Showing posts with label மலையாளப்படம். Show all posts
Showing posts with label மலையாளப்படம். Show all posts

Wednesday, 1 January 2020

Yavanika 1982


                  கிளாசிக் அங்கீகாரம் பெற்ற படங்கள் பல கவனிப்பாரற்று கிடக்கின்றன.இருந்தும் இப்படி எருமை மாட்டு தோலால் செய்த sensibility யோடு அரசு நிறுவனங்கள்(National Film Archives!BLAH!)  இருக்கும் வேளையில் சில தனி நபர்கள்/விடியோ விஷன் நிறுவனங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள்,மற்றும்  யூ ட்யூப் சேனல்கள்  முயற்சி எடுத்து சில படங்களை நல்ல முறையில் காப்பாற்றி வைத்துள்ளன.குறிப்பாக ஹாட்ஸ்டார் நிறுவனம் மற்றும் Cinema Limitless செய்துள்ள/செய்துவரும்  பணி மகத்தானது.பெரும்பாலான மலையாள கிளாசிக் படங்களை தரமாக சப்டைட்டில் சேர்த்து(இது என்னை பொறுத்தளவில் மிக முக்கியம்.காரணம் சாதாரணமாக இப்படங்கள் சப்டைட்டில் இல்லாமல் யூட்யூபில் கிடைக்கின்றன)வெளியிடுகின்றன.
   இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற தீராத எண்ணம் பல வருடங்களாக  இருந்தாலும் சப்டைட்டில் இல்லை என்பதால்  இப்படத்தை இதுவரைக்கும் பார்க்க இயலவில்லை.
      ஐயப்பன் எனும் மேடை நாடக/நடன நிகழ்ச்சிகளுக்கு தபேலா வாசிப்பவர் காணாமல் போகிறார்.அவனுக்கு என்ன நேர்ந்தது?கொலை செய்யப்பட்டானா?அப்படியென்றால் அதை செய்தது யார்?கொல்லவேண்டிய காரணம் என்ன?என்பதை ஆராய்வதே படம்.
        “ஓ!இது மற்றுமொரு whodunit ஆ?” என்று கேட்டால் இல்லை.அதையும் தாண்டிய ஒரு பரிமாணம் இப்படத்திற்கு உள்ளது.வெறும் கொலையாளி யார் என்று கூறி பார்வையாளனை அதிர வைப்பதல்ல இப்படத்தின் நோக்கம்.இன்னும் சொல்லப்போனால் யார் கொலையாளி என்று இறுதியில் காட்டப்படும்போது நமக்கு பெரிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்படுவதில்லை.உண்மையில் அத்தகைய அதிர்ச்சியை உண்டாக்குவதல்ல இயக்குனரின் நோக்கம்.
   படத்தின் ஆன்மாவாக இருப்பது மேடை நாடக குழு ஒன்றின் வாழ்க்கை,அவர்களது எதிர்பார்ப்பு- ஏமாற்றங்கள், ஒத்திகை பார்ப்பது,ஒவ்வொரு ஊராக பயணிப்பது,ரத்தசொந்தம்-நட்பு போன்றவை இல்லாவிட்டாலும் மேடை நாடக நடிகர்கள் என்ற அந்த ஒரு மெல்லிய இழையால் பின்னப்பட்டவர்கள்.
     ஏதோ சினிமா நடிகர்கள் போல லட்சக்கணக்கில் அல்ல ஏன்  ஆயிரக்கணக்கில் கூட அவர்களால் சம்பாதிக்க முடியாது.சில நூறுகள் ஐம்பதுகள் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும்.இருந்தாலும் அவர்கள் அதை செய்கிறார்கள்.பெரிய புகழெல்லாம் கூட கிடைக்காது. இருந்தாலும் நாடகம் நடத்துகிறார்கள்.
   நடிகர்களுக்குள் பல்வேறு பிரச்சனைகள் சண்டைகள் இருந்தாலும் நாடகம் நடந்துகொண்டே இருக்கிறது.துவக்கத்தில் ஐயப்பன் வராதபோதும் நாடகம் நடக்கிறது.பிறகு வேறொருவர் வந்து தபேலா வாசிக்கிறார்.ஒரு நடிகை திருமணம் புரிந்து துபாய் செல்லவிருக்க அவள் இடத்தில்  இன்னொருத்தி என்று நாடகம் எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் நிறுத்தப்படுவதில்லை.
   அதனாலேயே ஐயப்பன் காணாமல் போய் இருவாரங்களுக்கு யாருமே பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.பிறகு சக நாடக நடிகர்களின் வற்புறுத்தலால் குழுவின் தலைவர் வக்கச்சன் (திலகன்) போலீசில் புகார் தருகிறார்.அதன்பிறகு காவல் அதிகாரி ஜேக்கப் (மம்மூட்டி) இவ்வழக்கை விசாரிக்கிறார். 
     இதன்பிறகு வந்த பல படங்களில் மம்மூட்டி இதுமாதிரியான வேடத்தில் நடித்துள்ளார்.அதில் சிலவற்றை பார்த்துள்ளேன்.உண்மை(Truth) படம் ஒரு உதாரணம்.இருந்தாலும் இதில் அவர் ஒரு ஹீரோ வேடத்தில் மையமாக அல்லாமல் படத்தை முன்னகர்த்தும் ஒரு முக்கிய கேரக்டராக மட்டுமே வருகிறார்.
     படத்தின் முக்கிய அச்சாணி போல வருபவர் ஐயப்பன்(பரத் கோபி).இந்த கேரக்டர்ல நடிக்க அவர் தபேலா வாசிக்க கற்றுக்கொண்டார் என்று படித்தேன்.அதை காட்சியில் காண முடிகிறது.வெறுமனே மண்டையை ஆவேசமா ஆட்டியபடி வரட்டி தட்டும் பாவனைகள் எதையும் இப்படத்தில் அவர் தபேலா வாசிக்கும் காட்சியின் எந்நொடியிலும்  காண முடியாது.
  இவர் ஒரு பேட்டியில் “நடிகன் என்பவன் ஒரு கேரக்டர் என்ற அந்த வரைமுறைக்குள் நுழைந்து நடிக்க வேண்டுமே ஒழிய தன்னில் அந்த கேரக்டரின் வரைமுறையை உருவாக்கி நடித்தால் அந்த நடிகன் என்பவனே திரையில் தெரிவான்.”
    பரத்கோபி நடித்த படம் பார்ப்பது இதுவே முதன்முறை.இவரிடம் கண்டது spontaneity .ஒரு அறைக்குள் நுழைகிறார் என்றால் 'இந்த குறிப்பிட்ட இடத்தில் அந்த கேரக்டர் நிக்கும்.அதை நோக்கி நமது நடை அமைய வேண்டும்' என்றெல்லாம் அவர் திட்டமிடுவதில்லை.அப்படியே வேகமாக நுழைகிறார் அதன்பின் நிகழ்வது முற்றிலும் தன்னியல்பான எதிர்வினையே! 
   இப்படத்தில் பெண்பித்தனாக குடிகாரனாக அதேநேரம் தபேலா வாசிப்பதில் கை தேர்ந்த ஒரு கலைஞனாக என்று பல்வேறு பரிமாணங்கள்.ஐயப்பன் கேரக்டரே ஒரு மர்மமாகத்தான் படத்தில் காட்டப்பட்டுள்ளது.இங்கிருந்த ஐயப்பன் ஏதோ லக்னோ சென்றதாகவும் பதினைந்து வருடம் கழித்து திரும்பியபோது தபேலா வாசிப்பில் கைதேர்ந்தவனாக திரும்பியதாக கூறப்படுகிறது.அதோடு அல்லாமல் அங்கே ஒரு மனைவியை கைவிட்டுவிட்டு கேரளம் வந்து இங்கே ஒரு மனைவி பதின்ம வயது மகன் விஷ்ணு (அசோகன்) சகிதம் வாழ்வதாக காட்டப்படுகிறான்.அதோடு எங்கு சென்றாலும் அங்குள்ள பெண்களை தன்வயப்படுத்திவிடுபனாகவும் காட்டப்படுகிறார்.
        எந்நேரமும்  குடி&பெண்கள்!இதேபோன்ற இன்னொரு  பெண் பித்தனும் அதே நாடக குழுவில் உண்டு. பாலகோபாலன்(நெடுமுடி வேணு).


ஆனால் அவரின் பெண் பித்து என்பது வேறு.வெறுமனே படுக்கைக்கு அழைத்தோ நிர்பந்தத்தின் பேரில் மனைவியாக்கிக்கொள்ளும் தன்மையோ இல்லாது அனைத்து இளம் பெண்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து நல்ல பேர் வாங்கி கொள்ளுதல்.அதன்மூலம் ஏதேனும் ஆதாயம்(!!??) பெற முடிந்தால் சரி.இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பாலகோபாலன் பலவந்தம் செய்யாத பெண் பித்தன்!
    இப்படி படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டருமே ஒரு தனித்தன்மையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.திலகன் மேடை நாடகத்தில் அந்த காலகட்டத்திலும் ஆக்டிவ்வாக நடித்து கொண்டிருந்தவர் என்பதால் அந்த கேரக்டருக்கு அவர் நியாயம் செய்ய முடிந்துள்ளது.

அதுமட்டுமல்லாது படத்தில் வரும் மேடை நாடக காட்சியில் அந்த சிகப்பு திரைச்சீலை அவர் தனது நிஜ  நாடக குழுவில் இருந்து கொண்டுவந்ததாம்.யவனிக என்றால் திரைச்சீலை!இதே தலைப்பில் ஓவியர் ஜீவா அவர்கள் ஒரு புத்தகம் எழுதி தேசிய விருது பெற்றார்(அதிலும் இப்படத்தை பற்றி எழுதியிருப்பார்)
     உண்மையில் படத்தில் என்னை கவர்ந்தது யதார்த்தம்.இந்த வார்த்தையை பயன்படுத்தவே பயமாக உள்ளது.யதார்த்தம்-யதார்த்த சினிமா கலைப்படம் என்றெல்லாம் இப்போது தமிழில் ஏதேதோ செய்து பயமுறுத்தும் நிலையில் இவ்வார்த்தை கடும் ஒவ்வாமையை தந்தாலும் இந்த வார்த்தையே இங்கே பொருந்தி வருவதால் வேற வழியில்ல.படத்தின் துவக்கத்தில் அந்த நாடக குழு வேனில் ஏறி நாடகம் போட வேறொரு ஊருக்கு செல்வதாக துவங்குவதும் படம் முடியும் போதும் அதே போல வேனில் ஏறி சொந்த ஊருக்கு செல்வதாகவும் முடிகிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த குழுவினரோடு நமக்கே நெருங்கிய பரிச்சயம் உண்டாகிவிட்ட ஒரு உணர்வு.அதை சரியாக வார்த்தைகளில் கொண்டுவரவே முடியாது.ஆனால் உணர்வுகளில் கொண்டுவந்துவிட்டார்கள்!

Friday, 29 January 2016

பாலேரி மாணிக்கம் (2009)

                         தொடர்ந்து  மனிதர்களை  ஈர்ப்பது  குற்ற  செயல்கள் ; குறிப்பாக  கொலைகள்.வாழ்வில்  எந்த  கிரிமினல்  குற்றத்தையும்  செய்யாதவர்களும்  கூட  கொலை  வழக்கு,குற்றம்  சார்ந்த  செய்திகளை  ஆர்வமாக  வாசிப்பதை  காண  முடியும்.புத்தக  விற்பனையிலும்  சரி  திரைப்படங்களானாலும் (சமீபத்திய  படம்  தல்வார்  ஒரு  உதாரணம்) சரி  கொலை  வழக்குகள்  சம்மந்தப்பட்டவை  என்றால்  அவை  கூடுதல்  வரவேற்பை பெறுவதை  நாம்  காண்கிறோம்.
                   சாதாரண  மனிதர்களுக்கே  இப்படியொரு  ஈர்ப்பை  உண்டாக்கும்  கொலை  வழக்குகள்  ஒரு  துப்பறியும்  நிபுணராக    இருக்கும்  ஒருவருக்கு  அதிலும்  அவர்  பிறந்த  அதேநாளில்(அந்த  பிரசவ  காட்சியும் பாலியல்  வன்புணர்வு  காட்சியும் interposed ஆக  காட்டப்பட்டவிதம்  அற்புதம்) கொலை  செய்யப்பட்ட  ஒரு பெண்மணியின்  கொலை  வழக்கு  இனம்  புரியாத  ஒரு  ஈடுபாட்டை  உண்டாக்குவதை  நம்மால்  புரிந்துகொள்ள முடிகிறது.

                               சாதாரணமாக  துப்பறியும்  கதைகள்  என்றாலே  ஒரு  ஃபார்மேட்  உண்டு.ஒருவர்  கொலை  செய்யப்படுவார்.முதலில்  ஒரு  குழு  விசாரிக்கும்.அதன்  திறனின்மையால்  வழக்கு  வேறொரு  அமைப்புக்கு  மாற்றப்படும் அல்லது  அத்தோடு  முடித்துவைக்கப்பட்டிருக்கும்.பின்னர்   வேறொருவர்   உண்மைகளை  கண்டுபிடிப்பார்.இங்கேயும்  கிட்டத்தட்ட  அதே  போன்ற  லைன்தான்  என்றாலும்  முதல்  குழு  விசாரிக்கப்பட்டதற்கும்  பின்னர் ஹரிதாஸ்(மம்முட்டி) விசாரிப்பதற்குமான  கால  இடைவெளி.கிட்டத்தட்ட  கொலை  நடந்தபோது  வாழ்ந்த  அனைத்து  மனிதர்களுமே  மரித்துவிட்ட  நிலையில்  மீதமிருக்கும்  நபர்களை  விசாரித்து  உண்மையை வெளிக்கொணர்வது  சுலபமல்ல.ஆனால்  இதிலும்  ஒரு பிளஸ்  பாயின்ட்  இருக்கத்தான்  செய்கிறது.கொலை  நடந்த  சமயத்தில்  விசாரிக்கப்பட்ட  நபர்கள் முன்னுக்குப்பின்  முரணாக  பல்வேறு  மிரட்டல்களுக்கு  பயந்து  உண்மையை  திரித்துக்கூறியிருக்கலாம்.ஆனால்  இத்தனை  வருடங்கள்  சென்ற  பிறகு  "பொய்  சொல்லிவிட்டோமே?"  என்ற  எண்ணத்தோடு, இறந்த  அந்தப்பெண்  வாழாமல்  விட்டுசென்ற  வாழ்க்கை இவை  அழுத்தும்போது உண்மையையே  அவர்கள்  விளம்பக்கூடும்.
                ஊடக  வெளிச்சம்  உச்சத்தில்  இருக்கும்  இன்றைய  காலகட்டத்திலும்கூட  பல்வேறு  கொலை  வழக்குகள்  முடிவு  காணப்பட  இயலாமலோ /அதிகார  அழுத்தத்துக்கு,மிரட்டலுக்கு  பயந்து  விசாரிக்கப்படாமலேயே  பாதியில்  விடப்பட்ட  வழக்குகள் பல்லாயிரம் உண்டு.ஊடக  வெளிச்சம்  அதிகமாக  இருந்தாலும்  அதன்  ஆயுட்காலம்  என்பது  அதிகபட்சம்  ஒருவாரமே.அதன்பின்  வேறொரு  செய்தி  அதன்  இடத்தை  ஆக்கிரமித்துக்கொள்ளும்.
               'தாழ்த்தப்பட்டவரின்  பிணத்தை  இந்த  தெருவழியா  கொண்டு  போகக்கூடாது,அவர்களுக்கு  இரட்டைக்குவளை,நகராட்சி  குழாயைக்கூட  அவர்கள்  தொடக்கூடாது'  என்றெல்லாம்  சாதிவெறி  மேலோங்கி இருக்கும் இன்றைய  காலகட்டத்திலேயே  இப்படி  என்றால்  படிப்பறிவே  இல்லாத  சாதீய  நிலப்பிரபுத்துவ  வன்கொடுமைகள்  மேலோங்கி  இருக்கும்  ஒரு  கிராமத்தில்  ஒரு  கொலை வழக்கு  எங்ஙனம்  சரியாக  விசாரிக்கப்பட்டிருக்கும்  என்பதை  விளங்கிக்கொள்ளலாம்.
           
               இதில்  ஒருவிஷயத்தை  கவனிக்க  வேண்டும்.இந்த  கீழ்  சாதி,வேறு  மதத்தை  சார்ந்தவன்,ஏழை போன்ற  வேறுபாடுகள்  எல்லாம்  ஆண்களுக்கே  பொருந்தும்.அதே  தாழ்த்தப்பட்ட  சமூகத்தை  சார்ந்த  இளம்பெண்களுக்கு  அது  பொருந்தாது.அதே  போலத்தான்  ஏழைப்பெண்கள், பிச்சைகாரிகள்,  ஏன்  இறந்த  நடிகையை  சவக்கிடங்கில்  உறவு கொண்ட  சம்பவங்கள்  எல்லாமுண்டு.பெண்கள்  என்றுவந்துவிட்டால்    எந்த  தீட்டோ,இழிவோ    ஆண்களுக்கு கிடையாது.

                இப்படத்தில்  அது  தெளிவாக  சொல்லப்படுகிறது.நிலப்பிரபுத்துவ  ஆதிக்க  சிந்தனை  கொண்ட அகமது  ஹாஜி(அதுவும்  மம்முட்டிதான்)   தன்  தோப்பில்  தேங்காய்  திருடிய  ஒரு  தொழிலாளியை  ஏரில்  பூட்டி  நிலத்தை  உழ  வைக்கிறான்.ஆனால்    வேறொரு  தொழிலாளியின்  மனைவி சீரு(ஸ்வேதா மேனன்) என்று  வரும்போது  அவனுக்கு  எவ்வித  ஏற்றத்தாழ்வும்  தென்படவில்லை.அதற்கும்  ஒரு  எல்லையுண்டு.சீருவுக்கு வயதானபின்  வழக்கம்போல  அவளை  மற்ற  ஆண்  கூலித்தொழிலாளர்களைப்போலத்தான்   இழிவாக   நடத்துகிறான்.
              மேலும்  கம்யூனிஸ்டுகள்  கேரளத்தில்  வேரூன்ற  தொடங்கிய  காலம்;  பின்னர்  ஈ.எம்.எஸ்  ஆட்சி  அமைப்பது  போன்ற  வரலாற்றுப்பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. கேசவனின் தந்தை  முடிதிருத்தும்  தொழில்  செய்பவராக  இருக்கிறார்.ஆனால் கேசவன்  அத்தொழிலை  செய்ய  மறுக்கிறான்.கம்யூனிஸ்டுகள்  ஆட்சி  வந்தவிட்டதால்  பெரிதொரு  சமூக  மாற்றத்தை  அவன்  எதிர்ப்பார்க்கிறான்.அவன்  மட்டுமல்ல  பல  இளைஞர்கள்  பெரும் எதிர்பார்ப்பை  கொண்டவர்களாக  இருக்கிறார்கள்.ஆனால்  கம்யூனிஸ்ட்  ஆட்சி  அவைகளை  பூர்த்தி  செய்ததா  என்பதை  ஒரு  காட்சியில்  காட்டுகிறார்கள்.
        வயதான  கேசவனிடம் (ஸ்ரீனிவாசன்)  ஹரிதாஸ்  கேட்கிறார்: 
"நீங்கள்  இறைநம்பிக்கை  கொண்டவராக  மாறிவிட்டீர்களா?"
அதற்கு  கேசவன்  "நான்  கம்யூனிஸ்டும்  இல்லை..இறை  நம்பிக்கையாளனும்  இல்லை.நான் ஒரு  முடிதிருத்தும்  தொழிலாளி  மட்டுமே"

            வயதான  கேசவனிடம்  இருப்பது  விரக்தி  மட்டுமே. தான்  மிகப்பெரும்  அளவில்  நம்பிக்கை  வைத்த  இயக்கம்  என்னவிதமான  சமூக  மாற்றத்தை  உண்டாக்கியிருக்கிறது? தனது  எதிர்பார்ப்புக்கும்  நிதர்சனதுக்குமான  இடைவெளி  எவ்வளவு  பெரிதாக  இருக்கிறது? என்பதே  அவரை   பெரும்  விரக்தியாளராக மாற்றிவிட்டது.அவரைப்போன்றே பலப்பல எக்ஸ் காம்ரேடுகளை இன்றும் காண முடியும்.
       தந்தையின்  தொழிலை  தான்  செய்யக்கூடாது  என்ற  வைராக்கியம்  தந்தை  இறந்தபின்  மேல் சாதிக்கார்களால்  உடைக்கப்படுகிறது   
 காம்ரேடுகள் முதன்முதலாக ஆட்சி   பொறுப்பேற்கும்  நாளில்  முடிதிருத்தும்  கடைக்கு  விடுமுறை விடுகிறான் கேசவன் . ஹாஜியின்  அடைக்கலத்தில்  இருக்கும்  நாயர்  சவரம்  செய்யுமாறு  கேசவனை  அழைத்தால்  அவன்  வரமறுக்க  ஹாஜி  அவனை அடித்து   உதைத்து சவரம்  செய்ய  வைக்கிறான்.சக  காம்ரேடுகள்  இதை  பெரிதாக  கண்டுகொள்ளாதது  அவருக்கு    அவநம்பிக்கையின் விதைகளை  விதைக்கிறது.
          
           காம்ரேடு  ஹம்ஸா  ஹாஜியிடம்  கொலை  வழக்கை  மறைக்க  'துவக்கப்பள்ளியை  மேல்நிலைப்பள்ளியாக  மாற்ற  வேண்டும்.அதற்கு  நீங்கள்  பத்து  ஏக்கர்  நிலம்  தரவேண்டும்'  என்று  கேட்டுவாங்கி  பள்ளி  கட்டுகிறார்.கொலையை  மறைக்க உடன்பட்டது  தவறா?அவர்  தனக்காக  எதுவும்   செய்துகொள்ளவில்லையே..பொதுமக்களுக்கான  பள்ளியைத்தானே  கட்டினார்  என்ற  கேள்வியும்  எழுகிறது.கேசவன்  சொல்லும்போது  பெரும் பணக்காரர்கள்  நிலச்சுவான்தார்கள்  மேல்சாதிக்கார்கள்  செய்யும்  தவறுகளை  மறைக்க  அவர்களிடம்  இதுமாதிரி  பல  பொதுமக்களுக்கான  உதவித்திட்டங்கள்  பெறப்பட்டன  என்கிறார்.இப்படி  பல்வேறு  முரண்பாடுகளுக்கிடையேதான்  கேரளத்தில் குறிப்பாக  கேரளா  கிராமங்களில் கம்யூனிஸ்ட் கட்சி  வளர்ந்திருக்கிறது.


             படத்தின்  பலம்  கண்டிப்பாக  மம்முட்டியும்  ஸ்வேதா  மேனனும்தான்.குறிப்பாக  ஹரிதாஸ்  கேரக்டரை  விடவும்  ஹாஜியாக  வரும்  மம்முட்டி  மிளிர்கிறார்.சீருவை  ஆற்றங்கரையில்  கள்ளப்பார்வை  பார்ப்பது;பல  வருடங்கள்  கழித்து  சீருவின்  மருமகள்  மாணிக்கத்தையும்  அதே போல்  பார்ப்பது.சீருவை  அடைய  அவள்  கணவனை  சங்கில்  மிதித்து  கொல்வது ;அதே  சீரு ஒரு பாலியல்  தொழிலாளியாக  மாறி  வயதானபின்  அவளை  கீழ்மையாக  பார்ப்பது;மாணிக்கத்தை  அடைய  நாடகம்  ஏற்பாடு  செய்து  ஊரையே  காலி  செய்யவைப்பது,மாணிக்கத்தின்  கணவனையும்  மாந்த்ரீகத்தில்  உதவ  அழைத்துசெல்ல  வைப்பது  எல்லாவற்றையும் இயல்பான  நடிப்பில்  வெளிப்படுத்தியுள்ளார்.ஸ்வேதா  மேனனும்  கதாபாத்திரத்தில்  சரியாக  பொருந்துகிறார்.ஹாஜியின் மீது  விருப்பம்  கொல்வது கணவன்  கண்முன்னே  கொல்லப்பட்டதும்  கொன்ற  ஹாஜியோடு  உல்லாசமாக  இருப்பது;பின்னர்  பாலியல் தொழில்  செய்வது;  மருமகள்  சீரழிக்கப்பட்டு  கொல்லபட்டாலும்  அதைப்பற்றி  பேசமறுப்பது என்று   நல்லவரா  கெட்டவரா  வரைமுறைக்கு  அப்பாற்பட்டே(படத்தில்  பல  கதாபாத்திரங்கள்  அப்படி  உண்டு) சீரு  கதாபாத்திரம்  அமைந்துள்ளது.

          படத்தின்  குறைகள்  என்றால்   படத்தை  டிஜிட்டல்  கேமராவில்  படமாக்கியுள்ளார்கள்.அது  ஒரு  நாடகத்தன்மையை  அளித்து  படத்தோடு  ஒன்றுவதற்கு  தடையாக  உள்ளது.ஆனாலும்  மம்முட்டியின்  சிறந்த  நடிப்பு  அதையும்  தான்டி  படத்தோடு  ஒன்ற  வைக்கிறது.மற்றொன்று  SPOILER
*************
                          ஹாஜியின்  முதல்  மனைவியின்  மகனான கலீத்  அகமத்(அதுவும்  மம்முட்டி)  கதாபாத்திரம்.அதை  பூடகமாக  சொல்லி  முடித்திருக்கலாம்.ஆனால்  ஏதோ  கமல்  பட  பாதிப்பில்  கொஞ்சம் நாயக  பிம்பத்தோடு   அவரை  அறிமுகப்படுத்துவது ; பின்னர்  வரும்  சம்பவங்கள்  எல்லாம்  மிகையாக  உள்ளது.குறிப்பாக மிக  இயல்பாக  சென்ற  படத்தை  இப்படி  மிகையாக  முடிக்க  வேண்டிய அவசியம்  புரியவில்லை.இருந்தாலும் படம்  நன்றாகவே  இருந்தது.