்ட் போட்டு பஞ்சாயத்து அலுவலகம் வாயிலிலேயே ஒட்டியது,சர்ச் பாவ மன்னிப்பு உரையாடல்களை ரகசிய மைக் மூலம் ஸ்பீக்கரில் ஒலிபரப்பியது,சுராத்து கைது செய்யப்பட்டதும் ஊர் மக்கள் திரண்டு கண்டிப்பது,நீச்சல் வீரர் இறந்ததும் நீச்சலை தடை செய் என்று போராடுதல்,பேப்பர் ஸ்ப்ரே அடித்து கொன்றதாக காதலி சொல்ல "என்ன ஃபிளேவர்?" என்று கூலாக கேட்பது,இடுகாட்டில் "டென்சனா இருக்கு ஒரு பீடி பத்த வச்சிக்கிறேன்" என்று கேசவ குரூப் பையில் இருந்த [(கிங்ஸ் லெவன்)^n] கலந்த பீடியை இழுத்து அடுத்த நொடியே 'விண்வெளி நாயக்கடு'வாக மாறி பேசுதல் என்று சின்ன சின்ன கிறுக்குத்தனங்கள் அட்டகாசம். 



   சீரியல் கொலையாளி (SK) சிறுவர் சிறுமிகள் மத்தியில் நின்றபடி வெட்டு குத்து என்று கதை சொல்லும்போது எல்லோரும் அலறி அழ ஒரு சிறுவன்(அவன் அட்டகாசமாக நடித்துள்ளான்) "மிச்ச கதையை சொல்லு!" என்று கேட்பது( ஒருவேளை அவன் உதயா உள்வட்ட வாசகனாக இருப்பானோ?  - கும்மாங்கோ) என்று வகைதொகை இல்லாது புகுந்து விளையாடி விட்டார்கள். 

 

     கதாநாயகித்தனம் இல்லாத கதாநாயகி என்ற பெருமையை நஸ்ரியாவுக்கு அடுத்து அனிஷ்மா பெறுகிறார்.ஏற்கெனவே இவர் ஐ ஆம் காதலன் படத்தில் நடித்தவர்.அதற்காக இவர் அடுத்த நஸ்ரியா என்றெல்லாம் அடித்து விட மாட்டோம்.கடைசியில்  எல்லாரும் எஸ்கேவிடம் அடிவாங்கி விழுந்து கிடக்கும்போது ஜெஸ்ஸி ஆவேசமாக வந்து நின்றபோது "இவர் புரட்டி எடுப்பதாக காட்டினால் சாதாரண run of the mill காட்சியாகி விடுமே!" என்று வருத்தப்பட்டதை புரிந்துகொண்டதை போல "கலாய்ப்பதில் ஆண் பெண் பேதமே இல்லை" என்று டாப் கியரில் அடித்து தூக்கி விட்டனர்!

  


   வினீத் ஶ்ரீனிவாசன் நடித்த ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படத்தின் இறுதியில் மிக சீரியஸாக ஒரு அடக்கம் செய்யும் காட்சி வரும்.அதாவது டபுள் அடக்கம்.ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட ஒரு சவப்பெட்டியின் மேலேயே கொல்லப்பட்டவர்(யாரென்று சொல்ல மாட்டோம்.படம் பார்க்காதவர்கள் கடுப்பாகி விடுவார்கள்) பிரேதத்தை போட்டு மூடி விடுவார்கள்.

 

  இந்தப்படத்திலும் அப்படியான ஒரு முயற்சி வருகிறது.ஆனால் இனி எப்போதாவது அந்த செகண்ட் கிளாஸ் யாத்ரா பட அடக்க காட்சியை பார்த்தால் இந்தப்பட காட்சி நினைவுக்கு வந்து சிரிப்புதான் வரும்!
   சூர்யா தனக்கு கேரளாவில் வாசகர்கள் அதிகம் என்பார்.அது உண்மையோ பொய்யோ ஆனால் சூர்யா, சுராத்து ஆகியோர் குறித்து சூர்யாவின் எழுத்து மூலமாக பரிச்சயம் ஆனவர் யாரோ அவர்களை வில்லங்கமாக சித்தரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் நமக்கு இப்போதும் உண்டு 🤪 சுராத்து - லூக்
சூர்யா - படம் பார்த்தாலே புரியும்! 😜



ஒரே குறை அந்த கேரக்டர் ஆன்லைனில் கில்மா சாட்டிங் செய்வதாக காட்டியிருந்தால் முழுமை பெற்றிருக்கும்!


    இந்தமாதிரி அவல நகைச்சுவை படங்களாக பார்த்து சிரித்து பழகிவிட்டதால் சாதாரண நகைச்சுவை காட்சிகள் அவ்வளவு சிரிப்பை உண்டாக்குவதில்லை!

     ஒலக விமர்சகர்கள் இப்படம் குறித்து எழுதும்போது அலுத்தபடி "இன்னும் எத்தனை murder mystery படங்களைத்தான் மலையாளத்தில் எடுப்பார்கள்" என்பதாக எழுதியதை படித்ததும் தலை சுற்றியது.
        அடங்கப்பா ஒரு சிபிஐ டயரி குறிப்பு மாதிரியான படமா இது??இது ஒரு அவல நகைச்சுவை படம்.கொலையாளி இவர்தான் என்று ஆரம்பத்திலேயே காட்டி விடுகிறார்கள்.இருந்தும் இப்படியாக எழுதுகிறார்கள்.இவர்களே தமிழில் வரும் மிகை உணர்ச்சி படங்களை உச்சிமுகர்ந்து "இந்த படமெல்லாம் மலையாளத்தில் வந்திருந்தால் கொண்டாடப்பட்டிருக்கும்" என்று மூக்கு சிந்துவார்கள்!
   இன்னொரு க்ரூப் cringe என்று வருகிறது.எல்லாரும் cringe என்ற அனிமல் பார்க் படத்தையே ரசித்தோம்! ஆக cringe சான்றிதழ் வழங்கும் கோஷ்டி மொத்தமாக அத்தகைய படங்களின் பட்டியலை வெளியிடவும்! நீங்கள் பாராட்டும் படங்களை விட cringe ஆகும் படங்கள் அட்டகாசமாக இருக்கிறது!
   நாம் சுராத்துக்காக ரிப்பீட் ஆடியன்சாக படத்தை மீண்டும் பார்ப்போம்!(அப்போ சூர்யாவுக்காக இன்னொருக்கா பாக்க மாட்டியா?- கும்மாங்கோ)