Tuesday, 2 April 2019

Jana Aranya (1976)


“I have made both kinds of films — those dealing with contemporary problems, and I have also gone back to the past, to the nineteenth century, and made films on the stories of Tagore and other writers. There, one could think of a noble and heroic character, but no longer today — people have become diminished in stature, I feel.”-Satyajit Ray


               மக்களின் பேச்சுவழக்கில் பொதுவாக  குறிப்பிடப்படுவது அரசியல் கட்சிகளின்-அரசியல்வாதிகளின் தரமற்ற,சந்தர்ப்பவாத-அறம் பிறழ்ன்ற செய்கைகள் பற்றியே!உண்மையில் சாமானிய மக்களுமே அப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள்தான்(அந்த சாமானியர்களில் இருந்து வருபவர்கள்தானே அரசியல்வாதிகளும்!)- தன் குடும்பம் அல்லது மிகநெருக்கடியான கால கட்டங்களில் தான் மட்டும் வாழ்ந்தா போதும் என்ற பொதுபுத்தியே இங்க அதிகமா இருக்கு.

         இப்படம் சத்யஜித்ராய் இயக்கிய படங்களிலேயே மிகவும் இருண்மையான ஸினிக்கலான படமென்று அறியப்படுவது.இதை வேறொரு வகையில் குறிப்பிடலாமென்றால் இது மேல்பூச்சற்ற பாசாங்கில்லாத அப்பட்டமாக சமூகத்தை காட்டும் ஒரு திரைப்படம்.
    படம் வந்த எழுபதுகளில் நிலவிய வேலையில்லா திண்டாட்டம்-கடும் வறுமை- கடும் மின்வெட்டு- அதனால் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் வேலையிழந்தோர் இதனால் எழுந்த நக்சல்வாதம்(இது குறிப்பாக வங்காளத்தை அதிகம் பாதித்தது) இதெல்லாம் போதாதென்று  'அம்மையார்' அமல்படுத்திய அவசரநிலை என்று தொடர்ந்து மக்களின் மென்னியை மூச்சுத்திணற அழுத்தி பிடித்திருந்த காலம்.
         படத்தின் துவக்க காட்சியிலேயே ஒரு பரீட்சை நடக்கும் அறை காட்டப்படுகிறது.சகட்டு மேனிக்கு பிட் அடித்தும் காப்பியடித்தும் மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.ஆசிரியரின் மேற்பார்வையில்!!!(இப்போதும் பல வட மாநிலங்களில் இவை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது)
சுகுமார் 

    பிறகு பரீட்சை பேப்பர் திருத்தும் ஆசிரியரின் வீடு  காட்டப்படுகிறது. தன் அறையில் அமர்ந்து பேப்பர் திருத்துகிறார்.ஒரு மாணவன் பொடி எழுத்தாக விடைகள் எழுதியிருக்க தன் அண்டை வீட்டு நண்பரிடம் கண் கண்ணாடி வாங்கி வர சொல்கிறார்(தன் கண்ணாடி பவரின் போதாமை).அவர் எங்கோ வெளியே சென்றுவிட்டதாக சொல்ல ஏதோ கண் தெரிந்தவரை திருத்துகிறார்.அதிக மார்க் பெற வேண்டிய அந்த மாணவன் ஏதோ ஒரு மார்க் எடுத்து சுமாராக பாஸ் ஆகிறான்.அவன்தான் சோம்நாத்.அந்த பரீட்சை பேப்பரில் பொடி எழுத்தாக எழுதியவன் சோம்நாத்தான் என்பதை பிறகொரு காட்சியில் உணர்த்தியிருப்பார் இயக்குனர்!*

      
     சோம்நாத்தின் தந்தை ”மறு மதிப்பீட்டுக்கு விடைத்தாளை அனுப்பலாம்” என்கிறார் அவர்.சோம்நாத் மறுக்கிறான்.அப்படியே கோல்ட் மெடல் வாங்கினாலும் என்ன பயன் என்று நினைத்திருக்கலாம்!பிறகு வேலை தேடல்!

     உண்மையில் இந்த வேலை தேடல் காட்சி மிக intense ஆக காட்டப்படுகிறது.நாட்கள்-மாதங்கள் நகர்வதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கும் காட்சியாக திரும்ப திரும்ப காட்டப்படுகிறது.கடும் வெயில்!கூட்ட நெரிசல்!வேலை இல்லை!அப்படியே நேர்முகத்திற்கு சென்றாலும் செய்யப்போகும் வேலைக்கு சம்மந்தமில்லாத கேள்விகள் சோம்நாத்தை எரிச்சலூட்டுகின்றன.
    பிறகு தனக்கு தெரிந்த பிஷு என்பவர் உதவியோடு ஒரு ஏஜன்ட் போல செயல்பட ஆரம்பிக்கிறான். அப்படி ஒருமுறை ஆர்டர் விலையை quote செய்து எழுதி காட்டும்போது அலுவலர் “என்ன எழுத்து இவ்வளவு சின்னதா இருக்கு” என்கிறார்*

பிஷு


    ஒரு அலுவலகத்திற்கு தேவையான பேப்பர் கார்பன் பேப்பர் டைப் ரைட்டர் ரிப்பன் மாதிரியான ஸ்டேஷனரி பொருட்களை இவன் கடையில் வாங்கி அவர்களுக்கு தருவது!இடையில் இவனுக்கு கமிஷன் கிடைக்கும்.அலுவலகத்தில் இந்த ஆர்டர் எடுக்கும் நபருக்கும் கமிஷன் கிடைக்கும்.ஒருமுறை இப்படி பேப்பர் வாங்கும் கடையில் தனக்கு இந்த ஆபீசில் ஆர்டர் கிடைத்திருப்பதாக ஆபீஸ் பெயரை அந்த ஸ்டேஷனரி முதலாளியிடம் சொல்ல அவர் இவனை ஓவர்டேக் செய்து நேரடியாக அந்த அலுவலகத்தில் ஆர்டர் பெற்று இவரே சப்ளை செய்துவிடுகிறார்.                    
                     உண்மையில் இது சோம்நாத்துக்கு பிறகுதான் தெரிய வருகிறது.பிஷு “நான் ராக்கெட்டை லான்ச் மட்டும்தான் செய்யமுடியும்.மேலே செல்வது உன்பாடு” என்று அத்தோடு அவன் போக்கில் விட்டுவிடுகிறார்.
    சோம்நாத் ஆரம்பத்தில் மிக வெள்ளந்தி போலவே இருக்கிறான்.பிரிட்டிஷ் கால வீடு ஒன்று தரைமட்டமாக்கப்படும் தகவலை ஒரு ப்ரோக்கரிடம்(அவர் இடிக்கப்படும் வீட்டின் சாமான்களை பெற்று ஏலமிட்டு சம்பாதிப்பவர்) சொல்ல அவர் அந்த தகவலுக்கு பணம் தருகிறார்.சோம்நாத் அதை எண்ணாமல் வாங்கி பையில் வைக்க “பணம் வாங்கும் போதும் குடுக்கும் போதும் சரியாக உள்ளதா என எண்ணி பாக்கணும்.இப்ப ரூபா குறைஞ்சதை நாளைக்கு கண்டுபிடிச்சா நீ என்கிட்டே வந்து எப்படி கேப்ப?” என்கிறார்.
சோம்நாத் 

   இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சூதுவாது புரிய ஆரம்பிக்கிறது.அறவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்படுகிறது.அப்போதும் அவன் தன் இயல்பான இளைஞர்களுக்கே உரிய விளையாட்டு தன்மையோடே இருக்கிறான்.
   பிறகு ஒரு டெக்ஸ்டைல் கம்பனியில் துணிகளை வெண்மையாக்கும் ஒரு ஒய்ட்டனர் ஆர்டரை பெற அவன் தன்னிடம் மிச்சமிருக்கும் கொஞ்சநஞ்ச அறவுணர்வையும் மொத்தமாக இழக்கிறான்.
    சோம்நாத் காதலித்த பெண் நல்ல வேலையில் இருக்கும் ஒருவனை திருமணம் செய்துகொள்வது ஒருபுறம்; இன்னொரு புறம் அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கும் முனைப்போடு அவன் தந்தையோடு ஒருவர் பேசுவது போன்றவை அவன் மனதில் பாதிப்பை உண்டாக்குகிறது.
  இருந்தாலும் சோம்நாத் தனது அண்ணியிடம் ஒரு நல்ல நட்பில் இருக்கிறான்.வழக்கமாக திரைப்படங்களில் அண்ணியை தாய் என்று ஒருபுறம் சொல்லிட்டு இன்னொருபுறம் தான் காதலிக்கும் பெண்ணை கவர அவரிடமே ஐடியா கேட்பது மாதிரியான அபத்தங்கள் இப்படத்தில் இல்லை.

   அண்ணியிடம் எருமை வயசாகும் ஹீரோ “சீ போங்கண்ணி” என்று தனது காதலி பற்றியோ திருமணம் பற்றியோ கேட்கப்படும்போது குழந்தை லெவலுக்கு மாறி செய்யும் அபத்த கூத்துக்கள் இதில் இல்லை.ஒரு அற்புதமான இயல்பான நட்பு இருக்கிறது.
     .
  சுதந்திர போராட்ட தியாகியாக இருக்கும் சோம்நாத்தின் தந்தை, சோம்நாத் மற்றும் அவனது அண்ணன் போம்போல் ஆகியோர் சமூகத்தில் பரவலாக இயல்பான விஷயமாகிவிட்ட லஞ்சம் பற்றி பேசும் போது அதிர்ந்து போகிறார்.அவரால் இதையெல்லாம் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை!ஒரு வேலைக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பிப்பதை அவரால் கற்பனை செய்ய முடியவில்லை!அவர் காலம் என்பது வேறு!

   சுதந்திர போராட்ட காலத்தில் எதிரி வெளியில்!இப்போதோ உள்ளே!மேலும் நக்சலைட்டுகளாக மாறி உயிரை விடுவதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.'ஏதேனும் வலுவான கொள்கை இல்லாமலேயே எப்படி இவர்களால் சாக முடிகிறது?' என்று வியக்கிறார்.

சோம்நாத்தின் தந்தை 


                 ஆனால் சோம்நாத்தின் அண்ணி கமலா  இவை அனைத்தும் புரிந்தவராகவே இருக்கிறார்.தான் ஒரு மிடில் மேன் ஆகிவிட்டதை அண்ணியிடம் விரக்தியாக சொல்ல அப்போதும் அவர் சோம்நாத்திடம் “இதில் தவறு எதுவும் இல்லை” என்றே சொல்கிறார்.

    சோம்நாத்தின் நண்பன் சுகுமாரின் குடும்பம் வறுமையில் உழல்கிறது.சுகுமாரின் தங்கை கௌனா  நாடகத்தில் நடித்து சம்பாதிப்பதாக சொல்லி வைத்திருக்கிறாள்.சோம்நாத்தின் நண்பன் வைரஸ் காய்ச்சலால் படுத்த படுக்கையாக இருக்கிறான்(அவனுக்கும் வேலையில்லை).தான் உடை மாற்றும்போது தெரு ஜன்னல் திறந்திருப்பதையோ அதுவழியாக சில இளைஞர்கள் பார்ப்பது பற்றிய பிரக்ஞை கூட இல்லாதவளாக கௌனா இருப்பது சுகுமாருக்கு  அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

   உண்மையில் அந்த துணி ஒய்ட்டனர் ஆர்டர் பெற அந்த முதலாளியை “சந்தோஷப்படுத்த” வேண்டும்.அதற்காக சோம்நாத் தனக்கு பரிச்சயமான ஒரு ஆசாமி(டிடக்டிவ் வேலை செய்வதாக சொல்லும் பிம்ப்) யோடு ஒவ்வொரு பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கும் செல்வதாக காட்சிகள் வருகிறது.

   ஒரு பெண்ணின் கணவன் குடிகாரன்.அவனே மனைவியை தொழிலுக்கு அனுப்புகிறான்.ஒரு தாய் தனது மகள்களை வைத்து தொழில் செய்கிறாள்.இறுதியாக இந்த நாடக கம்பனி போர்வையில் விபச்சாரம்.அதில்தான் சுகுமாரின்  தங்கை கௌனா ஜூதிகா என்ற பேரில்    இருக்கிறாள்.பணம் தந்துவிடுகிறேன்.நீ போய்விடு என்கிறான் சோம்நாத்.ஆனால் வெறுமனே பணம் வாங்க முடியாது.என்னை ஹோட்டலில் கொண்டு விடு என்கிறாள் அவள்.அவளிடம் எந்த தடுமாற்றமும் இல்லை.இந்தமாதிரியான அறநெறி ஊசலாட்டங்களை எப்போதோ அவள் அழித்துவிட்டாள்.ஆனால் சோம்நாத் அப்படியல்ல.கடும் தடுமாற்றத்திற்கு பிறகு அவளை கம்பனி முதலாளி இருக்கும் ஹோட்டல் அறையில் விட்டுவிட்டு வெளியே செல்கிறான்.
கௌனா 

 பிறகு வீட்டுக்கு செல்லும் அவன் ஆர்டர் கிடைச்சிடுச்சு என்கிறான்!  கமலாவுக்கு  இதன் தீவிரம் விளங்குவதாக(சோம்நாத்திடமிருந்து பல ஆயிரம் மைல் விலகி செல்வதாக அவர் முகபாவம் காட்டப்படுகிறது)
கமலா 


             படம் முடிகிறது.உண்மையில் சோம்நாத் இந்த ஆர்டர் கிடைத்ததால் மகிழ்ச்சி பெற்றவனாக இல்லை.குற்றவுணர்ச்சி கொண்டவனாகவே இருக்கிறான்.ஆனால் அந்த குற்றவுணர்வு எத்தனை காலம் நீடிக்கும்?சமூகம் அதை அவனிடத்தில் இருக்க அனுமதிக்குமா?அந்த குற்றவுணர்வை அவன் நீடிக்க செய்தால் அந்த ப்ரோக்கர் பணியையே விட வேண்டியிருக்கும்.அதுமட்டுமல்ல வேறு எந்த பணிக்குமே செல்லவிடாமல் தடுக்கும்!

   அறவுணர்ச்சி-நேர்மை-ஒழுக்கம் etc..etc.. வழக்கொழிந்த சமூகத்தில் தான் மட்டும் இவற்றை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா?அவனது தந்தை வாழ்ந்த ஒரு வாழ்வை இவனால் வாழமுடியுமா?
   உண்மையில் சோம்நாத் இனி இதுபோல பல ஆர்டர்களை பெற முடியும்.திருமணம் செய்துகொள்ள முடியும்.பிள்ளைகள் பெற்றுக்கொள்ள முடியும்.அவர்களை இருப்பதிலேயே சிறந்த பள்ளி-கல்லூரிக்கு அனுப்ப முடியும்!அந்த பிள்ளைகளுக்கு அறவுணர்ச்சி “தொல்லை” மட்டும்  இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதும்(பரிணாம வளர்ச்சியில் அவர்கள் அதுமாதிரியான எக்ஸ்ட்ரா பிட்டிங் எதுவுமே இல்லாமல் பிறப்பார்கள் என்பது வேறு விஷயம்).அவர்களும் சமூகத்தில் “கவுரவ” வாழ்க்கை வாழ்ந்துவிட  முடியும்!
            இன்றைய சூழலில் எழுபதுகளில் வந்த இப்படத்தை பார்க்கையில் அப்போது சோம்நாத்த்துக்கு குறைந்தபட்ச நன்னெறிகளாவது  ஆரம்பத்தில் மிஞ்சியிருப்பது வியப்பளிக்கிறது!இப்படம் வந்த காலகட்டத்தை காட்டிலும் இப்போது இது கூடுதல் relevant ஆக உள்ளது! "இந்த பிரச்சனைக்கு எல்லாம் என்ன தீர்வுன்னா..." என்று ப்ளேடு போடாததே அதற்கு காரணம்!அத்தகைய தீர்வுகள் எத்தகைய பெரும் படைப்பையும் மலினமாக்கிவிடும்(சினிமாவிலும் சரி இலக்கியத்திலும் சரி)!காலம் செல்ல செல்ல இப்படத்தின் relevance அதிகரிக்கவே செய்யும்!

     

Tuesday, 26 February 2019

Double Bill- Andhadhun & சீதக்காதி



சீதக்காதி 
இந்த ஒன்லைன் சொல்லும்போதும் கேக்கும்போதும் “அட!ரொம்ப வித்தியாசமா இருக்கே” ங்கிற எண்ணம் கண்டிப்பா பெரும்பாலோனோருக்கு வரும்.அப்படித்தான் விஜய் சேதுபதிக்கும் வர நடிக்க சம்மதித்திருக்கிறார்  என்பது தெளிவாவே தெரியுது.உண்மையில் இந்தப்படம் மட்டுமல்ல பட படங்களின் கதைகளை இயக்குனர்கள் சொல்லும்போது அற்புதமா இருந்து கடைசில பைனல் கட் பாக்க சொல்ல “நீ என்ன சொன்ன?என்னத்த எடுத்து வச்சிருக்க?” என்று ஹீரோ மனகண்ணில் இயக்குனரை மவுன்ட் ரோடில் ஓட ஓட அடித்து இழுத்து சென்றிருப்பார்கள்!

      உண்மையில் இந்தப்படம் அய்யா என்ற வயதான நாடக நடிகரை சுற்றியே நிகழுது.படத்தின் அஸ்திவாரமே அதான்!அது எவ்வளவு வலுவா பார்வையாளனை துளைக்கும்படி இருக்கணும்?ஆனா இந்த படத்துல அய்யாவின் பயணம் கால வரிசைப்படி காட்டப்படுது.ஐம்பதுகள் தொடங்கி 2013 வரை..கொஞ்சம் கொஞ்சமா மேடை நாடக கலாச்சாரம் மங்கி மறைந்து போய் ஏதோ கடமைக்கு பத்து பேரு உக்காந்து நாடகம் பார்ப்பதாக தற்காலத்தில் காட்டப்படுது.சரி அது பிரச்சனையில்லை.
    அப்போ என்ன பிரச்சனை?விஜய் சேதுபதி தான்!முதலில் இந்த அய்யா கேரக்டர் கமல் நடிப்பதாக இருந்ததாவும் அவர் ஏதோ காரணத்தால் மறுத்துவிட விஜய் சேதுபதி இதை செய்ததாவும் சொல்லப்படுது.உண்மையில் கமலே இதை செய்திருந்தாலும் சரியா வந்திருக்குமான்னு தெரியல.கமல் பெரும்பாலும்(விதிவிலக்குகளும் உண்டு)  கமல் என்ற பிரக்ஞையிலேயே நடிப்பவர் என்பதால் இந்த அய்யா கேரக்டரிலும் தனது அதிமேதாவித்தனம் மிளிரும்(??)வசனங்கள் எதையாச்சும் வச்சிருப்பார்.இதான் சாக்குன்னு செலக்டிவ் நாத்திகம் பேசி தள்ளியிருப்பார்(யப்பா தசாவதாரம் படத்துல கோவிந்த் பேசுன செலக்டிவ் நாத்திக  பாதிப்புலேர்ந்தே இன்னும் வெளிய வர மிடில-கும்மாங்கோ)


இதுல வி.சே வை நொந்து பயனில்லை.அவர் கதைய கேக்குறாரு.அதுவும் கமலுக்காக இருந்த கதை +அவருக்கு மக்கள் மத்தில இருக்கும் நல்ல பேர(உண்மையில் நடிக்கும் திறனுக்கும் இதுக்கும் என்ன தொடர்புன்னு எனக்கு விலங்கல-உதயா) மேலும் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ள ஒரு கேரக்டர்ன்னதும் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்று தெரியுது.அவர் அவரால் முடிஞ்சதை செய்துதான் இருக்கிறார்.இருந்தாலும் அந்த அய்யா கேரக்டருக்கு இது பத்தாது.கமலே பத்த மாட்டார்!வேற யாரு?
      செந்தமிழை(செந்தமிழ்ல இருக்கும் ழ் ஏ 90% தமிழர்களுக்கு உச்சரிக்க வராது) சரியான ஏற்ற  இறக்கத்தோடு பேசுவதோடு உடல்மொழியும் அதோடு 100% பொருந்தி வரும் ஒரு நடிகரை அய்யா கதாபாத்திரம் கோருகிறது.ஆனால் வி.சே வுக்கு சாதாரண தமிழே பேச வராது.எப்பவுமே மெட்ராஸ் பாஷதான்!அவர் வடசென்னை பகுதியை சார்ந்த கேரக்டரா இருந்தாலும் சரி(இப்ப வடசென்னை மீட்பு சீசன் போயிட்டு இருப்பதால் எல்லா படத்துலயும் அந்த ஏரியா கேரக்டர் ஒண்ணு தப்பாம தமிழ்  படங்களில் இடம்பெறும்-உதயா) இல்ல சின்னாளப்பட்டியை  சேர்ந்த ஒரு கேரக்டர் பண்ணாலும் சரி."இன்னா?" என்றுதான் ஆரம்பிப்பார்.மக்களும் விமர்சகர்களும் அதை கண்டுக்கிறது இல்ல! (முன்பே சொன்னது போல மக்களின் அபிமானத்தை பெற்றுவிட்டால் ஒரு நடிகன் நடிப்புலயும் வசன உச்சரிப்புலையும் எப்படி சொதபுனாலும் அதை பெரிதுபடுத்த மாட்டார்கள்)

   உண்மைல இதுல வி.சே வை குறைகூற முடியாது.இப்படியொரு கேரக்டர் கிடைக்குதேன்னு அவர் ஒத்துகிட்டு செய்திருக்கார்.ஆனா இந்த கேரக்டரை செய்யக்கூடிய சரியான நடிகர் ஒருவர் மட்டும்.சிவாஜி கணேசன்!செந்தமிழ் வசனத்தை  ஏற்ற இறக்கத்தோடு தெளிவாக சரியான முகபாவனையோடு வசனம் பேச அவரைவிட்டால் வேறு ஆளில்லை என்பதே உண்மை.குறிப்பா வி.சே செந்தமிழ் தட்டுதடுமாறி பேசும்போதெல்லாம் சிவாஜி நினைப்புதான்!
அதைத்தாண்டி படத்தை மூணு மணி நேரம் இழுத்தது அந்த ஷூட்டிங் காட்சியையே இருவேறு நடிகர்களை வச்சி வளத்துனது என்று பல குறைகள்.முன்னமே சொன்னது மாதிரி கதையாக யோசிச்சதை கேட்டப்போ நல்லா இருக்கும் ஒரு சப்ஜெக்ட் இது.படமாக்குவதில் பெரும் குளறுபடி!

.*******************************************************************************************************************

அந்தாதூன்.
பொதுவா ஒரு படத்தில் கண் பார்வையில்லாத/காது கேட்காத/வாய் பேசாத...அல்லது வேறு வகை உடல்/உளவியல்  குறைபாடுள்ள கேரக்டரை மூன்று template ல்  காட்டுவதே வழக்கம்.
     1.      அந்த கேரக்டர் மேல அனுதாப அலை வீச வைத்து ஆடியன்சை அழுகாச்சியில் மூழ்கடிப்பது
2.      கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ஒரு கேரக்டராக காட்டுவது.3.      சாமானியர்களை விடவும் நேர்மையானவர்களாகவும் அசாத்திய திறன் பெற்றவர்களாகவும் exaggerate செய்வது

இப்ப பொதுவா இருக்கும் “யாரையும் புண்படுத்த கூடாது” டிரெண்டில் முதல் மற்றும் மூன்றாம்  வகை கேரக்டர்களே திரையை நிறைக்கின்றன.இது உடல் குறைபாடுள்ள கேரக்டர்களுக்கு மட்டுமல்லாமல் வேற மதத்தை குறிப்பிட்ட சில சாதிகளை சார்ந்த கேரக்டர்கள்கூட kid Galahad எனுமளவுக்கு நன்மையின் உண்மையின் நேர்மையின் சின்னமாக காட்டி ‘பொக்குதே!’ன்னு ஆடியன்ஸ் அழாத குறைக்கு தள்ளிவிடுகிறார்கள்.

    அந்தாதூன் படம் அப்படி மூணு  வகைலையும் வராதது பெரும் ஆறுதல்!இதுல கண் பார்வை தெரியாத ஆகாஷ் (ஆயுஷ்மான் குரானா) மீது மேற்சொன்ன மூன்று  அணுகுமுறைகளும் இல்லாமல் புது மாதிரியாக காட்டியுள்ளனர் .ஒருவகையில் இது ப்ளாக் காமெடி படம் என்பதால் இது சாத்தியமாகியுள்ளது.ஆனா நம்மூரு ப்ளாக் காமெடி படங்கள்ல கூட அனுதாப அலைகளை காண முடியும்.
   நல்லவன் கெட்டவன் வரைமுறைகளுக்கு உட்படாத கேரக்டர்களே படத்தை மேலும் சுவாரசியமாக்கும்.100% மசாலா படங்களில் அது சாத்தியமே இல்லை என்றாலும் இடைநிலை சினிமா மற்றும் இடைநிலை+மசாலா படங்களில் அது சாத்தியமே.இந்த படத்தில் பெரும்பாலான கேரக்டர்கள் அந்த ரகம்.ராதிகா ஆப்தே மற்றும் அந்த பழைய நடிகர் அணில் தவான்  தவிர எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவர்களாகவே உள்ளனர்

   ஆகாஷ்  கூட கண் தெரியாத ஆசாமியாக நடித்து ஐநூறு ரூபாய்க்கு நல்ல வீடு (என்ஜிஓ மூலம்) பெற்று வாழ்கிறார்.அந்த சிறுவனும் காசுக்கு ஆசைப்பட்டு பல்வேறு சேட்டைகளை செய்கிறான்(ரகசியமா வீடியோ எடுத்து வச்சிக்கிட்டு அதை பார்க்க ஐம்பது ரூபாய் வசூலிப்பது).அந்த உறுப்பு திருடும் டாக்டர் மற்றும் அவருக்கு உதவும் அந்த லாட்டரி விற்கும் பெண் மற்றும் அவளுக்கு துணையா வரும் ஆசாமி எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்தான்!
             உண்மையில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.ஆனா போகப்போக விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது.குறிப்பா ஆயுஷ்மான் கண் தெரியாதவன் மாதிரி நடிக்கிறவன் என்று தெரிந்ததுமே சுவாரசியம் கூடிடுது.அதுக்கப்புறம் அந்த பாடியை டிஸ்போஸ் செய்யும் சமயத்தில் இவன் விடாமல் பியானோ வாசிக்க எப்ப ஒழிவான்?என்று தபு எதிர்பார்க்க கிடைக்கும் ஒரு சின்ன கேப்பில் கணவன் வந்துவிட்டதாவும் அவனது பியானோ இசை கேட்டு கைதட்டி பாராட்டுவதாகவும் ஏற்கெனவே எடுத்த வீடியோ பதிவ்ளிருந்து ஆடியோவை ப்ளூடூத் ஸ்பீக்கர்ல போட்டு அவனை வெளிய அனுப்புறதும்,அப்புறம்  அந்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணை மாடியில் இருந்து தள்ளி விடும் நேரத்தில் ஒலிக்கும் பீத்தோவன் 5th ம் அட்டகாசம்!
A Fifth of Beethoven :D 

          அதுபோல ராதிகா ஆப்தே ஆயுஷ்மான் காட்சிகளில் காமெடி நல்லாவே ஒர்க்கவுட் ஆகியிருக்கு.பிறகு அவரை அம்போவென விட்டுட்டாலும் ஆயுஷ்மானை தேடி அவன் வீட்டுக்கு வரும்போது தபு ஏடாகூடமா நின்னுகிட்டு இருக்கும்போது டென்சன் ஆகி கத்திட்டு போவது பட ஆரம்பத்தில் கோபத்தோடு வண்டி ஓட்டும் காட்சிகளில் அவர் சரியாகவே பொருந்துகிறார்.

                சில சின்ன சின்ன விஷயங்கள் கவனித்து செய்துள்ளார் இயக்குனர்.உதாரணமாக ஒரு காலத்தில் தான் ஹீரோவாக நடித்து பிறகு மார்க்கெட்டே இல்லாமல் போன பிரமோத் சின்ஹா(அணில் தவான்)  யூட்யூபில் தனது பட பாடல்கள் காட்சிகளுக்கு வரும் கமண்டுகளுக்கு லைக் போட்டு நன்றி தெரிவிக்கும் காட்சியை சொல்லலாம்.அப்புறம் லாட்டரி விற்கும் சக்கு பார்வையற்ற ஆகாஷை ஒரு லாட்டரி சீட்டை தொட சொல்லி பக்கத்தில் உக்காந்திருக்கும் நபரிடம் “பார்வையற்றவர்கள் ஆனடவனின் ஆசி பெற்றவர்கள்.அவர்கள் தேர்ந்தெடுக்கும் சீட்டு நிச்சயம் பரிசு பெறும்”என்று சொல்லி நூறு ரூபாய் சம்பாதிப்பது,ஆயுஷ்மான் உண்மையில் குருடன்தானா இல்லையா?என்று போலீஸ் அதிகாரியும்  தபுவும் வெவ்வேறு தருணங்களில் சோதிக்கும் காட்சி ரணகளம்! படத்தின் இறுதியில் தான் கண் தானம் பெறவில்லை என்பதுமாதிரி காட்டிட்டு கடைசில அந்த கோக் டின்னை உதைப்பதோடு முடிப்பது இன்னொரு உதாரணம்! சமீபத்தில் ரசித்து பார்த்த(இப்படி சொல்ல வைக்கும் படங்களே அரிதாகிவிட்ட நிலையில்) படங்களுள் ஒன்று!



Sunday, 13 January 2019

Catch Me If You Can- Frank Abagnale Jr,Stan Redding


                 Catch  Me if you can படம் பார்த்தவர்களுக்கு பிரான்க் ஆபக்நேல்  யாருன்னு சொல்ல வேண்டிய அவசியமில்லை பைலட்டாக,டாக்டராக,வக்கீலாக,ஆசிரியராக  வேடம் போட்டும் போலி செக் வழங்கியும்  பல மில்லியன் டாலர் பணம் ஏமாற்றி சம்பாதித்தவர்.

             விமானத்தில்  ஜம்ப் சீட் என்ற ஒரு இருக்கை உண்டு.வேறு விமான நிறுவனத்தில் வேலை செய்வோர் தனது நிறுவன விமானம் இயங்கும் ஏர்போர்டுக்கு செல்ல இதை பயன்படுத்துவதுண்டு.அதில் இவர் பயணம் செய்கிறார்.காக்பிட் அருகிலேயே இந்த இருக்கை இருப்பதால் விமான பைலட்(அசல்) இவரிடம் பேச்சு கொடுப்பது நிறுவனம் குறித்த கேள்விகள் என்று சம்பிரதாயமாக பேசிவிட்டு பிறகு விமானம் ஓட்டுவதில் கவனம் செலுத்த துவங்கி விடுவதாக கூறுகிறார் பிரான்க்.
ஆனால் இப்படி பைலட் வேடம் போட FAA லைசன்ஸ் மற்றும் PanAm நிறுவன அடையாள அட்டை இரண்டும் தேவைப்படுகிறது.

                அடையாள அட்டை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றிற்கு பகட்டாக சூட் அணிந்துகொண்டு செல்லும் பிரான்க் தான் கரீப் ஏர்லைன்ஸ்ல் இருந்து வருவதாகவும் தனது நிறுவன ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு சில மாடல்கள காண விரும்புவதாகவும் தெரிவிக்கிறார்.அந்த நபரும் பல்வேறு விமான நிறுவனங்களின் அடையாள அட்டைகளை தனது நிறுவனம்தான் வடிவமைத்து கொடுத்ததாக சொல்ல "அந்த மாடல்களை காட்ட முடியுமா?" என்று பிரான்க் கேட்க அதில் குறிப்பாக  PanAm நிறுவன மாதிரி அட்டையை வாங்கிக்கொண்டு திரும்ப அழைப்பதாக சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.
                    பிறகு அந்த மாதிரி அட்டையில் தனது பெயர், போலியான பணியாளர் எண் உள்ளிட்ட தகவல்களை டைப் செய்துகொள்கிறார்.ஆனால் அதில் PanAm logo இல்லை.சின்ன மாதிரி PanAm விமானம்  ஒன்றை வாங்கி அதில் இருக்கும் லோகோவை ரசாயனத்தில் ஊற வைத்து வெளியே எடுத்து அந்த அடையாள அட்டையில் ஓட்டுகிறார்.இத்தனைக்கும் அது லேமினேட் செய்யப்பட்ட அட்டை மீதே ஒட்டியதாகவும் கடைசி வரை அதை யாருமே கண்டுபிடிக்கல என்றும் கூறுகிறார்.
அசல் பிரான்க் 

                 பிறகு இந்த வேடம் அலுத்துவிட அடுத்து டாக்டர் வேடம் அடுத்து அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் உதவியாளர் வேடம் இடையில் சம்மர் கோர்ஸ் எடுக்கும் ஆசிரியர் பணி என்று பலவாறான வேடங்கள் தரித்து பணம் சம்பாதிக்கிறார்.பணம் சம்பாதிப்பது என்பதை அவர் பிரதானமாக கொள்ளவில்லை.பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்து விட்டாலும் அதுக்கு மேலையும் ஏமாற்று வேலைகளை தொடர்கிறார்.அது ஒருவகையில் அவரது passionமாதிரி!
           ஆனால் இப்படியெல்லாம் ஏமாற்றினாலும் பிரான்க் அடிப்படையில் குரூரமான மனிதரெல்லாம் இல்லை.போலி செக் தயாரித்து பல நூறு வங்கிகளில் அதை ரொக்கமாக்கினாலும் காப்பீடு செய்யாத சிறு வியாபாரம் செய்யும் கடைகள் போன்றவைகளில் அவர் ஏமாற்றுவதில்லை.பெரிய கார்பரேட்களையே  அவர் ஏமாற்றியுள்ளார்.
       அது மட்டுமில்லாமல் இப்படி ஒவ்வொரு துறை சார்ந்தவனாக வேடம் போட்ட போதெல்லாம் அந்த துறை சார்ந்த அறிவை பெற பிரான்க் தயங்கியதில்லை.இன்னும் சொல்லப்போனால் அந்த துறையில் மேலோட்டமான அறிவோடு இயங்கும் பலரை விடவும் இவர் அதிகம் கற்றவராக இருந்திருக்கிறார்!!

                   அதே போல மருத்துவர் வேடம் போடும்போது குழந்தைகள் மருத்துவனமையில் சூப்பர்வைசிங் டாக்டர் பணியில் இருக்கிறார்.அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள்  கொண்டுவரப்படும்போதெல்லாம்  இவர் அங்கெ intern ஆக இருக்கும் டாக்டர்களையே அதை கவனிக்க சொன்னதாகவும் அதனாலேயே தனக்கு அங்கே பெரும் மரியாதை இருந்ததாகவும் சொல்கிறார்.அதேபோல ஒருநாள் ஆக்சிஜன் பற்றாக்குறை கொண்ட குழந்தை(blue baby) ஒன்றை இவர் சிகிச்சை அளிக்க நேரிட அதிர்ந்து போய் இனிமேலும் இங்கே நாம் ஏமாற்ற கூடாது என்று வெளியேறுகிறார்.
        பிறகு செக் மோசடிகள்.நம்மூர்ல செக்கை பேங்க்ல மட்டும்தான் ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.ஆனா அமேரிக்கால கடைகளிலும்  ஓட்டல்களிலும் மாற்றிக்கொள்ளலாம்.அதை பயன்படுத்திக்கொள்கிறார் பிரான்க்.PanAm நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட செக் போல தயாரித்து ஆங்காங்கே ரொக்கமாக்கி கொள்கிறார்.அப்படி பல மில்லியன் டாலர் பணத்தை ஆங்காங்கே பதுக்கி வைக்கிறார்.ஊருக்கொரு GF என்று வசதியாக வாழ்திருக்கிறார் :P.அவர்களிடம் விலையுயர்ந்த  உடைகள் ரொக்கம் போன்றவற்றை கொடுத்து வைக்கிறார். 

         பைலட் வேஷம் போட்டுக்கொண்டு தனியாக ஏர்போர்ட்டுக்கு போனால் ஒருத்தர் விடாமல் உங்கள் crew எங்கே? என்று கேட்பதை உணர்ந்து விமான பணிப்பெண் பயிற்சி அளிக்கும் ஒரு நிறுவனத்துக்கு சென்று அங்கிருந்து தேர்வு செய்து சில பெண்களை அழைத்துக்கொண்டு(அவர்களுக்கு பணிப்பெண் சீருடை போலி அடையாள அட்டை சகிதம்) தன் சொந்த செலவில் ஒவ்வொரு ஊர் விமான நிலையத்துக்கும் சென்று வருகிறார்.

               பிறகு ஒருகட்டத்தில் மாட்டிக்கொள்கிறார்.பாஸ்டன் லாக்கப்ல வைக்கப்படுபவர் பிறகு ஜாமீன் பெற்று தப்பிக்கிறார்.ஓரைலி தப்பிக்க விட்ட சிறை அதிகாரிகளை நொந்து கொள்கிறார்.
 பிறகு பிரான்ஸ்ல் ஒரு காட்டேஜ் எடுத்து தங்குகிறார்.'இனி இங்கேதான் நமது வாழ்க்கை.இனி மோசடிகள் வேண்டாம்' என்ற முடிவுக்கு வருகிறார்.அப்போது அந்த ஊரில் உள்ள விமான பணிப்பெண் ப்ரான்கை பாத்துவிட்டு போலீசுக்கு தெரிவிக்கிறார்.கைது-நீதிமன்றம்-ஒரு வருட சிறை தண்டனை.
        ஆமா ஒரு வருஷம்தான? என்று கேட்டால் அது சாதாரண சிறை தண்டனை அல்ல.ஐந்தடி நீளம் ஐந்தடி அகலம் ஐந்தடி உயரம் கொண்ட ஸ்டீல் மற்றும் கான்க்ரீட்டால் செய்த ஒரு coffin மாதிரிதான்.ஒரு பொட்டு வெளிச்சம் உள்ளே நுழைய முடியாது.நிர்வாணமாக உள்ளே தள்ளப்பட்டு கதவு மூடப்படுகிறது.கண்கள் இருட்டுக்கு பழகிவிடும் என்று காத்திருக்கிறார்.ஒரு மணி நேரம் ஆகியும்..ம்...ஹ்ம்ம்...முழு இருட்டுக்கு கண்கள் எப்போதும் பழகிக்கொள்ளாது என்கிறார்.இவரோ ஆறடி உயரம் இரநூறு பவுண்ட் எடை கொண்டவர்.இவரைப்போய் ஐந்தடி நீளம்-அகலம்-உயர சிறை(சவப்பெட்டின்னு தான் சொல்லணும்) வச்சா என்னாகும்?நிமிர்ந்து நிற்க முடியாது.சுருண்டுதான் படுக்க வேண்டும்.எங்கோ உள்ள சிறு துளை வழியாக மூச்சுவிடுவதற்காக காற்று மட்டும் உள்ளே அனுப்பட்டதாக சொல்கிறார்.அப்புறம் ஒரே ஒரு பக்கெட்.மலம் மூத்திரம் எல்லாத்துக்கும் அதுதான்.கழுவ துடைக்க எதுவும் கிடையாது.
        மூன்று வேளையும் ரொட்டி.குடிக்க கொஞ்சம் தண்ணீர்.ரொட்டி தட்டில் எல்லாம் கொடுக்கப்படாமல் சிறையின் தரையிலேயே வீசப்படும்.அந்த பக்கெட் முழுதும் மலம் மூத்திரம் நிரம்பி வழிந்து சிறையின் தரை முழுக்க பரவுகிறது.கடுமையான நாற்றம்.மூக்கு அதற்கு கொஞ்சம் பழகிவிட்டாலும் வேறொரு பிரச்சனை.புழுக்கள் தரை முழுக்க நெளிய ஆரம்பிக்கிறது.தாடி,தலைமுடி எல்லாம் ஜடாமுடி லெவலுக்கு வளர்ந்துவிட உடம்பு முழுக்க பேன் பிற பூச்சிகள் புழுக்கள் உடலை தின்ன ஆரம்பிக்கின்றன.
         எப்போதாவது ஒருமுறை மல பக்கெட் காலி செய்யப்பட்டு திரும்ப வைக்கப்படும்.அதைவிட அரிதாக எப்போதாவது சிறைக்கதவு திறக்கப்பட்டு தரையில் தண்ணீர் பீய்ச்சியடிக்கபடும்.அந்த இடைவெளியில் தானும் சிறை அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி அந்த பீய்ச்சப்படும் தண்ணீரில் உடலை கொஞ்சம் சுத்தப்படுத்திக்கொண்டதாக சொல்கிறார்.
இங்கே இதே மாதிரி this blinding abscence of light நாவலை நினைவூட்ட வேண்டும்.(நன்றி:முனியாண்டி).அதிலும் இதே மாதிரி ஐந்துக்கு ஐந்து சவப்பெட்டி சிறையில் பனிரெண்டு வருடங்கள் இருந்து பிழைத்து மீண்டு வந்தவர்கள் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட நாவலது.

          இந்த மலம் மூத்திரத்தை சுத்தம் செய்வதும் இன்னொரு கைதி.பக்கத்து “சவப்பெட்டி” சிறையில் இருப்பவராக இருக்கக்கூடும்.அவரும் எலும்பும் தோலுமாகத்தான் இருக்கிறார்.ஒரு வருடம்!ஒரு வருடம்!கத்துகிறார்.கதவை உதைக்கிறார்- பாடுகிறார்- கற்பனையில் விமானம் ஓட்டுகிறார்- ஓட்டலில் இளம்  பெண்களோடு  பகட்டான உணவை சாப்பிடுகிறார்  என்னென்னெவோ செய்கிறார்.திடீரென்று ஒருநாள் கதவின் ஒரு சின்ன slot மாதிரி திறக்கப்படுகிறது.பிரான்சுக்கான அமெரிக்க தூதர்.தன்னால் எதையும் செய்ய முடியாமல் போனதை குறிப்பிடுகிறார்.பிரான்சில் கைதிகளுக்கென்று எந்த உரிமையும் இல்லை என்கிறார்.இன்னும் ஒரு மாசத்தில் உனக்கு விடுதலை என்கிறார்.பதினோரு மாசமா ஆகிப்போச்சு?என்று வியக்கிறார் பிரான்க்.பிறகு ஒருநாள் சிறைக்கதவு திறக்கப்பட்டு திரும்பி நிற்குமாறு சொல்கிறான் அதிகாரி.வெளியே சிறை வளாக வெளிச்சத்துக்கு கண்கள் பழக்கப்பட்ட பிறகு வெளியே அழைத்துவரப்படுகிறான்.சிறை அலுவலகத்தில் ஜடாமுடி எலும்பும் தோலுமாக வாயில் எச்சில் ஒழுகியபடி யாரிது?என்று வியந்து பார்த்தால் அது முகம் பார்க்கும் கண்ணாடி.பிறகு கை கால் கழுத்தில் சங்கிலி(பழைய மனோகரா பாணியில்!அடப்பாவிகளா பிரான்ஸ் நவீன தேசமா?) மாட்டப்பட்டு விமான நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.அடுத்து ஸ்வீடன் நாட்டின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

          ஸ்வீடன் சிறைத்துறை  என்பது முற்றிலும் வேறாக இருக்கிறது. அங்கே கைதிகளை நண்பன் போல நடத்துகிறார்கள்."பிரான்சு நீதித்துறை சிறைத்துறைகளுக்கு குற்றவாளிகளை திருத்த முடியும் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள்" என்று ஒரு பெண் அதிகாரி தெரிவிக்கிறார்."கைவிலங்கு கிடையாது.ஆனா நீ தப்பிக்க பாத்தா சுட்டுவிடுவோம்" என்றுமட்டும் சொல்கிறார்கள்.உண்மையில் பிரான்சில் நீதிபதியே கொஞ்சம் இரக்கம் காட்டி தண்டனையை ஆறு மாசமாக குறைத்தது பிறகுதான் ப்ரான்குக்கு தெரிய வருது.ஒரு வருடம் உள்ளே இருந்திருந்தால் ஒன்று இறந்திருப்போம் இலலாட்டி சுத்தமாக மனநலம் பாதிக்கப்பட்டு தான் யாரென்றே தெரியாத நிலைக்கு சென்றிருப்போம் என்று நினைத்துக்கொள்கிறான் பிரான்க்.
    ஸ்வீடன் சிறை என்பது அபார்ட்மென்ட் போல.சகல வசதிகளோடு!அங்கு இவருக்காக அரசே ஒரு வக்கீலை நியமிக்க அவர் வாதாடி இவருக்கு ஆறு மாசம் சிறை தண்டனை பெற்று தருகிறார்.ஆறு மாசம் சிறையில் இருக்கலாம்.இல்லாவிட்டால் பல்கலையில் சேர்ந்து படிக்கலாம்(அரசே அனைத்து வசதிகளையும் செய்து தரும்).இல்லாட்டா பாராசூட் கம்பெனியில் வேலை செய்து சம்பாதிக்கலாம்.
               அடுத்து அவன் செல்ல வேண்டியது இத்தாலி சிறை.அங்கு சிறைத்தண்டனை அனுபவித்த ஒருவன் கூறிய கதை கேட்டவுடன் இங்கிருந்து நாம் தப்பித்துவிட வேண்டும் என்று நினைக்கிறான்.ஆனால் ஒரு நீதிபதியின் உதவியால் அமெரிக்காவுக்கே  அனுப்பப்படுகிறான்.அமேரிக்கா சென்று அந்த நீதிமன்றத்தின் தண்டனையை அனுபவித்துவிட்டால் போதும்.இவனை கைது செய்ய முறை வைத்து காத்திருக்கும் பத்து நாடுகளும்(ஒவ்வொரு நாட்டிலும் இருபதாண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்).விமானம்  இறங்கும் முன்னரே அதிலிருந்து குதித்து தப்பிக்கிறான்(கமாண்டோ படத்தில் அர்னால்ட் தப்பிப்பாரே?அதே பாணி.ஒருவேளை இந்நாவலை  படித்த இயக்குனர் கமாண்டோ படத்தில் அக்காட்சியை வச்சிருப்பார் போல)


பிறகு கனடா செல்லமுயலும்போது மீண்டும் கைது மீண்டும் சிறை.அப்போது அமெரிக்க சிறையில் கைதிகளின் அடிப்படை உரிமைகள் இல்லாத நிலை குறித்து கடுமையான போராட்டங்கள் நடந்த காலம்.இவனை சிறை அதிகாரிகள் prison inspector அண்டர்கவர்ல இந்த சிறையின் நிலையை பற்றிகண்டறிய வந்திருப்பதாகவே நினைக்கிறார்கள்.
    தனது பல GF களில் ஒருவரான ஜீனை அழைத்து ஒரு திட்டம் வகுக்கிறான் பிரான்க்.அதாவது அசல்  prison inspector ஐ ஜீன் பத்திரிக்கையாள வேடத்தில் பேட்டி காண வேண்டும்.அவரிடம் விசிட்டிங் கார்ட் பெற்று அதை ப்ரான்கிடம் கொடுக்க வேண்டும்.பிறகு ஜீன் வைத்திருக்கும்  Fbi ன் ஓரைலி கார்டில் உள்ள எண்களுக்கு பதில் அட்லாண்டா ஷாப்பிங் மால் காயின் போன் எங்களை அச்சடித்து ப்ரான்கிடம்  கொடுக்க வேண்டும்.
இப்போது சிறை அதிகாரியிடம் முக்கிய குற்றவாளி ஒருவனை பிடிக்கணும்.இதுபத்தி நா ஒரைலியை சந்திச்சி பேசணும்.நான் prison inspector என்ற உண்மையை உங்களிடம் சொன்னதை நீங்க யாரிடமும் சொல்ல கூடாது.உங்க சிறை பத்தி நா நல்லாவே ரிப்போர்ட்ல எழுதுறேன் என்று ஐஸ் வைக்க அதிகாரிகள் இவனை வெளியே அனுப்புகிறார்கள்.
     காரில் ஜீன் ஆண் போல பெரிய தொப்பி அணிந்து அமர்ந்திருக்க அதுதான் ஒரைலி என்பதுபோல பிரான்க் காருக்கு சென்று அதில் ஏறி பறக்கிறான்!
சிறையில் இருந்து கைதிகள் தப்பித்த வரலாற்றில் இது மிக மிக புதுமையான முறை என்கிறான் பிரான்க்(மைக்கேல் ச்காபீல்ட் தோற்றான் :D)
பிறகு ஒரு மோட்டலில் தங்கியிருக்கும்போது ஒரு பெண் போலீசுக்கு தெரிவித்துவிட இவன் மோட்டலில் இருந்து வேகமாக வெளியேறுகிறான்.freeze என்று போலீசு துப்பாக்கி முனையில் மிரட்ட அதற்கு அஞ்சாமல் நடந்துகொண்டே “நான்தான் ஒரைலி!வழி விடுங்க” என்றபடி இருட்டில் நழுவுகிறான்.அத்தோடு நாவல் முடிகிறது!
நிற்க மேற்குறிப்பிட்ட அத்தனை சம்பவங்களும் ப்ராங்கின் பத்தொன்பதாம் பிறந்தநாளுக்கு முன்பே முடிந்து போகிறது!அத்தனை அனுபவங்கள் அத்தனை குறுகிய காலத்தில்!
 .

       இதே பேரில் வந்த படம்!inspired from என்றுதான் டைட்டிலில் குறிப்பிடுகிறார்கள்.
        ஒரு நாவலை திரைப்படமாக்கும் போது இயக்குனருக்கு பல்வேறு சவால்கள்.குறிப்பாக நாவலை வாசிப்பவன் அதை அணுகும் முறையும் திரைப்படமாக பார்க்கும் ரசிகன் அதை அணுகும் முறையும் முற்றிலும் வேறுபட்டது.
            இந்நாவல்  ஒரு தனி மனிதனின் வாழ்க்கையின் ஒரு பகுதி பற்றியது.அதை அந்த நபரே சொல்வது போல எழுதப்பட்டது.அதையே திரைப்படமாக்கும்போது அதில் அந்த first person narrative ன் அனுகூலம் கிடைக்காது.அதே நேரத்தில் இந்த மாதிரி நாவல்களை படமாக்குவதிலும் சில சிக்கல்கள் உள்ளன.நாவலில் தன் வாழ்க்கை அனுபவத்தை சொல்லும் அந்த நபர் நேரடியாக வாசிப்பவனிடம் பேசிக்கொண்டே இருக்க  முடியும்.

               ஆனால் திரைப்படமாக ஆக்கும்போது எந்நேரமும் கேமராவை பாத்து ஒரு கேரக்டர் தனது மன ஓட்டங்களையும் அடுத்து தான் செய்யவிருப்பவை பற்றியும் பேசிக்கொண்டிருப்பதாக ஒரு வணிக சினிமாவில் காட்ட முடியாது.

              அங்கே நாவலில் சிறிது நேரமே வந்துபோகும் கேரக்டர்களை விரிவாக்கம் செய்து திரையில் காட்ட வேண்டியிருக்கும்.அப்படித்தான் நாவலில் எங்கோ ஒரு மூலையில் வந்து போய் கொண்டிருக்கும் ஓ ரைலி படத்தில் டாம் ஹேன்க்ஸ் கேரக்டராக(Carl Hanratty என்ற பெயர் மாற்றத்தோடு) கிட்டத்தட்ட  முழுப்படத்திலும் வந்து செல்பவராக நாயகனை(!!??) அவலத்தில் இருந்து மீட்டேடுப்பவராக சித்தரிக்க படுகிறார்.
அதுமட்டுமல்லாமல் பெற்றோர் விவாகரத்து குறிப்பாக தனது தாய் செல்வந்தரான ஒருவரோடு சென்றுவிட்டாள் என்பதே ப்ரான்கின் மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கி அவன் இப்படியெல்லாம் ஏமாற்று வேலை செய்வதற்கு காரணமாகிவிட்டதாக படத்தில் காட்டுகிறார்கள்.நாவலில் அதுபற்றி பிரான்க் பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை.

                       மற்றபடி பிரான்க் வடிவமைத்த பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் இன்றைக்கும் உலகெங்கும் உள்ள செக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.அவர் ஒரு security consultant ஆக இருந்து ஒய்வு பெற்றவர் .உண்மையில் அவரே தான் செய்த சாகசங்களுக்காக அல்லாமல் திருந்தி நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து ஒரு குடும்பத்தை வளர்த்தெடுத்தவராகவே அறியப்பட விரும்புகிறார் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.உண்மையில் படம் அவரது ஆசைக்கு பொருந்தி வருவது போல இருக்கிறது.படத்தை தனியே பார்த்தாலும் நாவலை வாசித்துவிட்டு பார்த்தாலும் நன்றாகவே உள்ளது.படத்தை நிறைவாக positive note ல முடிக்கும் ஸ்பீல்பர்க் touch ஐ இதிலும் காணலாம்.

Thursday, 3 January 2019

கோலிவுட் ரவுண்டப் 3.0


முதலில் நாம் சென்றது பன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சேட்ட படப்பிடிப்பு தளத்திற்கு.
வழியில் இரண்டு பவுன்சர்கள் வழிமறித்து "சேட்ட கராக்!!!" என்று சத்தமாக மூன்று முறை சொல்லவைத்து அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் உடனே அப்லோட் செய்தனர்.பணியாற்றும் தொழிலாளர்கள் டெக்னீசியன்கள் எல்லார் தலையிலும் சேட்ட கராக் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.இதையெல்லாம் ஒருவாறு தாண்டி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றோம்.
மூர்த்தி குப்புராசு கஜினியிடம் காட்சியை விவரித்து கொண்டிருந்தார்.

மூர்த்தி குப்புராசு: தலைவா இந்த படத்துல நீங்க செம கெத்தான டான்.ஊரே உங்களை பாத்து நடுங்குது.ஆனா வார்டன் ரோல்ல அமைதியா இருக்கீங்க.அப்புறம்...
கஜினி இடைமறித்து: அஜய் கேதுபதி ஒரு காலேஜ் ஸ்டூடன்ட். தான் ஒரு வளர்ந்துவரும் உதவி டைரக்டர் என்றும் அடுத்து தானே ஒரு பயங்கர தாதாவின் கதையை படமா எடுக்க போறதாவும் கேரக்டர் ஸ்டடி பண்ணுறதுக்காக எங்கூட இருக்க பர்மிஷன் கேக்குறா மாதிரி சீன்!அதான?
மூர்த்தி: நம்மகிட்ட இருக்குற ஒரே கதை அதான்.இப்படி அதையும் மைன்ட் வாய்ஸ்ல கண்டுபிடிச்சிட்டாரே! சார் இல்ல அதுவந்து...
கஜினி: இரு கண்ணா...இன்னும் இருக்கு...அவன் கேடக்டர் ஸ்டடி பண்ணுறேன்னுட்டு கெத்தா ஒரு வார்டனா இருக்கும் என்ன கிமிரு பட வெடிவேலு மாதிரி டம்மி வார்டனாக்கிடுறான்.  
மூர்த்தி: எந்த பால் போட்டாலும் கோல் போட்டுடுறாரே!
கஜினி: பால் போட்டா எப்படிடா கோல் போட முடியும்?சிக்ஸ் அடிக்குறேன்னு சொல்லு!
மூர்த்தி: மைன்ட் வாய்ஸ் அவ்வளவு சத்தமாவா கேக்குது?
கஜினி: இஹா ஹா ஹா ஹா நீ சத்தாமாதாண்டா இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்த வெண்ண!ஆளாளுக்கு என்ன கெத்து டானா காட்டுறேன்னுட்ட்டு கோமாளியாக்கிட்டு இருக்கீங்க.இப்படித்தான் இதுக்கு முன்னாடி பஞ்சித் ரெண்டு படத்துலயும் கெத்து டான்னு சொல்லிட்டு கடைசில ஏதோ ஒரு நாய் வந்து என்ன சுட்டு கொல்லுறாப்ல டம்மி பண்ணான்.ஏண்டா உங்ககிட்ட வேற எந்த கதையுமே இல்லையா?அசிஸ்டன்ட் டைரக்டரா இல்லாம நேரா குறும்படம் எடுத்துட்டு வந்தா இப்படித்தான் சரக்கு சீக்கிரம் காலியாகிடும்.நீ ரீ.காஜேந்தர் கிட்ட கடைசி அசிஸ்டன்ட்டா சேரு போ!
.
அடுத்து பசுவாசம் படப்பிடிப்பு.
பெருத்த கிவா: கல நீங்க பல  வருசமா போலீஸ்-தாதா  ரோல்கள மட்டும்தான் மாத்தி மாத்தி பண்ணிட்டு இருக்கீங்க.போன படத்துல நீங்க போலீஸ்.அதனால இந்த படத்துல நீங்க தாதா!
கஜீத்: யு மீன் லைக் பில்லா?
கிவா: இல்ல தல.அது சிட்டி கெட்டப் இது கிராமத்து கெட்டப்.
கஜீத்: லைக் இன் வேலர்?
கிவா: ஆமா தல கீரம் படத்தையே புதுசா அவன்ல சுட்டு குடுக்க போறோம்
கஜீத்: சோ நோ பைக் ஸ்டான்ட்ஸ்?
கிவா: அது இல்லாம எப்படி கல?வழக்கமா பேக் வீல்ல வண்டிய ஓட்டுவீங்க..இந்த படத்துல ஹீரோயினை வில்லன் கார்ல  கடத்திட்டு போயிடுறான்.நீங்க பரபரன்னு சுத்தி முத்தி பாக்குறீங்க.ஒரு மெக்கானிக் ஷாப்ல மெக்கானிக் ஒரு பைக்கை சர்வீஸ் பண்ணிட்டு இருக்கான்.பேக் விலை கழட்டி ட்யூப் செக் பண்ணிட்டு இருக்கான்.நீங்க உடனே அந்த பைக்க பிரண்ட் விலை மட்டும் ரோட்டுல பதிச்சு வேகமா போய் வில்லனை மறிச்சு துவைக்குரீங்க.
கஜீத்: ஹவ் இட்ஸ் பாசிபிள் யா?எஞ்சின் இஸ் அட்டாச்ட் டு பேக் வில் ஒன்லி.
கிவா: அதெல்லாம் நம்புவாங்க கல.க்ரீன் மேட் போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.எதாச்சும் புதுசா பண்ணாட்டி ஜனங்க மறந்துடுவாங்க
.
அடுத்து இதயநிதி தயாரித்து நடிக்கும் புஷ்கின் இயக்கம் பொய்க்கோ ஷூட்டிங் ஸ்பாட்.
இதயநிதி வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி கட்டி மேலே ஒரு துண்டு.
புஷ்கின்: துண்டை நல்லா பின்னாடி இழுத்து விடு.டிக்கி கிட்ட வரைக்கும் வரணும்....ம்ம்..அப்படித்தான்.
இதயநிதி: ஐ ஆப் தி லவ் ஆப் தி பாலிங் ஆப் தி...
புஷ்கின்: ஆக்சுவலி நீ என்ன வேணும்னாலும் உளறிக்க.நா காலுக்குத்தான் ஷாட் வைக்க போறேன்.
இதயநிதி: ஜி இந்த படத்துல எனக்கு ஜோடி யாருஜி?
புஷ்கின்: ஜோடியா?நீயே ஒரு பொய்க்கோ கேரக்டர்!கடைசி வரைக்கும் தனியாத்தான் நிக்கணும்!
இதயநிதி: மைன்ட் வாய்ஸ் : ப்ச்...டென்தாரா பன்சிகா கஜீனான்னு மஜாவா நடிச்சிட்டு இருந்தேன். இப்ப இப்படி காய உடுறாரு!தகப்பருக்கு ஒரு மைக்கோனா எனக்கொரு பொய்க்கோ!வந்து வாய்க்குதுங்க!
புஷ்கின்: கைல வயலினை புடி...தலைய கவுரு...ம்...அப்படியே லைட்டா கைய மேலையும் கீழையும் அசை...ம்..அப்படிதான்...
....நாம் எஸ்கேப் ஆனோம்!
.
அடுத்து பஞ்சித் இயக்கத்தில் டென்தாரா நடிக்கும் நீலா.
படப்பிடிப்பு தளமே முழுக்க நீல பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது.பணியாளர்கள் எல்லாரும் நீல பேண்டு சட்டை போட்டிருந்தனர்.
கதுல் புல்கர்னி : நீலா!கைசா நாம் ஹே ரே?
பமுத்திரகனி: நீலான்னா நீலம்.கிஸ்ஜே கூர்யாவுக்கு புடிச்ச கலர்.
அப்போது திடீர்னு தளத்தில் ஒரு பரபரப்பு.கூட்டத்தில் இருந்து கிஸ்ஜே கூர்யா பரபரப்பாக உள்ளே வந்து “நீலப்படம் எடுக்குறாங்கன்னு சொன்னாங்க..எங்க நீலப்படம்?எங்க நீலப்படம்?” என்று ஆர்வமாக சுத்தியும் பார்க்கிறார்.
கவுன்டர்: டேய் அது நீலப்படம் இல்லடா!நீலா படம்!போ போய் ஒரு ஓரமா ஒக்காரு!

டென்தாரா:டைரக்டர் இந்த படத்துல எனக்கு  பாமசாமி பேத்தி கேரக்டர்தான?
பஞ்சித்: ஆமா மேம்.முற்போக்கான புரச்சி கேரக்டர்.
டென்: அப்போ பேதி பாபு, பாளி கங்கட், குத்தார்த் கிபின், கூஜகுமாரன் இந்தமாதிரி நாலஞ்சு டம்மி பீஸ்களை என்ன ஒன்சைட் லவ் பண்ணிகிட்டே  என்னோட வீட்டை சுத்திலும் பொட்டி கடை வச்சிருக்குற கேரக்டரா போட்டுடுங்க.அஜய் கேதுபதிக்கு பிரதான டம்மி கேரக்டர் குடுத்துடுங்க.
கஞ்சித்: ஒகே மேம்.
டென்: அஜய் கேதுபதி வேலை வெட்டி இல்லாம வீட்ல சமைச்சி போட்டுட்டு துணி துவைச்சிகிட்டு பாத்திரம் விளக்கிட்டு இருக்குற கேரக்டரா இருக்கணும்.அஜய் கேதுபதி அழுதுகிட்டே “கீயும் சாவியும் அன்பே கண்கள் பூட்டிக்கொண்டு ஒன்றாக வாழலாம்... இஹு..இஹு”ன்னு அழுதுகினே பாடுறாப்ல பிதின் ராஜை அழவிடுறோம்!அதையும் இந்த ஜனங்க “ஆகா இதாண்டா பாட்டு”ன்னு பாராட்டுவான்!
கஞ்சித்: அதோட கூனா கோலாவையும் கத்த விடுறோம்!
”என்னடி நினைச்ச?
எங்க நீலா பத்தி
”அட்ச்சா  மூஞ்சி பேந்துடும்..
மஞ்சாசோறு வெளிய உழும்.”
டங்குடக்கர டார டக்கர....
டென்:அது முக்கியம்!இந்த கல்லிக்கட்டு பாமசாமி  சமத்துவம் பொதுவுடைமை  சாதி மத ஒழிப்புன்னு நடுநடுவுல வரிய போட்டுடுங்க.
கஞ்சித்: ஒகே மேம்.
டென்: எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம்.நா தூங்குற சீன்லேயும் கரோஜா கேவி மாதிரி புல் மேக்கப்ல  தான் நடிப்பேன்.மேக்கப் போட்டதும் அடுத்த ஒன் அவருக்குதான் நடிப்பேன்.அப்புறம் பேக்கப்.
கஞ்சித்: ம்ம்ம்..கஜினியவே வச்சி கோமாளி மாதிரி ஆட்டி வச்ச என்னைய இப்படி கண்ல விரல விட்டு ஆட்டுறா!பாமசாமி பேத்தின்னா சும்மாவா!
.


அடுத்து பங்கர் இயக்கம் கிண்டியன் 2.
கிண்டியன் யூனிபார்மில் விமலகாசன் நிக்குறாப்ல ஆயிரம் பேனர்கள் ஆயிரம் அடி உயரத்தில் படப்பிடிப்பு தளம் முழுக்க வைக்கப்பட்டிருந்தது.வெண்ணை மாநகரத்தை முழுக்க செட் போட்டிருந்தார்கள்.
பங்கர்: ஜி நீங்க பஸ்ல ஏறி கொருக்குபேட்டை டு வண்டலூர் போறீங்க.அப்போ டிக்கட் காசு குடுத்ததும் மிச்சம் சில்ற ரெண்டு ரூவா கேக்குறீங்க.கண்டக்டர் “டேய் அதெல்லாம் குடுக்க முடியாதுடா.ஆனத்த பாத்துக்க”ன்னு சொல்ல கர்மக்கலை பயன்படுத்தி கண்டக்டர் பேகை பிடுங்கி அதுல இருக்குற நோட்டுகளை எல்லாம் பஸ்ல வீசி எறிஞ்சிட்டு இறங்கி நடக்குறா மாதிரி.
விமலகாசன்: வெல் வெறுமனே நடக்குறா மாதிரி இல்லாம விசில் அடிச்சிகிட்டே நடக்குறேன்.பின்னாடி ஒரு பேனர்ல கய்யம் விசில் ஆப் டவுன்லோட் பண்ணுங்க விளம்பரம் இருக்குறாமாதிரி பாத்துக்குங்க.
பங்கர்:க்கும்.இவரு கட்சி ஆரம்பிச்சதுக்கு ப்ரொட்யூசர் காசுல விளம்பரமா?அதுசரி நாம பண்ணாத அலப்பறையா?
விமல்:அப்புறம் நம்ம கம்பனி ஆர்டிஸ்ட் எல்லாரும் இதுலயும் இருக்கணும்.பாண்ட்ரியா,கூஜா புமார்,கரவிந்த் கமேஷ்,பூகி கேது,பம்.எஸ்.காஸ்கர்  எல்லாரும் இருக்கணும்.ம்யூசிக் ககமது பிப்ரானை போட்டுடுங்க..அப்புறம்.....
பங்கர்: ஸ்..ஸ்...சப்பா!மிடில!பல வருசமா டம்மி டைரக்டர போட்டு இவரே டைரக்ட் பண்ணி நடிச்சிட்டதால இவரை கட்டி மேய்க்கிறது ரொம்ப கஷ்டம் போலிருக்கே!பேசாம குஜய வச்சே படத்த எடுத்திருக்கலாம் போல!
.
கங்கட் கிரபு இயக்கம் பாட்டி பட ஷூட்டிங் ஸ்பாட்.பத்து மணி ஷூட்டிங் என்று சொன்னாலும் மதியம் மூணு மணிக்குதான் டைரக்டருக்கு ஹேங்ஓவர் தெளிஞ்சிது. தயாரிப்பாளர் எலுமிச்சை சாறு குடுத்து மூஞ்சில ஐஸ் வாட்டர் ஊத்தி ஒரு மாதிரி தெளிய வச்சு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டி வந்திருந்த நேரம்...
பழைய நாடக நடிகர்கள் எல்லாரும் எண்பதுகள் கெட்டப்பில் டிஸ்கோ ஆடிக்கொண்டிருந்தனர்.
கங்கட் கிரபு:என்னாதிது?இந்த ஷாட் நா எப்ப வச்சேன்னு எனக்கே நியாபகம் வரலியே!சரி விடு!இதுக்கு ஆடியன்ஸ் எப்படி விழுந்து விழுந்து சிரிக்க போறான் பாரு!
கவுன்டர்: ஆடியன்ஸ் சிரிக்கிறானோ இல்லையோ. ப்ரொட்யூசர் தெருவுல சந்திசிரிக்க போறான் .அது நிச்சயம்! 
கங்கட்: வழக்கம் போல சொந்தமா எந்த வசனமும் எழுதாம...
கவுன்டர்: டேய் நிப்பாட்டு..உனக்கு எழுத தெரிஞ்சா எழுத மாட்டியாடா?எப்பவும் போல எவனாச்சும் எழுதி பேமஸ் ஆன வசனத்த சுட்டு போடு!
கங்கட்:மைன்ட் வாய்ஸ் நம்ம தொழில் ரகசியம் பூரா இவருக்கு தெரிஞ்சிருக்கே!
கவுன்டர்: ஆமா இவுரு பெரிய அம்பானி.அப்படியே தொழில் ரகசியத்த தெரிஞ்சிகிட்டாலும்...ஊசிப்போன ஊத்தப்பத்த சுடவச்சு குடுக்குறவன்தான நீயி?
கங்கட்: ஒகே!வழக்கம் போல என்னோட தம்பி கேம்ஜி இதுல காமெடி பன்னவச்சு  ஆடியன்சை கதற விடுறோம்! நீ அடிச்சா பீசு!நா அடிச்சா ப்யூசு!
கத்யராஜ்: பாஸ் இந்த விக் ரொம்ப அரிக்குது.அது தவிர டைட்டா போட்ட பேண்ட் வேற கவ்வுது.சீக்கிரம் ஷூட் பண்ணிட்டா நா கிளம்பிடுவேன்!
கங்கட்: இருங்க சார்.கம்யா ப்ரிஷ்ணன் மேக்கப் போட்டுட்டு வர எப்படியும் நைட்டு ஒன்பதாகிடும்.அதுவரைக்கும் இப்படிதான் இருக்கணும்!
கத்யராஜ்:மைன்ட் வாய்ஸ்: யூத் வேஷம் போட ஆசைப்பட்டு இவன் படத்துல நடிக்க ஒத்துகிட்டது தப்பா போச்சு.பேசாம பிவமூர்த்திகேயன் எடுக்கும் பனா படத்துல பெரியார் பேத்திக்கு அப்பாவா நடிச்சிட்டு போயிருக்கலாம்!கெரகம்!
.
.
அடுத்து பட்லி இயக்கி குஜய் நடிக்கும்  கண்ணாமலை பட உல்டா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகும் அளவு திராணி இல்லாததால் இத்தோட முடிச்சிகினோம்!