Monday, 6 October 2014

ஜீன்சும் பாலியல் குற்றங்களும்....

                              பழைய எம்.ஜி.ஆர் படங்களில் தொடங்கி டாக்குடர் படங்கள் வரை இந்த காட்சி கண்டிப்பாக இருந்தே தீரும்.நாயகி மாடர்ன் டிரெஸ் போட்டுக்கொண்டு வரும்போது சிலர் அவரை கலாட்டா செய்துகொண்டே அவரை நெருங்க   முயல நாயகன் ஏர்ல டைவ் அடிச்சி நாயகியை காப்பாத்திட்டு "பொம்பளன்னா இப்படி டிரெஸ் பண்ண கூடாது..நம்ம கலாச்சாரப்படி டிரெஸ் போட்டிருந்தா இது நடந்திருக்குமா?" என்று முழநீள அட்வைஸ் கொடுப்பார்கள்.நாயகிக்கு நாயகன் மீது காதல் வரும்.அடுத்த சீனில அவர் "கலாச்சாரப்படி" புடவை கட்டிக்கொண்டு வர, அதை பார்க்கும் நாயகன்.கட் பண்ணா டூயட்.அதுல "கலாச்சாரமில்லாத"(நாயகனின் சொல்படி) உடையணிந்து நாயகி ஆட அவர் அங்கங்ககளை நம்ம கலாச்சார காவலர் வரிக்கு வரி வர்ணிப்பார்.
                              சரி கலாச்சார உடை என்றால் என்ன?பெண்களை கலாச்சாரப்படி உடை அணியச்சொல்லும் ஆண்கள் கலாச்சாரப்படி உடை அணிகிறார்களா?உண்மையில் நம் நாட்டு கலாச்சாரப்படி உடையணிய வேண்டுமென்றால் ஆண்கள் இடுப்புல ஒரு லங்கோடு+ஒரு வேட்டி.அம்புட்டுதான் அணிய முடியும்.இந்த சட்டை, டி ஷர்ட், உள்பனியன், ஜட்டி எல்லாம் மேற்கத்திய கலாச்சாரம்தான்.ஷூ, சாக்ஸ், கூலிங்க்ளாஸ் இதைப்பத்தி எல்லாம் சொல்லத்தேவையில்லை.
                            சரி பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் அணியும் உடைதான் காரணமா?நேற்றுவரை நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் சொல்படி "கலாச்சார" உடையணிந்த பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை காண முடியும்.(அதற்காக மாடர்ன் டிரெஸ் அணிந்தால் தப்பிக்கலாம் என்று சொல்லவில்லை.இவர்களின் கூற்றில் உள்ள பொய்யை நிரூபிப்பதற்கே இந்த வாதம்).

                         நேற்று பிறந்த குழந்தையையும் ரேப் செய்கிறார்கள்.எண்பது வயது மூதாட்டியையும் ரேப் செய்கிறார்கள்.பக்கத்து நாட்டில் இறந்த பெண்களை கூட புணர்ந்த இனவெறி ராணுவம்பற்றி உலகறிந்தும் கள்ள மௌனம் சாதிக்கிறது.அதற்கெல்லாம் இந்த கலாச்சார காவலர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
    -"இரண்டு வயது குழந்தை அம்மணமாக இருந்ததாலேயே ரேப் செய்யப்பட்டது" என்று சொன்னாலும் சொல்வார்கள்.
-எண்பது வயது மூதாட்டி "கலாச்சரப்படிதானே உடையணிந்திருப்பார்?அவர் ஏன் ரேப் செய்யப்பட்டார்?
-"இறந்து போன பெண்கள் கண்ணியமாக நடந்துகொள்ளவில்லை.அதனால் அவர்கள் புணரப்பட்டனர்" என்றும் இந்த காவலர்கள் சொல்வார்கள்.
                              மற்றொரு வாதம் "ஐம்பது வருசத்துக்கு முன்னாடி இவ்வளவு பாலியல் குற்றங்கள் இருந்ததா?இல்லை.ஏன்?பெண்கள் கலாச்சாரப்படி உடையணிந்தார்கள்" என்பதும் இவர்கள் வாதம்.இது உண்மையா?
                           பாலியல் குற்றங்கள் மட்டுமா ஐம்பது வருஷத்தில் பெருகி இருக்கு?ஊழல்,திருட்டு,கொலை,லஞ்சம் இவைகூடத்தான் பெருகியிருக்கு.அதுக்கு என்னப்பா பின்னணி காரணம் வைத்திருக்கிறீர்கள் காவலர்ஸ்?...
                   குற்றங்கள்,அது எந்த குற்றமாக இருப்பினும் அதிகரித்துள்ளதற்கு காரணம் குப்பையான கல்விமுறை,பிள்ளைகளை வளர்க்கும் விதம்,சமூக சீரழிவு,குப்பையான சினிமா, நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கமே ஒழிந்து போனது,குடும்ப வாழ்க்கை சிதைவு  போன்று பல்வேறு காரணங்கள்.ஆனால் இவர்கள் ஏதோ இல்லாத காரணத்தை பிடித்து தொங்கி கொண்டிருப்பதில் பேரானந்தம் காண்கிறார்கள்..
            காலம் காலமாக மதம் இனம் சாதி மற்றும் இன்னபிற அம்சங்களை கொண்டு அதிகமாக ஒடுக்கப்பட்டது பெண்கள்தான்.தாழ்த்தப்பட்டவர்களைவிடவும் கீழான நிலையில் பெண்கள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

           "கலாச்சாரப்படி" உடையணியும் பல்வேறு கடுமையான சட்டங்கள் இருக்கும் அரபு நாடுகளும் இதற்கு விதிவிலக்கில்லை எனும்போது பிரச்சனை பெண்களிடம் இல்லை என்பதை இன்னும் உணர மறுப்பதேன்?சமீபத்தில் இரானில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான கர்ப்பிணி பெண்ணை தூக்கில்   போட்டு(தான் ரேப் செய்யப்பட்டோம் என்பதற்கான நான்கு சாட்சிகளை அவர் காண்பிக்க முடியாததால்)  "நியாயத்தை" நிலைநாட்டினர்.இதை எந்த காவலர்ஸ் விமர்சித்தார் என்று தெரியவில்லை.எந்நேரமும் புரட்சி நரம்பை சொறிந்துகொண்டிருக்கும் வினவு உட்பட.கடும் சட்டங்கள் கொண்ட சவுதியில் 23% குழந்தைகள் ரேப் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வு சொல்கிறது.
                  2020 ல் "வல்லரசாகப்போகும்" இந்தியாவில் பாதி சனத்தொகைக்கு சரியான கழிப்பறை வசதியே இல்லை.பெண்கள் வயல்வெளிகள் அல்லது வேறு மறைவிடங்களில் ஒதுங்கும்போது பாலியல் வண்புணர்வுக்கு ஆளாகிறார்கள்.சமீபத்தில் உ.பியின் படுவான் என்ற இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்ற அக்காள் தங்கை இருவரும் காணாமல் போக பிறகு விசாரணைக்கு பிறகு அவர்கள் ரேப் செய்யப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதில் கொடுமை என்னவெனில் அந்த இரண்டு உடல்களும் முறையான பிரேத பரிசோதனை செய்யப்படாமலேயே கங்கை நதிக்கரையில் புதைத்து "அடையாளத்துக்கு" ரெண்டு முள்ளு செடியைநட்டு வைத்திருந்தார்கள்.பிறகு அங்கே வெள்ளம் வந்து அனைத்தும் அடித்து செல்லப்பட்டுவிட்டது.பிரேத பரிசோதனை முறையாக செய்யப்படவுமில்லை.அந்த உடல்களும் வெள்ளத்தில் சென்றுவிட்டதால் எந்த மைனர் குஞ்சு(கள்)இதை செய்தனவோ அவை அடுத்த ரேப்பை அட்வான்ஸ் புக்கிங்கில் செய்ய தயங்காது என்பதை சொல்லத்தேவையில்லை.இதைப்பற்றி காவலர்ஸ் என்ன சொல்ல போறேள்?கழிப்பறை இல்லாதது அந்த பெண்களின் குற்றமா?இல்லை பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பது குற்றமா?
                  மேலும் இந்த பேருந்துகளின் "இடி" மன்னர்களுக்கு எந்த உடையும் ஒன்றுதான்.
              அப்போ உடையும் காரணமில்லை.இளம்பெண் என்பதும் காரணம் இல்லை.பிறகு என்னதான் காரணம்?ஆண்களின் மனோபாவம்.அவர்கள் வளர்க்கப்படும் விதம்.
           சிறு வயதில் இருந்தே பெண்கள் என்றாலே அவள் கண்டிப்பாக ஏதோ ஒரு ஆணுக்கு சொந்தமாகப்போகும் பண்டம் என்றே ஆண் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கபபடுகிறது.இந்த ஆண் குழந்தை, இளைஞன் ஆனதும் ஒரு பெண்ணை பார்க்கிறான்.இவனுக்கு பிடித்திருக்கிறது.உடனே அவள் தனக்கு மட்டுமே சொந்தமான பண்டம் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது.இவன் அவளிடம் போய் இதை சொல்கிறான்.அவள் மறுக்கிறாள்..உடனே "எனக்கு கிடைக்காத இந்த பண்டம் யாருக்கும் கிடைக்கூடாது" என்று அமிலத்தை வீசுகிறான்.
                    இந்த காவலர்ஸ் அமில வீச்சுக்களை தடுக்க என்ன வழி சொல்ல போறேள்?பெண்கள் இரும்பு கவச உடையணிந்து சென்றால் அமில வீச்சில் இருந்து தப்பிக்கலாம் என்று ஐடியா வந்தாலும் வரும்.
                         சினிமாவும் இதே எண்ணத்தைதான் ஆண்களின்(குறிப்பாக இளைஞர்கள்) மனதில் பதிய வைக்கிறது.சில உதாரணங்கள்:
 -யூத் படத்தில் டாக்குடர் நாயகியிடம் லவ்வை சொல்ல அவள் ஐ டோன்ட் லவ் யூ என்பார்.."எனக்கு அதபத்தி கவலை இல்ல" என்று மகா புத்திசாலித்தனமாக பதில் அளிப்பார் டாக்குடர்.
-எட்டு  வயது சிறுவன்  மனதளவில்   28 வயது இளைஞன் ஆகிவிட (மனதளவில் எட்டு வயதுதான்)அவனுக்கு நாயகி சக்கர இனிக்கிற சக்கர என்று "வகுப்பெடுக்கும்" மகோன்னத காட்சி ந்யூவில்.
- காயம்பட்ட சிம்புவுக்கு ரத்தம் கொடுத்த நாயகியை பார்த்த உடனேயே லவ்வை சொல்லி அவள் மறுத்தாலும் தொடர்ந்து அவளை மிரட்டி பணிய வைத்து திருமணம் செய்யும் காவிய காட்சி தம் படத்தில்.
-எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற தத்துவத்தை பதிய வைத்தது பிரியமுடன்.
-தம்பி பொண்டாட்டியை அடைய அண்ணன் செய்யும் சேட்டைகள் வாலி.

              இதை தவிர்த்து  இசையுலகில் இருந்து எவ்வளவு மகத்தான பாடல்கள் வந்துள்ளன?
-வேணாம் மச்சா வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
-ஆணோட காதல் கைரேக போல பெண்ணோட காதல் கைக்குட்ட போல
-இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சிபோச்சுடா
-அடிடா அவள ஒதடா அவள வெட்றா அவள...
         இந்த கருமாந்திர லிஸ்டை இனியும் தொடர விருப்பமில்லை.இப்படியாகத்தான் இருக்குது சமூக நிலைமை.ஆனால் மேற்குறிப்பிட்ட எந்த விஷயத்தையும் விமர்சிக்காத காவலர்ஸ் பெண்கள் உடை மட்டும் கண்ணை உறுத்துது என்றால் நல்ல கண் டாக்டரை அணுகவும்.
         
                               

Saturday, 9 August 2014

Safety Last(1923)- மரண சாகசம்

                                          படத்தை பற்றி சொல்வதற்கு முன் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.அவர்தான் பிரபல திரைப்பட விமர்சகர் மறைந்த Roger Ebert.இவரின் ஒரு விமர்சனத்தை வாசித்துகொண்டிருந்த போது அதில் silent film trio என்று மூவர் பெயரை குறிப்பிட்டிருந்தார்.
ரோஜர் எபர்ட்

                  அதுவரை எனக்கு மவுனப்படம் என்றாலே சாப்ளின்(ஆங்கில படங்களை பொறுத்தளவில்) மட்டும்தான் தெரியும்.மேற்சொன்ன trio வாக அவர் குறிப்பிட்டிருந்த மூன்று பெயர்கள் சாப்ளின்,Buster Keaton மற்றும்  Harold Lloyd. கீட்டோனின் The General படம் பற்றி ஐந்து வருடங்கள் முன்பு கேள்விபட்டிருந்தாலும் படத்தை பார்க்கவில்லை.சமீப காலத்தில் மீண்டும் கீட்டோன் பெயரை கேட்க நேர்ந்தது.காரணம் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் கீட்டோனின் Our Hospitality படத்தின் உல்டா என்பதாலேயே.சரி உல்டாவை பார்ப்பதை விட ஒரிஜினலை பார்ப்பதே மேல் என்று பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் அதை மனக்குறிப்பாக குறித்துக்கொண்டேன்.
                   மூன்றாவது பெயரான ஹரோல்ட் லாய்ட் பற்றி தேடி கொண்டிருந்த போது Safety Last படத்தின் போஸ்டரை இணையத்தால் கண்டபோது ஒரு சுவாரஸ்ய காட்சி நினைவுக்கு வந்தது.
அது விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐ.பி.எஸ் படத்தின் காட்சிதான். பெரிய கடிகாரம் ஒன்று பன்னிரண்டு மணி அடித்தால் குண்டு வெடிப்பது போல செட் செய்யப்பட்டிருக்கும்.இவர் அதில் ஏறி அந்த நிமிட முள்ளில் தொங்குவார்.அது பதினொன்று ஐம்பத்தைந்தில் இருந்து பதினொன்றரைக்கு சரியும்.அந்த காட்சியின் ஷூட்டிங்கை அப்போது தூர்தர்ஷனில் காட்டினார்கள்.டூப் போடாமல் நிஜமாகவே ஏறியதை கண்ட அந்த காட்சி Safety Last பட போஸ்டரால் மீண்டும் நினைவுக்கு வந்தது.ஆனால் S.L படத்தை பார்த்து வாசு இந்த காட்சியை சேதுபதி படத்தில் வைத்திருக்க மாட்டார்.S.L பட பாதிப்பில் பல்வேறு படங்களில் அதே போன்று நாயகன் கடிகார முள்ளில் தொங்கும் காட்சிகள் வந்துள்ளன.ஜாக்கி சானின் ப்ரோஜக்ட் ஏ படத்திலும் பிறகு 1991 ல் சில்வஸ்டர் ஸ்டால்லோன் நடித்த Oscar படத்திலும் வந்தது.அதை பார்த்து இயக்குனர் அதே போன்றதொரு காட்சியை வைத்துள்ளார்.பிறகு ஸ்கார்ஸீஸ் இயக்கிய மௌனப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் எடுத்த  Hugo படத்திலும் அப்படி ஒரு காட்சி உள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும்.


                        இப்போது படத்தைப்பற்றி பார்ப்போம்.தான் வேலை செய்யும் துணிக்கடையின் விற்பனையை பெருக்க ஐடியா சொன்னால் ஆயிரம் டாலர்(1923 ல் அது எவ்வளவு மதிப்பு என்பதை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்) என்கிறார் முதலாளி.நான் அதை செய்து காட்டுகிறேன் என்று தனது நண்பனை மனதில் வைத்து சொல்கிறார் ஹரோல்ட் .ஆனால் அந்த நண்பனை போலீஸ் தேடுகிறது(ஹரோல்ட் தனது போலீஸ் நண்பன் ஒருவனிடம் விளையாடுவதாக நினைத்துக்கொண்டு வேறொரு போலீஸ் அதிகாரியிடம் சேட்டை செய்ததன் விளைவு.நண்பனை அந்த அதிகாரி துரத்துகிறார்).அதனால் ஹரோல்டே பன்னிரண்டு மாடி கட்டிடத்தில் ஏறுவதாக படம்.

                      படத்தில் வரும் பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்றுவரை தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கிறது.உதாரணமாக வழுக்கை தலையை பார்த்து நாயகன் தலை சீவுவது பிற்காலத்தில் தலைவர் கவுண்டர் வகையறா காமெடியானது தெரிந்திருக்கும்.அவர் மட்டுமல்லாது பல்வேறு நபர்கள் இந்த மாதிரி காட்சியை பயன்படுத்திகொண்டிருக்கிறார்கள்.
                       மற்றொரு காட்சி துணிக்கடையில் துணி எடுத்துப்போடும் வேலை செய்யும் ஹரோல்ட் தனது காதலியிடம் தான்தான் முதலாளி என்று ஏமாற்றுவது கல்யாண பரிசு வகையறா.இப்படி பல்வேறு காட்சிகள் இன்றுவரை அதன் மூல காட்சியை எடுத்தவர் பெயர் தெரியாமல் பயன்படுத்திகொண்டிருக்கிறார்கள்.

              அந்த கட்டிடம் ஏறும் காட்சி படமாக்கப்பட்ட விதம் பற்றி பல்வேறு கருத்துக்கள் உலாவுவதை கண்டேன்.உதாரணமாக மலை உச்சியில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஹரோல்ட் ஏறுவது போல காட்டியதால் தரைமட்டத்தில் இருந்தாலும் உயரமானது போல தோன்றியது என்கிறார்கள்.இது அபத்தம்!தொலைவில் கீஈஈஈழே சாலை தெரிகிறது(ப்ளூ ரே பிரிண்டில் பார்த்ததால் இவைகளை தெளிவாக காண முடிகிறது).தவிர body double எனப்படும் டூப் போட்டதாக சொல்லப்படுவதும் அபத்தம்.கட்டிடம் ஏறும் காட்சியில் தெளிவாக அவர் முகத்தை  காண முடிகிறது.முகத்தில் க்ரீன் மேட் துணி போட்டு மூடி பிறகு கிராபிக்ஸில் இவர் முகத்தை பொருத்தும் தொழில்நுட்பம் எல்லாம் அப்போது வரல.அதனால் அவரேதான் அதில் நடித்துள்ளார்.        
                            பொதுவாகவே சாப்ளின் கீட்டோன் அல்லது பொதுவாக (நகைச்சுவை) மௌனப்படங்களில் நடிப்போர் டூப் போடாமலேயே கீழே விழவேண்டும்.விழுந்த வேகத்தில் எழுந்திருப்பது, ஓடும் ரயில்/பேருந்தில்ஏறுதல் போன்றவைகளை செய்திருப்பதை கண்கூடாக நாம் காணலாம்.

                          சாப்ளின் படங்களை விட அதிக வசூல் செய்தது ஹரோல்ட் லாய்ட் படங்களே.ஆனால் அவர், தான் எடுத்த பல படங்களை ரிலீஸ் செய்யாமலேயே புதுக்கரு கழியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்த பிரிண்டுகள் ஒவ்வொன்றாக இப்போது வெளிவர தொடங்கியுள்ளன.சாப்ளின் கீட்டோன் அளவுக்கு ஹரோல்ட் லாய்ட் பிரபலமாகவில்லை என்பது சோகம்!
         

Saturday, 26 July 2014

டெம்ப்ளேட் முகபாவங்கள்

பத்து ஆஸ்கர் வாங்கிட்டேன் பாத்தியா?




இப்பத்தான் ஒரு லிட்டர் வெளக்கெண்ண குடிச்சேன் 

தொண்டைல மீன் முள்ளு சிக்கிகிச்சி..ஆ!!ஆ!!

 ரிப்போர்ட் கார்டை பரண் மேல ஒளிச்சி  வச்சிருந்ததை அப்பா கண்டுபிடிச்சிட்டாரோ?




நா மேல பாத்தா ரொமான்சு மூடு..ஆங்!!


குருவுக்கு(தனுசு) மருவாதி...

Friday, 18 July 2014

Man's Search for meaning

                    மிஸ்கினின் யுத்தம் செய்  படத்தை இரண்டாவது முறை பார்த்ததால் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை கண்டுகொண்டேன்  என்றே சொல்லவேண்டும்.பொதுவாகவே எந்த சினிமா பார்த்தாலும் அதில்வரும் கதாபாத்திரங்கள் புத்தகங்கள் பற்றியோ எழுத்தார்களை பற்றியோ பேசும்போது அதை குறிப்பெடுத்து கொள்வதுண்டு.உதாரணமாக காதல் வைரஸ் படத்தில் நாயகி "Somerset Maugham -ன் எழுத்து பிடிக்கும்" என்பார்.கஜினி படத்தில் அஸின் மரியோ புட்சோவின் காட்ஃபாதர்  படித்து(படிப்பது போல நடித்து??) கொண்டிருப்பார்.மந்திரப்புன்னகை படத்தில் நாயகனின் அறை மேஜையில்  எஸ்.ரா எழுதிய விழித்திருப்பவனின் இரவு புத்தகம் இருக்கும்.இது போல பல உதாரணங்களை சொல்ல முடியும்.இந்த தேடலுக்கான காரணம் நல்ல புத்தகங்களை தவறவிட்டுவிட கூடாது(அதற்காக சினிமாக்களில்  காட்டப்படும் எல்லா புத்தகங்களும் அற்புதமானவை என்று சொல்ல மாட்டேன்.சில இயக்குனர்கள் சும்மா நாயகி கையில் புக்கு இருக்கணும் என்பதற்காக மூர் மார்கெட்டில் வாங்கிய ஏதேனும் சுய சொறிதல் புக்கை கையில் கொடுத்துவிடும் அபத்தங்களும் இதில் உள்ளன).அத்தகைய புத்தகங்களுக்கான சுய தேடல் என்பது தனியே இருந்தாலும் வேறொரு  மனிதரின் கண்ணோட்டத்தில் சில புத்தகங்கள் கண்ணில் படும் போது அதைத்தவரவிட மனமில்லை.
               அப்படிப்பட்ட தேடலில் கண்ணில் பட்டதுதான் Viktor.E.Frankl எழுதிய Man's Search For Meaning  என்ற புத்தகம்.யுத்தம் செய் க்ளைமாக்ஸில் ஒய்.ஜி.மகேந்திரன் கதாபாத்திரத்தின்  மகன் நிஷாந்த்துக்கு(அந்த நிஷாந்த்   கதாபாத்திரம் மிகப்பெரிய மன அதிர்ச்சியில் இருக்கும்) சேரன் இந்த புத்தகத்தை வழங்குவதாக காட்சி வரும்.அங்கே ப்ரீஸ் செய்து கண்டுபிடித்ததே இப்புத்தகம்.இதை புத்தகம் என்பதைவிட ஒரு ஆசான் என்றே சொல்வேன்.

                பொதுவாகவே வாழ்வில் சோதனைகள் பிரச்சனைகள் வரும்போது "ஐயோ கடவுளே நீ இருக்கியா இல்லையா" என்று ஆண்டவனுக்கே ஜெர்க் கொடுக்கும் சோக பட்சிகள் இவ்வுலகில் பலப்பல... சுய தேடல், சுய பரிசோதனை போன்றவைகளின் மூலம் இந்த சிறுபிள்ளைத்தனமான(கடவுளை வணங்குதல் சிறுபிள்ளைத்தனம் இல்லை.இதைக்கொடு, அதைக்கொடு என்று கேட்பதை சி.பி.தனம்  என்கிறேன்) எண்ணங்களில் இருந்து வெளிவர முடியும் .ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை என்பது என் அனுபவம்.
               இப்புத்தக ஆசிரியர் ஒரு சைக்கியாட்ரிஸ்ட். யூதர் என்பதால் நாட்ஸி  கேம்பில் அடைக்கப்படுகிறார்.அங்கே அவர் கண்ட விஷயங்கள் தான் சுயமாக உணர்ந்த அனுபவங்கள் போன்றவைகளை வெறும் உணர்ச்சிவயப்பட்ட நோக்கில் அல்லாமல் சிந்தனை நோக்கில் அலசி ஆராய்ந்து பல்வேறு விஷயங்களை சொல்கிறார்.

             சாதாரணமாக வூட்ல குழாய் அடைப்பு என்றாலே தற்கொலை செய்துகொள்ளும் வீராதி வீரர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.இதில் வாழ்வில் வரும் கடுமையான சோதனைகள் என்பது வாழ்க்கை நம்மை சோதிக்கிறது என்பதற்கான அடையாளம்.சோதனைகள் பிரச்சனைகள் போன்றவற்றின் மூல காரணத்தை நாம் ஆராய வேண்டும்.அதை நம்மால் தீர்க்க முடியும்/நீக்க முடியும் என்றால் அதை கண்டிப்பாக முயன்று செய்ய வேண்டும்.அப்படி எதுவும் செய்ய முடியாது.பிரச்சனையின் மூல காரணத்தை எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது அந்த பிரச்னையை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
         உதாரணம் 1: உங்களுக்கு தொடர் தலைவலி வருகிறது என்று வைத்துகொள்வோம்.நாள் தவறாமல் வந்துவிடுகிறது.நீங்கள் என்ன செய்ய வேண்டும்?."வாழ்க்கை என்னை சோதிக்கிறது.நான் அதை ஏற்றுகொள்கிறேன்" என்று சொல்லகூடாது என்கிறார் ஆசிரியர்.அப்படி சொல்வது Masochism.அப்படி அல்லாமல் அந்த தலைவலிக்கு என்ன காரணம் என்பதை தகுந்த மருத்துவ சோதனை மூலம் ஆராய்ந்து கண் கண்ணாடி அணிய வேண்டுமென்றால் அணிய வேண்டும்.அல்லது வேறு பிரச்சனை என்றால் அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 
      உதாரணம் 2: ஒருவருக்கு தலையில்  டியூமர்.கடுமையான தலைவலியால் துடிக்கிறார்.மருத்துவ சோதனைக்கு பிறகு இதை ஒன்றும் செய்ய முடியாது.இவர் வாழப்போவது கொஞ்ச நாள்.ஆனால் மருந்துகள் மூலம் வலியை மட்டுப்படுத்தலாம் என்றால் இப்போது வேறு வழியில்லை.வாழ்வின் சோதனையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
          அதாவது வாழ்வில் தீர்க்க முடிந்த பிரச்சனைகளை முயன்று தீர்க்க வேண்டும்.தீர்க்க முடியாத பிரச்சனைகள், சோதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
           வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து வாழ்க்கை நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்.ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணிநேரமும் வாழ்க்கை நமக்கு சவால்களை விடுத்துக்கொண்டே இருக்கிறது.அய்யய்யோ!!! என்று ஓடாமல் அவைகளை நமது பொறுப்புகளாக ஏற்றுகொள்ள வேண்டும்.
            மேலும் மனிதனுக்கு என்று சில எல்லைகளை மருத்துவம் நிர்ணயித்துள்ளது.இத்தனை நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் செத்து விடுவான்.இவ்வளவு நீர் ஒவ்வொரு நாளும் தேவை.தினம் பல் விளக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த concetration camp ல் எப்படி பொய்யாகி போனது என்பதை விளக்குகிறார்.உதாரணமாக "நாள்தோறும் நான் பல் துலக்கும்  போது இருந்ததைவிட இப்போது பல்லே துலக்காமல் இருக்கும் போது  ஈறுகள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறது" என்கிறார்.அதற்காக பல்லே துலக்க கூடாது என்று அர்த்தம் செய்துகொள்ள கூடாது.மனிதனுக்கு இதுதான் எல்லை என்று செய்யப்பட்ட நிர்ணயங்களின் போலித்தன்மையை விளக்கவே இந்த உதாரணத்தை சொல்கிறார் ஆசிரியர்.மிகச்சிறிய சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் இருந்து எழுந்துவிடும் ஒரு நபர் பல்வேறு இரைச்சல்களுக்கிடையில் நிம்மதியாக தூங்கியதை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
              இவை சொல்பவை ஒரு விஷயத்தை.மனித மனத்தின் எல்லைகளை வரையறுப்பது என்பது இயலாத காரியம்.மேலே சொன்ன உதாரணங்கள் உடல் சம்மந்தப்பட்டவைதானே?என்று கேட்கலாம்.ஆனால் உடல் மனம் என்பது பிண்ணி  பிணையப்பட்ட ஒரு விஷயம்.இரண்டையும் பிரித்து பார்ப்பது என்பது முட்டாள்தனம்.இது என் கருத்து 
          மேலும் concentration camp ல் இருந்து வெளிவந்த மனிதர்கள் பிறகு பொது வெளியில் நடந்துகொள்ளும் விதம் பற்றி சொல்கிறார் ஆசிரியர்.இவரோடு கேம்பில் இருந்த ஒரு நண்பர் பூங்காவில் நடக்கும் போது செடிகளை சேதாரப்படுத்துதல், பொது சொத்துக்களை அடித்து உடைத்தல் போன்றவற்றை செய்து கொண்டிருந்ததாகவும்
"ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று இவர் கேட்டபோது "என்னை கேம்பில் கொடுமைப்படுத்திய இந்த சமூகத்தை இப்படித்தான் பழிவாங்க வேண்டும்" என்பதுபோல (சாரத்தை மட்டும் சொல்கிறேன்) சொல்கிறார்.

         அதற்கு ஆசிரியர் "பிறர் உங்களுக்கு தீமை செய்தார், அல்லது சமூகம் உங்களுக்கு தீங்கு செய்தது என்பதற்காக நீங்களும் அதையே திருப்பி செய்ய வேண்டியதில்லை.அது தவறான விஷயம்" என்கிறார்."சுதந்திரம் என்பது மட்டும் முக்கியமில்லை.அதைவிட முக்கியம் பொறுப்புணர்ச்சி.சுதந்திர தேவிக்கு சிலை உள்ளதுபோல பொறுப்புணர்ச்சியை உணர்த்தும் சிலை ஒன்றையும் அமெரிக்காவில் நிறுவ வேண்டும்.அதுதான் உண்மையான சமநிலை." என்கிறார்.
         மேலும் pyschiatry/psychology போன்றவை மேற்க்கத்திய சிந்தனைகளின் அடிப்படையில் உருவானவை.அதாவது வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் தேடு..துன்பம் வந்தால் அது ஏதோ தெய்வ குத்தம் என்பது போலவும் துன்பப்படுபவன் அதை ஏதோ அவமானகரமான விஷயமாக கருத வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளை கொண்டவை.அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டதே logotherapy.கண்ணீர் சிந்துதல் என்பதும் ஒருவன் துன்பத்தை தாண்டி வந்திருக்கிறான் என்பதிலும் எவ்வித அவமானமும் இல்லை.மாறாக அவனின் துயரம் தாங்கும் வலிமையை பாராட்ட வேண்டும்..
புத்தகத்தில் சில அற்புதமான வரிகள்: 

  • “Those who have a 'why' to live, can bear with almost any 'how'.” 
  • “When we are no longer able to change a situation, we are challenged to change ourselves.”  
  • But there was no need to be ashamed of tears, for tears bore witness that a man had the greatest of courage, the courage to suffer

       இதுபோல பல அற்புதமான விஷயங்களை இப்புத்தகம் சொல்கிறது.கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.குறிப்பாக வளர் இளம் பருவத்தினர் இதை வாசிக்க வேண்டும்.இதை பள்ளியில் பாடமாக கூட வைக்கலாம்.இதை அறிமுகம் செய்த இயக்குனர் மிஸ்கினுக்கு நன்றி. 


             "இப்புத்தகத்தை திரைப்படத்தில் காட்டியது திணிப்பு".."இது வெறும் intellectual muscle flexing" என்கிற ரீதியில் சில ஒலக விமர்சகர்கள் சொல்லலாம்.என்னை பொறுத்தளவில் மிஸ்கின் தனது ஒவ்வொரு படத்திலும் இது போல பல புத்தகங்களை அறிமுக செய்ய வேண்டும்.ஒலக விமர்சகர்கள் திண்ணைக்கிழவி போல எதையாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.
            ஏனய்யா ஒலக விமர்சகர்களே நீங்கள் இதுபோல ஏதேனும் உருப்படியாக புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்ததுண்டா?
         

Thursday, 5 June 2014

Drishyam(2013) # காணத்தவறிய காட்சிகள்.

         இந்தப்படம் வந்தபோதே பார்க்க வேண்டுமென்று ஆசை.ஆனால் தியேட்டரில் சப்டைட்டில் வராதே என்பதால் இம்பூட்டு காலம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.இவ்வளவு தாமதமாகிவிட்டதே என்ற எண்ணம் படம் பார்த்து முடித்தபின் ஏற்பட்டது.
                 நாம் காணும் காட்சிகளை எல்லாம் நாம்  உடனடியாக உணராவிட்டாலும் ஆழ்மனதில் பதிந்து விடும்.அதை மிக அற்புதமாக பயன்படுத்திகொண்டிருக்கிறார் இயக்குனர்.ஹிட்ச்காக் சொல்வார் "நான் படம் பார்ப்பவர்களை ஒரு பியானோ போல மீட்ட விரும்புகிறேன்" என்று அதுபோல இங்கே நம்மையும் பயன்படுத்துகிறார் இயக்குனர் ஜீத்து. "முதல் ஒரு மணி நேரம் வீண்" என்று சில மங்குணிகள் சொல்கிறார்கள்.அட பதர்களா அந்த காட்சிகள் இல்லாவிடில் ஜார்ஜின் குடும்ப உணர்வுகளை மனப்போராட்டங்களை நம்மால் உணரவே முடியாமல் போயிருக்கும்.இரண்டே முக்கால் மணி நேரம் போனதே தெரியவில்லை.கதை/திரைக்கதை  பற்றியெல்லாம் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.

                  ஒரு நல்ல திரைப்படம் என்பது ஹாரி பாட்டர் நாவலில் வரும் pensive போல நம்மை உள்ளே இழுக்க வேண்டும்.அந்தப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றின் சந்தோசம், துக்கம், கோபம், பதைபதைப்பு, வலி அனைத்தையும் பார்வையாளனை உணரச்செய்வதே உன்னத சினிமா.இங்கே படம் துவங்கி சில நிமிடங்களிலேயே நாம் ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போல உணர ஆரம்பித்து விடுகிறோம்.அவர்கள் சிரிக்கும் போது நாமும் சிரிக்கிறோம்.அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் வரும்போது நாமும் அதை உணர்கிறோம்.உதாரணமாக ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தை காவல்துறை விசாரிக்கும் அந்த காட்சியின் முடிவாக அந்த கடைக்குட்டி அனுவை மட்டும தனியே அறையில் அடைத்து மிரட்டும்போது இதயத்துடிப்பு எகிறி நாமே எழுந்து போய் அந்த குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பே இயக்குனர் மற்றும் அந்த கட்சியில் நடித்தவர்களின்(வாழ்ந்தவர்கள்) மிகப்பெரும் சாதனை.

                   "நடிக்கிறேன் பாருடா" என்று அக்கப்போர் செய்யாத அட்டகாசமான நடிகர்களுள் ஒருவர் மோகன்லால்.அவரின் இரண்டு படங்கள் மட்டுமே ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்(தூவானத்தும்பிகள் மற்றும் நமக்கு பாக்கினும் முந்திரி தோப்புகள்) பிற படங்களை பார்க்காததற்கு சப்டைட்டில் கிடைக்காத பிரச்சனையே முக்கிய காரணம்.அவரின் பிற படங்களையும் தேடிபிடித்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இந்தப்படத்தை பார்த்தபோது உண்டானது .மற்றபடி "மோகன்லால் நன்றாக நடித்திருக்கிறார்" என்ற வழமையான வாசகத்தை  சொன்னால் கருட புராணம் படி தண்டனை தான் மிஞ்சும்.

         முப்பது வருடங்களாக பிரபல ஹீரோவாக இருக்கும் ஒருவர் சைக்கிளில் வீட்டுக்கு வந்து செல்கிறார்,வேட்டி/லுங்கி  மட்டுமே அணிகிறார்,மண்வெட்டியை எடுத்து உரக்குழி தோண்டுகிறார், போலீசிடம் திரும்ப கை ஓங்காமல் அடி வாங்குகிறார்.காரணம் அவர் அங்கே பிரபல சீனியர் ஹீரோவாக அல்ல இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற ஜார்ஜ் குட்டியாக மாறிவிட்டார்.தமிழ் சினிமாவில் இதையெல்லாம் எண்ணிப்பார்க்கக்கூட முடியாது என்பது தெரிந்ததே.பிரபல சீனியர் ஹீரோன்னாலே ஒரு ஃபார்மேட் .அவர் தமிழ் பாரம்பரியத்துக்கு துளியும் சம்மந்தம் இல்லாத நவநாகரீக உடையணிந்து வெளிநாட்டு பைக்கில் இரண்டு சக்கரங்கள் இருந்தாலும் ஒற்றை சக்கரத்தில் மட்டுமே வண்டியை ஓட்டி அந்த டயரில் மட்டும் அதிக தேய்மானம் உண்டாக்குதல், "விவசாயியா?ஹீ ஹீ அதெல்லாம் ராமராஜனை செய்ய சொல்லு" என்பார்கள்.ஏன் இங்கே தமிழ் ரசிகர்களின் மன ஓட்டமே எப்படி இருக்கு?ஒரே ஒரு படத்தில் மாடு மேய்ப்பவராக, பால் கறப்பவராக நடித்த ராமராஜனை எந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி மேடையிலும் கிண்டல் செய்யாமல் விட்டதில்லை.அதுமட்டுமல்லாமல் எழுபது வயதானாலும் "போங்கம்மா எனக்கு வெக்கமா இருக்கு" என்று தன்னோடு ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்த நடிகையை அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து கொல்வார்கள்.எப்பைய்யா திருந்த போறீங்க?
                 லால் மட்டுமல்லாது மீனா அந்த இரண்டு பெண் குழந்தைகள் ,எப்படியாவது ஜார்ஜை பழிவாங்கிவிட துடிக்கும் கான்ஸ்டபிள் சகாதேவனாக நடித்த ஷாஜோன்,ஐஜியாக நடித்த ஆஷா சரத் அவரது கணவர், டீக்கடை பாய் என்று ஒவ்வொருவரும் வாழ்திருக்கிரார்கள்.இவர்களில் ஒருவர் நடிக்கிறேன் பேர்வழி என்று செயற்கையாக ஏதாவது சேட்டை செய்திருந்தாலும் மொத்த படமே வீழ்ந்திருக்கும் .அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை.
                  மேலும் குடும்பத்தினரிடையே நடக்கும் அந்த சம்பாஷனைகள் அவ்வளவு இயல்பாகவும் மெல்லிய நகைச்சுவை உணர்வோடும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.தாய்& மகள்கள் இனைந்து  தந்தையை கிண்டல் செய்வது போல பார்வையை பரிமாறி கொள்ளுதல்,தந்தை "இரவில் விழித்திருந்ததால் டயர்டா இருக்கு" என்று சொல்லும்போது அவரின்  வயதுவந்த மகள் மெல்லிய சிரிப்போடு  அங்கிருந்து விலகி செல்லுதல், அந்த சிறுமி அனு ஆடி கார் கேட்கும் போது அதற்கு மோகன்லால் காரின் பேரை தவறாக உச்சரித்து சொல்லும் பதில் எல்லாமே அட்டகாசம்.ஜார்ஜ், சிறுமி அனுவை பிரம்பால் அடித்துவிட்டு ஈசி சேரில் உட்காரும்போது ஏற்கெனவே அனு அந்த சேரின் கட்டையை எடுத்துவிட்டது தெரிந்து  சிரிப்பது அருமை.எல்லாவற்றுக்கும் மேலாக படம் முடியும் காட்சி என்னை அறியாமல் கை தட்ட  வைத்தது என்று சொன்னால் மிகையாகாது .

                ஜார்ஜ் கதாபாத்திரம் என்னை ஈர்த்த காரணம் அவர் ஒவ்வொரு விஷயத்தையும் சினிமா மூலமே தெரிந்து கொண்டுவிடுகிறார்.தமிழ் ,ஹிந்தி, இங்க்லீஷ் ஆகிய மொழிகளை சினிமா பார்த்தே கற்று கொண்டிருக்கிறார்.தன் வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்தையும் ஏதேனும் ஒரு சினிமா காட்சியோடு ஒப்பிட்டு அதற்கு தகுந்தாற்போல சாதுர்யமாக முடிவெடுக்கிறார். உதாரணமாக போலீஸ் விசாரணைக்கு அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தை தயார் செய்யும் விதம்.இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை.நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது.சப்டைட்டிலோடு படம் கிடைக்கிறது.ஒரிஜினில டிவிடியே 110 ரூபாய்தான்.கண்டிப்பாக பாருங்கள் .

           இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக ஒரு செய்தி உலவுகிறது.கமல் நடிக்கிறார், இல்லையில்லை விக்ரம் நடிக்கிறார் என்று பல்வேறு யூகங்கள்.இருவரில் யார் நடிப்பதாக இருந்தாலும் ரீமேக் என்ற பேரில் இதை tone down செய்தல், இரு குழந்தைகளுக்கு தந்தை என்பதை மாற்றி ஹீரோ இமேஜுக்கு வேறுமாதிரி சம்பவங்களை அமைத்தல்,போலீஸ் விசாரணை காட்சியில் ஜார்ஜ் குட்டி அடிவாங்குவார் என்பதற்காக அதை நீக்குதல் அல்லது போலீசை திருப்பி அடிப்பது போல ஒரு ஆக்ஷன் ப்ளாக் வைத்தல்,ஜார்ஜ் குட்டி  நாலாம் கிளாஸ் என்பதை ஐ ஐ டியில் எம் டெக் என்று மாற்றுதல் தேவையில்லாமல் ஃபாரீன் டூயட் குத்துப்பாட்டு(குறிப்பாக கானா பாலாவின் காதை செவிடாக்கும் இரைச்சல் பாடல்) வைத்தல், ஆக்ஷன் ப்ளாக் வைத்தல், ஃபாரீன் பைக்கில் வந்து சீன போடுதல் போன்ற அக்கபோர்களை எல்லாம் சேர்க்காமல் இயல்பாக எடுக்க முயன்றால் படம் வெற்றி பெரும்.அதை விடுத்து மேற்சொன்ன சேட்டைகள் ஏதாவது செய்தால் மூலப்படத்துக்கே இழுக்கு.

Sunday, 27 April 2014

Ikiru(1952)-வாழ்தலுக்கும் உயிர் பிழைத்திருத்தலுக்குமான வேறுபாடு



           பொதுவாகவே நம்மில் பலருக்கு வாழ்தலுக்கும் உயிர் பிழைத்திருப்பதற்குமான (Surviving &Living)வேறுபாடு தெரிவதில்லை.அதை நாம்  தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை. பலரை பொறுத்தளவில் எந்திரத்தனமாக ஓபீஸ் வேலை, பின்னர் வீடு, பின்னர் மீண்டும் ஓபீஸ் இதுதான் வாழ்க்கை.இதுதான் வாழ்தல் என்று எண்ணுகிறார்கள். ஆனால் இது வாழ்தலில்லை.இது உயிர் பிழைத்திருத்தல்/ஜீவித்தல்.
        பொதுவாகவே ஒரு சொல்லாடல் உண்டு “நா பொழப்ப தேடி பட்டணம் போறேன் என்பார்களே ஒழிய “நான் வாழ்வதற்காக பட்டணம் போறேன் என்று யாரும் சொல்வத்ல்லை.காரணம் பட்டணம் என்பதே பணம் சம்பாதிப்பதை தவிர்த்த பிற  “தேவையற்றவைகள்  வெட்டி எறியப்பட்ட  ஒரு இடம்.அதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறுதல்,நல்ல காற்று,நல்ல தண்ணீர்,நிதானமான வாழ்க்கை,கூட்டு குடும்பம்  என்பதெல்லாம் அங்கு கெட்ட வார்த்தைகள்.
           இந்தப்படத்தை பொறுத்தளவில் இரண்டு விஷயங்களை இது நெற்றிபோட்டில் அடித்தாற்போல உரக்க உணர்த்துகிறது.
ஒன்று: நகரின் எந்திர ஜீவனம்
இரண்டு: அரசு அலுவலங்கள், அதில் இருக்கும் அரசு ஊழியர்களின் அதிகாரத்திமிர்,பணியில் அலட்சியம்,அங்கு வரும் மக்கள் மீது எரிந்து விழுதல் போன்ற அடாவடி செயல்பாடுகள்.
              கதையின் நாயகன் வாண்டனபி  அரசு அலுவலகம் ஒன்றில் முப்பது வருடமாக வேலை பார்ப்பவர்.படிப்படியாக முன்னேறி இப்போது துறைத்தலைமை(செக்ஷன் சீஃப்) பொறுப்பை அடைந்திருப்பவர்.அங்கிருக்கும் அனைவருமே மனிதத்தன்மையற்ற எந்திரங்களாகவே சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள்(அரசு அலுவலகங்கள் என்றாலே அப்படித்தானே?).குறைகளை மனுவாக எடுத்துகொண்டு வரும் மக்களை அலைகழிப்பவர்கள்.அதாவது “இது இந்த செக்ஷன் இல்லை. அந்த செக்ஷன் போ என்பார்கள்.அங்கே போனால் இதே வசனத்தை வேறுமாதிரி சொல்வார்கள். இப்படியாக சுத்தலில் விட்டு மக்கள் தாங்கள் கொண்டுவந்த பிரச்சனையே மேல் என்று ஓடிவிடுவார்கள்.இதுதான் அவர்கள் வேண்டுவது.அதாவது தங்களின் எந்திரத்தன்மையை குலைக்கும் எதையும் அவர்கள் ஊக்குவிப்பதில்லை.இங்கு மனித நேயம், மனிதத்தன்மை எல்லாம் நகைப்புக்குரிய வார்த்தைகள்.கதையின் நாயகன் வயிற்று வலி என்று மருத்துவமனை செல்கிறார்.   


     மருத்துவர்  'ஒன்றுமில்லை வெறும் வயிற்றுவலிதான்' என்று சொன்னாலும் தனக்கு கேசர் தான் என்பதை அவர் உணர்கிறார்.அப்போதுதான் அவர் வாழ்க்கையை பற்றி சிந்திக்க துவங்கிய தருணம் என்று சொல்லலாம்.மரணம் நெருக்கும் வேளையில்தானே பல பேருக்கு வாழ்க்கையை பற்றிய நினைப்பு வருது...
         
           அவரது மகனும் மருமகளும் அவரின் பென்ஷன் பணம் பிற பெனிபிட்டுகள் ஆகியவற்றை கொண்டு ஒரு நவீன வீடு கட்டிவிட வேண்டும் என்று விவாதிக்கிறார்கள் .மேலும் “தந்தை அனைத்து பணத்தையும் சுடுகாட்டுக்கு தன்னோடு கொண்டு போக போகிறாரா? என்று கேட்க மனைவி சிரிக்கிறார் .பிறகு விளக்கை மகன் ஆண் செய்து பார்த்தால் அவனது தந்தை ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார் .நமது அறையில் அவருக்கென்ன வேலை? என்று சலித்து கொள்கிறார் மனைவி.
                   
       தனது மனைவி போட்டோவையே வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார்.அப்போது அவரது மனைவி மற்றும் பிள்ளை சார்ந்த பல்வேறு பழைய நினைவுகள் அவர் கண்முன்வருகிறது.
25 ஆண்டுகால சேவையை பாராட்டி சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

        வாண்டனபி தனக்கு புற்றுநோய் இருப்பதை தனது மகனிடம் சொல்ல முயல்கிறார்.ஆனால் அவன் அதை கண்டுகொள்ளாமல் போகவே மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.ஐந்து லட்சம் yen களை வங்கியில் இருந்து எடுத்துகொண்டு போகிறார்.
மகனின் மாமா “மனைவி இறந்த பின் உனக்ககாக இருபது வருடங்கள் தனியாக இருந்தவர் இப்போது பெண்ணாசையால் ஓடியிருக்கலாம் என்கிறார்.  
           பாரில் ஒரு எழுத்தாளனை சந்திக்கிறார் “பல மனிதர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் தருணத்தில் மட்டுமே வாழ்வை பற்றி உணர்கிறோம்.வாழ்வை அனுபவிப்பது என்பது மனிதனின் கடமை.இவ்வளவு நாள் நீ வாழ்வுக்கு அடிமையாகி இருந்தாய் இப்போது நீ  அதற்கு ஆசானாக மாறு என்கிறார் எழுத்தாளர்.தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.
                       வாண்டனபி பல நாட்கள் அலுவலகம் செல்லாமல் போகவே கோப்புகள் நூற்றுக்கணக்கில் தேங்கி விடுகிறது.அந்த அலுவலகத்தில் உயிர்ப்போடு வாழ நினைக்கும் ஒரே ஜீவனான டோயோ என்ற பெண்மணிக்கு இந்த எந்திர அலுவகலத்தை விட்டு வெளியேறிவிட நினைக்கிறார்.ஆனால் 'மேலதிகாரி வாண்டனபி கையெழுத்தில்லாமல்  அது நடக்காது' என்று சக ஊழியர்கள் சொல்லவே அவர் வாண்டனபியை தேடுகிறார்.ஒருநாள் வழியில் அவரை எதேர்ச்சையாக சந்தித்து ‘நான் அலுவலக வேலையை ராஜினாமா செய்ய உங்கள் கையெழுத்து தேவை, உதவுங்கள் என்று கேட்க அவர் தன வீட்டுக்கு அழைத்து சென்று கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.ஆனால் இதை பார்க்கும் அவரது மகன்,மருமகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் ‘இந்த பெண்ணோடு உல்லாசமாக இருக்கத்தான் இவர் இவ்வளவு பணத்தோடு வெளியேறி விட்டார் என்று அவர் போனபின் விவாதிக்கிறார்கள்.
           டோயோவை அழைத்துக்கொண்டு பல இடங்கள் செல்கிறார் வாண்டனபி.தான் சாப்பிட ஆர்டர் செய்த உணவுகளை கூட டோயோவை சாப்பிட சொல்கிறார்.அவளும் ஆர்வமாக அதை வாங்கி சாப்பிடுகிறார்.
இங்கு டோயோவாக நடித்த பெண்ணை பற்றி சொல்ல வேண்டும்.அவரின் கதாபாத்திரம் எப்படி என்றால் அவரை பார்த்தவுடனேயே ஒருவித உற்சாகம் நம்மையும் தொற்றிகொண்டுவிடும்.அத்தகைய ஒரு உற்சாகமான லைவ்லியான கேரக்டர்.நன்றாகவே நடித்துள்ளார்.
 
டோயோ
              அந்தப்பெண்ணிடம் “நீ எப்படி இவ்வளவு உயிர்ப்போடு வாழ்கிறாய்?சாவதற்கு முன் உன்னைப்போல ஒரு நாள் வாழ்ந்துவிட வேண்டும்.உன்னைப்போல் எப்படி இருப்பதென்று சொல் என்கிறார்."நான் தினம் ஜப்பான் குழந்தைகள் விளையாட பொம்மைகள் தயாரிக்கிறேன்(அந்த கம்பெனியில் இவள் வேலை செய்கிறாள்).ஜப்பான் குழந்தைகளோடு விளையாடுவது போலவே எனது வேலையை உணர்கிறேன்" என்கிறாள்.இதை கேட்டவுடன் 'என்னால் சில விஷயங்கள் செய்ய முடியும்' என்று உடனடியாக அலுவலகம் சென்று "அந்த கொசுக்கள் மொய்க்கும் குட்டையை நான் பார்வையிட வேண்டும்" என்று செல்கிறார்.இவர் மேலதிகாரி என்பதால் இவருக்கு கீழே இருப்பவர்கள் வேறு வழியின்று இவரோடு செல்கிறார்கள். 
                இங்கே தமிழ் சினிமா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரத்துக்கு கேன்சர் என்று சொல்லிட்டா போதும் உடனே "வாழ்வே மாயம்,காற்றடைத்த பை, நாலு பேரு தூக்குவான்" என்று ஏதாவது உபயோகமில்லாமல் உளறி கொண்டிருப்பார்கள்.ஆனால் இங்கே வாண்டனபி இதுமாதிரி அக்கப்போர் எதுவும் செய்யாமல் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
            இவர் அனுமதி மட்டுமன்றி இவருக்கு மேலுள்ள வேறு பல அதிகாரிகள் தயவிருந்தால்தான் இது நடக்கும் என்பதால் ஒவ்வொரு அதிகாரியின் அறை வாசலிலும் தவமாய் இருக்கிறார்.அவர்கள் இவரை எவ்வளவு கேவலபடுத்தினாலும் இவர் அவைகளை பொருட்படுத்தாது தொடர்ந்து கெஞ்சுகிறார்."ஏன் இப்படி உங்களை நீங்களே கேவலபடுத்தி கொள்கிறீர்கள்?" என்று சக அலுவலர் கேட்க "இருப்பது கொஞ்ச நேரம் இதற்கெல்லாம் வருந்த நேரமில்லை" என்கிறார்.ஒருவழியாக பூங்கா அமைக்க அனுமதி கிடைத்து பூங்கா அமைக்கப்படுகிறது.கடைசியாக அந்தப்பூங்காவில் அவர் ஊஞ்சலில் அமர்ந்து கொட்டும் பனியிலும் தனது அபிமான பாடலை பாடியபடியே உயிரை விடுகிறார்.இந்தக்காட்சி படமாக்கப்பட்ட விதம் கண் கலங்க வைப்பதாக உள்ளது.எப்பேர்பட்ட மனிதராக இருந்தாலும் மனதை உருக்கும் வண்ணம் உள்ளது.
மனதை உருக்கும் அந்தக்காட்சி

         அவர் இறந்தபின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று அவரது இல்லத்தில் நடக்கிறது.சக அலுவலக "எந்திரங்கள்" கடமைக்கு உட்காந்திருக்க பூங்காவை சுற்றியுள்ள மக்கள் உண்மையான பாசத்தோடும் கண்ணீரோடும் அவருக்கு அஞ்சலி செலுத்தி செல்கிறார்கள்.அதை பார்த்து அதிர்கிறார்கள் இந்த எந்திரங்கள்.
அப்போது பூங்கா பற்றிய பேச்சு எழுகிறது.நாட்டில் அமைக்கப்படும் பூங்கா எல்லாம் வாண்டனபி அமைத்ததாக மக்கள் எண்ணுகிறார்கள் என்று சக எந்திரங்கள் வயிற்றெரிச்சல் படுகிறார்கள்.
"அந்த பூங்கா வாண்டனபியால் நிகழவில்லை.தேர்தல் நெருங்குவதால் நிகழ்ந்துவிட்டது" என்கிறார் ஒரு அலுவலர்.மற்றொருவர் "அவர் இருந்தது பொது விவகார துறை.ஆனால் பூங்காவை அமைத்தது பூங்கா துறை.இவர் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை" என்று இவ்வாறாக ஆளாளுக்கு தாங்கள் கிரெடிட் எடுத்துகொள்ள முயல்கிறார்கள்.ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாய் போட்டோவில் சிரிக்கிறார் வாண்டனபி.காரணம்  பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டவர் அவரே.
"சிட்டி கவுன்ஸில் மற்றும் துணை மேயர் தேர்தல் நெருங்கியதால் மட்டுமே இதை செய்தனர்.இல்லாவிடில் வாண்டனபியின் கோரிக்கை எல்லாம் சும்மா" என்கிறார் மற்றொருவர்.திடீரென்று அனைத்து ஊழியர்களும் சபதம் எடுக்கிறார்கள் "வாண்டனபி போல நாமும் மக்களுக்கு ஏதேனும் செய்வோம்" என்று.
           அடுத்த நாள் ஊழியர்கள்(எந்திரங்கள்) அலுவலகத்தில் அமர்ந்திருக்க ஒரு சாமானிய பெண் வந்து உதவி கேட்க "இது இந்த்துறையின் கீழ் வராது.வேற டிபார்ட்மென்ட்" என்று சொல்லி அனுப்புகிறார் ஒரு ஊழியர்.மற்றொரு ஊழியர் திடீரென்று பொங்கி எழுந்து நேற்று செய்த சபதத்தை நினைவு கூற முயன்று தோற்று மீண்டும் தனது கோப்புக்குவியலில் மூழ்குகிறார்.அதாவது மீண்டும் அவர்கள் எந்திரங்களாகி விட்டனர்.சபதம் எல்லாம் சும்மா!
            வாண்டனபியாக நடித்தவர் டகாஷி ஷிமுரா.குரசோவாவின் ஆஸ்தான நடிகர்களுள் ஒருவர்(மற்றொருவர் டோஷிரோ மிஃபுனே).குரசோவா இயக்கிய முப்பது படங்களில் 21 படங்களில் நடித்த பெருமை கொண்டவர்.இந்தப்படத்தில் பிறரால் புறக்கணிக்கப்பட்ட, விரைவில் மரணம் என்பதை உணர்ந்த ஒரு வயதான மனிதாரக வாழ்ந்துள்ளார்.அதுவும் அந்த கண்களில் மரண பயத்தை காட்டும் விதம் இத்தனை வருட வாழ்க்கையில் நாம் செய்ததுதான் என்ன?என்ற கேள்விக்கு பதில் தெரியாமையால் கூனிக்குறுகிய உடல் மற்றும்  மனம் ஆகியவற்றை மிக அற்புதமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
கண்களில் தெரியும் வேதனை
 
             இந்தக்கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நீங்கள்  உங்கள்  மனதுக்கு பிடித்த ஒரு விஷயத்தை பிறரைப்பற்றி கவலைப்படாமல்  சமீபத்தில் செய்தது எப்போது?

Sunday, 20 April 2014

பவரின் அரசியல் நிலைப்பாடு என்ன?

அன்புள்ள வ.ரா,
                               நலமா?(இல்லன்னா என்ன பண்ண போற?-கும்மாங்கோ).வெகு காலமாக கேட்க நினைத்த கேள்வி இது.பவர் ஸ்டார் பெரிய அப்பாடக்கர் பெரும் பவர் கொண்டவர்.அவர் நினைத்தால் உலகின் போக்கையே மாற்ற முடியும் என்றெல்லாம் அளக்கிறீர்கள்.அப்படிப்பட்ட சக்தி கொண்டவர் ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் வாய்ஸ் கொடுக்கவில்லை?ஒருவேளை வாய்ஸ் கொடுத்தும்  அந்த கட்சி தோற்றுவிட்டால் வண்டவாளம் வெளிவந்துவிடும் என்ற பயமா?உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டவரா பவரு?நன்றி.                                                                                                                                                                                                                                         -திண்டுக்கல் சகாயம்.

********************************************************************************************
 Hello V.R,
                  Just dropped in to enquire about your beloved and over-rated balloon Powerstar.Why cant he guide people in this election?Is he afraid?
                                                                                                                        -Raj.
***********************************************************************************

Adios amigo VR,
                     Amanecía en el naranjel.Abejitas de oro buscaban la miel.
¿Dónde estará powero star
la miel? -                                                                                    -Juan Miguel
.
***********************************************************************************



அன்பு சகாயம் & ராஜ்&Miguel,
                                                          பவர் மீது கட்டமைக்கப்படும் விஷம பிரசாரங்களை நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அவரின் வளர்ச்சி,பல நூற்றாண்டு காலமாக அவர் உலக மக்கள் நலனுக்கு ஆற்றி வந்த பெரும்பணி இவற்றை எல்லாம் எப்படியாவது மறைத்து விட வேண்டும் என்று சிலர் அலைவது தெரியும்.பவருக்கு தேச நலனில் அக்கறை இல்லாதிருந்திருந்தால் ஏன் அவர் சிப்பாய் கலகம்,தண்டி யாத்திரை,ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றிருக்க போகிறார்?

இவ்வளவு ஏன் அமெரிக்க சுதந்திர போரிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் பவர்.அவருக்கு இந்த தேசம், அந்த தேசம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்க தெரியாது.மக்களின் அன்பு என்ற மகத்தான சக்தி   தேச வரைபடங்களில் சிக்கிவிட கூடாது என்பதே அவர் எண்ணம்.
                         சென்ற தேர்தல் முடிந்த போதே பல அரசியல் கட்சிகள் பவரிடம் "அடுத்த தேர்தலில் எங்களைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்" என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது எத்தனை பேருக்கு தெரியும்?(அதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?இல்லை சும்மா அடிச்சி விடுறியா என்று கேட்பவர்களுக்கு இதோ புகைப்பட ஆதாரங்கள்)....


 
அப்படி இருக்கையில் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறீர்கள்.அவர் இந்தியா என்ற வட்டத்துக்குள் மட்டும் இருக்க விரும்பாமல் உலக மக்கள் அமைதி பெற்று வாழ தேவையானவற்றை செய்ய இப்போது நார்வே சென்றுள்ளார்."உலக சமாதானம் என்று வெற்றி பெறுகிறதோ அன்றுதான் நான் பிறந்தநாள் கொண்டாடுவேன்" என்று சூளுரைத்தது பல பேருக்கு தெரியாது.ஆகையால் வெறும் பத்திரிகை ஊடக விஷம பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உண்மையில் அவர் என்ன பணி ஆற்றியுள்ளார் என்பதை வரலாற்று புத்தகங்கள் மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.இனி தொடர்ந்து இது போன்ற பொய் கட்டமைப்புகளை உடைக்கும் வண்ணம் பவரின் சிஷ்யர்கள் செயல்படுவார்கள்.