Thursday, 21 September 2017

துப்பறிவாளன்



            மிஸ்கின் இயக்கத்தில் விஷால் என்றவுடன் படத்தை பார்க்க கொஞ்சம் தயக்கமாக, ஏன் பயமாகவே இருந்தது.காரணம் தனுசு படங்களை பார்ப்பதை பல வருடங்கள் முன்பு நிப்பாட்டியதைப்போல விசால் படங்களை தவிர்ப்பது உசுருக்கு சேதாரமில்லாம இருக்கும்(குறிப்பாக கழுத்தை ஒரு பக்கமாக வெட்டி வெட்டி பன்ச் வசனம் பேசும் அந்தக்கொடுமை!) என்பதால்!

            அதையும் மீறி இப்படத்தை பார்க்க ஒரே காரணம் மிஸ்கின்.மிஸ்கினோடு ரசனை/மனநிலை ரீதியில் உடன்படும் புள்ளிகள் பிற தமிழ் இயக்குனர்களைக்காட்டிலும் அதிகம் (பித்தநிலை-புத்தகங்கள்-கால்கள் -வயலின்,வயலின்-வயலின்-கதாபாத்திரங்களின் idiosyncrasies). மேலும் தனது படங்கள் மூலம் அட்வைஸ் எல்லாம் பண்ணாமல், க்ளீஷே தருணங்கள் வரும் நேரத்தில் பார்வையாளனே எதிர்பாராத விதமாக கதாபாத்திரங்கள் நடந்துகொள்ளுதல்(இதைப்பற்றி பிற்பகுதியில் சொல்கிறேன்),புதுமையான சண்டைக்காட்சிகள்(பிசாசு சப்வே,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ரயில்வே ஸ்டேஷன்) என்று அவரின் படங்கள் எனது அபிமான தமிழ்ப்படங்கள் பட்டியலில் தவறாது இடம்பெறும்.

          ஆர்தர் கொனன் டாயில் படைத்த ஷெர்லாக்-வாட்சன் கதாபாத்திரங்களை பின்பற்றி தமிழிலேயே பல இருநபர்-டீம் கதாபாத்திரங்கள் வந்துவிட்டன.கணேஷ்-வசந்த்,விவேக்-விஷ்ணு என்று குறிப்பிடலாம்.ஒரு கேரக்டர் அசாத்திய புத்திசாலித்தனமாகவும் இன்னொரு கேரக்டர்(side kick) கொஞ்சம் மந்தமாக ,சில வேளைகளில் ஜொள்ளு பார்டிகளாகவும்(வசந்த்&விஷ்ணு),இக்கட்டான நேரத்தில் உதவுபவர்களாகவும்  படைக்கப்பட்டதுண்டு.

              இதில் துப்பறிவாளன் கணியன் பூங்குன்றன் ஷெர்லாக் ஹோம்ஸின் தன்மைகளின் சாயல் கொண்டவர்.(படத்தின் கதையே இரவில் கொல்லப்பட்ட நாயில் இருந்துதான் துவங்குகிறது.The curious incident of the dog in the nighttime!) வீட்டிற்குள் யார் வந்திருக்கிறார்?அவர் எப்படிப்பட்டவர்?எதற்காக வந்திருக்கிறார்?தொலைந்து போன கணவன் மாலைக்குள் வருவான் என்றெல்லாம் விசாரிக்காமலேயே கண்டறியும் வல்லமை கொண்டவர்.ஆனால் ஷெர்லாக் –கணியன் வேறுபாடும் மிகமுக்கிய புள்ளி ஒன்று உண்டு.
       அன்பு கருணை இரக்கம் எதுவுமில்லாத பாலவனைமான உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு துளி மனிதம் மீதம் இருப்பதை காட்டுவது மிஸ்கினின் ட்ரேட்மார்க்  பாணி. ஷெர்லாக் ஒரு sociopath.ஆனால் இதில் மேற்சொன்ன அந்த ஒரு துளி மனிதம் நிரம்பிய மனிதராகவே கணியன் உருவாக்கப்பட்டுள்ளார் .குறிப்பாக அனு இம்மானுவேல் கதாபாத்திரம் சம்மந்தப்பட்ட காட்சிகளில் கணியன் உணர்ச்சிவயப்படக்கூடியவராக;இரக்க உணர்வு கொண்டவராக;பிறர் நலனில்(அதாவது வழக்கு சாராத நபர்கள்) அக்கறை செலுத்துபவராக காட்டப்படுகிறார்.ஆனால் ஷெர்லாக் இப்படிப்பட்டவர் அல்ல!சொந்த அண்ணனையே கண்டுக்காம போகக்கூடியவர்.
         [Spoiler Alert]   
     ஆனால் இந்த கணியன் கேரக்டரின் அந்த துப்பறியும் தன்மை எந்நேரமும் இருக்கா? என்றால் இல்லை என்பதே பதில்.உதாரணமாக அபிஷேக்&ஷாஜி வீட்டுக்குள் வரும்போது விசால் கண்ணைக்கட்டிக்கொண்டிருக்கும் நிலையிலேயே யார் யார் வந்துள்ளார்கள் என்பதை சொல்கிறார்.ஆனால் ஹோட்டல் அறையில் ஜான் விஜய் கொல்லப்பட்டதும் ஃபயர் எக்ஸிட் வழியே கொலையாளியை பிடிக்க செல்பவர் ஒரு அறை வாசலில் ஆண்ட்ரியா நிற்பதை பார்க்காமலேயே வேறு திசையில் செல்வதாக காட்டியது கதாபாத்திரத்தின் திறன் consistent ஆக தொடராமல் போன உணர்வை கொடுக்கிறது.

           நான் கவனித்த –ஒலக விமர்சகர்கள் சிலர் வைத்த குற்றச்சாட்டு- எல்லா கதாபாத்திரங்களும் மிஸ்கின் போலவே நடிப்பதாக குறை கூறியிருந்தார்கள்.இதற்கு முன்னர் வந்த மிஸ்கின் படங்களில்(பிசாசில் கொஞ்சம் ஜாஸ்தி) இருந்ததை நான் மறுக்கவில்லை.ஆனால் இப்படத்தில் அப்படி அதிகமாக துருத்திக்கொண்டு தெரியவில்லை என்பதே என் எண்ணம்.விசால் தன் பாணியில் நடிக்காமல் மிஸ்கின் பாணியில் நடித்தது  பெரிய ஆறுதல்.இல்லாட்டி தனது ட்ரேட்மார்க்-நானும்-மதுரக்காரன்தாண்டா அங்க சேஷ்டைகள் செய்திருப்பார்.ஆனால் பிற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அவர்கள் சொந்த  பாணியில்தான் நடித்துள்ளார்கள்.உம்.,பிரசன்னா.
          இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம் விசால் அனுவிடம் எரிந்து விழுவது.இது அவன் இவன் படத்தில் ஆர்யா, மது ஷாலினியை மிரட்டி தலையில் குட்டி பாலத்தில் குட்டிக்கரணம் போடவைத்த காட்சியை நினைவுபடுத்தியது! “பாலாத்தனமாக” இருந்தது.பாலா க்ளீஷே வட்டத்தில் மீளமுடியாது சிக்கிக்கொண்டதை கண்டபின்னரும அவரை பாலோ பண்ண நினைக்கலாமா மிஸ்கின்?

       அப்புறம் மிஸ்கின் படங்களுக்கே உரிய ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தனித்தன்மை.ஜான் விஜய் கேரக்டரின் fetishism சென்சார் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அரசல் புரசலாக காட்டப்படுகிறது (ஆண்ட்ரியா வாஷ் ரூமில் இருக்கும்போது வெளியில் நின்றபடி “கேட்பது”),வினய் கேரக்டர் ஒவ்வொரு மரணம் நிகழும் முன்போ-பின்போ காபி குடிப்பது,தான் இறக்கும் வேளையிலும் நடைபிணமாக இருக்கும் தனது மனைவியை தலையணையால் அழுத்தி கொல்லும் பாக்யராஜ் என்று  கதாபாத்திரங்கள் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை பாராட்டலாம்.
       [Spoiler]    அப்புறம் இரண்டாம்  பத்தியில் சொன்ன “க்ளீஷே தருணங்கள் வரும் நேரத்தில் பார்வையாளனே எதிர்பாராத விதமாக கதாபாத்திரங்கள் நடந்துகொள்ளுதல்”----- இதில் அப்படி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆண்ட்ரியாவும் அந்த மொட்டையும் போலீசால் சுற்றி வளைக்கப்பட்டதும் அந்த மொட்டை முட்டி போட்டுக்கொண்டு தனது டி ஷர்டை கழட்டிவிட்டு ஹராகிரி(Harakiri) செய்துகொள்வது,முதல் காட்சியிலேயே இருவர் மீது விழும் “மின்னல்”.
          படத்தின் இரண்டாம் பாதியில் குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அந்த மவுத்ஆர்கன்-பிரசன்னா-கத்தி - விஷயம் முருகதாஸ்-விஜய் படங்களில் வரவேண்டிய காட்சி.தயாரிப்பாளர் விசால் என்பதாலோ என்னவோ மிஸ்கினுக்கு சில நெருக்கடிகள் இருந்திருக்கலாம்.அதனால் வலிந்து வைக்கப்பட்ட காட்சியாகவே அது எனக்கு தோன்றியது.
   அந்த சைனீஸ் உணவகத்தில் வரும் சண்டை நன்றாக இருந்தது என்றாலும் அடிக்க வருபவர்கள் “யாய்ய்” என்று கத்தியபடியே வருவது மிஸ்கின் படங்களில் இல்லாத ஒன்று.துளிகூட ஓசை எழுப்பாமல் தாக்குவதே அவர் படங்களில் இருந்துவந்துள்ளது.விசால் அனுவிடம் “நின்ன எடத்துலையே குழி தோண்டி புதைச்சிடுவேன்” என்று  வ(ப)ழமையான வசனத்தில் மிரட்டுவது,கடைசியில் ஈரோவை கட்டிப்போட்டுவிட்டு கொல்லாமல் விட்டுவிட்டு தப்பிக்க முயலும் வில்லன் என்று விசாலுக்காகவே இவை வலிந்து வைக்கப்பட்டதாக கருதுகிறேன்.

            அரோல் கொரேலி  மிஸ்கினோடு நல்லதொரு புரிதலில் இருப்பது பின்னணி இசையில் காண முடிகிறது.மிஸ்கின் படங்களில் அடிநாதமாக வரும் வயலின் மட்டுமல்லாது இப்படத்தில் Grand Piano வையும் அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் அரோல்.இக்கூட்டணி தொடரட்டும்.
Jeremy Brett

     சும்மா பேய்கதை-மொக்க காமெடி-காதல் கதை-அட்வைஸ் கதைன்னு தமிழ் திரையுலகில் டார்ச்சர்கள் தொடரும் நிலையில்  ஷெர்லாக் கதாபாத்திரத்தை மிஸ்கின் தன்மையோடு கொடுக்கும் முயற்சியை கண்டிப்பாக   பாராட்டலாம்.அதேநேரம் ஷெர்லாக் டிவி சீரிஸ்கள் சாதரணமாக முக்கால் மணிநேரம்(ஜெரமி ப்ரெட்ட் சீரிஸ்) வரும்.The Hound of Baskerville போன்ற பெரிய கதைகளே ஒன்றரை மணி நேரத்தில் சொல்லி முடிக்கப்படும் என்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொண்டிருக்கலாம்! (Typical Sherlock ஆன –“Mercurial” Jeremy Brett ஐ குறிப்பிட்டதற்கு நன்றி மிஸ்கின்!)
  

             


            



Sunday, 10 September 2017

In Cold Blood-Truman Capote

                                    கொலையாளி யார்? அவன் ஏன் கொலை செய்கிறான்?கொலை செய்யும் அந்த தருணங்கள்,அந்த தருணத்தில் அவனது மனநிலை எல்லாம் மிக விளக்கமாக கதையில் விவரிக்கப்படும்.மற்றொரு பேரலல் கதையில் அவனை(ளை) தேடும் போலீசு அதிகாரி வகை கதைகள்.கடைசியில் அவன் அகப்படுவதாக முடியும்.உம்.,Jeffrey Deaver எழுதிய லிங்கன் ரைம் சீரிஸ் .
               மேற்குறிப்பிட்ட வகையிலேயே இந்த நாவல்  சென்றாலும் மிக முக்கியமான வேறுபாடு- நாவலில் வரும் சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவை.கொலை செய்யப்பட்ட க்ளட்டர் குடும்பம்,ஹால்கம்ப் ஊரில் உள்ள மக்கள்,விசாரித்த அதிகாரி,மிக முக்கியமாக கொலை செய்த Dick மற்றும் Perry ஆகியோரிடம் ட்ரூமேன் கபோட்டி மற்றும் அவரது இளமைக்கால தோழி ஹார்பர் லீ (To kill a mocking bird புகழ்)துணையோடு   மிக விரிவாக நேர்காணல்களை நடத்தி அதை வைத்தே இந்த நாவலை எழுதியுள்ளார்.Non fiction வகையில் இது புதுவகையான அப்போது அறியப்பட்டது.
                              
பெர்ரியுடன் ட்ரூமன் கபோடி


                                       ஹெர்பர்ட் க்ளட்டர் அவரது மனைவி  பான்னி,மகன் கென்யன்,மகள் நான்ஸி நால்வரும் ஓரிரவில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள்.கேன்சஸ் மாகாணத்தில் ஹால்கம்ப்  கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயக்குடும்பம் க்ளட்டருடையது.வசதியான குடும்பம்.கோதுமை, மைலோ..etc..,  போன்றவைகளின் அமோக விளைச்சல் காரணமாக நல்ல வருமானம்.
                  ஹெர்பர்ட் மிக மிக நல்லவர் என்று அந்த கிராமம் முழுக்க அறியப்படுபவர்.தன் கீழே விவசாய வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களையும் தன் சொந்தக்குடும்பம் போல பாவிப்பவர்.பேசப்பட்டதற்கு அதிகமாகவே கூலி கொடுப்பவர்.மெதடிஸ்ட் சர்ச்சில் மிக முக்கிய உறுப்பினர்.4H குழுவிலும்(Head,Heart,Hand,Health).அக்குழுவில் வளர் இளம்பருவத்தினருக்கு நல்லொழுக்கம்,சமையல்,கைவினை கலை போன்ற பல விஷயங்களையும் கற்று நல்ல குடிமகன்களை தயார் செய்யும் ஒரு கிளப்.தனது மகனையும் மகளையும் அதில் ஆறு வயதில் சேர்த்து விட்டவர் ஹெர்ப்.
ஹெர்பர்ட் க்ளட்டர்

         மகன் கென்யன் கண் கண்ணாடி அணியாது எதையுமே பார்க்க முடியாதவன்.அதனாலேயே எந்தவித விளையாட்டுகளிலும் சக வயதினரோடு சேர்ந்து விளையாடமுடியாத நிலை.அந்தக்குறையை அவன் வேறுவிதமாக போக்கிக்கொண்டவன்.வீட்டின் பேஸ்மெண்டில் அவனுக்கென்று தனி சாம்ராஜ்யம்.தச்சு வேலை மூலம் விதவிதமாக மர வேலைகள் செய்வது,புத்தகம் வாசிப்பது,இசைக்கருவி வாசித்தபடியே பாடுவது(வீட்டில் பாடினால் தாய் பான்னி  உறக்கம் கலைந்துவிடுவாள் என்பதால் நான்ஸியின் வற்புறுத்தலால் பேஸ்மெண்டில் பாடுபவன்).
கென்யன்

         நான்ஸி அந்த ஊரின் டார்லிங்.பிற இளம் பெண்களுக்கு சமைக்க கற்றுக்கொடுப்பது,ஊரில் ஏதாவது திருமணம் என்றால் அதற்கு உடைகள் வடிவமைத்து தருவது,இசைக்கருவிகள் வாசிக்க கற்று தருவது என்று அனைவருக்கும் பாகுபாடு பாராமல் உதவும் பதினாறு வயது சிறுமி.
நான்ஸி


 
         ஹேர்பின் மனைவி பாபி.தொடர் பிள்ளைப்பேறுகளால் மீளமுடியாத கடும் மன அழுத்தத்தில் மூழ்கிப்போனவர்.கணவன் இல்லாத தருணங்களில் மிகமுக்கிய முடிவுகள் எடுக்கவேண்டி இருந்தால் அதில் இருந்து தப்பிக்க  பதறிப்போய் தனது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொள்பவர்.
பான்னி

         விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே.அவர்கள் பேசுவது காதில் விழுந்துவிடக்கூடாது என்று பயந்து தனது அறையிலேயே அடைந்து கிடப்பவர்.கடும் கோடைக்காலத்திலும் குளிரை  உணர்பவர்.
        முதல் பெண் திருமணமாகி வேற்றூரில் இருப்பவர்.இரண்டாவது மகள் தனது வருங்கால கணவனைக்காண சென்றிருக்கிறார்.வீட்டில் நான்கு பேர்.நால்வரும் கொலை செய்யப்படுகிறார்கள்.ஆனால் நகைகள் திருடப்படவில்லை.
          நிற்க...மேற்குறிப்பிட்ட அந்த க்ளட்டர் குடும்பம் கற்பனை அல்ல.நிஜத்தில் வாழ்ந்த குடும்பம்.நிஜத்தில் நடந்த கொலைகளை மையமாக வைத்து எழுதப்பட்டதே இந்த புதினம்.
       இப்போது முதலில் கூறியபடி கொலையை யார் செய்தார்?அல்லது கொலையாளி எப்படி சிக்கினார்?என்பதைத்தாண்டியதே இந்த புதினம்.ஒரு குடும்பம் கொலை செய்யப்பட்டது.அந்த குடும்பம் எத்தகைய வாழ்வை வாழ்ந்தது?குடும்ப உறுப்பினர்கள் எப்படியானவர்கள்?அந்த குடும்பம் அந்த ஊரில் எத்தகைய மரியாதையை, அன்பை சம்பாதித்து வைத்திருந்தது?இந்த கொலைகளுக்கு பிறகு அந்த குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் என்னவானார்கள்?இந்தக்கொலைகள் அந்த ஊரில் எத்தகைய பெரும் தாக்கத்தை பீதியை ஏற்படுத்தியது?கொலை செய்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்?ஏன் இக்கொலையை செய்தார்கள்?இதை விசாரிக்கும் அதிகாரியின் மன உளைச்சல் எத்தகையது? ....என்பது போல பல கேள்விகளை மிக மிக நுட்பமாக (நான் க்ளட்டர் குடும்ப உறுப்பினர்கள் பற்றி மேலே குறிப்பிட்டது வெறும் சாம்பிள்.நாவலில் மிக விளக்கமாக அவர்களின் வாழ்வு விவரிக்கப்பட்டுள்ளது) பதிவு செய்யப்பட்டுள்ளது.
             
          கொலை/கள்  பலரை fascinate செய்யக்கூடிய காலமிது.ஹிட்ச்காக் தனது படங்களில் பெண்கள் ,குறிப்பாக நடுத்தர வயதை கடந்த பெண்கள் கொலைகள் பற்றி மிக ஆவலோடு விவாதிப்பதாக பல காட்சிகளை வைப்பார்.பெண்கள் என்றில்லை பொதுவாகவே இக்காலகட்டத்தில் மட்டுமல்லாது காலம் காலமாகவே கொலைகள் பற்றிய ஈர்ப்பு ஆண் பெண் பேதமில்லாது மக்களிடையே இருந்துவந்துள்ளது .
        அதை பயன்படுத்திக்கொள்ள பல்வேறு மர்ம நாவல்கள்,திரைப்படங்கள்(ஒருகாலத்தில் whodunit வகையறா கதைகள் மிகப்பிரபலம்),நாடகங்கள் செய்தித்தாள்களில் முதன்மை பக்க பத்திகள் என்று தொடர்ந்து வந்துள்ளது.
        ஆனால் அக்கதைகளில் கொலை-ஏன்?யார்?எப்படி? இத்தோடு முடிந்துவிடும்.அந்தக்கொலைகள் ஏற்படுத்திய அந்த பாதிப்பு என்பது வாசிப்பவருக்கு கடத்தப்படாது.அதைவிட முக்கியமாக அவை கற்பனை கதைகள்.நிஜத்தில் நடந்த கொலையை மையமாக வைத்து புதினம் எழுத முயன்றதில்லை.ட்ரூமன் அதை செய்தார்.
 
                               டிக்(Dick) ஒருமுறை சிறையில் இருக்கும்போது சக கைதி  ஃபளாய்ட் வெல்ஸ் என்பவனோடு நட்பாகி பேசிக்கொண்டிருக்கும்போதுதான் வெல்ஸ், டிக்கிடம் ஹெர்பர்ட் க்ளட்டரின் கார்டன் சிட்டி ஃபார்ம் பற்றி சொல்கிறான்.ஹெர்பர்ட் க்ளட்டரிடம் தான் வேலை பார்த்ததாகவும் அவர் மிகவும் கனிவோடு நடந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் பேசப்பட்ட கூலிக்கும் அதிகமாகவே பணம் கொடுத்ததாகவும் சொல்கிறான்.மேலும் க்ளட்டரிடம் விவசாயம் மூலம் கிடைத்த வருமானம் பல ஆயிரம் டாலர்கள் உண்டு என்றும் அதை க்ளட்டர் வீட்டில் உள்ள ஒரு பெட்டகத்தில் வைத்துள்ளதாகவும் சொல்கிறான்.
ஃபிளாய்ட் வெல்ஸ்

         ஆனால் அது உண்மையல்ல.ஒரு டாலர் கொடுக்க வேண்டியிருந்தாலும் ஹெர்பர்ட் அதை காசோலையாக கொடுக்கும் வழக்கமுள்ளவர்.தன்னிடம் பைசா காசு கூட ரொக்கமாக  வைத்துக்கொள்ளாதவர்!இந்த பாதுகாப்பு பெட்டக வதந்தி வெல்சே உருவாக்கியதா?இல்லை வேறு யாரும் சொன்னதை அவன் சொன்னானா? என்பது தெரியவில்லை.
         இந்த பாதுகாப்பு பெட்டகத்தை கொள்ளையடிக்கத்தான் செல்வதாக டிக் பெர்ரியிடம் சொல்கிறான்.ஆனால் உண்மைக்காரணம் அதுவல்ல!க்ளட்டருக்கு ஒரு பதின்ம வயது மகள்  உள்ளதை அறிந்துகொண்ட டிக் அவளை பாலியல் பலாத்காரம் செய்வதற்கே அங்கு செல்கிறான்.நாவலில் இது பின்னர் தெரிவிக்கப்படுகிறது.
           ஆனால் டிக் , நான்சியை நெருங்க பெர்ரி அனுமதிக்கவில்லை."கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்வு கொண்டவர்களை கண்டாலே தாம் வெறுப்பதாகவும் அவர்களை சகித்துக்கொள்ளவே தம்மால் முடிந்ததில்லை" எனவும் பிறகு கேபிஐ(கேன்சஸ் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்) ஏஜென்டிடம் விசாரணையில் பெர்ரி சொல்கிறான்.
                   
                 இங்கே இன்னொரு விஷயத்தையும்  கவனிக்க வேண்டும்.டிக்கும் பெர்ரியும் க்ளட்டரின் வீட்டுக்கு போகிறார்கள்.டிக் அங்குள்ள நால்வரையும் கடுமையாக நடத்துகிறான்.ஆனா பெர்ரியோ "ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?அவர்கள்தான் சொன்னபடி செய்கிறார்களே?" என்கிறான்.
           கென்யனை பெர்ரி சோபாவில் படுக்கவைத்து கை கால்களை கட்டிப்போடுகிறான்.அதன்பின் கென்யன் தொடர்ந்து இரும ஆரம்பிக்க அவன் மூச்சுவிட வசதியாக தலையணையை எடுத்து கென்யனின் தலைக்கு கீழே வைக்கிறான் பெர்ரி!
கொல்லப்பட்ட  கென்யன்

         க்ளட்டர் குடும்பத்தாரிடம் மென்மையாக நடந்துகொள்ளும் பெர்ரிதான்  நால்வரையும் கொல்கிறான்.இந்த உளவியல் முரண்பாட்டையே குற்றத்தின் ஆணிவேராக கொள்ளலாம்.
           ஹெர்பர்ட் இவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்த தருணத்தில் இருந்தே துளிகூட பதட்டமடையாமல் பயப்படாமல் அவர்கள் மீது கோபப்படாமல் அவர்களை தாக்க முயற்சிக்காமல் அவர்கள் சொல்வதை செய்கிறார்.
              பின்னர் கேபிஐ ஏஜன்ட் ஒருவர் கூறும்போது "தனது குடும்பத்தை கொல்லத்தான் இவர்கள் வந்திருப்பதாக ஹெர்பர்ட்  உணர்ந்திருந்தால் தன் உயிர் உள்ளவரைக்கும் அதை தடுக்க அவர் போராடி இருப்பார்".பத்து ஆள் பலம் கொண்ட ஹெர்பர்ட்!
                   ஹெர்பர்ட் நினைத்தது இவர்கள் இருவரும்  (இல்லாத) பண  பெட்டகத்தை தேடி வந்துள்ளார்கள்!அது இல்லை என்று தெரிந்ததும் தங்களை இப்படியே கட்டப்பட்ட நிலையில் விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.காலையில் யாராவது தங்களை காப்பாற்றிவிடுவார்கள் என்பதே!அவர்களின் நோக்கம் கொலை என்பது கடைசி வரைக்கும் ஹெர்பர்ட்டுக்கு தெரியவில்லை.
        இவர்களைக்கண்டு பான்னி  பதட்டமடைந்து அழ ஆரம்பிக்கிறார்.அவரை கழிப்பறையில் அமரவைக்கலாம் என்கிறான் டிக்.பெர்ரி அவர் அமர வசதியாக டைனிங் ஹால் நாற்காலி ஒன்றை எடுத்து பாத்ரூமில் போடுகிறான்.
         ஆனால் நான்ஸி லேசாக பயந்தாலும் பதட்டமடைந்ததாக காட்டிக்கொள்ளவில்லை.நான்சியிடம் பணமிருந்தால் கொடுக்கும்படி மிரட்டுகிறார்கள்.அவள் பர்ஸை திறந்து பார்த்தால் ஒற்றை வெள்ளி நாணயம் மட்டுமே உள்ளது.அதை பெர்ரி எடுத்ததும் கைதவறி கட்டிலுக்கு கீழே உருண்டோட அதை மிகவும் சிரமப்பட்டு எடுக்கும்போது பெற்றி நினைக்கிறான்  "மில்லியன் டாலரை கொள்ளையடிக்க வந்தோம்!ஆனால் இப்போதோ ஒற்றை டாலருக்கு இப்படி சிரமப்படுகிறோம்" என்று மனதிற்குள் வெட்கப்படுகிறான்.
           மற்றவர்களைப்போல நான்சியை அவள் கட்டிலிலேயே கட்டிபோடுகிறார்கள்.கைகளை கட்ட ஒரு கட்டு.கால்களை பெட்போஸ்டோடு சேர்த்து ஒரு கட்டு.நான்சியையும் அவ்வாறே!
கொல்லப்பட்ட நான்ஸி

            ஹெர்பர்ட்டை மட்டும் அழைத்து செல்கிறார்கள்.வீடுமுழுக்க தேடியும் அந்த பெட்டகம் இல்லை!ஹெர்பர்ட் சொன்னது உண்மை என்பது அவர்களுக்கு புரிகிறது!அந்த உண்மையின் வெப்பம் அவர்களை சுடுகிறது!பேஸ்மெண்ட்டுக்கு அழைத்துச்சென்று அவரின் கைகளை மேலே செல்லும் பைப்பில் காட்டுகிறார்கள்.
            கென்யனின் ரேடியோவை காரில் வைத்துவிட்டு வரச்சொல்கிறான் டிக்.பெர்ரி அதை காரில் வைக்கும் நேரத்தில் அப்படியே டிக்கை  விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்றே நினைக்கிறான்.ஆனால் திரும்ப வருகிறான்,
          காரணம் டிக் மீதான அவனது ஈர்ப்பு.தான் சிறுவயதில் இருந்தே தன்னந்ததியனாய்  பெர்ரி.நண்பர்கள் யாருமில்லை!ஸ்காட்டிஷ் தந்தைக்கும் பூர்வகுடி இந்திய பெண்ணிற்கும் பிறந்தவன் பெற்றி.தாய் குடித்தே அழிந்தவள்.தந்தையோடு தங்கம் தேட அலாஸ்கா செல்லும்வழியில் சண்டைபோட்டு பிரிகிறான்.அவனது தந்தை மட்டும் அலாஸ்கா செல்கிறார்.
          பிறகுதான் டிக்கை சந்திக்கிறான்.இதில் டிக் டாமினேட்டிங் ஆகவும் பெற்றி ஸப்மிஸ்ஸிவ் ஆகவும்!டிக்கின் அபிமானத்தை பெற தான் ஒரு ஆப்ரிக்க-அமெரிக்க மனிதனை சைக்கிள் செயினாலேயே அடித்துக்கொன்றதாக பொய் சொல்கிறான்..டிக் ஏற்கெனவே இருமுறை திருமணம் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு தந்தை!பெர்ரி பெண் வாடையே அறியாதவன்.அதில் ஈடுபாடும் அவனுக்கில்லை.டிக்கின் ஆதிக்கத்தில் இருப்பதை விரும்புபவன் பெர்ரி.
பெர்ரி -டிக்

           அவனுக்கு பிடித்தது வாசிப்பு.பெட்டி பெட்டியாக புத்தகங்களை தன்னுடனேயே தூக்கிக்கொண்டு அலைபவன்!அதை கடுமையாக எதிர்ப்பவன் டிக்.இந்த குப்பையை எதுக்கு கொண்டுவர?என்று கடிந்து கொள்பவன்.டிக்குக்கு பிடித்த புத்தகங்கள் வேறுவகை!மஞ்சள் பத்திரிகை வகையறா!
             பெர்ரி கொரிய போரில் பங்கேற்றவன்.பிறகு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் எலும்புகள் உடைந்து இடுப்புக்கு கீழே சிறுவனை போன்று குட்டையான அமைப்பை கொண்டவன்!டிக்குக்கும் ஒரு விபத்து நடந்து அதன்பின்னரே கடுமையான தலைவலி, பிளாக்கவுட், சைக்காட்டிக் தன்மைகள் எல்லாம் அதிகமாகிவிடுகிறது(ஆனால் இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை).
                  அப்படியே போய்விடலாம் என்கிறான் பெர்ரி.டிக் மறுக்கிறான்.அந்த நேரத்தில்தான் டிக்கே எதிர்பாராத விதமாக ஹெர்பர்ட்டின்  கழுத்தை அறுக்கிறான் பெர்ரி.மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் ஹெர்பர்ட்டின் தலையில்  சுடுகிறான் .மூளை சிதறுகிறது.பிறகு ஹெர்பர்ட்டை "சவுகரியமாக"  ஒரு மேட்ரசில் படுக்கவைப்பவனும் பெரிதான்!
          அனைவரையும் கொன்றுவிட்டு தப்பிக்கிறார்கள்.4 மணி நேரத்தில் 800 மைல்கள்!டிக் தனது வீட்டிற்கு சென்று வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு டிவி பார்க்கும்போதே தூங்கிப்போகிறான்(பேஸ்கட்பால் விளையாட்டை நடக்கும்போது  அவன் தூங்குவது கண்டு தந்தை ஆச்சரியப்படுகிறார்).பெர்ரி தனது மோட்டல் அறையில் தங்குகிறான்.
பெர்ரி

            
              பிறகு மெக்சிகோ செல்கிறார்கள்.ஆனால் அங்கோ ஒருநாள் வேலைக்கு இரண்டு டாலர் மட்டுமே சம்பளம்.திரும்ப நிவாடா செல்ல கேன்சஸ் மாகாணம் வழியாகவே செல்கிறார்கள்.காரணம் தனது ஊரில் சில நண்பர்களை ஏமாற்றி டிக் பணம் பெறவேண்டும்.அப்போதிலிருந்தே போலீசு அவர்களை பின்தொடர்கிறது.
             பெர்ரி தனது புத்தக குவியல்,ஷூக்கள்,இன்னபிற அடங்கிய பார்சலை மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்கெனவே  பார்சல் அனுப்பி இருக்கிறான்  .அதை வாங்கிக்கொண்டு வரும்வழியில்  அவர்களை கைது செய்கிறார்கள்.
        இப்போது இவர்கள் சிக்கியதற்கு காரணம் சில :
-ரத்தக்கறை படிந்த ஷூ தடம்(அந்த பார்சலில் இருந்தது)
-டிக்கும் பெர்ரியும் அந்த ஷூக்களை  டிஸ்போஸ் செய்யாமலேயே உடன் வைத்திருக்கிறார்கள்.காரணம் -தாங்கள் சிக்கவே மாட்டோம் என்ற எண்ணம்
-ஃபிலாய்ட் வெல்ஸ்ன் வாக்குமூலம்
-கென்யனின் ரேடியோவை அடகு கடையில் விற்றது.

                  முதலில் இருவரும் மறுக்கிறார்கள்.ஆனால் இருவர் சொன்ன கதைகளும் வெவ்வேறாக உள்ளதை கண்டுபிடிக்கிறார்கள்.பிறகு உண்மையை ஒப்புக்கொள்கிறார்கள்.நால்வரில் இரு பெண்களை டிக்தான் கொன்றான் என்று முதலில் சொல்லும் பெர்ரி பிறகு நால்வரையும் தான்தான் கொன்றதாக வாக்குமூலத்தை மாற்றிக்கொடுக்கிறான்(டிக்கின் தாய்க்காக இதை செய்ததாக சொல்கிறான்)
           ஆனால் கொலைகளை செய்யாத டிக்கும் உடந்தை என்ற வகையில் தூக்கிலிடப்படுகிறான்.ஆனால் அது மிக நீண்ட போராட்டம்!1960 ல் கைது செய்யப்படும் இருவர் மீதான வழக்கு முடிந்து தூக்கு தண்டனை தீர்ப்பாகிறது.அவர்கள் வழக்கை வேறொரு ஊரில் நடத்த வேண்டும்,மனநிலை சரியில்லை,சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு என்று பலவருடங்கள் வழக்கு!கடைசியில் 1965 ஏப்ரல் 14 அன்று இருவரும் தண்டிக்கப்படுகிறார்கள்.
              தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் அறையில் அணையாத விளக்கு,வாரம் ஒருமுறை மட்டுமே சிறையைவிட்டு வெளியே வரவேண்டும்.அன்றுதான் குளியல்&வேறொரு மாற்று உடை வழங்கப்படும்.தொடர்ந்து மூன்று பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அந்த கண்டம்ண்டு பகுதியில் வைக்கப்பட அதற்கு டிக் "கேன்சஸ் நீதிபதி மிட்டாய் கொடுப்பதுபோல எல்லாருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கிறார்" என்று நக்கலடிக்கிறான்.
             பெர்ரி அவர்களைக்கொன்றதற்கு காரணம் என்ன?சிறுவயதில் இருந்தே சரியான அன்பு கிடைக்காதது,குடிகார தாய்,நண்பர்கள் யாரும் இல்லாதது,ஏழ்மை நிலை இதையெல்லாம் வழமையாக சொன்னாலும் மிக முக்கியமானகாரணம் -பெர்ரியின் வாழ்நாளில் இதுவரையில் அடிபட்டு மிதிபட்டு பலரால் மனதளவில் காயப்பட்டவன்.அந்தக்காயங்களுக்கு அந்த வேதனைகளுக்கு ஒரு வடிகாலாக இவர்களை கொல்கிறான்.அவனைப்பொறுத்தளவில்  இந்த நால்வரும்  ரத்தமும் சதையும் கொண்ட க்ளட்டர் குடும்பமல்ல!தன்னை இதுவரை காயப்படுத்தியவர்களின் மொத்த உருவகமாகவே அக்குடும்பத்தை காண்கிறான்.இவர்களை கொன்றால் இதுவரை தான் சுமந்துவந்த மனப்பாரம், மனக்காயம் ஆறிவிடும்.ஒருவித relief கிடைக்குமென்றே நினைக்கிறான்.ஆனால் கொன்றபிறகு அப்படி எதுவுமே தோன்றாததைக்கண்டு ஏமாற்றமடைகிறான்!
         ஆனால் அவர்களைக்கொன்றதற்கு அவன் வருந்தவில்லை.Tough ஆன டிக்காவது கொஞ்சம் வருத்தப்படுகிறான்.ஆனால் பெர்ரிக்கு அவ்வித உணர்வே இல்லை!
           மேலும் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் வேளையில் "இவர்கள் என் உயிரை எடுப்பதா?நானே எடுத்துக்கொள்கிறேன்" என்று பதினான்கு வாரங்கள் சோறுதண்ணி இல்லாமல் எதிர்ப்பை காட்டுகிறான் பெர்ரி.நாடகமாடுறான் என்று கிண்டலடிக்கிறான் டிக்.அவனுக்கு தெரியும் அவன் திரும்ப சாப்பிட துவங்கிவிடுவான் என்று!அதன்படியே மீண்டும் சாப்பிட ஆரம்பிக்கிறான்!"Hell அவர்கள் என் உயிரை எடுக்க வேண்டுமென்றால் போராடித்தான் ஆகவேண்டும்!" என்று உறுதிகொண்டு நிறைய சாப்பிட்டு மீண்டும் இழந்த எடையை அடைகிறான்.
          டிக் பல்வேறு சட்ட புத்தகங்களை படித்து தான் தப்பிக்க வழியுண்டா? என்று பார்க்கிறான்.மனிதநேய அமைப்புகள் சட்ட உதவி மையங்கள் போன்றவைகளுக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்புகிறான்.சிலர் உதவியும் செய்கிறார்கள்.அதிலேயே ஐந்து  வருடங்கள் ஓடுகிறது.
          ஐந்து வருடங்கள் கழித்து தூக்கிலிடப்படுகிறார்கள்.தூக்கில் தொங்கவிடப்பட்டதும் டிக் இருபது நிமிடம் துடித்ததாக வருகிறது.பெர்ரி தூக்கில் தொங்கவிடப்பட்டதும் தரையை தொடாத அவனின் கால்களைகேபிஐ ஏஜன்ட் டூயி பார்க்கிறார்.முதன்முதலில் அவனை விசாரணை அறையில் பார்த்தபோது அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் தரையில் கால் படாமல் ஒரு சிறுவனின் ஆகிருதியோடு அமர்ந்திருந்தது அவர் நினைவுக்கு வருகிறது.
வாக்கர் குடும்பம்

              நவம்பர் 15 க்ளட்டர் குடும்பம் கொல்லப்பட்டது.ஒருமாதம் கழித்து டிசம்பர்  19 1959 ல் வாக்கர்  குடும்பம் கிட்டத்தட்ட இதேமுறையில் தலையில் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.அதில் உள்ள கைரேகைகள் டிக் மற்றும் பெர்ரியுடன் பொருந்தாது போனதால் அந்த வழக்கில் இவர்கள் குற்றம் சாட்டப்படவில்லை.ஆனால் சமீபத்தில் 2012 அந்த ரேகைகள் உள்ளங்கை ரேகைகள் எனவும் அதனாலேயே டிக்/பெர்ரியின் ரேகைகளோடு பொருந்தாமல் போனதாகவும் அவர்களின் பிரேதத்தை(எலும்புக்கூடு?) தோண்டி எடுத்து டிஎன்ஏவை ஆய்வு செய்ய ஷெரிப் கோருகிறார்.ஆனால் கிடைத்தவை பாதி டிஎன்ஏ மட்டுமே.வாக்கர் குடும்ப கொலையில் டிக்&பெர்ரி சம்மந்தப்பட்டார்களா இல்லையா என்பதை  உறுதிப்படுத்த முடியவில்லை.
                      டிக் மரண தண்டனை இருக்கவேண்டும் என்பவன்.ஆனால் தனக்கல்ல!
        

Sunday, 6 August 2017

Caché (2005)


    இப்படம் ஜாலியாக பாப்கார்ன் கொறித்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தபடியோ படுத்தபடியோ பார்க்க முடிகிற படமல்ல!அவ்வளவு ஈசியாக எல்லாம் தனது பார்வையாளனை உணர அனுமதிப்பதில்லை ஹேன்கி.
         பொதுவாக  ஒரு சினிமாவில் ஒரு கதாபாத்திரம்/குடும்பம் கடும் நெருக்கடியில் இருப்பதாக காட்டினால் உடனே சற்று ஆசுவாசப்படுத்தும்படியான காட்சி அதை தொடரும்.நமது இந்திய சினிமாக்களில் நகைச்சுவை ட்ராக் வரும்.ஹாலிவுட் படங்களில் வேறு வகையான திருப்பம் வரும்.இவ்விரண்டுமே ஹேன்கியின் படங்களில் காணமுடியாது!

Michael Haneke


        மிகக்கடுமையான உளவியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்தை டைட் போகஸில் அப்படியே விட்டுவிடுவார்!பார்வையாளன் வேறு எந்த வகையிலும் தப்ப முடியாது!அந்த கதாபாத்திரத்தின் ஐம்பது  விழுக்காட்டு வேதனையாவது/உளவியல் நெருக்கடியாவது  பார்வையாளனுக்கு கடத்தப்படும். மெல்லிய மனம் கொண்டோர் அவர் படங்களை பார்க்காமல் இருப்பது நல்லது!
           இப்படத்தில் ஜார்ஜ்ஸ் அவரது மனைவி ஆன், மகன் பியர்ரே  ஒரு பிளாட்டில் வசிக்கிறார்கள்.தொடர்ந்து அவர்கள் வீட்டு முகப்பை படம் பிடித்து ஒரு வீடியோ கேசட் அவர்களுக்கு அனுப்பபடுகிறது.இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய கேசட்டை பாஸ்ட் பார்வர்ட் செய்து பார்க்கும்போது ஜார்ஜ்ஸ் வீட்டுக்குள் வருவது வீட்டிலிருந்து தெருவுக்கு வந்து காரை கிளப்பி அலுவலகம் செல்வது போன்ற  காட்சிகள்.

            இந்த தொடர் கேசட்டோடு சில கிறுக்கல் ஓவியங்கள்.ஒரு சிறுவனின் வாயில் இருந்து ரத்தம் வருவது,கோழியின் கழுத்து அறுபட்டு ரத்தம் தெறிப்பது என்பதாக....
             ஜார்ஜ்ஸ் இதை ஒரு prank என்பதாகவே கருதுகிறான்.இதை யாரிடமும் சொல்ல விரும்பவில்லை.ஆனால் அவன் மனைவியோ நண்பர் குடும்பத்தோடு உணவருந்தும்போது அவர்களிடம் சொல்லிவிடுகிறாள்.அப்போதுதான் காலிங் பெல் அடித்து ஜார்ஜ்ஸ் எழுந்துசென்று கதவருகே கேசட்டை கண்டு விருந்தினர்களுக்கு தெரியாமல் கோட்டில் கேசட்டை வைத்துவிட்டு அமர்கிறான்.ஆன் "யார் வாசலில்?" என்று கேட்க 'யாருமில்லை!' என்று மழுப்ப மேற்சொன்னவாறு கேசட் விவகாரத்தை அவள் நண்பர் குடும்பத்திடம் அம்பலப்படுதிவிடுகிறாள்.
            கடுப்பான ஜார்ஜ்ஸ் அந்த கேசட்டை போட்டு காட்டுகிறான்.போலீசுக்கு செல்லுமாறு நண்பர் சொல்கிறார். போலீசு இதை பெரிதாக பொருட்படுத்தாமல் உங்கள் குடும்பத்தின் மீது யாராவது தாக்க முயன்றாலோ தாக்கினாலோதான் தங்களால் எதுவும் செய்யமுடியும் என்று கைவிரித்ததை ஆன் சொல்கிறாள்.
           இதற்குப்பின் முழுக்க முழுக்க நாம் ஜார்ஜ்ஸ் -உடன் பயணபடுத்தப்படுகிறோம்.
               'தனியார் துப்பறியும் நிபுணரை நியமிக்கலாமே' என்று ஆன் கேட்க அதை மறுக்கிறான் ஜார்ஜ்ஸ்.காரணம் இப்போது ஜார்ஜ்ஸ்க்கு பிரச்சனை யாரோ கேசட் அனுப்புகிறார்கள் என்பதைக்காட்டிலும் அதிலுள்ள காட்சிகள் தன்னில் உண்டாக்கும் பாதிப்பையே பெரிதாக நினைக்கிறான்.
             9/11 தாக்குதல் நிகழ்ந்த பிறகு Noam Chomsky   ஒரு விஷயம் சொன்னார்-"பின்லேடன் விரித்திருப்பது ஒரு diabolical trap.நாம்(அமெரிக்கா)உணர்ச்சிவசப்பட்டு போர்தொடுப்போம்;அதனால் பேரழிவு உண்டாகும்;
அந்தப்பேரழிவை காரணம் காட்டி மேலும் தனது இயக்கத்தை வலுப்படுத்தவும்,
இயக்கத்திற்கு ஆதரவாக பலப்பல நாடுகளும் தன்னுடன் இணையும் என்பதே லேடனின் திட்டம்".அதற்காக விரித்த வலையில் அமேரிக்கா மட்டுமல்லாது பிற நேட்டோ நாடுகளும் சிக்கிக்கொண்டு இன்றுவரை அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
           அதுபோல தினம் ஒரு கேசட்&கிறுக்கல் ஓவியங்கள் அனுப்பப்படுவதும் ஒருவித trap தான்.அதில் ஜார்ஜ்ஸ் சிக்கவேண்டும்.அதனால் அவனுக்கு கடும் உளவியல் நெருக்கடி&குற்ற உணர்வை உண்டாக்கி அதன்மூலம் குடும்பத்தில் சரிசெய்ய முடியாது  விரிசல் உண்டாக்குவது என்பதே இதை அனுப்பியவனின் நோக்கம்.



            தான் சிறுவயதில் வளர்ந்த வீடு கேசட்டில் காட்டப்பட தனியாக வசிக்கும் வயோதிக தாயை வெகுகாலம் கழித்து சந்திக்கிறான்!தாய் ஆச்சரியப்படுகிறாள்.அவளிடம் 'மஜீதை நினைவிருக்கா?நீங்கள் கூட அவனை தத்தெடுக்க நினைத்தீர்களே?' என்று கேட்க "அதெல்லாம் நினைவில்லை!" என்கிறாள்.
            மஜீத்!ஒரு அல்ஜீரிய குடும்பத்தை சேர்ந்தவன்.அவனது பெற்றோர்கள் ஜார்ஜ்ஸ்ன் குடும்பத்திற்காக பணிபுரிபவர்கள்.பாரிஸ்ல் அல்ஜீரிய விடுதலை அமைப்பை சார்ந்தவர்கள் கொன்றிழக்கப்பட்ட பேரழிவில் அவர்கள் இருவரும் மரிக்கிறார்கள்.மஜீத் தனித்து விடப்பட, ஜார்ஜ்ஸ்ன் தந்தையும் தாயும் அவனை தத்தெடுக்க முடிவெடுக்கிறார்கள்.மஜீத்துக்கு தனி அறை அதை ஜார்ஜ்ஸ்ம் பகிர்ந்துகொள்ள வேண்டும்!ஆறுவயது சிறுவனுக்கு இதெல்லாம் கடும் எரிச்சலை உண்டாக்குகிறது.சிறுவன் ஜார்ஜ்ஸ் ,மஜீதிடம் கோழியின் தலையை வெட்ட சொல்லி, பிறகு தனது பெற்றோரிடம்  தன்னை பயமுறுத்தவே இதை அவன் செய்தான் என்று இட்டுகட்டி அவனை வீட்டை விட்டே துரத்தும்படி செய்கிறான்.அனாதை இல்லத்தில் கடுமையான சூழலில் வளர வேண்டிய கட்டாயத்தில் மஜீத்.ஜார்ஜ்ஸ்க்கு கிடைத்த உயர்தர கல்வி உயர்குடி வாழ்க்கை எதுவும் மஜீத்துக்கு கிடைக்காமலே போக ஜார்ஜ்ஸ் காரணம்.
         சிறுவன் ஜார்ஜ்ஸ் சொல்லும் இத்தகைய சிறு புகார்களை அப்படியே நம்பிய ஜார்ஜ்ஸ்ன் பெற்றோர்கள் எத்தகையவர்கள்?அல்ஜீரியர்களுக்கு எதிரான முன்முடிவு கொண்டவர்களா?அவர்கள் வன்முறை ஆசாமிகள் என்பது மனதில் ஆழ பதிந்தவர்களா?இல்லாவிட்டால் எப்படி ஒரு சிறுவன் சொன்ன புகாரை நம்பி மஜீதை அவர்கள் அனாதை இல்லத்தில் சேர்க்க முடிவெடுத்தார்கள்? என்று இங்கேயும் பல கேள்விகள்!
           மஜீதை ஜார்ஜ்ஸ்ன் வீட்டில் இருந்து அனாதை இல்ல நிர்வாகிகள் அழைத்து செல்லும் காட்சி தூரக்காட்சியாக எவ்வித ஓசையும் இல்லாது மவுனமாக காட்டப்படுகிறது.மஜீதின் போராட்டம்.அடம் பிடிக்கும் மஜீதை அமுக்கிபிடித்து வண்டியில் ஏற்றும் அனாதை இல்ல நிர்வாகி என்பதாக அக்காட்சி பார்வையாளனை சலனப்படுத்துகிறது.எதையும் செய்யாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளனாகிய நம்மை ஒருவித குற்ற உணர்விற்கு உள்ளாக்குகிறது(நான் முதலில் சொன்னபடியே ஹேன்கியின் ஸ்டைல் இதுதான்!)

                  மீண்டும் இன்னொரு கேசட்.அதில் ரோடில் காரின் ஊடே ஒரு கேமரா படம் பிடித்தபடியே சென்று மலிவான ஒரு குடியிருப்பில் குறிப்பிட்ட எண் வீட்டில் கதவில் போய் முடிகிறது.அங்கே சென்று ஜார்ஜ்ஸ் பார்க்கிறான்.அங்கெ மஜீத்!மஜீத் பழைய சம்பவங்கள் எதனாலும் பாதிக்கப்படாத பழையவன்மங்கள் எதுவுமே இல்லாத ஒரு நபராகத்தான் காட்டப்படுகிறார்.ஜார்ஜ்ஸ்-ஐ அன்போடும் ஆச்சரியத்தோடும் வரவேற்கிறார்.ஆனால் ஜார்ஜ்ஸ் கடும் வன்மத்தோடு மஜீத்தை வார்த்தைகளால் புண்படுத்திவிட்டு செல்கிறான்.அடுத்தநாள் கேசட்டில் இந்த உரையாடலும் ஜார்ஜ்ஸ் சென்றபின் மஜீத் கதறி அழுவதாகவும் கட்சிகள் ஓடுகிறது.மஜீதின் வீட்டுக்குள்ளேயே எங்கோ ஒரு இடத்தில் மறைவாக வைக்கப்பட்ட கேமரா மூலம் படமாக்கப்பட்ட காட்சிகள் அவை.
மஜீத்

              அப்போ மஜீத் நடித்தாரா?உண்மையில் படம் பிடித்து அனுப்பியது அவரா?அவரது மகனா? என்ற கேள்விகளெல்லாம் இறுதிவரை தொக்கி நிற்கிறது.ஜார்ஜ்ஸ் இருவரையும் போலீசில் மாட்டிவிடுகிறான்.எந்த காத்திரமான ஆதாரங்களும் அவர்களுக்கெதிராக இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
             பிறகு மஜீதின் மகன் ஜார்ஜ்ஸ்ன் அலுவலகத்தில் வந்து பேச முயல்கிறான்.அவனையும் கடுமையாக வசைபாடி துரத்துகிறார் ஜார்ஜ்ஸ்.
பிறகு மீண்டும் மஜீத் தன் இல்லத்திற்கு ஜார்ஜ்ஸ்-ஐ அழைக்கிறார்.கடுமையான எரிச்சலில் இருக்கும் ஜார்ஜ்ஸ் பேச முயல திடீரென்று மஜீத் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தம் பீய்ச்சியடிக்க இறக்கிறார்.
             உண்மையில் இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும்.வன்முறை காட்சிகள் என்றால் நொடிக்கு நொடி மிசின் கன் சுடுவது,குண்டுகள் எறிவது,அரிவாள் வெட்டு,கத்திக்குத்து என்பவை மட்டுமல்ல.அதைவிட வலுவான அதிரவைக்கும் வன்முறை காட்சி உண்டு.படம் முழுக்க எல்லாருமே மிக மெல்லிய தொனியில் பேசிக்கொண்டிருக்க ஒரே ஒருவரி வசனத்தை ஒருவன் சத்தமாக பேசினால் அதுவும் வன்முறைதான்!அதுபோல இப்படத்தில் எவ்வித அதிரடி கேமரா நகர்வுகள் ஆக்ஷன் காட்சிகள் இல்லாத நிலையில் திடீரென்று மஜீத் கழுத்தை அறுத்துக்கொண்டு இறப்பது மிகக்கடுமையான வன்முறையை பார்வையாளனுக்கு கடத்துகிறது.
ஜார்ஜ்ஸ்

        மஜீத் கழுத்தை அறுத்துக்கொன்டதும் உடனே வழமையாக கேமரா ஜார்ஜ்ஸ்ன் முகத்திற்கு க்ளோசப் செல்லவில்லை.மஜீத்தையே அசையாமல் காட்டிக்கொண்டிருக்கிறது.நாமும் மவுன சாட்சியாக அதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.தனது மரணத்திற்கு ஒரே சாட்சியாக ஜார்ஜ்ஸ்ஐ இருக்க வைப்பதன்மூலம்(அங்கே கதவை தாழித்துவிட்டு அங்கேயே சரிந்து மரிக்கிறார் மஜீத்.அந்த உடலை தாண்டி செல்லாமல் ஜார்ஜ்ஸ்-ஆல் வெளியே செல்ல முடியாது) மஜீத் சொல்லவருவது என்ன?
           "எனக்கு கிடைக்கவேண்டிய உயர்குடி வாழ்க்கையை தட்டிப்பறித்த உன் கண் முன்னேயே என் உயிரை விடுகிறேன்.இந்த மரணத்தின் குற்ற உணர்வு உன் வாழ்நாள் முழுவதும் உன்னையே சுற்றிக்கொண்டிருக்கும்" என்று மஜீத் சொல்லாமல் சொல்கிறாரா?ரகசிய கேமரா கொண்டு படம் பிடித்து கேசட் அனுப்பியது மஜீதின் மகனா?அப்போது மஜீத் சிறுவயதில் துரத்தப்பட்டது அவர் மகனுக்கு தெரியுமா?இப்படி பல கேள்விகள் பார்வையாளனை நோக்கி கேட்கப்படுகின்றன.
            இடையில் ஜார்ஜ்ஸ்ன் மகன் பதின்ம வயதினருக்கே உரிய ஒருவித விரக்திநிலை,பெற்றோரை கண்டாலே எரிச்சல்,பெற்றோரின் கேள்விகள் அக்கறைகள் மீதான ஒவ்வாமை இவை தாங்காமல் நண்பன் வீட்டில் ஓரிரவு பெற்றோரிடம் சொல்லாமல் தங்குகிறான்.பதட்டமடையும் ஜார்ஜ்ஸ் மற்றும் ஆன் எங்கு தேடியும் பிள்ளை கிடைக்காததால் மீண்டும் மஜீத் மற்றும் அவரது மகன் மீதே சந்தேகப்படுகின்றனர்.அடுத்தநாள் கூலாக வீட்டிற்கு வந்துவிடுகிறான் பியர்ரே.அவனுக்கு தனது பெற்றோரை ஓரிரவு முழுக்க  பதட்டமடைய செய்ததன் மூலம் தான் அனுபவிக்கும் விரக்திநிலைக்கான சிறு ஆசுவாசமாய் சிறு மருந்தாய் அதை  அவன் உணர்கிறான்!இது சாடிசமா என்றால் ஆம் இல்லை என்று தெளிவாக சொல்லிவிட முடியாத ஒரு கேள்வி.
பியர்ரே

             அவிழ்க்கப்படாத முடிச்சுகள்; தீர்க்கப்படாத மர்மங்கள்; தண்டிக்கப்படாத குற்றங்கள் எதுவும் மிச்சமிருந்து பார்வையாளனை குழப்பி விடவேகூடாது என்று உறுதியாக  இருக்கும் ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில் பல்வேறு கேள்விகள்,சந்தேகங்கள்,தீர்க்கப்படாத மர்மங்களோடு படத்தை முடிப்பார் ஹேன்கி.மேற்சொன்னவாறு  எல்லா குழப்பங்களையும் தீர்ப்பதாக  முடித்தால் படம்  முடிந்ததுமே பார்வையாளன் அந்த சினிமாவை மறந்துவிடுவான்.இந்தமாதிரி தொக்கி நிற்பது போலவும்; பல்வேறு அணுகுமுறைகள் கொண்டதாக  (ambigious) முடிப்பதன் மூலம் பார்வையாளன் படத்தை மறக்காது இருப்பான்  என்பது  அவர்  வாதம்!
        மேலும் படம் டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது.சினிமா என்று தெரியாது நிஜத்தில் ஜார்ஜ்ஸ்ன் குடும்பத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்!மேலும் ஜார்ஜ்ஸ்ன் குடும்ப நடவடிக்கைகளை படமாக்கி அனுப்பப்பட்ட கேசட்டுகளை பார்க்கும்போது எப்படி காட்சியமைப்பு உள்ளதோ அதேபோலத்தான் படம் முழுவதும் உள்ளது.அதற்காகவே டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்.அதாவது நாமே ஜார்ஜ்ஸ்ன் வாழ்வை ஒளிந்திருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துதல்.
                 படம் முடியும் காட்சியில் நமக்கு யாரென்றே தெரியாத இருவர் பேசிக்கொண்டிருப்பதாக முடிகிறது.அப்படி பார்த்தால் ஜார்ஜ்ஸ் ஆன்ஆகியோருமே நமக்கு யாரென்று தெரியாதவர்கள்தான்!அவர்களின்  எந்த பரிமாணத்தை இயக்குனர்  நமக்கு காட்டினாரோ  அந்தளவே அவர்கள் பற்றி தெரியும்!அவர்களுமே  நமக்கு  அன்னியர்கள்தான்!








          
           
            
           

Saturday, 15 July 2017

Strangers on a Train-Patricia Highsmith

"உனக்கு இடையூறா இருக்கும் மனைவியை நான் கொல்றேன்.எனக்கு இடையூறா இருக்கும் எனது தந்தையை நீ கொன்றுவிடு!"
                   என்று ப்ரூனோ (Bruno) கய் ஹெய்ன்ஸ்(Guy Haynes) -இடம் கேட்பதுதான் கதையின்  மையக்கரு என்று பலர் எழுதியுள்ளதை பார்த்தேன்.
கதையின் மையக்கரு அதுவல்ல!இது பல சிக்கலான முடிச்சுகளை கொண்டது.உதாரணமாக Guy க்கும் ப்ரூனோவுக்குமான உறவு ஒருபாலின சேர்க்கையின் கீற்றை கொண்டது.அப்போதிருந்த சமூக கட்டுப்பாடுகளால் (திரைப்படத்தில் production code கட்டுப்பாட்டால்)கதையில் அது விரிவாக சொல்லப்படவில்லை என்றாலும் அதை புரிந்துகொள்ளமுடிகிறது!

               கய் ஒரு வளர்ந்துவரும் ஆர்கிடெக்ட்.பால்மைரா ப்ராஜெக்ட், சிறுநகர ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ப்ராஜெக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருபவன்!நல்ல திறமைசாலி!மனைவி மிரியம் வேறு சில ஆண்களோடு உறவுகொன்டதை தெரிந்துகொண்டு விவாகரத்து பெற நினைக்கிறான்.இப்போது அவள் கர்ப்பம்!காரணம் அவனல்ல!
               மேலும் மிரியம் தனது கரியருக்கு இடையூறாகவும், விவாகரத்து பெறுவதில் பெரும் தடைக்கல்லாகவும் இருப்பதாகவும் Guy நினைக்கிறான்.அதை ரயிலில் தன்னுடன் வலிந்து பேசிக்கொண்டிருக்கும் ப்ரூனோவிடம் எதேர்ச்சையாக சொல்கிறான்.அப்போதுதான் முதல் வரியில் இருக்கும் வரிகளை ப்ரூனோ சொல்கிறான்.
              இப்ப ப்ரூனோ அவளைக்கொன்றும் விடுகிறான்.இப்போது மொத்த  நெருக்கடியும் கய்யின் மேல்!இப்போது அவன் மிரியம் கொலை தொடர்பாக  தன்னிடம் விசாரிக்கும் போலீசிடம்(முதல் சந்தேகத்திற்குரிய நபர் கைதான்) ப்ரூனோவை காட்டிக்கொடுத்திருக்கலாம்!"நான் எதேர்ச்சையாகத்தான் மிரியம் பற்றி சொன்னேன்.அதை ப்ரூனோ தீவிரமாக எடுத்துக்கொண்டு அவளைக்கொன்றுவிட்டான் பாவி" என்று தன்னை புனிதனாக்கிக்கொண்டு ப்ரூனோவை சிக்க வைத்திருந்தாலேபோதும்!
             அவன் நிம்மதியாக(!!??) வாழ்வை தொடர்ந்திருக்க முடியும்!தான் விரும்பும் ஆன்(Anne) னோடு சந்தோசமாக வாழ்திருக்கலாம்!ஆனால் அவன் அதை செய்யவில்லை!காரணம் ப்ரூனோ செய்த கொலையில் தனக்கும் பங்கிருப்பதாகவும் ப்ரூனோ தண்டனைக்குறியவன் என்றால் தானும் அவ்வாறே என்றும் எண்ணுகிறான்!

             அதனால் இன்னும் நெருக்கடிக்கு உள்ளாகிறான்.இப்போது அவன் ப்ரூனோவின் தந்தையை கொல்லவேண்டும்!ப்ரூனோ விடுவதாக இல்லை.சுத்திசுத்தி வருகிறான்!கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறான் கை.ஆன் அதை பற்றி கேக்கும்போது "வேலைப்பளு!"என்று சமாளிக்கிறான் கய்.
                தன் வீட்டின் ப்ளான்,தெருவின் ப்ளான்,எந்த நேரத்தில் வீட்டில் யார் இருப்பார்கள் என்ற அட்டவணை,தந்தையை கொன்றுவிட்டு எந்தவழியே குதித்து வெளியேறி ரயிலேற வேண்டும் என்பதுவரை மிகத்துல்லியமாக  வரைபடங்களோடு கைக்கு ப்ரூனோ கடிதம் அனுப்புகிறான்.திரும்பத்திரும்ப அதைப்பார்த்து பார்த்து கய்க்கே ப்ரூனோவின் வீட்டில் பலகாலம் வாழ்ந்துவிட்ட உணர்வு!தந்தையை கொல்ல செல்கிறான்!"ஏற்கெனவே பலமுறை ப்ரூனோவின் தந்தையை கொன்றதுபோலவும் இது அதில் ஒரு தடவை" என்பதாக அவனுக்கு தோன்றுகிறது.சுடுகிறான்.தப்புகிறான்.ப்ரூனோ பிளான்படி அல்லாது வேறுவழியில்!காட்டுசெடிகள் கிழிபட்டு மண்டையில் அடிபட்டு வீடு வந்து சேர்கிறான்.
               ஆன் காயம் பற்றி கேக்கும்போது சமாளிக்கிறான்.ப்ரூனோவின் தந்தையின் ஆஸ்தான டிடெக்டிவ் ஜெரார்ட் துப்பறிய ஆரம்பிக்கிறார்!போலீசு மிரியம்&ப்ரூனோவின் தந்தை இருவரையும் கொன்றது யார் என்பது தெரியவில்லை என்று ஃப்ரீயாவிட ஜெரார்டோ மிகத்தீவிரமாக துப்பறிகிறார்
         ஜெரார்ட் துப்பரிவதை பிறகு பார்ப்போம்.இப்போது மிரியத்தை ப்ரூனோவும்,ப்ரூனோவின் தந்தையை கையும் கொன்றாகிவிட்டது!போலீசும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை!இப்ப இவர்கள் இருவரும் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்களே? என்று கேட்டால் இல்லை!
Patricia Highsmith

         ப்ரூனோவுக்கு என்ன பிரச்சனை?தந்தை மேல போயாச்சு!ஜாலியா சொத்துக்களை குடித்தே அழிக்க தடைகள் ஏதுமில்லை(அவனது தாய் இவைகளை கண்டுகொள்வதில்லை) மஜாவா  இருந்துட்டு போகலாமே!ஆனால் அவனால் அப்படி இருக்கமுடியவில்லை!Guy மீதான ஒரு ஈர்ப்பு(ஒருபாலின ஈர்ப்பாகவே நாம் இதை புரிந்துகொள்ள வேண்டும்) அதையும்தாண்டி Guy தனிப்பட்ட வாழ்விலும்,கரியரிலும்,பொதுவாக சமூகத்திலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு நபராக இருப்பதை ப்ரூனோ பார்க்கிறான்.
               ப்ரூனோவால்  எதுவாக இருக்கவே முடியாதோ அதுவாகவெல்லாம் கய் இருப்பதே அவன் மீதான ஈர்ப்புக்கு மற்றுமொரு காரணம்.திரைப்படத்தில்கூட
"Oh,i certainly admire people who do things";
" You know it must be pretty exciting to be so important"
என்று கய்யிடம் ப்ரூனோ சொல்வதாக வசனம் வரும்.
                 ப்ரூனோவுக்கு தனிப்பட்ட தொழிலோ வேலையோ இல்லை!அவன் ஒரு ப்ளேபாய்!குடி குடி குடி&சாகசங்கள்(கண்களை கட்டிக்கொண்டு காரை நூறு மைல் வேகத்தில் செலுத்தியிருக்கிறான்) தான்!எந்தளவுக்கு என்றால் குடித்தால்தான் அவன் ஸ்டெடியா இருப்பான் எனுமளவு குடி!தந்தை இருந்தவரையில் பணம் கொடுக்காமல் மிக கண்டிப்பாக இருந்தார்!
                  Guyன் மனநிலை இந்தளவு எளிதாக விளக்கிவிடக்கூடியதாக இல்லை!முதலில் ப்ரூனோவை போலீசிடம் காட்டிக்கொடுக்காமல் இருந்தது,பிறகு அவனின் நெருக்கடிக்கு பணிந்து தந்தையை கொல்வது,பிறகும் விடாமல் ப்ரூனோ தன்னைச்சுற்றியே வரும்போது எரிச்சலோடு ஒருவித ஈர்ப்பையும் உணர்வது,மனைவி ஆனிடம் ப்ரூனோ பற்றி சொல்லும்போதுகூட அவன் தடுமாறுகிறான்.ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு கதை சொல்கிறான்!ப்ரூனோகடலில் வீழ்ந்து மரித்தபோது "எங்கே என் சகோதரன்" என்கிறான்!
               ப்ரூனோவின் தந்தையை கொன்ற சிலகாலம்வரையில்  பெரிதாக கவலைப்படாத கய் போகப்போக தான் இரு நபர்களாக உடைபட்டுநிற்பதை உணருகிறான்.
ஒருவன் கொலைகாரன்
இன்னொருவன் ஆன்-ஐ திருமணம் முடிக்கவிருக்கும் ஒரு ஆர்கிடெக்ட்.
இந்தப்பிளவு போகப்போக அதிர்கரித்துக்கொண்டே போவதை கய் உணர்கிறான்.
               ஜெரார்ட் ப்ரூனோவுக்கும் கய்க்குமான ரயில்சிநேகத்தை கண்டுபிடிக்கிறார்!போலீசிடம் அதைப்பற்றி சொல்கிறார்(கொலைகளை பரிமாறிக்கொண்டது பற்றி).போலீசு "நீங்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்பே ரிட்டையர் ஆகியிருக்க வேண்டியவர்!ஓய்வெடுங்கள்" என்று பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.
             ஜெரார்டுக்கு தெரியும்!சட்டம் இருவரையும் தண்டிக்காவிடினும் அவர்களது குற்ற உணர்ச்சியே அவர்களை தண்டிக்கும் என நம்புகிறார்!உறுமீன் வரும்வரையில் காத்திருக்கிறார்!வழக்கை விசாரித்து முடித்ததாக போலியாக தகவல் பரப்புகிறார்!
           இந்த நேரத்தில் ப்ரூனோ சொகுசு படகிலிருந்து கடலில் குதித்து இறக்கிறான்!
           ஏற்கெனவே குற்ற உணர்ச்சியால் இரண்டாக பிளவுற்றிருந்த கய் இப்போது மேலும்  அதிக நெருக்கடிக்கு ஆளாகிறான்.இருகொலைகளின் பாரத்தையும் தான் தனியொருவனாக சுமக்கவேண்டிய கட்டாயம் மூச்சு திணற வைப்பதை உணர்கிறான்.
          இந்த பாரத்தை இந்த குற்ற உணர்ச்சியை யாரிடமாவது சொல்வதன்மூலம் குறைத்துவிட எத்தனித்து மிரியம் கொலையுண்டதால் அதிகம் பாதிக்கப்பட்ட அதிகவருத்தத்தில் இருக்கும் நபர் யாரென யோசிக்கும்போது அதிர்கிறான்!மிரியத்தின் சகோதரன் அதைப்பற்றி எந்தவித எண்ணங்களுமே இல்லாதவனாக இருக்கிறான்.மிரியத்தின் தாயும் அவ்வாறே!மிரியத்தை திருமணம் செய்வதாக இருந்த ஓவன்(Owen) நினைவுக்கு வருகிறான்.அவனின் பிள்ளையத்தான் மிரியம் சுமந்துகொண்டிருந்தாள்! 

            ஓவனை தனி ஓட்டல் அறைக்கு அழைத்து அனைத்தையும் சொல்கிறான்!அனைத்தையும்!இப்படி அனைத்து  உண்மைகளையும் யாரிடமாவது சொல்லிவிட்டால் தனது மனப்பாரம் அகன்றுவிடும் என்பது வெறும் கற்பனை என்பதை உணர்கிறான்.அனைத்தையும் சொன்னபின்பும் கடுமையான குற்ற உணர்ச்சியை உணர்கிறான்.
            தான் சொன்ன எதையுமே தான் நினைத்த ரியாக்சனோடு உள்வாங்காது indifferent ஆக இருக்கும் ஓவனை பார்த்து கத்துகிறான்!அப்போதும் ஓவன் அசையாது ஸ்காட்ச் அடித்துக்கொண்டிருக்கிறான்.சமூகம்-சட்டம்-தனி மனிதன் போன்ற விஷயங்களை பற்றி லெக்சர் கொடுக்கிறான் கய்.ஓவன் எதையும் கண்டுகொள்ளவில்லை!
       ஆனால் அனைத்தையும் சரியாக வைக்கப்படாத தொலைபேசி(இது ஜெரார்டின் திட்டம்) மூலம் ஜெரார்ட் கேட்டுவிட்டு அறைக்கதவை தட்டியவுடன் திறந்து "என்னை கைது செய்யுங்கள்" என்கிறான் கய்! 


              இதில் முக்கியமாக எழுப்பப்படும் கேள்வி ஒருவரை கொலை செய்தால்; அந்த நபரின் இழப்பை யாருமே பொருட்படுத்தவில்லை என்றால் அந்தக்கொலை குற்றமாகாதா?இதில் மிரியம் கொலையுண்டதாலோ ப்ரூனோவின் தந்தை கொலையுண்டதாலோ யாரும் எதையும் இழக்கவில்லை!அதை யாருமே பொருட்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும்!இருந்தாலும் கய்யின் மனதில் ஆட்டிப்படைக்கும் குற்ற உணர்ச்சி அவனை சரணடைய வைக்கிறது! 

                  இப்போது இதை மையமாக வைத்து ஹிச்காக் எடுத்த படத்தைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் இந்த நாவலின் மையக்கருவாக பலராலும் கருதப்படும் நான் மேற்குறிப்பிட்ட அந்த இரண்டுவரிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும்!

            நாவல் அகவயமானது என்றால் ஹிச்காக்கின் படம் புறவயமானது!நாவலில்  கய் ஒரு ஆர்கிடெக்ட்!சினிமாவில் டென்னிஸ் வீரன்.அந்த டென்னிஸ் மேட்சையே வைத்து நகம் கடிக்கும் த்ரில்லை கொடுத்திருப்பார் ஹிச்காக்!சினிமாவில் கய் நல்லவன்-ப்ரூனோ கெட்டவன்!
     நாவலில் அந்தவேறுபாடு போகப்போக அழிந்துவிடும்!கய் நாவலில் கொல்கிறான்.சினிமாவில் கொல்வதில்லை!சினிமா ஒரு பரபரப்பான சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கவைக்கும் டிபிகல் ஹிச்காக் படம்!நாவலோ முழுக்கமுழுக்க உளவியல் சார்ந்தது!அதற்காக படம் மோசமானது என்று சொல்லவில்லை.standalone திரைப்படமாக அது ஹிச்காக்கின் மற்றுமொரு மகுடம்!

          பல intense ஆனா தருணங்கள் நாவலில் உண்டு.உதாரணமாக ப்ரூனோவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனது உடைகளை அனைத்தையும் கிழித்தெறிந்துவிட்டு மெத்தையில் மயங்கி சரிவதாகவும் மருத்துவர் ஊசி போட்ட உடனேயே அந்த asphyxiating உணர்வு நீங்கியதாகவும் வரும்!கய் ப்ரூனோவின் தந்தையை கொன்றபின் எந்த குற்ற உணர்வுமே இல்லாததைக்கண்டு தன்னைத்தானே வியக்கிறான்.பிறகு அவனே அந்த குற்ற உணர்வின் பாரத்தால் மூச்சுத்திணற வைக்கும் அந்த பிடியால் வீழ்கிறான்!

Tuesday, 13 June 2017

ஆளவந்தான் (2001)


 முன்பு ராமன் ராகவ் பற்றிய பதிவில் குறிப்பிட்டதை மேற்கோளுடன் துவக்கலாம்.
ஆளவந்தான்  நந்து  கேரக்டர்  உங்களுக்கு  நினைவில்  இருக்கலாம் ."பூ  விழாம  தல  விழுந்திருந்தா  நீ  இந்தப்பக்கம்  நா  அந்தப்பக்கம்"  என்று  நந்து  விஜயிடம்  சொல்வதாக  ஒரு  வசனம்  இருக்கும்.நந்து  சித்தியிடம்  வளராமல்  மாமாவிடம்  வளர்ந்திருந்தாலும்  இதே  மாதிரிதான்  ஆகியிருப்பார்.The  inherent desire to sin  என்பது  சிறுவயதிலேயே   நந்துவின்  மனதில்  இருந்த  விஷயம்.அதை  சித்தி  ஊதி  பெருக்கிவிட்டாள்  என்று  வேண்டுமானால்  சொல்லலாம்.

படம் ஆகா!என்றோ சூரமொக்கை என்றோ பைனரியில் மேம்போக்காக கடந்துபோக விரும்பவில்லை.படம் பற்றிய எனது கருத்துக்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்!pros and cons என்றெல்லாம் தனித்தனியாக பத்தாப்பு பிள்ளை எக்ஸாம் எழுதுவதுபோல எழுதாமல் random ஆக சில விஷயங்கள்.
.
ஆளவந்தான் படம் பற்றிய விளம்பரங்களை மறக்க முடியாது!அப்போதெல்லாம் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு வெப்சைட் உருவாக்குவார்கள்.படம் வெளிவந்தும் ஒரு நான்கைந்து மாதங்கள் உயிரோடு இருக்கும்.பிறகு டொமைன் நேமுக்கு காசு கட்டாமல் விட்டுவிடுவார்கள்.அதுபோல நான் பார்த்தது ஏப்ரல் 2001 ல்.சைட் dark theme பின்னணியில் Cast&Crew,Synopsis என்றெல்லாம் தமிழ் சினிமா கண்டிராத புதுப்புது வார்த்தைகளை அதில் காண முடிந்தது!

         பரபரப்பாக பேசப்பட்ட(!!??) கமல் நிர்வாணமாக இருக்கும் போட்டோ ,ரியாஸ் கான் இருண்ட பின்னணியில் எடுக்கப்பட்ட போட்டோ என்று அப்போது வந்த மற்ற படங்களின் வெப்சைட்டுகளை காட்டிலும் முற்றிலும் வேறாக இது இருந்தது.(சமகால ரிஷிtheமூவி.காம் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை :D )

        பிறகு டிரைலர்!டிரைலரின் பின்னணியில் கமல் அமெரிக்கன் ஆங்கில  அக்சென்டில் deep bass  ல் வாய்ஸ் ஓவர் போல பேசியிருந்தார்!உண்மையிலேயே மிரட்டலாக இருந்தது என்பதை மறுக்க முடியாது!இப்போது அந்தமாதிரி பாணி என்பது தேய்வழக்காகி போய்விட்டதையும் சொல்லவேண்டும்(குறிப்பாக இங்குலீஸ் பண்டிட்டு கவுதம் மேனன் அதை தேவைக்கும் அதிகமாய் பயன்படுத்தி கடுப்பேற்றிவிட்டார்).
        விஜய் கேரகடருக்காக கமல் ராணுவத்தில் பயிற்சி பெற்ற வீடியோவெல்லாம் வந்தது!"அடியாத்தீ என் மகன் என்னமா நடிச்சிருக்கான்" என்று உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டார் காந்திமதி.
         அப்புறம்  விஜயும் நந்துவும் arm wrestle பண்ணும் அந்த அதகள ஸ்டில் பெரிய்ய்ய பேனராக மவுன்ட் ரோடில் வைத்திருந்தார்கள்!அருகில் பார்த்தாலே பரவசம் பேனர் பரிதாமாக தெரிந்ததையும் சொல்லவேண்டும்!

         காஷ்மீர் காட்சிகளை இங்கேயே செயற்கை  செட் போட்டு பனியின் பின்னணியில் காட்சி எடுத்ததாக பரப்பரப்பான பேச்சிருந்தது(ஒப்பனிங் காட்சி).25 கோடி செலவானதாக அங்கலாய்த்தார்கள்.ஆனால் 1997 ல் வந்த ரட்சகனுக்கே அவ்வளவு செலவானது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
         இப்ப ஆளவந்தான் படம் என்பதே முழுக்கமுழுக்க நந்து கேரக்டரை சுற்றியே பின்னப்பட்டது. குணா பட குணாவுக்கும் நந்துவுக்கும் ஒற்றுமை என்று பார்த்தால் பெண்!வேற்றுமை என்று பார்த்தால் அதே பெண்!
        குணாவுக்கு அபிராமி வேண்டும்!அபிராமி வந்தால் எல்லாம் மாறிடும்!உலகமே utopia வாகிவிடும்!நந்துவுக்கு உலகில் உள்ள பெண்கள் எல்லாருமே அவன் சித்தியை நினைவுபடுத்துபவர்கள்(தாய் தவிர்த்து).அவர்களை கொல்வதே உலகை காக்கும் அல்லது குறிப்பாக  தனது சகோதரனை காக்கும்  வழி.பெண்களை (misogynist) அடியோடு வெறுப்பவன்.

         நந்து நெனச்சிருந்தா கவிஞனாகவோ விஞ்ஞானியாவோ வந்திருக்கலாம் என்று டாக்டர் சொல்வதாக காட்சி வரும்.முன்பு குறிப்பிட்டது போல அவன் சிறுவயது குரூரங்களிளிருந்து வெளியே வந்திருக்கலாம்!அவன் வெளியே வர விரும்பவில்லை!தன்னைத்தானே victimise  செய்துகொண்டான்.

       அப்படி தன்னை பாதிகப்பட்டவனாகவே காட்டிக்கொள்வதன் மூலம் தனது சகோதரனுக்கு தன தியாகத்தின் தீவிரத்தை விளங்கவைத்துக்கொண்டே இருக்கமுடியும் என நம்புகிறான்.
          குணா உள்ளூர ஒரு பயணம் என்றால் ஆளவந்தான் வெளிநோக்கிய பயணமாக கொள்ளலாம்.இதில்ஒருபிரச்சனை.உளவியல் ரீதியாக நந்துவை சுற்றியே கதையை நகர்த்தாமல் படத்தைதிசைமாற்றியது!கமல் படமாக கொண்டுபோகாமல் நடுவில் ரசினி படமாக்க முயன்றது.உதாரணமாக நந்து என்பீல்ட் பைக் துவங்கி லாரி வரை சகஜமாக ஓட்டுவது,சாகசங்கள் செய்வது,மேலே பறந்துகொண்டிருக்கும்(Gold winner)பலூனில் பறந்துபோய் விழுவது(இதேமாதிரி காட்சியை லிங்கா படத்தில் ரசினிக்கு வைத்தபோதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன) இதுமாதிரி திசை திருப்பியது எடுபடவில்லை என்றே சொல்லவேண்டும்!

         அதென்ன ரசினி படம்?அப்போ கமல் படம் என்று சொல்வதற்கான காட்சிகள் உண்டா? என்று கேட்டால் உண்டு!மனீஷாவுடன் நந்து உரையாடும் அந்த ஹோட்டல் அறை காட்சியை சொல்லலாம்!கிளுகிளுப்பாக ஆரம்பித்து மனீஷா திறந்த பாத்ரூமில் சிறுநீர் கழிப்பதாக fetish ஆக மாறும் அந்தக்காட்சிக்கு இணையா இன்றுவரை தமிழில் வரவில்லை!
              அதுவரை வந்த தமிழ்படங்களில் மனநலம் பாதிக்கப்பதேன்றால் மெண்டல் அல்லது நெற்றிபொட்டிற்கு அருகே விரலை வைத்து சுத்தும் சைகை அதிகபட்சம் அம்னீசியா என்பார்கள்!இதில் வித்தியாசமான நோய் .
He is a schizophrenic with paranoid illusions.இதன்பின்னர் வந்த கஜினி போன்ற படங்களில் பல்வேறு புது நோய்களை மேற்கோள் காட்டியிருப்பார்கள்!
மேலும் இப்படத்தில் வரும் 2D அனிமேஷன் காட்சிகளை பார்த்துத்தான் டரண்டினோ Kill bill படத்தில் அதுமாதிரி வைத்தாரா?என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை!ஆனால் இப்படத்தில் வரும் 2D அனிமேஷன் காட்சிகள் ரணகளம்!

           இப்ப மனநல காப்பகத்தில் நந்துவும் சுல்தான்(ரியாஸ் கான்) சம்மந்தப்பட்ட காட்சிகள் பற்றி சொல்லும்போது கண்டிப்பா Twelve Monkeys(1995) படத்தை குறிப்பிட்டாக வேண்டும்.மனநல காப்பகத்தில் இருக்கும் பிராட் பிட்.டைம் டிராவலில் தவறாக அங்கு சிக்கிக்கொள்ளும் ப்ரூஸ் வில்லிஸ்.ப்ரூஸ் அதிகமாக பேசாமல் அமைதியாக இருப்பார்.பிராட் பிட்டோ அவரிடம் தொணதொணவென்று பேசிக்கொண்டும் குதித்துக்கொண்டும் சேட்டைகள் செய்துகொண்டும் இருப்பார்!அதை அப்படியே இங்கே பயன்படுத்தியிருப்பார்.சுல்தான் பிராட் பிட் போல சேஷ்டைகள் செய்வதும் நந்து அதிகம் பேசாது அமைதியாக இருப்பதும்!

     
மேலும் நந்து கேரக்டர் என்பது Bane ன் சாயலும் கொண்டது!
இன்னொரு பிரச்சனை இரட்டை வேடம்!முதலில் என்எஸ்ஜி வீரனாக விஜய் கேரக்டரில் நடித்த கமல் பிறகு தினம் நாற்பது முட்டையின்  வெள்ளைக்கருவெல்லாம் தின்று பயங்கரமாக உடலை ஏற்றி நடித்திருப்பார்.ஆனால் துவக்கத்தில் வரும் காஷ்மீர் மிஷன் காட்சியில் பேருக்குத்தான் விஜய்!உடலளவில் நந்து!தடியான ஒட்டுமீசை மொட்டைத்தலையை மறைக்கும் குளிர்கால தொப்பி என்று ஒருமாதிரி சமாளித்திருப்பார்கள்(இதேமாதிரி உத்தமவில்லனில் மீசையில்லாதும் பாபநாசத்தில் விஜய் போலவே தடியான "ஒட்டாத" ஒட்டுமீசை வைத்தும் நடித்திருப்பார்).அதேபோல இரு கமல்களும் மோதும் அந்த மொட்டைமாடி காட்சியிலும் உடையளவில்  விஜய் -உடலளவில் நந்து என்றுதான் இருக்கும்(அங்கே மொட்டைத்தலையை மறைக்க புல்லட் ப்ரூப் ஹெல்மட்!).இவை படத்தில் கொஞ்சம் தனித்து தெரிந்தன.தொழில்நுட்ப குறைபாட்டால் வேறு வழியில்லாமல் அப்படிஎடுத்திருப்பதாகநினைக்கிறேன்.
ஒட்டுமீசை!மொட்டையை மறைக்க தொப்பி!

             அப்புறம் சிறுவயதில் இருந்தே நந்து மனநல காப்பகத்தில்தான் வளர்ந்தவன்.தொடர்ச்சியாக schizophrenia வுக்கு மருந்துகள் சாப்பிட்டுவன்தவர் திடீரென்று காப்பகத்தில் இருந்து தப்பித்ததும் வெறும் போதை ஊசியை போட்டுக்கொண்டு(அது எங்க விக்குது என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்காம்!)  மாத்திரைகள் உண்டாக்கும் மிகக்கடுமையான  withdrawal effect ஐ கடந்து சென்றார் என்பது பக்கா ரசினி ஸ்டைல் :D

            கடுமையான schizoprenia இருந்தும் பட இறுதியில் "அந்த பொண்ணுகிட்ட சாரி சொல்லிடு"ன்னு விஜயிடம்  சொல்லும் காட்சி அபத்தத்தின் உச்சம்!இப்படியா நந்து கேரக்டரை பில்டப் செய்து ஒரேடியா போட்டு உடைப்பார்கள்?இது டிபிகல் தமிழ் சினிமா பாணி!அதாவது பட துவக்கத்தில் ஒரு கேரக்டருக்கு செமத்திய பில்டப் கொடுப்பதும் இறுதியில் திருந்தி வருந்துவதாகவோ(தனி ஒருவன் அரவிந்த்சாமி!) மன்னிப்பு கேட்பதாகவோ காட்டி அந்த கேரக்டரை மொத்தமா சாகடிப்பது! அதிலும் அந்த கேஸ் சிலிண்டர்களை நந்து பிளக்கும் காட்சி இன்னொரு அபத்தம்!


 
           மனநல காப்பகத்தில் இருபத்தஞ்சு வருஷம் இருந்தவர் தொடர்ந்து மனநல மருந்துகளை(கண்டிப்பா அதில் muscle relaxant இருக்கும்) உட்கொண்டவர் இப்படி அதீத பலசாலியாக மாறுவது எப்படி என்பது யாருக்குமே புரியவில்லை(நந்து ஒரு battalion க்கு சமம் என்று ஒரு வசனம் வேறு வருகிறது).அவ்வளவு psyche மருந்துகளை சாப்பிட்டவன் ஒரு கிளாசைக்கூட  இறுகப்பிடிக்க கூட முடியாது என்பதுதான் நிஜம்!இங்கும் ரசினி ஸ்டைல் போல!
                       மேலும் மனநல பிறழ்வு கதாபாத்திரங்கள் அவ்வப்போது hallucinate ஆகும்!அதை ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு ஸ்டைலில் காட்டியிருப்பார்கள்!உதாரணமாக The Dark Knight படத்தில் ஜோக்கர் ஹாலுசிநேட் ஆகும் அந்த கார் காட்சி ரொம்ப subtle ஆ இருக்கும்.
Joker's hallucination
இப்படத்தில் நந்துவின் hallucination கொஞ்சம் flashy ஆக இருக்கும்!
நந்துவின் hallucination

          வணிக சினிமா என்ற ஒற்றை வார்த்தையில் மேற்கண்ட குறைகளை மொத்தமா மூடி மறைத்துவிடலாம்தான்!ஆனாலும் நந்து என்ற அற்புதமான கேரக்டரை மிக மோசமாக பயன்படுத்திக்கொண்டதை விமர்சிக்காமல் இருக்கமுடியாது.
          Shankar-Ehsaan-Loy ன் இசை என்றாலே bass heavy யாத்தான் இருக்கும்(டான்-2,Zingadi na milegi dobara,விஸ்வரூபம்..! etc..etc..) இப்பட பாடல்கள் இன்றும் அபிமானதாக உள்ளன.பின்னணி இசை மறைந்த இசையமைப்பாளர் மகேஷ்.பாடலின் bass hevy தன்மை பின்னணி இசையில் இல்லாமல் போனது!

          திசைமாறாமல் முழுக்கமுழுக்க  நந்துவின் உளவியல் ரீதியான  பயணத்தை மட்டும் தொடர்ந்திருந்தால் படம் அற்புதமாக வந்திருக்கும் என்பது என் எண்ணம்!இருந்தாலும் இன்றும் படத்தை என்னால் ரசிக்க முடிவதற்கு காரணம் நந்து!
    

Friday, 14 April 2017

The Big Lebowski(1998) மற்றும் பிலிப் மார்லோ


                பெரும்பாலும்  படங்கள் எவ்வித prerequisite(வரலாற்றுப்பரிச்சயம் இருக்க வேண்டும்/ஒரு குறிப்பிட்ட நாவலை வாசித்திருக்க வேண்டும்/இசைத்தொகுப்பை கேட்டிருக்க வேண்டும் என்பது போல) ம் இல்லாது தனித்தே ரசிக்கக்கூடியதாக இருக்கும்.ஆனால் சில படங்கள் நாம் அதை பார்ப்பதற்கு தயார்படுத்திக்கொண்டாலே அன்றி அதை ரசிக்கவோ உள்வாங்கவோ முடியாது.கோயன் சகோதரர்களின் The Big Lebowski(1998) அப்படிப்பட்ட ஒரு படம்.



                     சில வருடங்களுக்கு மின்னாடி படத்த பாத்தப்போ பெரிதாக ஈர்க்கவில்லை!
சம்மந்தமே இல்லாமல் காட்சிகள் போகிறதே!
பணக்கார  லெபோவ்ஸ்கிக்கும் பராரியாக வாழும் லெபோவ்ஸ்கிக்கும்...சாரி...dude க்கும் வித்தியாசம் தெரியாமல் இப்படி நீட்டி முழக்கியிருக்கிறார்களே(நீ அம்பூட்டு அப்பாவியா இருந்திருக்க-கும்மாங்கோ)
 என்ற ஒருவித சலிப்பே மேலோங்கியது!ஆனால் அப்போதும் பல காட்சிகள் சிரிப்பை வரவழைக்க தவறவில்லை.உதாரணமாக யார் யாரோ தனது வீட்டிற்குள் வந்து தன்னை பலவகையில் டார்ச்சர் செய்வதைக்கண்டு அதை தடுக்கும் வகையில் வீட்டு வாசற்கதவை முழுமையாக திறக்க இயலாதபடி தரையில் கட்டையை வைத்து ஆணி அடித்து முடித்ததுதான் தாமதம்!கதவை திறந்துகொண்டு இரண்டு தடியர்கள் வருவார்கள்!அது வெளிப்புறமாக திறக்கும் கதவு!dude ஓ கதவின் உட்புறமாக கட்டையை அடித்துவைத்திருப்பார்!
        
 அப்புறம் இடையில் அப்படத்தின் பக்கமே போகவில்லை!
பிறகு ரேமன்ட் ஷான்ட்லரின்(Raymond Chandler)   பிலிப் மார்லோ(Philip Marlowe) நாவல் வரிசைகள் பரிச்சயமானபின்   படத்தை செமத்தியா என்சாய் பண்ண முடிந்தது!
   
Raymond Chandler
                    மார்லோ சீரிஸ் நாவல்களில் ஒரு குற்றம் நடந்திருக்கும்.அதை விசாரிக்க தனியார் துப்பறியும் நிபுணரான மார்லோ நியமிக்கப்படுவார்.
        உடனே பரபரப்பாக ஆரம்பம்-தொடக்கம்- முடிவில் "எப்படி அவனை(ளை) பிடித்தேன்" என்று நாப்பது பக்க விளக்கம் எதுவும் இருக்காது.
ஏதேதோ குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கும்!மார்லோவுக்கு போதை பொருள் கொடுத்து ரோட்டில் வீசிவிடுவார்கள்!அல்லது பின் மண்டையில் தாக்கப்பட்டு ப்ளாக்கவுட் ஆகி கண் விழித்தபின் பார்த்தால் பக்கத்தில் ஒரு பிணம் கிடக்கும்!
ஒரு குறிப்பிட்ட நபரை காரில் பின்தொடர்ந்து செல்வார் .திடீரென்று போலீசு வழிமறித்து விஸ்கி பாட்டிலை கையில் பிடிக்கச்செய்து வயிற்றில் குத்தும்.மேலெல்லாம் சிதறிய விஸ்கி!drunken drive!போடு உள்ளே!
மார்லோ என்றாலே நினைவுக்கு வருபவர் பொகார்ட்!

                                       இதுமாதிரி தொடர்ந்து மார்லோ ஒரு வழக்கை விசாரித்து முடிப்பதற்குள் படாத பாடு படுவார்! ஆனால் இதற்கெல்லாம் கொஞ்சமும் அசரமாட்டார் மார்லோ!என்ன வாழ்க்கடா இது!என்ற புலம்பல்களெல்லாம் கிடையாது!The hell with it என விசாரணையை தொடர்வார்!
            மார்லோ தனித்து வாழ்பவர்.மனைவி ,கேர்ள் பிரண்ட் ,லொட்டு லொசுக்குகள் இல்லை!அவர் அதன்மீது எந்த ஈடுபாடும் கொண்டவரில்லை!cynic!தான் விசாரிக்கும் வழக்குகளிலும் கூட உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டு கண்ணீர் வடிப்பது உச்சு கொட்டுவது கிடையாது!cold and distant!
              பிக் லெபோவ்ஸ்கியில் வரும் Dude பல விஷயங்களில் மார்லோவின் சாயலை கொண்டவர்!டூட் மார்லோ போல ஸினிக் இல்லாட்டியும்(ஆனால் வால்டர், ஜீசஸ், மௌட் என பல  ஸினிக்குகள் படத்தில் உண்டு).தனித்து வாழ்பவர்!கேர்ள் பிரண்ட் மனைவி குழந்தைகள் என்ற கமிட்மெண்டுகள் அவரை மிரள வைக்கும்.அதில் எவ்வித ஈடுபாடும் இல்லாதவர்.

          மௌட்(Maude) டூடோடு உடலுறவு கொண்டபின் ஏதோ காலை மடக்கி யோகா போல செய்வார்.எதுக்கு இது?ன்னு டூட் கேட்டதும் "அப்போதான் கன்சீவ் ஆக முடியும்" என்றதும் டூட் மிரண்டுவிடுவார்!மௌட் அவரை சமாதானப்படுத்தி "எனக்கும் கணவன் உறவெல்லாம் வேண்டாம்.பிள்ளைக்கும் உரிமை எடுத்துக்கொள்ளாத ஒரு ஆண் தேவை!அதுக்குத்தான் உன்னோடு..."
        டூட் பெரிதாக எதற்கும் அலட்டிக்கொல்லாதவர்.திடீரென்று பலர் வீட்டினுள் நுழைந்து அவரை மிரட்டி,சாமான்களை உடைத்து,வினோத விலங்கை பாத்டப்பில் குளிக்கும் டூடின் "ஜான்சனில்" மேய விட்டு,மண்டையில் அடித்து மயக்கமடைய வைத்து,போதைப்பொருள் கொடுக்கப்பட்டு போலீசில் அடிவாங்குவது என்று எதற்கும் அவர் கலங்குவதில்லை!மார்லோ போல வரிசையாக தனக்கு நடந்த நிகழ்வுகளையும் அவர் நினைவில் வைத்துக்கொள்வதில்லை!
              ஆனால் அவரின் நண்பர் வால்டர் அப்படியல்ல.யூத பெண்ணை திருமணம் செய்வதற்காக யூதராக மாறி பிறகு மனைவி பிரிந்தும் தீவிர யூதனாகவே இருந்து(அதற்கு அவர் சொல்லும் விளக்கம் அதகளம்) சாப்பத் தினமான சனிக்கிழமை எதையுமே செய்யாது இருப்பது,திடீர்னு டன்சன் ஆகி சுற்றுப்புறம் பற்றி கவலைப்படாது வசை பாடுதல்; கை நீட்டுதல்..என்று வால்டராக John Goodman ரணகளம் செய்திருக்கிறார்!
             மாற்றுத்திரனாளியாக இருக்கும் பணக்கார லெபோவ்ஸ்கி வீல் சேரில் அமர்ந்திருப்பார்."நா எவ்வளவோ 'ஸ்பைனல்' கேஸ்களை பாத்திருக்கேன்.இது டுபாக்கூர்" என்று வால்டர் லெபோவ்ஸ்கியை வீல் சேரில் இருந்து தூக்கி வெளியே நிற்க வைக்க முயல அவர் கீழே விழ இது  அபத்த நகைச்சுவைக்கு ஒரு சான்று!


            மற்றொரு நண்பர் டான்னி(Donny) தனிப்பட்ட ஆளுமை எதுவும் இல்லாதவர்.டூட் மற்றும் வால்டரின் மகா சைஸ் ஆளுமைகளின் விளிம்பில் வாழ்வதே அவருக்கு போதுமானது.அவர் எதைப்பற்றி பேச வாய் திறந்தாலும் ஷட் த ஃபக் அப் என வால்டர் அதட்டுவது,நண்பர்கள் எதைப்பற்றியோ சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும்போது அதன் தீவிரம் புரியாமல் இடைமறித்து ஏதாவது வெகுளித்தனமாக கேட்பது,மூணு டம்மி பீசு (நிஹிலிஸ்டாம்!) இவர்களை மிரட்டும்போது பயந்துபோய்  மாரடைப்பு வந்து இறப்பது என Steve Buscemi டானியாக ...

           டூட்,வால்டர்,டான்னி மூவருக்குமே வாழ்வில் பெரிதாக செண்டிமெண்டல் பிடிப்பு கிடையாது!அவர்களுக்கு இருக்கும் இரண்டே இரண்டு ஈடுபாடான விஷயங்கள்
-தங்களுக்குள்ளான நட்பு
-பௌலிங்
அவர்களுக்கென தனிப்பட்ட குடும்பம் இல்லை.இந்த நட்பின் மூலமாகவும், பௌலிங் பிளேசில் நேரத்தை கழிப்பதன் மூலமே அவர்கள் இந்த உப்புசப்பற்ற வாழ்வை கடக்க முயல்கிறார்கள்!


                 பிக் ஸ்லீப் கதையை படமாக்கியபோது அதில் மார்லோவாக நடித்த பொகார்டுக்கு திடீர் சந்தேகம் "டெய்லரை கொலைசெய்தது யார்?".படக்குழு பரபரப்பாகி ஷான்ட்லரிடமே போன் செய்து கேட்க "எனக்கும்கூட தெரியாது" என்றார்!

அதான் அவர் ஸ்டைல்!இப்படமும் அவ்வாரே!
ஏன் இப்படி நடக்கிறது?
இவர்கள் யார்?
இவர்கள் ஏன் டூடை சம்மந்தமில்லாமல் மிரட்டுகிறார்கள்?
என்றெல்லாம் படம் நெடுக பல ? கள் தொக்கி நிற்கும்!சம்பவங்களின் போக்கு முக்கியமல்ல!அது சொல்லப்படும் விதமே இதில் முக்கியமாக பார்க்கப்படவேண்டும்!அதுவே ஷான்ட்லருக்கு கோயன் சகோதரர்கள் செய்த ஹோமேஜ்!