Thursday, 5 June 2014

Drishyam(2013) # காணத்தவறிய காட்சிகள்.

         இந்தப்படம் வந்தபோதே பார்க்க வேண்டுமென்று ஆசை.ஆனால் தியேட்டரில் சப்டைட்டில் வராதே என்பதால் இம்பூட்டு காலம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.இவ்வளவு தாமதமாகிவிட்டதே என்ற எண்ணம் படம் பார்த்து முடித்தபின் ஏற்பட்டது.
                 நாம் காணும் காட்சிகளை எல்லாம் நாம்  உடனடியாக உணராவிட்டாலும் ஆழ்மனதில் பதிந்து விடும்.அதை மிக அற்புதமாக பயன்படுத்திகொண்டிருக்கிறார் இயக்குனர்.ஹிட்ச்காக் சொல்வார் "நான் படம் பார்ப்பவர்களை ஒரு பியானோ போல மீட்ட விரும்புகிறேன்" என்று அதுபோல இங்கே நம்மையும் பயன்படுத்துகிறார் இயக்குனர் ஜீத்து. "முதல் ஒரு மணி நேரம் வீண்" என்று சில மங்குணிகள் சொல்கிறார்கள்.அட பதர்களா அந்த காட்சிகள் இல்லாவிடில் ஜார்ஜின் குடும்ப உணர்வுகளை மனப்போராட்டங்களை நம்மால் உணரவே முடியாமல் போயிருக்கும்.இரண்டே முக்கால் மணி நேரம் போனதே தெரியவில்லை.கதை/திரைக்கதை  பற்றியெல்லாம் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.

                  ஒரு நல்ல திரைப்படம் என்பது ஹாரி பாட்டர் நாவலில் வரும் pensive போல நம்மை உள்ளே இழுக்க வேண்டும்.அந்தப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றின் சந்தோசம், துக்கம், கோபம், பதைபதைப்பு, வலி அனைத்தையும் பார்வையாளனை உணரச்செய்வதே உன்னத சினிமா.இங்கே படம் துவங்கி சில நிமிடங்களிலேயே நாம் ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போல உணர ஆரம்பித்து விடுகிறோம்.அவர்கள் சிரிக்கும் போது நாமும் சிரிக்கிறோம்.அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் வரும்போது நாமும் அதை உணர்கிறோம்.உதாரணமாக ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தை காவல்துறை விசாரிக்கும் அந்த காட்சியின் முடிவாக அந்த கடைக்குட்டி அனுவை மட்டும தனியே அறையில் அடைத்து மிரட்டும்போது இதயத்துடிப்பு எகிறி நாமே எழுந்து போய் அந்த குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பே இயக்குனர் மற்றும் அந்த கட்சியில் நடித்தவர்களின்(வாழ்ந்தவர்கள்) மிகப்பெரும் சாதனை.

                   "நடிக்கிறேன் பாருடா" என்று அக்கப்போர் செய்யாத அட்டகாசமான நடிகர்களுள் ஒருவர் மோகன்லால்.அவரின் இரண்டு படங்கள் மட்டுமே ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்(தூவானத்தும்பிகள் மற்றும் நமக்கு பாக்கினும் முந்திரி தோப்புகள்) பிற படங்களை பார்க்காததற்கு சப்டைட்டில் கிடைக்காத பிரச்சனையே முக்கிய காரணம்.அவரின் பிற படங்களையும் தேடிபிடித்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் இந்தப்படத்தை பார்த்தபோது உண்டானது .மற்றபடி "மோகன்லால் நன்றாக நடித்திருக்கிறார்" என்ற வழமையான வாசகத்தை  சொன்னால் கருட புராணம் படி தண்டனை தான் மிஞ்சும்.

         முப்பது வருடங்களாக பிரபல ஹீரோவாக இருக்கும் ஒருவர் சைக்கிளில் வீட்டுக்கு வந்து செல்கிறார்,வேட்டி/லுங்கி  மட்டுமே அணிகிறார்,மண்வெட்டியை எடுத்து உரக்குழி தோண்டுகிறார், போலீசிடம் திரும்ப கை ஓங்காமல் அடி வாங்குகிறார்.காரணம் அவர் அங்கே பிரபல சீனியர் ஹீரோவாக அல்ல இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற ஜார்ஜ் குட்டியாக மாறிவிட்டார்.தமிழ் சினிமாவில் இதையெல்லாம் எண்ணிப்பார்க்கக்கூட முடியாது என்பது தெரிந்ததே.பிரபல சீனியர் ஹீரோன்னாலே ஒரு ஃபார்மேட் .அவர் தமிழ் பாரம்பரியத்துக்கு துளியும் சம்மந்தம் இல்லாத நவநாகரீக உடையணிந்து வெளிநாட்டு பைக்கில் இரண்டு சக்கரங்கள் இருந்தாலும் ஒற்றை சக்கரத்தில் மட்டுமே வண்டியை ஓட்டி அந்த டயரில் மட்டும் அதிக தேய்மானம் உண்டாக்குதல், "விவசாயியா?ஹீ ஹீ அதெல்லாம் ராமராஜனை செய்ய சொல்லு" என்பார்கள்.ஏன் இங்கே தமிழ் ரசிகர்களின் மன ஓட்டமே எப்படி இருக்கு?ஒரே ஒரு படத்தில் மாடு மேய்ப்பவராக, பால் கறப்பவராக நடித்த ராமராஜனை எந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி மேடையிலும் கிண்டல் செய்யாமல் விட்டதில்லை.அதுமட்டுமல்லாமல் எழுபது வயதானாலும் "போங்கம்மா எனக்கு வெக்கமா இருக்கு" என்று தன்னோடு ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்த நடிகையை அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து கொல்வார்கள்.எப்பைய்யா திருந்த போறீங்க?
                 லால் மட்டுமல்லாது மீனா அந்த இரண்டு பெண் குழந்தைகள் ,எப்படியாவது ஜார்ஜை பழிவாங்கிவிட துடிக்கும் கான்ஸ்டபிள் சகாதேவனாக நடித்த ஷாஜோன்,ஐஜியாக நடித்த ஆஷா சரத் அவரது கணவர், டீக்கடை பாய் என்று ஒவ்வொருவரும் வாழ்திருக்கிரார்கள்.இவர்களில் ஒருவர் நடிக்கிறேன் பேர்வழி என்று செயற்கையாக ஏதாவது சேட்டை செய்திருந்தாலும் மொத்த படமே வீழ்ந்திருக்கும் .அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை.
                  மேலும் குடும்பத்தினரிடையே நடக்கும் அந்த சம்பாஷனைகள் அவ்வளவு இயல்பாகவும் மெல்லிய நகைச்சுவை உணர்வோடும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.தாய்& மகள்கள் இனைந்து  தந்தையை கிண்டல் செய்வது போல பார்வையை பரிமாறி கொள்ளுதல்,தந்தை "இரவில் விழித்திருந்ததால் டயர்டா இருக்கு" என்று சொல்லும்போது அவரின்  வயதுவந்த மகள் மெல்லிய சிரிப்போடு  அங்கிருந்து விலகி செல்லுதல், அந்த சிறுமி அனு ஆடி கார் கேட்கும் போது அதற்கு மோகன்லால் காரின் பேரை தவறாக உச்சரித்து சொல்லும் பதில் எல்லாமே அட்டகாசம்.ஜார்ஜ், சிறுமி அனுவை பிரம்பால் அடித்துவிட்டு ஈசி சேரில் உட்காரும்போது ஏற்கெனவே அனு அந்த சேரின் கட்டையை எடுத்துவிட்டது தெரிந்து  சிரிப்பது அருமை.எல்லாவற்றுக்கும் மேலாக படம் முடியும் காட்சி என்னை அறியாமல் கை தட்ட  வைத்தது என்று சொன்னால் மிகையாகாது .

                ஜார்ஜ் கதாபாத்திரம் என்னை ஈர்த்த காரணம் அவர் ஒவ்வொரு விஷயத்தையும் சினிமா மூலமே தெரிந்து கொண்டுவிடுகிறார்.தமிழ் ,ஹிந்தி, இங்க்லீஷ் ஆகிய மொழிகளை சினிமா பார்த்தே கற்று கொண்டிருக்கிறார்.தன் வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்தையும் ஏதேனும் ஒரு சினிமா காட்சியோடு ஒப்பிட்டு அதற்கு தகுந்தாற்போல சாதுர்யமாக முடிவெடுக்கிறார். உதாரணமாக போலீஸ் விசாரணைக்கு அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தை தயார் செய்யும் விதம்.இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை.நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது.சப்டைட்டிலோடு படம் கிடைக்கிறது.ஒரிஜினில டிவிடியே 110 ரூபாய்தான்.கண்டிப்பாக பாருங்கள் .

           இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக ஒரு செய்தி உலவுகிறது.கமல் நடிக்கிறார், இல்லையில்லை விக்ரம் நடிக்கிறார் என்று பல்வேறு யூகங்கள்.இருவரில் யார் நடிப்பதாக இருந்தாலும் ரீமேக் என்ற பேரில் இதை tone down செய்தல், இரு குழந்தைகளுக்கு தந்தை என்பதை மாற்றி ஹீரோ இமேஜுக்கு வேறுமாதிரி சம்பவங்களை அமைத்தல்,போலீஸ் விசாரணை காட்சியில் ஜார்ஜ் குட்டி அடிவாங்குவார் என்பதற்காக அதை நீக்குதல் அல்லது போலீசை திருப்பி அடிப்பது போல ஒரு ஆக்ஷன் ப்ளாக் வைத்தல்,ஜார்ஜ் குட்டி  நாலாம் கிளாஸ் என்பதை ஐ ஐ டியில் எம் டெக் என்று மாற்றுதல் தேவையில்லாமல் ஃபாரீன் டூயட் குத்துப்பாட்டு(குறிப்பாக கானா பாலாவின் காதை செவிடாக்கும் இரைச்சல் பாடல்) வைத்தல், ஆக்ஷன் ப்ளாக் வைத்தல், ஃபாரீன் பைக்கில் வந்து சீன போடுதல் போன்ற அக்கபோர்களை எல்லாம் சேர்க்காமல் இயல்பாக எடுக்க முயன்றால் படம் வெற்றி பெரும்.அதை விடுத்து மேற்சொன்ன சேட்டைகள் ஏதாவது செய்தால் மூலப்படத்துக்கே இழுக்கு.

Sunday, 27 April 2014

Ikiru(1952)-வாழ்தலுக்கும் உயிர் பிழைத்திருத்தலுக்குமான வேறுபாடு



           பொதுவாகவே நம்மில் பலருக்கு வாழ்தலுக்கும் உயிர் பிழைத்திருப்பதற்குமான (Surviving &Living)வேறுபாடு தெரிவதில்லை.அதை நாம்  தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை. பலரை பொறுத்தளவில் எந்திரத்தனமாக ஓபீஸ் வேலை, பின்னர் வீடு, பின்னர் மீண்டும் ஓபீஸ் இதுதான் வாழ்க்கை.இதுதான் வாழ்தல் என்று எண்ணுகிறார்கள். ஆனால் இது வாழ்தலில்லை.இது உயிர் பிழைத்திருத்தல்/ஜீவித்தல்.
        பொதுவாகவே ஒரு சொல்லாடல் உண்டு “நா பொழப்ப தேடி பட்டணம் போறேன் என்பார்களே ஒழிய “நான் வாழ்வதற்காக பட்டணம் போறேன் என்று யாரும் சொல்வத்ல்லை.காரணம் பட்டணம் என்பதே பணம் சம்பாதிப்பதை தவிர்த்த பிற  “தேவையற்றவைகள்  வெட்டி எறியப்பட்ட  ஒரு இடம்.அதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறுதல்,நல்ல காற்று,நல்ல தண்ணீர்,நிதானமான வாழ்க்கை,கூட்டு குடும்பம்  என்பதெல்லாம் அங்கு கெட்ட வார்த்தைகள்.
           இந்தப்படத்தை பொறுத்தளவில் இரண்டு விஷயங்களை இது நெற்றிபோட்டில் அடித்தாற்போல உரக்க உணர்த்துகிறது.
ஒன்று: நகரின் எந்திர ஜீவனம்
இரண்டு: அரசு அலுவலங்கள், அதில் இருக்கும் அரசு ஊழியர்களின் அதிகாரத்திமிர்,பணியில் அலட்சியம்,அங்கு வரும் மக்கள் மீது எரிந்து விழுதல் போன்ற அடாவடி செயல்பாடுகள்.
              கதையின் நாயகன் வாண்டனபி  அரசு அலுவலகம் ஒன்றில் முப்பது வருடமாக வேலை பார்ப்பவர்.படிப்படியாக முன்னேறி இப்போது துறைத்தலைமை(செக்ஷன் சீஃப்) பொறுப்பை அடைந்திருப்பவர்.அங்கிருக்கும் அனைவருமே மனிதத்தன்மையற்ற எந்திரங்களாகவே சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள்(அரசு அலுவலகங்கள் என்றாலே அப்படித்தானே?).குறைகளை மனுவாக எடுத்துகொண்டு வரும் மக்களை அலைகழிப்பவர்கள்.அதாவது “இது இந்த செக்ஷன் இல்லை. அந்த செக்ஷன் போ என்பார்கள்.அங்கே போனால் இதே வசனத்தை வேறுமாதிரி சொல்வார்கள். இப்படியாக சுத்தலில் விட்டு மக்கள் தாங்கள் கொண்டுவந்த பிரச்சனையே மேல் என்று ஓடிவிடுவார்கள்.இதுதான் அவர்கள் வேண்டுவது.அதாவது தங்களின் எந்திரத்தன்மையை குலைக்கும் எதையும் அவர்கள் ஊக்குவிப்பதில்லை.இங்கு மனித நேயம், மனிதத்தன்மை எல்லாம் நகைப்புக்குரிய வார்த்தைகள்.கதையின் நாயகன் வயிற்று வலி என்று மருத்துவமனை செல்கிறார்.   


     மருத்துவர்  'ஒன்றுமில்லை வெறும் வயிற்றுவலிதான்' என்று சொன்னாலும் தனக்கு கேசர் தான் என்பதை அவர் உணர்கிறார்.அப்போதுதான் அவர் வாழ்க்கையை பற்றி சிந்திக்க துவங்கிய தருணம் என்று சொல்லலாம்.மரணம் நெருக்கும் வேளையில்தானே பல பேருக்கு வாழ்க்கையை பற்றிய நினைப்பு வருது...
         
           அவரது மகனும் மருமகளும் அவரின் பென்ஷன் பணம் பிற பெனிபிட்டுகள் ஆகியவற்றை கொண்டு ஒரு நவீன வீடு கட்டிவிட வேண்டும் என்று விவாதிக்கிறார்கள் .மேலும் “தந்தை அனைத்து பணத்தையும் சுடுகாட்டுக்கு தன்னோடு கொண்டு போக போகிறாரா? என்று கேட்க மனைவி சிரிக்கிறார் .பிறகு விளக்கை மகன் ஆண் செய்து பார்த்தால் அவனது தந்தை ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார் .நமது அறையில் அவருக்கென்ன வேலை? என்று சலித்து கொள்கிறார் மனைவி.
                   
       தனது மனைவி போட்டோவையே வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார்.அப்போது அவரது மனைவி மற்றும் பிள்ளை சார்ந்த பல்வேறு பழைய நினைவுகள் அவர் கண்முன்வருகிறது.
25 ஆண்டுகால சேவையை பாராட்டி சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

        வாண்டனபி தனக்கு புற்றுநோய் இருப்பதை தனது மகனிடம் சொல்ல முயல்கிறார்.ஆனால் அவன் அதை கண்டுகொள்ளாமல் போகவே மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.ஐந்து லட்சம் yen களை வங்கியில் இருந்து எடுத்துகொண்டு போகிறார்.
மகனின் மாமா “மனைவி இறந்த பின் உனக்ககாக இருபது வருடங்கள் தனியாக இருந்தவர் இப்போது பெண்ணாசையால் ஓடியிருக்கலாம் என்கிறார்.  
           பாரில் ஒரு எழுத்தாளனை சந்திக்கிறார் “பல மனிதர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் தருணத்தில் மட்டுமே வாழ்வை பற்றி உணர்கிறோம்.வாழ்வை அனுபவிப்பது என்பது மனிதனின் கடமை.இவ்வளவு நாள் நீ வாழ்வுக்கு அடிமையாகி இருந்தாய் இப்போது நீ  அதற்கு ஆசானாக மாறு என்கிறார் எழுத்தாளர்.தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.
                       வாண்டனபி பல நாட்கள் அலுவலகம் செல்லாமல் போகவே கோப்புகள் நூற்றுக்கணக்கில் தேங்கி விடுகிறது.அந்த அலுவலகத்தில் உயிர்ப்போடு வாழ நினைக்கும் ஒரே ஜீவனான டோயோ என்ற பெண்மணிக்கு இந்த எந்திர அலுவகலத்தை விட்டு வெளியேறிவிட நினைக்கிறார்.ஆனால் 'மேலதிகாரி வாண்டனபி கையெழுத்தில்லாமல்  அது நடக்காது' என்று சக ஊழியர்கள் சொல்லவே அவர் வாண்டனபியை தேடுகிறார்.ஒருநாள் வழியில் அவரை எதேர்ச்சையாக சந்தித்து ‘நான் அலுவலக வேலையை ராஜினாமா செய்ய உங்கள் கையெழுத்து தேவை, உதவுங்கள் என்று கேட்க அவர் தன வீட்டுக்கு அழைத்து சென்று கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.ஆனால் இதை பார்க்கும் அவரது மகன்,மருமகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் ‘இந்த பெண்ணோடு உல்லாசமாக இருக்கத்தான் இவர் இவ்வளவு பணத்தோடு வெளியேறி விட்டார் என்று அவர் போனபின் விவாதிக்கிறார்கள்.
           டோயோவை அழைத்துக்கொண்டு பல இடங்கள் செல்கிறார் வாண்டனபி.தான் சாப்பிட ஆர்டர் செய்த உணவுகளை கூட டோயோவை சாப்பிட சொல்கிறார்.அவளும் ஆர்வமாக அதை வாங்கி சாப்பிடுகிறார்.
இங்கு டோயோவாக நடித்த பெண்ணை பற்றி சொல்ல வேண்டும்.அவரின் கதாபாத்திரம் எப்படி என்றால் அவரை பார்த்தவுடனேயே ஒருவித உற்சாகம் நம்மையும் தொற்றிகொண்டுவிடும்.அத்தகைய ஒரு உற்சாகமான லைவ்லியான கேரக்டர்.நன்றாகவே நடித்துள்ளார்.
 
டோயோ
              அந்தப்பெண்ணிடம் “நீ எப்படி இவ்வளவு உயிர்ப்போடு வாழ்கிறாய்?சாவதற்கு முன் உன்னைப்போல ஒரு நாள் வாழ்ந்துவிட வேண்டும்.உன்னைப்போல் எப்படி இருப்பதென்று சொல் என்கிறார்."நான் தினம் ஜப்பான் குழந்தைகள் விளையாட பொம்மைகள் தயாரிக்கிறேன்(அந்த கம்பெனியில் இவள் வேலை செய்கிறாள்).ஜப்பான் குழந்தைகளோடு விளையாடுவது போலவே எனது வேலையை உணர்கிறேன்" என்கிறாள்.இதை கேட்டவுடன் 'என்னால் சில விஷயங்கள் செய்ய முடியும்' என்று உடனடியாக அலுவலகம் சென்று "அந்த கொசுக்கள் மொய்க்கும் குட்டையை நான் பார்வையிட வேண்டும்" என்று செல்கிறார்.இவர் மேலதிகாரி என்பதால் இவருக்கு கீழே இருப்பவர்கள் வேறு வழியின்று இவரோடு செல்கிறார்கள். 
                இங்கே தமிழ் சினிமா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திரத்துக்கு கேன்சர் என்று சொல்லிட்டா போதும் உடனே "வாழ்வே மாயம்,காற்றடைத்த பை, நாலு பேரு தூக்குவான்" என்று ஏதாவது உபயோகமில்லாமல் உளறி கொண்டிருப்பார்கள்.ஆனால் இங்கே வாண்டனபி இதுமாதிரி அக்கப்போர் எதுவும் செய்யாமல் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
            இவர் அனுமதி மட்டுமன்றி இவருக்கு மேலுள்ள வேறு பல அதிகாரிகள் தயவிருந்தால்தான் இது நடக்கும் என்பதால் ஒவ்வொரு அதிகாரியின் அறை வாசலிலும் தவமாய் இருக்கிறார்.அவர்கள் இவரை எவ்வளவு கேவலபடுத்தினாலும் இவர் அவைகளை பொருட்படுத்தாது தொடர்ந்து கெஞ்சுகிறார்."ஏன் இப்படி உங்களை நீங்களே கேவலபடுத்தி கொள்கிறீர்கள்?" என்று சக அலுவலர் கேட்க "இருப்பது கொஞ்ச நேரம் இதற்கெல்லாம் வருந்த நேரமில்லை" என்கிறார்.ஒருவழியாக பூங்கா அமைக்க அனுமதி கிடைத்து பூங்கா அமைக்கப்படுகிறது.கடைசியாக அந்தப்பூங்காவில் அவர் ஊஞ்சலில் அமர்ந்து கொட்டும் பனியிலும் தனது அபிமான பாடலை பாடியபடியே உயிரை விடுகிறார்.இந்தக்காட்சி படமாக்கப்பட்ட விதம் கண் கலங்க வைப்பதாக உள்ளது.எப்பேர்பட்ட மனிதராக இருந்தாலும் மனதை உருக்கும் வண்ணம் உள்ளது.
மனதை உருக்கும் அந்தக்காட்சி

         அவர் இறந்தபின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று அவரது இல்லத்தில் நடக்கிறது.சக அலுவலக "எந்திரங்கள்" கடமைக்கு உட்காந்திருக்க பூங்காவை சுற்றியுள்ள மக்கள் உண்மையான பாசத்தோடும் கண்ணீரோடும் அவருக்கு அஞ்சலி செலுத்தி செல்கிறார்கள்.அதை பார்த்து அதிர்கிறார்கள் இந்த எந்திரங்கள்.
அப்போது பூங்கா பற்றிய பேச்சு எழுகிறது.நாட்டில் அமைக்கப்படும் பூங்கா எல்லாம் வாண்டனபி அமைத்ததாக மக்கள் எண்ணுகிறார்கள் என்று சக எந்திரங்கள் வயிற்றெரிச்சல் படுகிறார்கள்.
"அந்த பூங்கா வாண்டனபியால் நிகழவில்லை.தேர்தல் நெருங்குவதால் நிகழ்ந்துவிட்டது" என்கிறார் ஒரு அலுவலர்.மற்றொருவர் "அவர் இருந்தது பொது விவகார துறை.ஆனால் பூங்காவை அமைத்தது பூங்கா துறை.இவர் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை" என்று இவ்வாறாக ஆளாளுக்கு தாங்கள் கிரெடிட் எடுத்துகொள்ள முயல்கிறார்கள்.ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாய் போட்டோவில் சிரிக்கிறார் வாண்டனபி.காரணம்  பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டவர் அவரே.
"சிட்டி கவுன்ஸில் மற்றும் துணை மேயர் தேர்தல் நெருங்கியதால் மட்டுமே இதை செய்தனர்.இல்லாவிடில் வாண்டனபியின் கோரிக்கை எல்லாம் சும்மா" என்கிறார் மற்றொருவர்.திடீரென்று அனைத்து ஊழியர்களும் சபதம் எடுக்கிறார்கள் "வாண்டனபி போல நாமும் மக்களுக்கு ஏதேனும் செய்வோம்" என்று.
           அடுத்த நாள் ஊழியர்கள்(எந்திரங்கள்) அலுவலகத்தில் அமர்ந்திருக்க ஒரு சாமானிய பெண் வந்து உதவி கேட்க "இது இந்த்துறையின் கீழ் வராது.வேற டிபார்ட்மென்ட்" என்று சொல்லி அனுப்புகிறார் ஒரு ஊழியர்.மற்றொரு ஊழியர் திடீரென்று பொங்கி எழுந்து நேற்று செய்த சபதத்தை நினைவு கூற முயன்று தோற்று மீண்டும் தனது கோப்புக்குவியலில் மூழ்குகிறார்.அதாவது மீண்டும் அவர்கள் எந்திரங்களாகி விட்டனர்.சபதம் எல்லாம் சும்மா!
            வாண்டனபியாக நடித்தவர் டகாஷி ஷிமுரா.குரசோவாவின் ஆஸ்தான நடிகர்களுள் ஒருவர்(மற்றொருவர் டோஷிரோ மிஃபுனே).குரசோவா இயக்கிய முப்பது படங்களில் 21 படங்களில் நடித்த பெருமை கொண்டவர்.இந்தப்படத்தில் பிறரால் புறக்கணிக்கப்பட்ட, விரைவில் மரணம் என்பதை உணர்ந்த ஒரு வயதான மனிதாரக வாழ்ந்துள்ளார்.அதுவும் அந்த கண்களில் மரண பயத்தை காட்டும் விதம் இத்தனை வருட வாழ்க்கையில் நாம் செய்ததுதான் என்ன?என்ற கேள்விக்கு பதில் தெரியாமையால் கூனிக்குறுகிய உடல் மற்றும்  மனம் ஆகியவற்றை மிக அற்புதமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
கண்களில் தெரியும் வேதனை
 
             இந்தக்கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நீங்கள்  உங்கள்  மனதுக்கு பிடித்த ஒரு விஷயத்தை பிறரைப்பற்றி கவலைப்படாமல்  சமீபத்தில் செய்தது எப்போது?

Sunday, 20 April 2014

பவரின் அரசியல் நிலைப்பாடு என்ன?

அன்புள்ள வ.ரா,
                               நலமா?(இல்லன்னா என்ன பண்ண போற?-கும்மாங்கோ).வெகு காலமாக கேட்க நினைத்த கேள்வி இது.பவர் ஸ்டார் பெரிய அப்பாடக்கர் பெரும் பவர் கொண்டவர்.அவர் நினைத்தால் உலகின் போக்கையே மாற்ற முடியும் என்றெல்லாம் அளக்கிறீர்கள்.அப்படிப்பட்ட சக்தி கொண்டவர் ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் வாய்ஸ் கொடுக்கவில்லை?ஒருவேளை வாய்ஸ் கொடுத்தும்  அந்த கட்சி தோற்றுவிட்டால் வண்டவாளம் வெளிவந்துவிடும் என்ற பயமா?உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டவரா பவரு?நன்றி.                                                                                                                                                                                                                                         -திண்டுக்கல் சகாயம்.

********************************************************************************************
 Hello V.R,
                  Just dropped in to enquire about your beloved and over-rated balloon Powerstar.Why cant he guide people in this election?Is he afraid?
                                                                                                                        -Raj.
***********************************************************************************

Adios amigo VR,
                     Amanecía en el naranjel.Abejitas de oro buscaban la miel.
¿Dónde estará powero star
la miel? -                                                                                    -Juan Miguel
.
***********************************************************************************



அன்பு சகாயம் & ராஜ்&Miguel,
                                                          பவர் மீது கட்டமைக்கப்படும் விஷம பிரசாரங்களை நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அவரின் வளர்ச்சி,பல நூற்றாண்டு காலமாக அவர் உலக மக்கள் நலனுக்கு ஆற்றி வந்த பெரும்பணி இவற்றை எல்லாம் எப்படியாவது மறைத்து விட வேண்டும் என்று சிலர் அலைவது தெரியும்.பவருக்கு தேச நலனில் அக்கறை இல்லாதிருந்திருந்தால் ஏன் அவர் சிப்பாய் கலகம்,தண்டி யாத்திரை,ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றிருக்க போகிறார்?

இவ்வளவு ஏன் அமெரிக்க சுதந்திர போரிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் பவர்.அவருக்கு இந்த தேசம், அந்த தேசம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்க தெரியாது.மக்களின் அன்பு என்ற மகத்தான சக்தி   தேச வரைபடங்களில் சிக்கிவிட கூடாது என்பதே அவர் எண்ணம்.
                         சென்ற தேர்தல் முடிந்த போதே பல அரசியல் கட்சிகள் பவரிடம் "அடுத்த தேர்தலில் எங்களைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்" என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது எத்தனை பேருக்கு தெரியும்?(அதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா?இல்லை சும்மா அடிச்சி விடுறியா என்று கேட்பவர்களுக்கு இதோ புகைப்பட ஆதாரங்கள்)....


 
அப்படி இருக்கையில் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறீர்கள்.அவர் இந்தியா என்ற வட்டத்துக்குள் மட்டும் இருக்க விரும்பாமல் உலக மக்கள் அமைதி பெற்று வாழ தேவையானவற்றை செய்ய இப்போது நார்வே சென்றுள்ளார்."உலக சமாதானம் என்று வெற்றி பெறுகிறதோ அன்றுதான் நான் பிறந்தநாள் கொண்டாடுவேன்" என்று சூளுரைத்தது பல பேருக்கு தெரியாது.ஆகையால் வெறும் பத்திரிகை ஊடக விஷம பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உண்மையில் அவர் என்ன பணி ஆற்றியுள்ளார் என்பதை வரலாற்று புத்தகங்கள் மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.இனி தொடர்ந்து இது போன்ற பொய் கட்டமைப்புகளை உடைக்கும் வண்ணம் பவரின் சிஷ்யர்கள் செயல்படுவார்கள்.

Sunday, 6 April 2014

Ishqiya(2010)- நம்பகத்தன்மையற்றவர்களுடன் ஒரு திரை பயணம்

                             பொதுவாகவே வணிக சினிமாக்களின் ஆதார சுருதி என்னன்னா polarization.அதாவது படம் துவங்கி முதல் அரை மணி நேரத்தில் "இவிங்க எல்லாம் அக்மார்க் நல்லவர்கள்.இவிங்க எல்லாம் அக்மார்க் கெட்டவர்கள்.நீ நல்லவனை வாழ்த்து, கெட்டவனை திட்டு" என்ற ரீதியில் நிறுவப்பட்டுவிடும்.ரசிகர்களின் மனப்போக்கும் அதே போலத்தான் செல்லும்.
            உயிர்மை இதழில் தியோடர் பாஸ்கரன் அவர்கள் எழுதியதாஅல்லது வேறு யாரோ எழுதியதா என்று நினைவில் இல்லை.ஆனால் அந்த quote நினைவில் இருக்கு, " அருவியில் குளித்துகொண்டிருக்கும் நாயகியிடம் சில்மிஷம் செய்யும் வில்லனை அடித்து துரத்திவிட்டு எம்.ஜி.ஆர். அதே செயலை செய்வார்".அதாவது நல்லவன் சில்மிஷம் செய்தால் அது ரொமான்சு.இதே வில்லன் (என்று நிறுவப்பட்டவன்) செய்தால் அது கிரிமினல் குத்தம்.இந்த விதியின் படி அமைந்த சினிமாக்கள் பல்லாயிரம்.
               (spoiler alert) ஹாரி பாட்டர் நாவலில் எனதபிமான கதாபாத்திரம் புரொபசர் ஸ்னேப்தான்.கிட்டத்தட்ட ஏழு நாவல்களிலும் அவரை கொடூர வில்லன் ரேஞ்சுக்கு காட்டி கடைசியில் வந்த டுவிஸ்ட் மிக சுவாரஸ்யமானதும் மனதை உருக்குவதுமாக இருந்தது.அதான் ஒரு எழுத்தாளரின் பலம். திரைக்கதை ஆசிரியரின் பலமும் அத்தகைய கதாபாத்திரங்களை திரைப்படங்களில் உருவாக்குவதே!
              இந்த வகையில் இந்த polarity/polarization ஆகியவற்றை உடைத்த படங்கள் அவ்வப்போது வந்துள்ளன.அரிதாக தமிழிலும்.உதாரணமாக தமிழில் வந்த "நான்" ,"நான் அவனில்லை" போன்ற படங்களை சொல்லலாம்.நாயகன் கதாபாத்திரம் நல்லவனா கெட்டவனா என்று ஒரே வரியில் சொல்லிவிட முடியாத படியான செயல்களை செய்தவனை மையபடுத்திய படங்கள் இவை.
              இந்த வரிசையில் ஒரு படம் என்றால் அது Ishqiya.பொதுவாகவே விஷால் பரத்வாஜின் படங்கள் மனித மனத்தின் இருண்ட பாகங்களை படம் பிடித்து காட்டும் தன்மையுடையவை.குறிப்பாக polarisation க்கு உட்படாத கதாபத்திரங்களே அவர் படத்தில் நிறைந்திருக்கும்.உதாரணமாக அவர் இயக்கிய Kaminey படத்தை சொல்லலாம்.இஷ்கியா படத்தை அவர் இயக்கவில்லை.அபிஷேக் சவுபே தான் இயக்குனர்.ஆனால் கதை திரைக்கதை மற்றும் வசனம் வி.பரத்வாஜ்.

              இந்த படத்தில் இரண்டு  திருடன்கள் ,அவர்களை துரத்தும் முஷ்டாக், இவ்விருவருக்கு அடைக்கலம் கொடுக்கும் பெண் கதாபாத்திரம்,அவளது கணவன் கதாபாத்திரம்,கணவனின் கூட்டாளி,சாதி "போர்ப்படை"யில் இணைக்கப்பட்ட பதினைந்து வயது "பெரிய மனுஷன்" ஆகிய அனைவருமே நல்லவன்/கெட்டவன் என்ற இரு துருவங்களில் அடையாளம் காணப்பட/காட்டப்பட  முடியாதவர்கள்.அதுதான் இந்த படத்தின் ஆதார பலமே.
               குறிப்பாக  கிருஷ்ணா(வித்யா) கதாபாத்திரம் மர்மமான, எந்த நேரத்தில் எதை செய்வாரோ என்று சந்தேகப்பட வைக்கும் ஒரு கதாபாத்திரம்.Kahaani படத்தில் கூட வித்யாவுக்கு இதே போன்ற "மர்மமான" ரோல்தான்.அதில் படித்த பெண்மணியாக வருவார்.இதில் படிப்பு வாசனையற்ற ஒரு கிராமத்து பெண்மணியாக வருகிறார்.கிராமத்து பெண்மணி என்றாலே ஒரு பாவாடை தாவணியை போட்டுகினு கழுத்து சுளுக்கும் வரை ஒரு புதரு மண்டிய ஒரு மூஞ்சியை பார்த்துகொண்டே செல்லும் மொக்கை தமிழ்ப்பட பெண்மணி அல்ல இவர்.இவருக்கு துப்பாக்கியை குறிபார்த்து சுட தெரிந்துள்ளது.வேன் ஓட்டுகிறார்.தன்னை நம்பி வந்த அர்ஷத் வர்ஸி மற்றும் நஸீர் ஆகியோருக்கு உதவுவது போல உதவி ஒரு கட்டத்தில் அந்த இரு கில்லாடி கிரிமினல்களையே டபுள் க்ராஸ் செய்கிறார்.இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் ஆரண்ய காண்டம்  படத்தில் சுப்புவாக   பார்த்திருக்கலாம் .

                 இந்த படத்தின் அச்சாணி போன்ற கேரக்டர்கள் மூவர்.அர்ஷத் வர்ஸி நஸீர் மற்றும் வித்யா பாலன்.மூவரில் ஒருவர் நடிப்பில் சொதப்பியிருந்தால் கூட படத்தை ஒரு நிமிடம் கூட பார்க்க முடியாதபடி ஆகியிருக்கும்.அப்படி எதுவும் நடக்கவில்லை.மூவரும் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.
                 அடைக்கலம் கொடுத்த கிருஷ்ணாவின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள் அர்ஷத்&நஸீர்.இரவில் அவசரத்தில் வந்து தங்கிய நேரத்தில் அவர்கள் வித்யாவை சரியாக பார்க்காமல் தூங்கிவிடுகிறார்கள்.மறுநாள் காலையில் வித்யா ஒரு அற்புதமான பாடலை பாடுகிறார்(பாடகி:ரேகா பரத்வாஜ்.விஷாலின் மனைவி).அதில் மயங்கும் நசீர் ரொமான்டிக்காக கண்ணாடியில் தன முகத்தை பார்க்கிறார்.வெள்ளை தாடி இருப்பதை காணும் அவர் அங்கிருக்கும் மை டப்பாவை எடுத்து தனது தாடியில் பூசி கருப்பு தாடியாக அதாவது "தனக்கு இன்னும் வயதாகவில்லை.காதலிக்க தயார்" என்று மறைமுகமாக கிருஷ்ணாவுக்கு புரிய வைக்கவே இந்த கூத்து.நசீர் காதலில் விழுந்ததை உணரும் போது வரும் அட்டகாசமான பாடல் இதோ::
 இந்த பாடலின் இசை, பாடிய Rahat Fateh Ali Khan இன் குரல்,,பாடலை படமாக்கிய விதம் இவை எல்லாவற்றையும் தாண்டி பாடலில் அற்புதமான நடிப்பை வெளிபடுத்திய நஸீர்..ஆகா..என்னவொரு அற்புதமான காம்பினேஷன்!!
                  ஆனால் உண்மையில் வித்யா அர்ஷதுடன் இருப்பதை நஸீர் 
பார்க்க,அதனால்  இருவருக்கும் சண்டை வர அதனால் அவர்கள் போட்ட கடத்தல் திட்டத்தில்(கிருஷ்ணாவின் கணவரின் கூட்டாளியை கடத்த திட்டம் போடுகிறார்கள்) மிகப்பெரிய சறுக்கல்.அந்த நேரத்தில் கிருஷ்ணா இவ்விருவரையும் டபுள் க்ராஸ் செய்கிறார்.அதன் பின் என்னானது என்பதை திரையில் பார்க்கவும்.
                            அதிள் ஒரு சுவாரஸ்யமான காட்சியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.அதுதான் கிருஷ்ணாவின் கணவன் வர்மாவின் கூட்டாளி கேகே என்ற தொழிலதிபர் பற்றியது.அவரை கடத்த அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நேர பிரகாரம் ஒரு போர்டில் எழுதுகிறார்கள் மூவரும்.அதில் கோவிலுக்கு சென்றுவிட்டு கேகே வேறெங்கோ செல்வதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.அவரை பின் தொடர்ந்து சென்றால் அது ஒரு பழைய ப்யூட்டி பார்லர் என்ற பேரில் இருக்கும் ஒரு கட்டிடம்.பப்பனும் கிருஷ்ணாவும் ஒளிந்திருந்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க..  கேகேயின் மனைவி மாடர்ன் டிரெஸ்சில் கையில் ஒரு கழியுடன் கணவனையும் அவன் கண்களையும் கட்டிபோட்டுவிட்டு  masochism பாணி எழுச்சியை உண்டாக்கி கொண்டிருப்பதும் அதை அடக்க முடியாத சிரிப்புடன் பப்பனும் கிருஷ்ணாவும் ஒளிந்திருந்து பார்ப்பதும் பின் அதை பற்றிய பேச்சு  வரும்போதெல்லாம் இவ்விருவரும் விழுந்து விழுந்து சிரிப்பதும் இது புரியாமல் காலு விழிப்பதும் டிபிகல் விஷால் பரத்வாஜ் ஸ்டைல் .
                        மற்றபடி குறிப்பிடப்பட வேண்டியது இசை.ஏற்கெனவே இரண்டு பாடல்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.எனதபிமான விஷால் பரத்வாஜ்தான் இசை.அவரின் 7 Khoon Maaf பாடல்களை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.இந்த படத்தின் பாடல்களும் அட்டகாசமானவை.இந்த படத்தின் இசைக்காக தேசிய விருது பெற்றார் விஷால்.அது மட்டுமல்லாது
Badi Dheere Jali பாடலுக்காக அவரது மனைவி அற்புதமான பாடகி ரேகா பரத்வாஜும் தேசிய விருது பெற்றார்.அந்த பாடல் இதோ:

பாமரத்தனமான குரலுக்கு சொந்தக்காரர் ரேகா..ராவன்(ஹிந்தி)படத்தில் Ranjha Ranjha பாடலை இவர் பாடியிருப்பார்.இதே பாடலின் தமிழ் வடிவத்தில்(காட்டுச்சிறுக்கி) அனுராதா ஸ்ரீராம் பாடியிருப்பார்.வின்னர் ரேகா தான்.இரண்டு பாடலையும் கேட்டவர்களுக்கு அது தெரியும்


                  மற்றபடி இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய போகிறார்கள் என்ற ஹார்ட் அட்டாக் வரவைக்கும் செய்திக்கெல்லாம் நான் முக்கியதத்துவம் கொடுப்பதில்லை.ஏன்னா அந்த படத்தை தமிழில் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் தானே அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டும்.பார்க்கபோவதில்லை என்று முடிவெடுத்த படம் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

Saturday, 16 November 2013

சூர்யபார்வை (1999) மற்றும் Leon the professional(1994)

Leon The professional(1994) பார்க்க நேர்ந்தது.இதில் முரண் என்னவெனில் இந்த படத்தின் தமிழ் உல்டாவான அர்ஜுன் நடித்த சூரியபார்வை (1999) படத்தை ஒரு பிரதி என்று தெரியாமலேயே(அப்பெல்லாம் விக்கிபீடியா கிடையாதே) ஐந்து முறை பார்த்திருக்கிறேன்.நன்றாகவே இருந்தது.குறிப்பாக கவுண்டரின் காமெடி.வெளிநாட்டில் கம்ப்யூட்டர் படித்துவிட்டு இந்தியாவுக்கு சேவை செய்வதற்காக வந்து செந்திலின் சூழ்ச்சியால் வீரப்பன் போல காட்டுக்குள் ஒளிந்து வாழும் கேரக்டர்.விஷயம் அதுவல்ல...இந்த லியோனுக்கும் சூரிய பார்வைக்குமான வேறுபாடு/ஒற்றுமைகள் பற்றி...


               லயோன் படத்தை பொறுத்தளவில் உணர்ச்சிகள் அற்ற/உணர்சிகள் இல்லாதது போல வாழும் ஒரு ஹிட்மேன் மற்றும் தனது அன்பு தம்பியை இழந்த ஒரு சிறுமி.இவர்களுக்கு இடையேயான உறவு.தமிழ் படத்தை பொறுத்தளவில் நடலி போர்ட்மேன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர் போலவே தோன்றும்.அவரை ஒரு ஆடிப்பாடும் வழக்கமான ஹீரோயின் போலவே காட்டி இருப்பார்கள்(டூயட் மட்டும்தான் பாக்கி).மேலும் நம் தமிழ் சினிமாவில் பதிமூன்று வயது சிறுமிகள் எல்லாம் நாயகியாக பார்த்து(லிப் கிஸ் காட்சிகளில் எல்லாம் நடிக்க வைத்த ஓலக இயக்குனர்கள் உள்ள நிலையில்) பழகிவிட்டதால் இந்த படத்தில் இந்த சிறுமியின் கதாபாத்திரம் வித்தியாசமாக தெரியவில்லை ..

                ஆனால் லயோன் படத்தில் அந்த சிறுமியின் கதாபாத்திரம் மற்றும் அவருக்கும் லியோனுக்குமான உறவு/நட்பு என்பது கத்தி மேல் நடப்பது போல சொல்லப்பட்டுள்ளது.பதின்ம வயதினருக்கே உரிய  இனக்கவர்ச்சி (infatuation), அதை காதல் என்று நம்புதல், அதை லயோன் மறுத்தல் எல்லாம்(இது  லயோன்  படம் வந்த  சமயத்தில்  கடுமையான விமர்சனத்திற்கு  உள்ளானது) தமிழில் இல்லை என்றாலும்  படத்தின்  முடிவில்  அர்ஜுனும்  அந்த  சிறுமியும் சேர்ந்து  தப்பிப்பதாக  கேள்வியோடு  முடித்திருப்பார்கள்.காதலா?நட்பா?ஒருமாதிரி  தந்தை  உறவா? அதைப்பற்றி  தெளிவான  காட்சிகள்  தமிழில்  இல்லை.



ஆங்கிலத்தில்  லயோனுக்கு  பிளேஸ்பேக்  என்று  எதுவும்  இல்லை.ஆனால்  தமிழ்  பார்வையாளர்களுக்காக  இங்கே   அர்ஜுன்   உயிராக கருதும் செடிக்கு  ஒரு பிளேஸ்பேக்.அனாதையான அர்ஜுனை விஜயகுமார்-மஞ்சுளா தத்தெடுத்து வளர்க்க அதன் பின்னர் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறக்க "இனி இவன் எதுக்கு?" என்று பேசிகொண்டிருக்கும் காட்சியை பார்க்கும் சிறுவயது அர்ஜுன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.பின் பல ஆண்டுகள் கழித்து சிறையில் அவரும் விஜயகுமாரும் ஒரே செல்லில் இருக்க அப்போது அவர் "நான்தான் உங்கள் மகன்" என்று சொல்லாமல் புழுங்குகிறார்.பின் வி.குமார் மரணமடைய அவரது அஸ்தியை ஒரு பூந்தொட்டியில் நிரப்பி அதில் செடி வளர்ப்பதாக காட்சியமைப்பு இருக்கும்.
          அந்த சிறுமிக்கு சுட கற்றுகொடுக்கும் காட்சிகள்,லியோனும் சிறுமியும் சேர்ந்து வீடு வீடாக சென்று கொலை செய்யும் காட்சிகள் எல்லாம் தமிழில் இல்லை.அந்த காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும் 

               முக்கியமாக  கவனிக்கவேண்டியது  லயோன் படத்தில்  ழான்  ரெனோவின்(Jean Reno)  உடல்மொழி  பேசும்  விதம்  ஆகியவற்றை  அப்படியே  அர்ஜுன்  தமிழில்  பிரதி  எடுத்திருப்பார்.ஆனால் வில்லனாக  வரும்  Gary Oldman ன்  சாயல்  துளியும்  இல்லாமல்  ரகுவரன்  தனது  தனித்துவமான  ஸ்டைலில்  அந்த  வில்லன்  கேரக்டரை  செய்திருப்பார்!அதான்  ரகுவரன்!


ராதாரவியும்  தனது  கேரக்டரில்அட்டகாசமாக  பொருந்தியிருப்பார்(வழக்கம்போல?)!
உறுத்தல் அந்த நாயகியாக நடித்த சிறுமியின் தேர்வு சரியில்லையோ என்று எண்ண வைக்கும்.லயோன் கடைசியில் மரணமடைவார்.ஆனால் தமிழில் அவர் அந்த சிறுமியோடு தப்பிப்பதாக காட்டி இருப்பார்கள்.இரண்டு படத்துக்கும் பொதுவாக என்ன  வேறுபாடு என்றால் ஆங்கிலப்படம் ஆழமாக/கத்திமேல் நடக்கும் விதத்தில் காட்சியமைப்பு இருக்கும்.அந்த படத்தை பார்த்தபின் சூரியபார்வை பார்த்தால் தட்டையான புரிதலோடு எடுக்கப்பட்டதாக தோன்றும்.

Friday, 8 November 2013

விஜயகாந்த் படக்காட்சிகளை சுட்ட கமல்& அஜித் படங்கள்

இந்த பதிவை  இந்தாண்டின் முதல் பாதியிலேயே  எழுதிவிட நினைத்தேன்...வழக்கம்போல சோம்பேறித்தனம் அமுக்க இப்போதாவது எழுத முடிந்ததே என்று சின்ன ஆறுதல்.
முதலில் ஒரு விஜயகாந்த் படக்காட்சியை விளக்குகிறேன்.அதைப்படிக்கும்போதே அது எந்த படத்தில் வந்தது என்று தெரிந்துவிடும் 
                            >>விஜயகாந்த் கமலக்கண்ணன் என்ற பேரில் ஒரு கோவிலில் யானைப்பாகனாக வாழ்ந்து வருகிறார்....அவருடன் மணிவண்ணன் இருக்கிறார்..அவ்வப்போது விஜயகாந்த் எங்கோ காணாமல் போய்விடுகிறார்.எங்கே என்று தெரியவில்லை.சரி இது என்ன ரகசியம் என்று கண்டுபிடிக்க மணிவண்ணன் ஒரு நாள் விஜயகாந்தை ரகசியமாக பின் தொடர்கிறார்.அங்கே ஒரு இடத்தில் சென்று மணிவண்ணன் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்..காரணம் விஜயகாந்த் அங்கே ஒரு இஸ்லாமியர் போல தொழுகை செய்து கொண்டிருக்கிறார்.உடனே மணிவண்ணன் அங்கே சென்று "நீ யாருடா? உண்மையை சொல்லு" என்றவுடன் "நான் கமலகண்ணன் இல்லை கமாலுதீன்" என்றவுடன் அதிர்கிறார் மணிவண்ணன்..நீள்கிறது பிளேஷ்பேக்.

                            >> தான் ஒரு ஆணுடன் கள்ள தொடர்பு வைத்துள்ளதால் அதை நியாயப்படுத்த தன கணவன்(கமல்) விஸ்வநாத்துக்கும் அதே மாதிரி கள்ள உறவு ஏதேனும் இருந்தால் தன செய்கையை நியாயபடுத்தி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஒரு தனியார் துப்பறியும் நிபுணரை வைத்து கமலை கண்காணிக்க சொல்ல அவர் எங்கோ ஒரு மறைவுடன் சென்று இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்த ...சில காட்சிகளுக்கு பிறகு "நான்  விஸ்வநாத் இல்லை விஸாம் அஹமத் காஷ்மீரி" என்கிறார் ...பிறகு ப்ளேஷ்பேக்...ஒற்றுமை ஏதேனும் தெரிகிறதா?
முதல் படம் கள்ளழகர்(1999) இரண்டாம் படம் உங்களுக்கே தெரியும் விஸ்வரூபம்.
******************************************************************************
படம் துவங்கியவுடன் ஹீரோ வெடிகுண்டு வைத்து கொலை செய்தல்  அயன் பாக்சை வைத்து மிரட்டுதல் போன்ற விஷயங்களை செய்கிறார்..படம் பார்ப்பவர்கள் "இவர் வில்லனோ?" என்று நினைக்க  அவரை போலீஸ் கொண்டுபோய் சித்ரவதை செய்கிறது...அதெல்லாம் ஹீரோவை ஒன்றுமே   செய்யாத நிலையில் ப்ளேஷ்பேக்..... பிறகு பார்த்தால் ஹீரோவே ஒரு காவல்துறை அதிகாரி  சொல்லப்படுகிறது...இந்த காட்சி ஆரம்பம் பட காட்சி...நரசிம்மா (2001) என்ற படத்தையும்  பாருங்கள்..ஒற்றுமை தெரிகிறதா?

Monday, 8 July 2013

A Clockwork Orange(1971)-அதிவன்முறை சமூகத்தை எதிர்கொள்ளுதல்



         குப்ரிக்கின் படங்களை இரண்டு பத்திகள் மூலம் எழுதி விளக்கிவிடவே முடியாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.அது உண்மையும் கூட.எனவே இந்த படத்தை பார்த்தபோது எனக்கு தோன்றிய வெகு சில விஷயங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.மற்றபடி ஒலக சினிமா வெமர்சகன் என்று எனக்கு நானே பெயரிட்டு கொண்டு முதல் பத்தியில் படத்தின் கதையை எழுதி இரண்டாம் பத்தியில் நடிகர்கள் இயக்குனர் இசையமைப்பாளர் ஆகியோர் பற்றி இரண்டிரண்டு வரிகள் எழுதி முடித்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
*********************************************************************************
          நாமே இதை வாழ்வில் உணர்ந்திருப்போம்..ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சினிமா அல்லது குறிப்பிட்ட சினிமாவில் வரும் ஒரு குறிப்பிட்ட பாடல் நம் வாழ்வின் ஒரு முக்கியமான(மகிழ்ச்சி தருவதோ அல்லது அதீத வேதனை தருவதோ அல்லது அதீத தன்னம்பிக்கையோடு நாம் செயல்பட்ட  ) சம்பவத்தோடு நம் விருப்பம் இல்லாமலேயே பிணைக்கபட்டிருக்கும்.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட காதல் பாடல் ஒரு நபரின் பிரிந்து போன காதலியை/காதலனை நினைவூட்டலாம்.அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் தான் காதலித்த நபரோடு பேசிய பழகிய நாட்கள் கண் முன் வந்து போவதை உணர்ந்திருக்கலாம்.இதுபோல ஒரு நண்பனையோ அல்லது நெருக்கமான உறவினரையோ நினைவுபடுத்தவும் கூடும்.அந்தந்த நபர் பொறுத்து.இது போல பீத்தோவனின்  சிம்பனிகளுக்கு (ஒன்பதாவது சிம்பனி அதிலும் குறிப்பாக Molto Vivace) எதிராக அலெக்ஸ் பழக்கபடுத்தபடுகிறான்.Ludovico technique க்கு முன்பு அந்த இசையை அவன் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அவன் இன்பத்தின் உச்சத்தை அடைகிறான்.பல்வேறு அழகிய பெண்களுடன் உல்லாசமாக அவன் இருப்பதாக  அவனது மனக்கண் முன்பு தோன்றுகிறது .அந்த காட்சியை கீழே நீங்கள்  கீழே பார்க்கலாம் .
            இப்படி பீத்தோவனை கேட்கும் போதெல்லாம் இன்பத்தின் உச்சநிலையை அடையும் அலெக்ஸ் அந்த லுடோவிக்கோ முறைக்கு உட்பட்ட பிறகு ஒவ்வொரு முறை பீத்தோவனை கேட்கும்போதும் அவனுக்கு தான் பார்த்த அந்த நாஸி வீடியோக்கள் மற்றும் பிற அதிவன்முறை காட்சிகளே நினைவுக்கு வந்து கிட்டத்தட்ட மூச்சே நின்றுவிடும் அளவுக்கு மூச்சு திணறல் வாந்தி அதன்பின் மயக்கம் என்றாகிப்போகிறது.
           க்ளைமாக்ஸில் அதே பீத்தோவன் இசை ஒலிக்கிறது.ஆனால் இந்த முறை வாந்தியோ மயக்கமோ மூச்சுதிணறலோ ஏற்படவில்லை.அதற்கு மாறாக அவன் முன்பு உணர்ந்து இன்பத்தின் உச்ச நிலையில் பெண்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை அவன் மனக்கண் முன்பு தோன்றுகிறது.இந்த மாறுதலுக்கு காரணம் எதிர்கட்சிகள் மருத்துவர் உதவியால் ஏதேனும்  memory Reversal பாணி அறுவை சிகிச்சை செய்தனரா அல்லது அலெக்ஸ் மேல்மாடியில் இருந்து விழுந்த அதிர்ச்சியில் லுடோவிக்கோ டெக்னிக் டம்மியாகி போனதா என்பது நமக்கு சொல்லப்படுவதில்லை.ஆனால் ஒன்றை நாம் உணர்கிறோம்.இந்த டெக்னிக்கால் நிரந்தரமாக ஒருவரை குற்றம் செய்யாமல் தடுத்துவிட  முடியாது என்பதுதான் அது.
                                           

          நம் சமூகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போவதை நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்கும்போதோ/டிவியில் செய்திகள் பார்க்கும்போதோ  உணர்திருக்கலாம்.
எதிர்கட்சி ஆளும்கட்சியை விமர்சிக்க ஒரு வருடத்தின் குற்ற எண்ணிக்கையை பட்டியலிட்டு தாங்கள் ஆட்சியில் இருந்தபோது இருந்த குற்ற எண்ணிக்கையை காட்டிலும் இவ்வளவு விழுக்காடு உயர்ந்துள்ளது அதனால் மக்களுக்கு பாதுகாப்பில்லை... அது... இது... என அளப்பார்கள்.
                                         
        ஆனால் பெருகி வரும் குற்றங்கள் அனைத்தயும் ஒரு அரசு தவிர்த்துவிட/குறைத்துவிட முடியுமா? என்றால் இல்லை என்ற பதில்தான் நிதர்சன உண்மையான பதிலாக இருக்கமுடியும்.
சில குற்றங்களை அரசு தடுப்பது அரசின்  கடமையாக  உள்ளது.உதாரணமாக தீவிரவாதிகள் தாக்குதல் ,வெடிகுண்டு வைத்தல்,ஒரு அரசியல்/சமூக பிரபலத்தை கொலை செய்ய நடத்தப்படும் முயற்சி போன்றவை தவிர்க்க கூடியது.தவிர்க்க வேண்டியது அரசின் கடமையும் கூட..ஆனால் சில குற்றங்களை அடிப்படை சமூக புரிதல்கள் மீதான மாற்றம் நிகழும்வரை தவிர்க்கவோ குறைக்கவோ முடியாது.
உதாரணமாக குடிக்க காசு தர மறுக்கும் தாயை மகன் வெட்டி கொல்லுதல்/அல்லது கணவன் மனைவியை கொலை செய்தல்,கள்ளக்காதல் கொலைகள் etc..etc., போன்றவைகளை எல்லாம் அரசு தடுக்க முடியாது.ஆனால் தடுப்பதற்கான சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் சிலவற்றை செய்யலாம்.
                                       அப்படி ஒரு மனிதனின் குற்றம் செய்யும் எண்ணத்தை/மனோபாவத்தை முற்றிலுமாக அழித்தல் மூலம் குற்றம் என்பதே நிகழாது என நம்பும் ஒரு அரசு Ludovico Technique என்னும் தொழில்நுட்பத்தை குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது பரிசோதனை செய்துபார்த்து அதில் வெற்றியும் கண்டாகி விட்டோம் என்றுவேறு அலம்பல் செய்கிறது.எதிர்கட்சி இந்த எண்ணமாற்றங்கள்  செய்யும் தொழில்நுட்பம் மனித உரிமைக்கு எதிரானது.மேலும் ஒருகட்சி சர்வாதிகார  ஆட்சி நடக்கும்  (Totalitarian)சமூகத்தை நோக்கியே இது நம்மை இட்டு செல்லும் என பல எதிர்ப்புகள் கிளம்புகிறது.
                            
                                             இந்த இடத்தில் நாம் ஒரு நாவலை நினைத்துப்பார்க்க வேண்டும்.George Orwell எழுதிய 1984 என்னும் நாவல்தான் அது.இந்த நாவல் பற்றி அடியேன் ஏற்கெனவே  அப்போதிருந்த ஸ்டாலினிய சோவியத் யூனியன் பற்றிய நாவல் என ஒரு சிறு வட்டத்திற்குள் இதை அடைத்துவிட முடியாது.அப்போது இரண்டாம் உலகப்போர் காரணமாக பொருளாதார சேதாரம் அடைந்திருந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.இப்போது கூட அமெரிக்கா உலகின் அனைத்து இணைய பயன்பாட்டு தகவல்ககளியும் கண்காணிக்கிறது என்ற உண்மையை உலகிற்கு தெரிவித்த எட்வர்ட் ஸ்னோடேனை நாடு நாடாக துரத்தி அடித்து எப்படியாவது உள்ளே தள்ளிவிட அமெரிக்கா முயற்சிப்பதை நாம் அறிவோம்.இதெல்லாம் நமக்கு உணர்த்துவது ஒன்றையே..அமெரிக்காவும் கிட்டத்தட்ட எதிர்ப்பில்லாத/இடைவிடாத கண்காணிப்பை மேற்கொள்ள விரும்பும் ஒரு அரசு நீடிப்பதையே விரும்புகிறது.அத்தகைய முயற்சி நோக்கி செல்லும் போது தடைகற்களாக இருப்பவர்களை சுவடில்லாமல் செய்ய பார்க்கிறது.
              1984 நாவலில் கூட வின்ஸ்டன் ஸ்மித் எனும் அரசு ஊழியன் totalitarian ஆட்சிக்கெதிராக முயல்வதை கண்டுகொள்ளும் அரசு அவனை ஒரு சிறை போன்ற இடத்தில் அடைத்துவைத்து சில வழிமுறைகள் மூலம்  அவன் மனதின் அடிஆழம் வரை ஊடுருவி செல்கிறது.அந்த அடிஆழத்தில் உள்ள அரசுக்கெதிரான ஒரு சிறு கருத்து எண்ணம் கூட மிச்சம் இல்லாத வரை ஸ்மித்தை டார்ச்சர்(உடல் ரீதியாக மட்டுமல்ல) செய்து அழித்துவிடுகிறது.அதன்பின் அவன் கிட்டத்தட்ட ஒரு நடைபிணம் போலத்தான் இருக்க வேண்டும்.அரசுக்கெதிராக கலகம் செய்ய நினைக்ககூட திராணியற்ற ஒரு மனிதனாக அவன் இருப்பதாக அந்த நாவல் முடியும்.
                         

             கிட்டத்தட்ட அதேபோலத்தான் இந்த Ludovico Technique ம்.(இந்த நாவலை எழுதிய Anthony Burgess 1984 நாவலின் பாதிப்பால் 1985 என்ற நாவல் கூட எழுதியுள்ளார்.).நான் மேற்சொன்ன அரசால் தடுக்க முடியாத குற்றங்கள் நிகழ்வதற்கு மிக முக்கிய காரணம் நொடி நேர உணர்ச்சிவயப்படுதல்.அந்த நொடியில் உணர்ச்சியின் வேகத்தில் எதிராளியை கொலை செய்தல்.காரணம் ஒவ்வொருவர் மனத்திலும் வன்முறை காமம் குரோதம் போன்றவை கிட்டத்தட்ட மனிதனின் இயல்பாகவே காலம் காலமாக  தொடர்ந்து வருகிறது.இந்த எண்ணங்களின் விழுக்காடு ஆளுக்காள் மாறுபடலாமே ஒழிய இவை அனைத்தும் நிச்சயம் அனைவர் மனிதலும் சிறிதளவாவது இருக்கும்.இந்த டெக்னிக் என்பது ஒருவன் எந்த வகையில் குற்றம் செய்தானோ அந்த குற்றம் செய்ய அவனை தூண்டியது எதுவோ அந்த விஷயமே அவனுக்கு வெறுத்துபோகும்படி செய்தல்.அலெக்ஸ் விவகாரத்தில்  வன்முறை என்பதே அவனுக்கு வெறுப்பூட்டுவதாக மயக்கம் வரசெய்வதாக மாற்றப்படுகிறான்.
                               
கண்களை இமைக்கவிடாமல் வன்முறை காட்சிகளை பார்க்க செய்யும் லுடோவிக்கோ டெக்னிக்

                    பரபரப்பான சமூக தொடர்பை அறுத்தெறிந்து Spring summer fall winter and spring படத்தில் ஒரு புத்த துறவியின் சீடனாக கிம் கி டுக் கதாபாத்திரம் இருக்கும்போது கூட அவனின் மனித இயல்புகள் மேலோங்கி ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.பிறகு  தனது மனைவி வேறொருவனுடன் உறவு வைத்திருந்தது தெரிந்து அவளை கொன்றுவிடுகிறான்.எனவே எந்த சூழலில் சமூக தொடர்பற்று இருந்தாலும் இந்த அடிப்படை மனித இயல்பான காமம் குரோதம் வன்முறை போன்றவைகளை முழுமையாக அழித்தல் சாத்தியமற்றது(One flew over cuckoos nest போல Lobotomy செய்யாதவரை).
            இப்படி ஒரு வழிமுறையை அனைத்து குற்றவாளிகள் மீதும் செய்து பார்ப்பதற்கு முன் ஒருவரை இதற்கு உடன்படுத்தி அதன் முடிவுகளை வெளியுலகிற்கு propaganda செய்தால் அனைவரையும் இத்தகைய procedure க்கு உடன்படுத்துதல் சாத்தியமாகும் என அரசு நம்புகிறது.இந்த வழிமுறைக்கு உடன்படும் குற்றவாளி இரண்டு வாரத்தில் விடுவிக்கபடுவான்.அதன்பின் அவன் சாதாரண வாழ்வை வாழலாம் என சொல்வதை நம்பி அலெக்ஸ் டி லார்ஜ் இதற்கு வாலண்டியராக உடன்படுகிறான்.
                        (Alexander The large என்பதை பகடியாக Alexander De Large என வைத்தது டிபிகல் குப்ரிக் ஸ்டைல்.இதேபோல் முன்னர் வெளியான Dr.Strange love படத்தில் Jack The ripper என்ற பெயரை Jack.D.Ripper என்று வைத்திருப்பார்.)
தல.....

        இதற்கு சிறையில் ஆன்மீக வகுப்புகள் எடுக்கும் ஒருவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்.நல்லது கெட்டது என்ற Choice இல்லாமல் ஒருவரை செய்துவிடுவது நற்பண்புகளுக்கே எதிரானது.இத்தகைய மாற்றப்பட்ட "நல்லவர்களால்" சமூகத்துக்கு பெருமை சேராது என்கிறார்.ஆனால் அவரது பேச்சு காற்றில் கரைகிறது.

                          
அடியேனுக்கு பிடித்த காட்சி..அட்டகாசமான ஸ்லோமோஷன்  ஒளிப்பதிவில் பின்னி இருப்பார்கள்

 சில முக்கிய குறியீடுகள் பற்றிய எனது சிறு புரிதல்:


  •  அந்த அதிகமான பூனைகளுடன் வாழும் பெண்மணி(அலெக்ஸ் இவளை கொலை செய்வதால்தான் சிறைக்கு செல்கிறான்)யின் ரசனை கிட்டத்தட்ட அலெக்சின் ரசனையுடன் ஒத்துபோவதாகவே உள்ளது.இதற்கு ஆதாரமாக அந்த பெண்மணி தனது வீட்டு சுவற்றில் மாட்டி இருக்கும் காமம்/உடல் சார்ந்த படங்கள்.இதே போன்ற படங்களைத்தான் அலெக்சும் தனது வீட்டு அறையில் மாட்டி வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.இதை  ஒருவகையான interpretation செய்யலாம்.அதற்கு முன் அந்த முதல் காட்சிக்கான விளக்கத்தை பார்த்துவிடுவது நல்லது.
  •  முதல் காட்சியில் காட்டப்படுவது என்ன?அலெக்சின் கண்களில் இருந்து கேமரா பின்னே நோக்கி செல்கிறது.அப்படி செல்ல செல்ல அந்த அறையின் பரிணாமங்களை புரிந்து கொள்ளலாம்.நிர்வாணமாக பல பெண் சிலைகள் பல்வேறு காமம் சார்ந்த போஸ்களில் ஆங்காங்கே இருக்கிறது.அது ஒரு milk bar என அடையாளம் காட்டபடுகிறது.ஆனால் அங்கு விற்கப்படுவது எந்த வகையான பால் என்பதை மறைமுகமாக சொல்கிறார்கள்.Milk plus என்று சொல்லபடுகிறது.அது ஒருவகையான காம வெறியை  தூண்டும் ஒருவித போதை வஸ்துவாகத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இப்போது இதை விளக்க வேறொரு விஷயத்தை விளக்கியாக வேண்டி உள்ளது.
  • ஏன் அங்கு போதையூட்டகூடிய பால் விற்க்கபடுகிறது?அரசு அதை தடுக்கவில்லையா?என்ற கேள்வி எழலாம்.ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தனது ஆட்சிக்கு எந்தவித ஊறும் விளைந்துவிடக்கூடாது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை நாம் அறிவோம்.அதுபோல தனது குடிமக்களை ஏதேனும் ஒருவித போதையிலேயே (குடி மட்டுமல்ல ..காமம்,வன்முறை,மதம்,சாதி..etc..etc.,)தொடர்ந்து இருக்க செய்துவிட்டால் தனது தவறுகள் கண்டுகொள்ளப்படாது என்பதை நம்புகிறது.அதன் விளைவாகவே அரசு இந்த போதை/காம வெறியை ஊட்டக்கூடிய வஸ்துவை விற்பதாக எடுத்து கொள்ளலாம்.
  • இப்போது சமூகம் முழுவதும் காமவெறியை தூண்டும்  மில்க் ப்ளஸ் புழக்கத்தில் உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவே அந்த பூனைகளை வைத்திருக்கும் பெண்மணியின் காமம் சார்ந்த ரசனைக்கும் அலெக்சின் அதே வகையான ரசனைக்கும் ஒத்துபோவதை நாம் உணரலாம்(முதல் புல்லட்டிர்கான புரிதலாக இதை எடுத்து கொள்ளலாம்).இதே போல அலெக்ஸ் ஹாஸ்பிடலில்  கோமாவில் இருந்து மீண்டு முனகும் பொது மிக நீண்ட நேரம் கழித்தே நர்ஸ் அவனை கவனிக்க வருகிறார்.காரணம் நர்ஸும் டாக்டரும் உடலுறவு செய்து கொண்டிருப்பதாக காட்டுவதையும் நாம் இங்கே சேர்த்து கொள்ளலாம்.
  • மேலும் அந்த பூனை பெண்மணி ஒரு போர்ஸலீன்  ஆண் குறி சிலையை வைத்துள்ளார்.அதே போல அலெக்ஸ் தனது வலது கண்ணில் பெண்கள் அணியும் Fake eyelashes அணிகிறான்.அதாவது காம எண்ணங்கள் அதிகமாக தூண்டப்பட்ட ஒரு சமூகமாக அது இருப்பதால் எதிர் பாலினத்தின் மீதான ஈடுபாட்டையே அலெக்ஸ் ஐ லேஷஸ் மூலமும் அந்த பெண்மணி ஆண் குறி சிலை மூலமும் காட்டுவதாக புரிந்து கொள்ளலாம்.

                                                   

      
  • அந்த எழுத்தாளர் தனது மனைவி இறந்த பின்னர் தனது பாதுகாப்புக்காக ஒரு பாடிகார்டை வைத்துகொள்கிறார்.எழுத்தாளர் தனது மனைவி அலெக்ஸ் மற்றும் குழுவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அந்த அதிர்ச்சி காரணமாக கால்கள் செயலிழந்து போய் வீல் சேரிலேயே நடமாடுகிறார்.அந்த வீல் சேரை அலேக்காக தூக்கி வேறொரு இடத்தில் அவரது பாடிகார்ட் வைக்கிறார்.அவ்வளவு வலுவானவராக அவர் உள்ளார்.ஆனால் ஏன் அவ்வளவு வலுவான கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட அவர் ஒரு சோடாபுட்டி கண்ணாடி போட்டிருப்பதாக காட்டியுள்ளார் குப்ரிக்? அவர் படிப்பில் சிறந்தவராக இருந்தும் எந்தவித வேலையும் கிடைக்காததால்(அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் தான் இந்த முழு கதையும் நடப்பதாக காட்டபடுகிறது) தனது உடலை பராமரித்து பிழைப்புக்காக அடியாள் வேலை செய்கிறார் என்பதாக எடுத்துகொள்ளலாம்.
  • இந்த கதையின் பின்னணி நடக்கும் சமூகம் கம்யூனிச சோவியத் யூனியனை குறிக்கிறதா? என்ற கேள்விக்கு குப்ரிக் சொன்ன பதில் இல்லை..வலது இடது இரண்டிற்கும் வேறுபாடு இல்லை.இடதுசாரி எழுத்தாளர் அலெக்சை ரூமில் பூட்டி அதிகபட்ச ஒலியில் பீத்தோவனை ஒலிக்க வைத்து சித்ரவதை செய்து இன்புறுகிறார்.வலது சாரி ஆளும் அரசு அதிவன்முறை காட்சிகளை வலுகட்டாயமாக அலெக்சை பார்க்க செய்து அதன்மூலம் அவன் சித்ரவதைக்கு உள்ளாவதை வேடிக்கை பார்க்கிறது.இதில் இரண்டிற்கும் வேறுபாடு எங்கே உள்ளது?
  •  அந்த எழுத்தாளர் கதாபாத்திரம்(நடிகரை சொல்லவில்லை..நிஜத்தில் சொல்கிறேன்) Anthony Burgess தான்.அவரும் அவர் மனைவியும் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு வன்முறை கும்பல் அவளை சீரழிக்கிறது.அந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஆண்டனியின் மனைவி குடிபழகத்துக்கு அடிமையாகி கல்லீரல் செயலிழந்து இறந்து போகிறார்.அந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பையே ஆண்டனி நாவலாக எழுதினார்.
  • Clockwork Orange என்பதை எப்படி புரிந்து கொளவது??   Clockwork(சேர்த்தே சொல்லவேண்டும்) என்பது குறிப்பிட்ட செயல்களை கட்டளைகளை திரும்ப திரும்ப சலிப்பற்று எதிர் கேள்வி கேட்காமல் செய்வதை குறிக்கும்.அதாவது ஒரு எந்திரம்...ஏன் ஒரு கடிகாரம் என்றுகூட எடுத்துகொள்ளலாம்.கடிகாரம் தினம் தினம் ஒரே மாதிரியாகத்தான் நேரம் காட்டுகிறது.எனக்கு போர் அடிக்குது நான் ஓட மாட்டேன் என்று சொல்வதில்லை.Orange என்பது ஒரு உயிரி பொருளை/உயிரினத்தை(அதாவது மனிதனை)குறிக்கும். Clockwork Orange என்பது ஒரு உயிருள்ள மனிதனை எந்திரம் போல ஆக்குவது அதன் மூலம் சமூக குற்றங்களை இல்லாமல் செய்வது என்பதை குறிக்கும்.