Friday, 7 March 2025

பின்னணியில் நின்றுவிட்ட குரல்கள்

 ஃபெபி மணியின் பெயரை நாம் ஏற்கெனவே முத்து ஆடியோ கேசட்டில் பார்த்திருந்தாலும் முதலில் கண்டுகொண்டது ஒரு முழுப்பாடலில்.காதல் மன்னன் படத்தில் வரும் கன்னிப்பெண்கள் நெஞ்சத்தில் பாடல்தான் அது.யாருய்யா இவ்வளவு ஸ்டைலா பாடி இருக்காங்க என்று கேசட்டை பார்த்தபோது இவரா?ஏற்கெனவே சில பாடல்களில் வரும் சின்ன சின்ன பகுதிகளை பாடியவர் ஆச்சே! என்று தோன்றியது.
Febi Mani - Tanvi Shah

 
    அதற்கு முன்பு  முத்து - கொக்கு சைவ கொக்கு பாட்டில் கோரஸ்,மின்சார கனவில் ஸ்ட்ராபெரி கண்ணே பாடலில் - பழைய பைத்தியம் நானுமில்லை என்று பாடி இருப்பார்.பாரதி கண்ணம்மா சின்னச்சின்ன கண்ணம்மா  அற்புதமாக பாடியிருப்பார்.இடையில் வரும் வீணையும் அவர் குரலும் அட்டகாசமாக ஒத்திசைந்து ஒலிக்கும்!

 

    ஆனால் அதன்பிறகு இந்த அதியற்புத ஸ்டைலான குரலை முழுப்பாடலுக்கு பெரும்பாலும் யாரும் பயன்படுத்தவில்லை.
   பெரும்பாலும் ஹம்மிங் கோரஸ் போன்றவற்றில் மட்டுமே அவர் பெயரை காண முடிந்தது.குறிப்பாக ஏ.ஆர்.ஆர் அதிகமாக இவர் குரலை அவ்வாறு பயன்படுத்தினார்.

   ஜீன்ஸ் படத்தின் தீம் இசையான "நிசரி சா..." என்று அற்புதமாக பாடியிருப்பார்.பிறகு படையப்பாவில் "கிக்கு ஏறுதே" பாடலின் இடையில் "சஜூனானே சஜூனானே" என்று மிக உருக்கமாக  பாடி இருப்பார்.

 

   Dil Se படத்தில் Dil Se Re பாடலின் இறுதியில் அனுபமா(கொஞ்சம் நிலவு புகழ்) & அனுராதா ஶ்ரீராம் பாடி இருப்பார்கள்.அதுவே தமிழில் சந்தோஷ கண்ணீரே பாடலின் இறுதியில் அனுராதா ஶ்ரீராம் மற்றும் ஃபெபி மணி ஆகியோர் பாடி இருப்பார்கள்."பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே" என்று தொடங்கி இரண்டே இரண்டு வரிகள்.

    ஹிந்தி தமிழ் இரண்டிலுமே இன்னும் கொஞ்சம் இவர்கள் பாடி இருக்கலாமே என்று தோன்றும்.இரண்டு பாடல்களிலும் அனுராதா ஶ்ரீராம் குரல் பொருந்தாமல் ஒலிக்கும்.அந்த பாடலையே ஏ.ஆர்.ஆர் ஃபெபி மணி ஆகியோர் பாட ஒரு டூயட் பாடலாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே! என்று தோன்றும்!
 
Annupama


 
ஏ.ஆர்.ஆர் ஹிந்தி தமிழ் என்று இரண்டு மொழிகளில் ஒருசேர இசை அமைத்தால் ஹிந்தி பதிப்பை மட்டுமே கேட்கும் வழக்கம் நமக்குண்டு.ஆனால் இந்த ஒரு பாடலுக்கு மற்றும் விதிவிலக்காக இவர் குரலுக்காக கேட்பதுண்டு.

   
ஹாரிஸ் மாம்ஸ் இவருக்கு சில பாடல்களை பாட கொடுத்தார்.

மஜ்னு ஹரிகோரி போன்சாயி பாடலில் உனக்காக ஒருத்தி வந்தாள் அழகாக எதிரில் நின்றாள் என்று கோரசாக பாடினாலும் இவர் குரல் தனித்து ஒலிக்கும்.
 

 இவர் குரலை இடைநிரவலாக மட்டுமே அரசாட்சி(இருபது வயசு) &  காக்க காக்க படத்தில் பயன்படுத்தி இருப்பார்.தூது வருமா பாடலில் சுனிதா சாரதி பிரதானமாக பாட "தூது இல்லே" என்று இடையில் பாடுவார்.
Sunitha Sarathy

 

    பிறகு ஶ்ரீகாந்த் தேவா இசையில் ஜித்தன் படத்தில் "கோயமுத்தூர் பொண்ணு நீயா" பாடலை ஶ்ரீகாந்துடன் பாடியிருப்பார்.ஆனால் அந்தப்பாடல் அவரது comfort zone க்கு வெளியே வரும் பாடல் என்பதால் அவரது குரல் மிகச்சுமாராக ஒலித்திருக்கும்.
    ஶ்ரீகாந்த் தேவாவை மணமுடித்த கையோடு பாடுவதை நிறுத்திக்கொண்டார்.அவர் பாடுவதை நிறுத்தியது அப்போது வருத்தமாக தெரியாமல் அதன்பிறகு வேறு சில பாடல்களை கேட்கும்போது "இந்தப்பாடலை ஃபெபி பாடியிருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்" என்று தோன்றியது மூன்று பாடல்களை கேட்டபோது.
   1. கஜினி படத்தில் ரஹத்துள்ள பாடல்
   2.அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதை அவர் பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றும்.
3. அயன் படத்தில் ஹனி ஹனி பாடல்


இப்படி மிகக்குறுகிய காலத்தில் ஒரு அற்புத குரல் பாடுவதை நிறுத்திக்கொண்டது தமிழ்த்திரையிசைக்கு இழப்புதான்.அதிலும் அவரை நிறைய முழு பாடல்களுக்கு பாட வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது அதைவிட பெரிய அவலம்.

***************************
தன்வி ஷா :

     இவரும் ஃபெபி போலத்தான்.துண்டு துக்கடா இடைநிரவல்களுக்கு மட்டுமே வருவார்.யுவன் இசையில்தான் அதிகமாக அப்படி பாடியுள்ளார்.ஏ.ஆர்.ஆர் இசையில் வரலாறு படத்தில் இன்னிசை அளபெடைய பாடலில் இடையில் கொஞ்சமாக வந்துபோவார்( இந்தப்பாடல் மூன்று வகையாக வரும்.அதை விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம்).

   அதற்கு முன்பே ஆய்த எழுத்து படத்தில் யாக்கை திரி பாடலில் "ஜென்மம் விதை காதல் பழம்" என்று இடையில் பாடி இருப்பார்.

     நமதபிமான ஷ்ரேயா கோஷால் பாடியதாலேயே பல ஆயிரம் முறை கேட்ட பனித்துளி பனித்துளி பாடலின் இடையில் அற்புதமாக ஹம்மிங் செய்திருப்பார்.

 

   என் காதல் சொல்ல நேரமில்லை என்று யுவன் பாடிய பாடலின் இடையே "இவரைத்தவிற எவரும் இந்த மாதிரி ஹம்மிங் கொடுத்திருக்க முடியாது" என்கிற அளவில் பாடியிருப்பார்.
 இறகைப்போலே  அலைகிறேனே பாடலிலும் பின்னணி ஹம்மிங் தான்.

     

 
இதில் பிரச்சனை என்னவென்றால் அவர் ஹம்மிங் இடைநிரவல் கோரஸ் என்று பாடும்போது அற்புதமாக அவரது comfort zone க்குள் அதேநேரம் ஒரே மாதிரியான சட்டகத்தில் அடைக்காமல் பாட வைத்திருப்பார்கள் யுவன் மற்றும் ஏ.ஆர்.ஆர்.

   ஆனால் தனிப்பாடல்கள் என்றால் க்ளீஷே என்று சொல்லத்தக்க வண்ணம் ஒருமாதிரி ஆங்கிலத்தனமாக மட்டுமே பாட வைத்து (ஜில்லென்று ஒரு காதல் படத்தில் அதே வரிகளில் ,சிவாஜி படத்தில் ஸ்டைல், சரோஜாவில் My Life) அவரது குரலின் வேறு பரிணாமங்கள் வெளிப்பட வாய்ப்பில்லாமல் செய்தனர்.
   புதுப்பேட்டை படத்தில் புல் பேசும் பாடல் கொஞ்சம் அந்த சட்டகத்தில் இருந்து வெளியே வந்த பாடல்.தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் அதே வரிகளில் ஆண்ட்ரியாவுடன் பாடியிருப்பார்.ஏற்கெனவே ஆண்ட்ரியாவும் ஆங்கிலத்தனமான பாடல்களை பாடி வந்ததால்( கண்ணும் கண்ணும் நோக்கியா மாதிரி) அந்த இடத்தில் தன்வியின் தனித்தன்மை அடிபட்டு போனது.
    நாம் விரும்பியது என் காதல் சொல்ல பாடலின் இடையில் அவர் ஹம்மிங் செய்யும் அந்த தொனியில் ஒரு முழுப்பாடல்.அது நடக்கவில்லை.
   ஆனால் ஹிந்தியில்  Pappu can't dance Saala (Jaane Tu ya jaane naa) உள்ளிட்ட பல பிரபல பாடல்களை பாடியுள்ளார்.ஆனால் பதிவின் தலைப்பில் சொல்லப்பட்ட அந்த கருத்துக்கு வெளியே அது சென்று விடும் என்பதால் அதைப்பற்றி எழுதவில்லை.
   மேலும் தலைப்பை இருவிதமாக அர்த்தம் கொள்ளலாம்.
- தமிழில் இந்த இரு குரல்களையும் இப்போது கேட்க முடியாது.
- பெரும்பாலும் இருவரும் பின்னணியில் ஹம்மிங் கோரஸ் இடைநிரவல் என்றே குறுகிய வட்டத்திற்குள் வைக்கப்பட்டுவிட்டனர்.

No comments:

Post a Comment