Friday, 18 September 2026

DC

 

இப்படத்தை பார்க்க காரணமே இது விளம்பரம் செய்யப்பட்ட விதத்தினால் தான்! ரத்தம் தெறிக்கும் வன்முறைக்காட்சிகளை பார்த்தபோது "ஆகா!நமக்கு விருந்துதான்!" என்று தோன்றியது.

 

    ஆனால் படம் வன்முறையை மையமாக கொண்டு நகர்வதில்லை.வன்முறை கதையின் ஒரு (அத்தியாவசிய?) பகுதி என்று சொல்லலாம்.

   இப்படி படத்தை விளம்பரம் செய்ததால் சில இழப்புகளும் உண்டு.இந்த "குடும்பத்தோடு படம் பார்ப்போர் சங்கம்/இனிமையாக மென்மையாக மலரும் காட்சிகளை ரசிப்போர் சங்கங்கள்" இப்படத்தை வெறும் ரத்தக்களரி மட்டுமே நிறைந்த படமென்று ஒதுக்கிவிட்டது. படத்தின் மையக்கருத்தை விளம்பரப்படுத்தி இந்த பக்ராக்கள் அப்படத்தை பார்த்திருந்தாலும் இதையெல்லாம் அவர்கள் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நாம் நம்பவில்லை!

      தேவதாஸ் பார்வதி சந்திரா என்ற அந்த நூறாண்டு பிரசித்தி பெற்ற அந்த மையக்கருவை நிகழ்கால அவலங்கள் குரூரங்கள் பாலியல் அத்துமீறல்கள்  அதிகார வர்க்கத்தில் இருப்போர் போடும் சாமர்த்தியமான இரட்டை வேடங்கள் ஆதரவற்ற பெண்கள் நடத்தப்படும் விதம் என்று பல்வேறு விஷயங்களை தொட்டு செல்கிறார்.

 
    படத்தை பார்க்கும்போது ஏனோ அனுராக் காஷ்யப் இயக்கிய Dev D மற்றும் முனியாண்டி எழுதிய பிணவறை காப்பாளன் ( இந்த சிறுகதையிலும் சமூகத்தின் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் ஒரு பிணவறை காப்பாளன் உதவியுடன்....இதற்கு மேல் இதைப்பற்றி இங்கே எழுத முடியாது!ஆனால் அது உண்மை சம்பத்தின் அடிப்படையில் அமைந்த கதை)& தேகம் நினைவுக்கு வந்தது.Dev D படமும் தேவதாஸ் கதைதான்.அதில் வன்முறை குறைச்சல் ஆனால் போதை தூக்கல் என்பதாக ஒருவித psychedelic அனுபவத்தை கொடுத்தது.அமித் திரிவேதியின் அற்புத இசையை மறக்க முடியுமா?


 

     இப்படத்தின் மையக்கருத்தாக நாம் கண்டது பெண்களை  சமூகம் பார்க்கும் விதம்! படத்தின் ஆரம்பத்தில் பணத்துக்காக அநியாயமாக அடித்து கொல்லப்பட்ட தனது கணவனுக்கு நீதி கேட்டு செல்லும் அந்த பெண்ணை "பிராத்.தல் வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன்" என்று ஒரு காவல் அதிகாரி மிரட்டுகிறார்.பிற்பகுதியில் சந்திரா பற்றி மற்றொரு காவல் அதிகாரி தாசிடம் அதே பொருள்படும் விதத்திலான அந்த வார்த்தையை சொல்கிறார்.அந்த வார்த்தையை படம் நெடுக பலர் சொல்கிறார்கள். தாஸ் அவர்கள் அத்தனை பேரையும் கடுமையாக தண்டிக்கிறான்.

    ஒருகாலத்தில் படிப்பறிவற்ற மக்கள் தெருவில் சண்டை போடும்போது சரளமாக(பெண்களுமே சக பெண்கள் மீது)பயன்படுத்தும் அந்த வார்த்தை இப்போது பரிணாம வளர்ச்சி(!) பெற்று பட்டதாரிகளும் சரளமாக அவ்வார்த்தையை நிஜ உரையாடல்களிலும் இணையத்தில் அதைவிட பலமடங்கு அதிகமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்!

       மாற்றுக்கருத்து சொல்லும் ஆண்களை இழிவுபடுத்தவேண்டும் என்றாலும் இந்த வார்த்தையை அந்த ஆணின் வீட்டிலிருக்கும் பெண்களை குறிப்பிட்டு வசைபாடப்படும்! மாற்றுக்கருத்து சொல்லும் பெண்கள்  என்றால் சொல்லவே வேண்டாம்!இந்தியாவிலேயே அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம் அடைந்த "மகத்தான" வளர்ச்சி இது!(?).இதையெல்லாம் தம் கட்டி சொல்வதற்கு காரணம் பதிவின் இறுதியில்...

    மிக சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுமே (ஒரு மணி நேரத்தில் இத்தனை லட்சம் பேர் இணைந்ததாக செய்தி வந்தது) இப்படித்தான் இணையத்தில் "கண்ணியமாக"  உரையாடுகிறார்கள்! இந்த விஷயத்தில் யாரும் எந்தவித மாற்றத்தையும் உண்டுபண்ணிவிட முடியும் என்று நாம் நம்பவில்லை. ஞாநி சங்கரன் சொன்ன " பள்ளியிலேயே சமூக வலைதளங்களை கண்ணியமான முறையில் பயன்படுத்துதல் பற்றிய பாடத்தை கொண்டுவர வேண்டும்" என்ற யோசனையெல்லாம் எடுபடும் என்று நாம் நம்பவில்லை!

   ஆனால் இந்த  விஷயத்தை படத்தில் அழுத்தமாக பதிவுசெய்த அருண் மாதேஸ்வரனை பாராட்டலாம்.இவர் இதற்கு முன் எடுத்த படங்கள் என்ன என்று நாம் தேடித்தான் தெரிந்து கொண்டோம்.அவைகளையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இப்படம் உண்டாக்கியுள்ளது.

 
     படத்தில் சின்னசின்ன அற்புத தருணங்கள் உண்டு.சமூகத்தில் பெரிய பெரிய பதவிகளில் இருப்போர் பாலியல் தொழிலாளர்களிடம் நடந்துகொள்ளும் விதம் ஒருவிதமாகவும் வெளியே அவர்கள் போடும் வேடம் வேறொரு விதமாகவும் இருப்பதை அற்புதமாக படம் சொல்கிறது.தங்களது "பெரிய மனுஷன்" இமேஜ் போய்விட கூடாது என்பதற்காக சந்திராவிடம் காவல் அதிகாரி மருத்துவர் தொழில் அதிபர் என்றெல்லாம் பலதரப்பட்ட "பெரிய மனுஷன்கள்" பணத்தை அள்ளிக்கொடுக்கும் காட்சி சிரிப்பதா வருந்துவதா என்று தெரியாத ஒரு மனநிலையை உண்டாக்கியது!அந்த மருத்துவரை சந்திரா கொல்லும் காட்சி உண்மையிலேயே அற்புதம்!குறிப்பாக தனக்கு சிறுவயதில் இழைக்கப்பட்ட அந்த ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு காரணமான அந்த டாக்டரை கோபத்தின் வெறியின் உச்சத்தில் வார்த்தைகளே வராமல் போக உறுமியபடியே சுட்டு தள்ளும் காட்சி காலத்திற்கும் பேசப்படும்! இது வாமிகாவிற்கு வாழ்நாள் வேடம். வித்தியாசமான தமிழ் உச்சரிப்பில்(கதைப்படி அவர் பெங்காலி என்று சொல்லி தேவதாஸ் கதைக்கு வலு சேர்த்துள்ளார்கள்!) புதுமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்!

 

      இதில் பெரிதும் பாராட்டப்படவேண்டிய விஷயம் படத்தில் "சமூகவிரோத" செயல்களை செய்வதாக காட்டப்படும் தாஸ் & கோ எந்த இடத்திலும் கொள்கை கோட்பாடு மோவாயிஸம் என்றெல்லாம் அடித்துவிடுவதில்லை.அவர்கள் அனைவருமே அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறே நடந்துகொள்கிறார்கள்.இதுவே வெற்றிமாறன் படமாக இருந்தால் தாஸ் பக்கம் பக்கமாக மோவாயிஸம் பேசியிருப்பார்!

     டிஜிட்டல் கேமரா எனும் திராபையை வைத்துக்கொண்டே இடைவேளை தருணத்தில் அந்த ஏரிக்கரை சூரியஒளி பிரதிபலிப்பு காட்சி ,படத்தின் பிற்பகுதியில் தாஸ் மற்றும் சந்திரா ஒரு குன்றின் உச்சியில் நின்று பேசும் சமயத்தில் பின்னணியில் சூரியன் தெரியும் காட்சி எல்லாம் உண்மையிலேயே அற்புத தருணங்கள்!முகேஷ் ஜி - ன் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது!

 

 
         "அனிருத் என்றாலே இரைச்சல்" மாதிரியான sweeping statements எதையும் நாம் எப்போதுமே சொன்னதில்லை.காரணம் அனிருத்திடம் கண்டிப்பாக இசைத்திறன் உள்ளது(அவர் சில நல்ல மெலடி பாடல்களை கொடுத்துள்ளார்).அதை சரியாக வெளிக்கொண்டு வந்தால் இயக்குநருக்கு லாபம்."இல்ல...வழக்கமா போடுற டப்பாங்குத்தையே போடு" என்றால் அதையே கொடுப்பார்.விக்ரம் படத்தின் பின்னணி இசைக்கு பிறகு(கொஞ்சம் நெல்சன் படங்களிலும்)மற்றொரு அற்புதமான இசை அனுபவம் இப்படம். தாஸ் சந்திரா இருவரும் தனிமையில் அந்த வேனில் பேசிக்கொள்ளும் காட்சியில் வரும் பின்னணி இசை ஒரு உதாரணம்(Das and Parvathy track)! இது தவிர Raga of revenge,Bum ba diga diga,Raga of rage, ஜெய ஜெய சங்கர, Echoes of DC எல்லாமே அட்டகாசம்! இதில் Rose (Instrumental) கொஞ்சம் ராஜேஷ் முருகேசன் இசையமைத்த பிரேமம் படத்தின் Unfinished Hope போல இருக்கு.

 
    லோகேஷ் நாயகனாக நடிக்கிறார் என்றதுமே "எதுக்கு விஷப்பரிட்சை" என்றே தோன்றியது.அதை பொய்ப்பித்துவிட்டார்.என்ன லோகேஷ் மாஸ்டர் & விக்ரம் படங்களை இயக்கிய சமயத்தில் இருந்த தோற்றத்திலேயே இப்படத்திலும் நடித்திருக்கலாம்.எதற்கு புட்டபர்த்தி ஹேர்ஸ்டைல் என்று புரியவில்லை.பார்வதியுடனான உரையாடலில் "எனக்கு புடிச்ச சக்குச்சக்கு வத்திக்குச்சி பாட்டை பாட சொல்லு" என்று நக்கல் அடிக்கிறார். அந்தப்பாட்டை லோகேஷ் தொடர்ந்து பிரபலப்படுத்திவருவது தெரிந்ததே!
இதே கெட்டப்பில் கூட அவர் நடித்திருக்கலாம்!

 
படத்தின் சண்டைக்காட்சிகள் ரணகளம். ஸ்டண்ட் மாஸ்டர் விஜய் கபிலன்( ஆஸ்கர் ரவிச்சந்திரன் மாதிரி இவரின் ஒரு புகைப்படமும் கிடைக்கவில்லை) ஏற்கெனவே மகாராஜா மற்றும் ஆத்மன் நடித்த வெந்து தணிந்தது காடு படங்களில் எதார்த்தம் கலந்த உக்கிரமான சண்டைக்காட்சிகளை அமைத்தவர்.இப்படத்தின் இடைவேளை சண்டைக்காட்சி ரணகளம்! வெட்டப்பட்ட கை மற்றொரு நபரின் கையை பிடித்தபடியே தொங்கி கொண்டிருப்பது ஆஷம்! ஏற்கெனவே விஸ்வரூபம் படத்தில் எவனென்று நினைத்தாய் பாடலில்
 இதேமாதிரி ஒரு தருணம் வரும்! 

 படத்தில் ரசனையான கிங்ஸ் லெவன் தருணங்கள் பல உண்டு.பார்வதி கிங்ஸ் லெவனை தாசிடம் நீட்டும்போது "விட்டுட்டேன்" என்று மறுக்கிறான்.பிறகு பார்வதி கொல்லப்பட்டதும் மீண்டும் கிங்ஸ் லெவனை ஆரம்பிக்கிறான்.சந்திராவின் காதலை ஏற்கும் தருணத்தில் அதை விடுகிறான்! எப்போதுமே கிங்ஸ் லெவன் உதவியுடன் ஏகப்பட்ட அற்புத தருணங்களை திரையில் கொண்டுவரலாம் என்று நாம் தொடர்ந்து சொல்லி வருவது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது!
 

  இதுல தேவையில்லாத ஆணி என்பதாக அந்த தாடிக்கார போலீசு கேரக்டர்.படம் முழுக்க திருட்டுமுழி முழித்தபடி குடும்பத்தினரோடு போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்.கடைசியில் ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என்று பார்த்தால் ஒரு மண்ணும் இல்லை.அந்த கதாபாத்திரத்தின் பெயருக்காக சும்மா வச்சிருக்காங்க போல என்று பிறகு புரிந்து கொண்டோம்!
 
 
 

       தற்கால தமிழ் சினிமா பாணியிலேயே இப்படத்திலும் கல்வியின் மகத்துவம் வசனங்களால் அல்லாது காட்சிகளால் உணர்த்தியுள்ளார்கள். "அந்த குரூரமாக கொல்லப்பட்ட  விவசாயி  மகனின் கல்வி செலவுக்காக காசு கொடுக்காமல் நான் ஆந்திரா போகமாட்டேன்" என்கிறான் தாஸ்.அவனிடம் "படி" என்று வழக்கமான தமிழ் சினிமா ஹீரோ வசனத்தை சொல்கிறார்.

     எல்லாம் சரிதான்.படித்து வேலைக்கு போனால் தற்கால  குடும்பத்தின்... ஏன் அடுத்தடுத்த தலைமுறைகளின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்பதை நாம் மறுக்கவில்லை.கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு காரணமும் அதுவே! ஆனால் இங்கே ஒரு ஃ- ன்னா வாக இதே படத்தில் மெத்த படித்தவர்கள் தான் சந்திராவிடம் ஈவிரக்கமின்றி பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்! சந்திராவை குரூரமாக  கொடுமைப்படுத்தி மகிழ்கிறார்கள்! இவர்களும் நன்றாக படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள்தான்.ஆக கல்வி என்பது முக்கியம் என்றாலும் அதையும் தாண்டிய ஒரு கற்றல் தேவைப்படுகிறது.அதை இதுவரை எந்த தமிழ்ப்படமும் பேசியதாக நாம் கண்டதில்லை!

    ஆனால் அதையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு பார்த்தால் இது மீண்டும் ஒருமுறை பார்க்கத்தூண்டும் படம் என்பதில் சந்தேகமில்லை!


     


   

    



Sunday, 30 August 2026

Pradeep Ranganathan Chronicles

 

பிரதீப் ரங்கநாதனை ரசிப்பவர்களை "2K கு.ஞ்சான்" "ரசனை கெட்டவர்கள்" " காலம் செல்லச்செல்ல எப்படியெல்லாம் ரசனை வீழ்ச்சி அடைகிறது பாருங்கள்!" என்று ஈஸி சேரில் படுத்தபடி விட்டத்தை பார்த்து அங்கலாய்க்கும் 90s மற்றும் அதற்கு முந்தைய தலைமுறை "கிட்ஸ்கள்" ( நீ 319 நாட்டவுட் என்பதால் இதில் எதிலுமே வரமாட்டியே உதயா - கும்மாங்கோ) என்று ஒரே கொந்தளிப்புகள்! நமக்கு தெரிந்து இதனாலேயே பலர் பிரதீப்பின் படங்களை ரசித்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள பயப்படுகிறார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்! 
 
 . 

 


கோமாளி படம் நமக்கு பிடிக்கவில்லை.அது உண்டாக்கிய ஒவ்வாமை பற்றி அப்போதே ஒரு முகநூல் பதிவு போட்டிருந்தோம்.

    அந்த இயக்குநர் ஹீரோவாக இயக்கி நடிக்கிறார் என்றதுமே காததூரம் ஓடிவிட்டோம்(லவ் டுடே).இன்றைக்கும் நாம் அந்த படத்தை பார்க்கவில்லை. சத்யராஜின் மிகையான பாத்திரப்படைப்பு மற்றும்  தனது வழக்கம்போல அதை மிகைநடிப்பால் பார்ப்போரை நடுங்க வைத்திருப்பார் என்ற உறுதியான நம்பிக்கை  என்று பல காரணங்கள்.
     பிறகு டிராகன். அந்த படத்தையும் உடனே பார்க்கவில்லை.பயில்வான் விமர்சனத்தில் "ஜாலியா நாலு வருசம் காலேஜ் படிச்சாமாதிரி ஒரு அனுபவம்" என்றதால்  "பார்க்கலாமோ?" என்ற சந்தேகத்தை மட்டுமே உண்டாக்கியது.
 

பிறகு தற்செயலாக ஒரு காட்சி பார்க்க நேர்ந்தது.பிரதீப் காரில் இருந்தபடியே முடிந்துபோன கிங்ஸ் லெவனை ஸ்டைலாக சுண்டிவிட அது பக்கத்து காரில் இருக்கும் கல்லூரி முதல்வர் மிஷ்கின் மேல் பட்டுவிட அப்போது ஏழரை பிடிப்பதாக வந்த காட்சி பிடித்திருந்தது.நமது அபிமான பாண்டா மிஷ்கினுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருக்கே என்று தோன்றியதாலேயே பார்த்தோம்.

 

    படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் நிப்பாட்டி இது மலையாள படத்தின் ரீமேக்கா? என்று ஒருமுறை உறுதி செய்துகொண்டோம். காரணம் மலையாள சினிமாக்களில் தான் இவ்வளவு உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.தமிழ் சினிமா என்றாலே ஹைடெசிபல் ஒப்பாரி என்றுதான் இருக்கு(ம்).

       அந்தப்படம் பெரும்பாலும் பிடித்திருந்தது.மீண்டும் ஒருமுறை பார்ப்போமா? என்றால் 'கண்டிப்பாக!'.  'பெரும்பாலும்' என்று சொல்ல காரணம் படத்தின் இறுதியில் வந்த டிபிக்கல் தமிழ் சினிமா சென்டிமென்ட் பிழிதல்!

     ஏமாற்றி வேலைக்குப்போய் மஜாவா இருக்கான்.பெரிய பணக்கார பெண்ணை கட்டிக்க போறான் என்றெல்லாம் கதை ஜாலியாத்தான் போச்சு.ஆனா திடீர்னு பேப்பர் சேசிங் செய்ததால் ஒரு பரம ஏழை மாணவனின் கூகுள் வேலை கனவு பறிபோனது(அந்த மாணவனுக்கு ஒரு நோய்வாய்ப்பட்ட தாய் ,அவன் வசிக்கும் ஓட்டை வீடு அது இதுவென்று பக்கா தமிழ் சினிமா சென்டிமென்ட் மசாலா!) அதற்காக ராகவன் எல்லாத்தையும் தியாகம் செய்வதெல்லாம் பக்கா தமிழ் சினிமா பாணி!
    நான் படத்தில் விஜய் ஆண்டனி எல்லா பிராடு வேலைகளையும் செய்துவிட்டு திடீரென்று அந்த சலீம் என்ற மரித்துப்போன இளைஞனின் குடும்பத்தை காப்பாற்றுவதாக காட்டிய அதே டெம்ப்ளேட் சென்டிமென்ட் காட்சிகள் தான் இதில் உறுத்தல்.மற்றபடி ஒரே ரணகளம் தான்.

   



 

.
தோற்றம் :

தோற்றம் சார்ந்து எவரையும் விமர்சித்தல் கூடாது என்று சொன்ன அதே உலக விமர்சகர் குழு பிரதீப்பை தோற்றம் சார்ந்தே விமர்சிப்பது நகைமுரண்.அப்படி " old school hero லுக்" கொண்ட நடிகர்கள் என்று இன்று பார்த்தோமானால் காசர் அஜீத் அரவிந்த்சாமி ஜெயம்ரவி/ரவிமோகன் ஷாம் என்று எல்லாருமே நடுத்தர வயதை தாண்டியவர்கள்/அடைந்துவிட்டவர்கள்.மிஞ்சி இருப்பது ஆத்மன் மட்டுமே ( ஸ்லீப்பர் செல் வேலையை காட்டிட்டியே! - கும்மாங்கோ).

 
      அதனால் தோற்றத்தில் சிறந்து விளங்கும் இளம் நாயகன் என்றெல்லாம் இப்போது (ஆத்மன் தவிர்த்து) யாருமில்லை.அசோக் செல்வன் கவின் ரியோ மணிகண்டன்  ரிஷிகாந்த் போன்றவர்கள் சராசரி தோற்றம் கொண்டவர்கள் என்பதால் இதில் சேர்க்க முடியாது.

     என்னமோ தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் எல்லாருமே தோற்றத்தில் செம்ம ஸ்மார்ட்டாக  இருப்பது போலவும் பிரதீப் மட்டுமே இப்படி இருப்பதாகவும் சொல்வதே லாஜிக் இல்லாத வாதம்.

    மேலும் பிரதீப்பை தனுசுடன் ஒப்பீடு செய்கிறார்கள்.தனுசு நடிக்கவந்த புதிதில் பார்க்க " பிஹார்காரனா  தோற்றமளித்தாலும் தமிழ் பேசுறானேய்யா" என்பதாகத்தான் இருந்தார்!(ஆத்மன் பாசறை சார்பில் வன்மத்தை கொட்டிட்டியே - கும்மாங்கோ).ஆனால் தோற்றத்தில்  பிரதீப் அப்படி இல்லை.

ஆளு பாக்க வடக்கனா தெரிஞ்சாலும் நல்லா தமிழ் பேசுறியே! 


 

    மேலும் பிரதீப்பின் பலமே funk வைத்த சுருள் தலைமுடி தான்.எனவே மிலிட்டரி கட்டிங்,கிராப் கட்டிங் mohawk ஸ்பைக் மொட்டை எண்ணெய் போட்டு வழித்து சீவுதல்  என்றெல்லாம் வேறு மாதிரி முயற்சித்தால் காலி.பின்னால் வளர்ந்திருக்கும் funk முடியை கூட வெட்ட கூடாது.வெட்டினால் அம்புட்டுதேன்!


 

      ஒருகாலத்தில் ஹர்பஜன் சிங் சீக்கிய வழக்கத்தை மீறி தனது  கத்தரிக்கப்படாத முழு சிகையுடன் ஒரு விளம்பரத்துக்கு போஸ் கொடுத்தார்.அத்தோடு அவரது கிரிக்கெட் வாழ்க்கை சரிவை நோக்கி மிக வேகமாகவே சென்றது!மீளவே இல்லை!

 



    அந்த சுருள் சுருளான பிடரிதான் பிரதீப்புக்கு ஒருவித ஆராவை கொடுக்குது(இதே போன்ற வரிகளை ஒருகாலத்தில் ஒங்க இவருக்கு விமர்சகர்கள் சொன்னது நினைவில் வருகிறது 😃)!அவரது எனர்ஜி லெவல் மற்றுமொரு பலம்.
.




 நடிப்பு:
கண்டிப்பாக பிரதீப்பின் நடிப்பு என்பது அமெச்சூர்த்தனத்தின் உச்சம் என்று சொல்லாம்.அதில் மாற்றுக்கருத்து இல்லை.திடீரென்று ஜெர்க் ஆகி ஜம்ப் பண்ணி பதில் சொல்வது (இதுல கொஞ்சம் கிரெடிட் நாகேஷுக்கு செல்ல வேண்டும்)விரல் வித்தைகள் காட்டுவது செல்போனை தூக்கிப்போட்டு பிடிப்பது சத்தமாக எதிர்வினை ஆற்றுவது.....இரு இரு.. 'இதெல்லாம் ஏற்கெனவே ரஜினி செய்யல?' என்ற எண்ணம் எழாமல் இல்லை.
    ஆனால் அதுதான் பிரதீப்பின் பலமாக மாறிவிட்டது.இனி அவர் subtle ஆக எதிர்வினை ஆற்றுகிறேன் நிதானமாக நடி(ட)க்கிறேன் என்றெல்லாம் செய்தால் படம் பப்படம் ஆகும்!


    மேலும் அவர் இதேபோன்று நகரம் சார்ந்த காதல் கதைகளில் மட்டுமே நடித்தால் மேலும் பல உயரங்களை அடையலாம்.அதை விடுத்து கிராமத்து மண்ணை அப்படியே குழைத்து ஒரு காவியமாக வடித்து அதில் குரூடு ஆயில் மேக்கப்பில் தலையில் சாக்கு மாட்டிக்கொண்டு மழையில் குத்தவச்சு பின்னணியில் கிழவியின் "ஏ....ஆயி" ஒப்பாரி அது இதுவென்று முயன்றால் அத்தோடு அவரது திரை வாழ்க்கை ஓவர்!( விக்ரம் தாக்கப்பட்டார்? - கும்மாங்கோ)

.
சர்ச்சைகள் :

   சர்ச்சை எனும் பெட்ரோலில் தான் தமிழ் சினிமாவில் பலரது கரியர் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன( சூரியனை பெயராக கொண்டவரா? - கும்மாங்கோ).பிரதீப் அதை சாமர்த்தியமாகவே பயன்படுத்தி கொள்கிறார்.Dude படத்தின் கதையை விடவெல்லாம் பேரதிர்ச்சி உண்டாக்கும் கதைகள் கே.பி எடுத்துள்ளார்.ஆனால் உலக சினிமா போராளிகள் dude படத்துக்கு எதிராக  மிகையாக கொதித்தெழ அதுவே அப்படத்தின் வெற்றிக்கு  (பிரதீப்,மமிதா,  ஊறும் பிளட் ஆகியவை தவிர்த்து) மற்றுமொரு  காரணமாகி விட்டது. 
 . இப்படத்திலேயே மமிதா உடனான ஜோடி இயல்பானதாக இருந்தது.ஆனா ரெண்டு படம் தாண்டி ஜோடியாக நடித்தால் உடனே இணைய போராளிகள் கொதித்து எழுவது ஒருபுறமிருக்க ஊடகங்கள் கிசுகிசு எழுதியே காலி செய்துவிடுவார்கள்.அந்த காலத்திலேயே உத்தம்குமார் சுசித்ரா சென் சிக்கல் இல்லாது இருபத்தைந்து படங்களில் ஜோடியாக நடித்தனர்(அதற்காக அவர்களோடு இவர்களை இணை வைத்ததாக கொந்தளிக்க வேண்டாம்).இந்த கிசுகிசுக்களுக்கு பயந்தே சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகனுடன் (இவர்கள் ஜோடியும் இயல்பாக இருந்தது) நடிப்பதை தவிர்த்தார்.இதுல "தெற்குல தான் முற்போக்கு பிதுங்குது" என்று மார்தட்டல் வேற!என்ன கொடுமை.... 
 
Dude படத்திலுமே இளைஞர்களின் நவீன சிந்தனை போக்குக்கு, அணுகுமுறைக்கு  காரணம் உலகமயமாக்கல் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளாத இயக்குனர் இதற்கெல்லாம் காரணம் "நூறு வருசத்துக்கு முன்னாடி இருந்த தாடிக்கிழவர் தான்" என்று அடித்து விட்டதை அந்த தாடிக்கிழவரே (ஒருவேளை இப்போது இருந்திருந்தால்) நம்பாமல் இயக்குனர் மண்டையில் தடியால் ஒரு போடு போட்டிருப்பார்! பிரதீப்  இந்தமாதிரி அடுத்தவர் கொள்கையை பரப்பும் கைத்தடியாக தன்னை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காமல் இருத்தல் நன்று.
 

    சமீபத்தில் தில்லியில் நடந்த மாணவர் போராட்டத்தை பற்றி ஒரு எக்ஸ் பதிவு போட்டு அனைவரையும் கொந்தளிக்க வைத்ததை பார்த்தபோது " எப்போ எங்க ட்ரிக்கர் பட்டனை அழுத்தனும்னு பய கரக்ட்டா புடிச்சிட்டான்" என்று தோன்றியது 😃

 


     சரியான கால இடைவெளியில் அப்பப்போ ட்ரிக்கர் பட்டனை இப்படி தட்டிக்கிட்டு இருந்தாலே லைம்லைட்டில் மெயின்டெய்ன் பண்ணிக்கலாம்! 😀
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து கையை சுட்டுக்கொண்டுவிட்ட நிலையில் ஏற்கெனவே தான் அமைத்த வெற்றி கூட்டணி இயக்குநர்களுடனோ அல்லது அதுபோன்ற ஒத்த சிந்தனை கொண்ட இளம் இயக்குநர்களுடனோ( விசி மாதிரி ஏற்கெனவே பப்படம் கொடுத்த இயக்குநர்களை தள்ளியே வைத்து) பயணித்தால் அவர் இன்னும் உயரங்களை அடையலாம்!


டிஸ்கி: என்னதான் PR Chronicles எழுதினாலும் நாம எப்பவுமே ஆத்மன் பாசறை ஸ்லீப்பர்செல் தாங்க! (க்கும்.இனி இவன நம்ப முடியாது.கண்காணிக்க வேண்டியதுதான் - கூல் சுரேஷ்)

 




Sunday, 7 June 2026

Deva,Nelson & prejudice!

 ரெட் படத்தில் ஒரு காட்சி. மாயக்காவுக்கு செல்லூர் சீனி....சாரி...சாரி...(யோவ் கதாபாத்திரங்களின் அசல் பேரை சொல்லி சிக்கிக்காத - கும்மாங்கோ).... ரெட் மீது தீராத ஆசை.சார்லியிடம் மாயக்கா பேசிக்கொண்டிருக்கையில் கனவு....டூயட்....ஸ்டாப்...

 

   இந்த காலகட்டத்தில் இங்க ஒரு டூயட் பாட்டென்றால் எப்படி இருக்கும்?அப்படியே லோக்கல் மண்ணை குழைத்து கேட்பவன் காதில் ஊற்றுகிறேன் பேர்வழி என்று டப்பாங்குத்த கிழித்து ஒரு வழி பண்ணிவிடுவார்கள்!

    ஆனால் தேவா அப்படியே அதற்கு எதிர் திசையில் சிந்தித்தார்! ஏன் இவர்கள் "உலகில் உள்ள உயர்ந்ததெல்லாம் புசிக்கும் ரசிகர்களாக" இருக்கக்கூடாது? ஏன் இவர்கள் மேற்கத்திய அதிரடி beats கொண்ட பாடலுக்கு ஆடக்கூடாது?

 
    ஆத்மன் பாடியதிலேயே நமக்கு மிகவும் பிடித்த பாடலென்றால் இதுதான்.இத்தனைக்கும் அவர் ஹீரோவாக அந்தாண்டு இறுதியில் அறிமுகம் ஆகும்முன்பே அஜீத்துக்கு பாடியதெல்லாம் பெரிய சாதனை.( சரி ஆத்மன் பாசறை வேலை போதும்.வந்த விஷயத்தை சொல்லு - கும்மாங்கோ)

 
    இப்ப கட் பண்ணா ஜெயிலர் படம்.விநாயகன் சிலைகடத்தல் பேர்வழி.அடியாட்களை வைத்துக்கொண்டு ராஜ்ஜியம் செய்கிறான்.அவனுக்கு ரிலாக்ஸ் செய்ய அவ்வப்போது பாட்டு போட்டு தனது அல்லக்கைகளை ஆட விடுகிறான்.

டிக் டாக் ரமேஷ் - மறைந்துபோன ஒரு அற்புத கலைஞன் 


 

    நிற்க! வழக்கமான  முற்போக்கு இயக்குநர் யாராவது இக்காட்சியை எடுத்திருந்தால் "ஏ... ஆயி..." என்று கிழவியின் ஒப்பாரியில் ஒரு டப்பாங்குத்து இசையை சேர்த்திருப்பார்கள்.
    நெல்சனிடம் பிடித்த விஷயமே இதுதான்.சட்டென்று பார்வையாளன் யூகிக்க முடியாத ஒரு எதிர்வினையை/இசையை/வசனத்தை வைத்துவிடுவார்.

    
இப்படத்திலும் அப்படித்தான்.Taal Se Taal Mila என்று சுக்விந்தர் சிங் (பாடலை உருவாக்கியதே அவர்தான் என்றொரு சர்ச்சையும் ஓடிட்டு இருக்கு) பாட அல்லக்கைகள் ஆட...உண்மையிலேயே அக்கட்சி புதுமையாக இருந்தது.

   அதிலும் பாடல்கள் ஒலிப்பது அட்டகாசமான Bose Sound link Revolve II மாடல் ஸ்பீக்கரில்....


   பிறகு வேறொரு தருணத்தில் ஒங்க இவருக்கு செக் வைத்துவிட்டு மற்றொரு பாடல்..

கண்ணோடு காண்பதெல்லாம்....



    "பொதுமைப்படுத்துதல் என்பதே கூடாது"."இவர்கள் இப்படித்தான் என்று முன்முடிவுக்கு வருவது தவறு" என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யும் அதே போராளி இயக்குநர்கள் வைக்கும் காட்சிகள் கதாபாத்திர சித்தரிப்புகள் எல்லாமே அதே முன்முடிவு/ பொதுமைப்படுத்துதல் வகையறாவில் வருவதாகத்தான் இருக்கு.நாம் ஏற்கெனவே வேட்டையன் பற்றிய பதிவில் "அபிராமி கெட்ட கதாபாத்திரம் என்பதால் அவர் vaping செய்கிறார் என்று காட்டுதல் பொதுமைப்படுத்துதல் வகையறாவில் வராதா?" என்று கேட்டிருந்தோம். இயக்குநர்,வேட்டையன் படத்தை ஞானவேல் எடுத்ததே பொதுமைப்படுத்துதல் &முன்முடிவுகள் கூடாது என்று உணர்த்தவே எனும்போது இந்த ஒற்றை முரணில் அவரது மொத்த நோக்கமும் அடிபட்டு போனது!

 
     ஏன் அடித்தட்டு மக்கள் இசை ரசனை என்பது சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரி தான் இருக்க வேண்டுமா?ஏன் அது மேற்கத்திய இசை சார்ந்து இருக்க கூடாதா? "அவர்களுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை" எனும் முன்முடிவால் தானே நீங்கள் அப்படி கட்சிகள் வைப்பதில்லை? அது தவறில்லையா?எதுக்கிந்த இரட்டை வேடம்?
 

   எப்படி இருந்தாலும் புரட்சி முற்போக்கு என்று ஊரை ஏமாற்றாத தேவா மற்றும் நெல்சன் ஆகியோர் தான் இந்த பொதுமைப்படுத்துதல் மற்றும் முன்முடிவுகளை தாண்டி சிந்தித்துள்ளனர்!அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்!

 

Sunday, 31 May 2026

சினிமா சீக்ரெட் - கலைஞானம்

 

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவ் ஆனந்த் சென்னை வந்திருந்தார். இரு கூட்டங்கள். ஒன்று சினிமாத்துறையினர் நடத்தியது. இரண்டாவது, கிட்டத்தட்ட பொதுக்கூட்டம்போல. அன்றுதான் சென்னையில் அவரால் படைக்கப்பட்ட ரொமான்சிங் வித் லைஃப் (வாழ்க்கையோடு விளையாடியபடி) நூல் வெளியிடப்பட்டது. அதில் புகைப்படங்கள் இருந்தன. முன்னூறு பக்கப் புத்தகத்தில் இருபது படங்கள்; மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்ட குறிப்புகள். நூலே பொறுப்போடு எழுதப்பட்டிருந்தது. தேவ் ஆனந்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் இருந்திருக்கும். வாக்குக் கொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லை. ஆனால், புத்தகத்தில் ஓரிடத்தில்கூட கசப்பு இல்லை. குறைகூறல் இல்லை. அவருடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை - அசோகமித்திரன்,திரைக்குப்பின்.
 

 
கலைஞானம் என்றாலே சாமானியர்களுக்கு "இது நம்ம ஆளு படத்தில் வந்த ஐயர்" என்று சொன்னால்தான் தெரியும்.ஆனால் அதற்கு பலகாலம் முன்பிலிருந்தே பல்வேறு திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை அமைத்து கொடுத்தவர்,முடிக்கப்பட்ட படத்தில் ஏதோ ஓட்டை இருக்கே என்று இயக்குநர்கள் கலங்கி நின்றபோது அதை நிவர்த்தி செய்ய வழி செய்தவர், சாண்டோ சின்னப்பா தேவர் குடும்பத்தின் வாழ்நாள் விசுவாசி,கடும் நிதி நெருக்கடி நேரங்களில் தனது கதைகளையே அடமானம் வைத்தவர்,அப்பாவித்தனமாக இவர் பல இடங்களில் கதையை சொல்லிவைக்க இவருக்கே தெரியாமல் அதை படமாக்கி இவருக்கு காசு கொடுக்காமல் ஏமாற்றிய பலர் என்று பல்வேறு விரிவான அனுபவ தொகுப்பாக இப்புத்தகம் ஐந்து பாகங்களாக உள்ளது
.மேலே அசோகமித்திரன் தேவ் ஆனந்த் பற்றி குறிப்பிட்டது அப்படியே கலைஞானத்துக்கும் பொருந்தும்.ஐந்து பாகங்கள் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள்.எங்கும் ஒரு வெறுப்பு வன்மம் விரோதம் தென்படவில்லை! நேரில் சந்தித்தே இராத மனிதர்கள் பற்றியெல்லாம் வன்மத்தை கொட்டிவரும் இணைய போராளிகள் இவரிடம் கற்க நிறைய உள்ளது!


  - தேவர் மகன் கதை இவருடையது.ஆனால் அதற்கு கிரெடிட் கொடுக்காமல் காசர் வெறும் 25000 கொடுத்து இவரை அனுப்பி விடுகிறார்.தனது உதவியாளருக்கு தான் அப்போது கொடுத்த சம்பளமே அவ்வளவு என்கிறார் கலைஞானம்.

 
-புதுப்பட்டி பொன்னுத்தாயி படம் அசல் பொன்னுத்தாயி எனும் நாதஸ்வர கலைஞர் தனது கணவரின் மறைவுக்கு பிறகு வாசிப்பதையே நிறுத்தி விட்டதை கற்பனை கலந்து சொன்ன படம்.அப்பட பாடல் ஒலிப்பதிவில்  திருவிழா ஆர்.ஜெய்சங்கர் என்ற நாதஸ்வர கலைஞர் மொட்டையின் பூங்காற்று திரும்புமா பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க மொட்டை அப்படியே அசைவற்று கண்கலங்கி ரசிக்கிறார்.கலைஞானத்திடம் மெதுவாக "மீண்டும் அவரை அதே பாடலுக்கு வாசிக்க சொல்லுங்கள்" என்று சொல்லி 'கண்ணீர் வழிய அப்படியே கலங்கி நின்றபடி ரசித்தார் ' என்கிறார் கலைஞானம்.அதே பட பாடல் பதிவின்போது நாதஸ்வரம் வெடித்து இரண்டாக பிளக்கிறது.மொட்டை ஞானோதயமாக "மங்கல கருவி உடைந்தது நல்லதா படல அண்ணே" என்று கலைஞானத்திடம் சொல்கிறார்.சொன்னபடியே படம் பெட்டிக்குள் போகிறது.
 

திருவிழா ஜெய்சங்கர்

   - ரஜினியை வில்லனாக மட்டுமே சித்தரித்து வந்த இயக்குநர்களுக்கு மத்தியில் இவர் ஏன் ஹீரோவாக கூடாது? என்று பைரவி படத்தில் ரஜினியை ஹீரோவாக்குகிறார்.இதை கேள்விப்பட்ட தேவர் "டேய் வேண்டாம்டா! அதே படத்தில் ஶ்ரீகாந்த் செஞ்ச கேரக்டருக்கு வேணும்னா ரஜினியை போடு.விஷப்பரிட்சை பண்ணாத" என்று எச்சரித்ததையும் மீறி படமெடுக்கிறார்.அதன்பின் நடந்தது வரலாறு!"அந்த ரஜினி உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையா?நீங்கள் ஏன் இப்படி ஒரு பொந்தில் வாழ்கிறீர்கள்" என்று பலரும் கேட்டதற்கு ரஜினியை குறை கூறாமல் "கொடுப்பதும் கொடுக்காததும் அவரது விருப்பம்.அதைப்பற்றி நான் விமர்சிக்க மாட்டேன்" என்று பெருந்தன்மையாக சொல்கிறார்.இப்புத்தகம் வெளியான காலத்திற்கு சில ஆண்டுகள் கழித்து ரஜினி கலைஞானத்துக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசளித்தார் என்று செய்தி வந்தது!

 
 -இளஞ்சோடிகள் படம் இவருக்கே தெரியாமல் ஹிந்தியில் லவ் 86 என்று கோவிந்தாவை அறிமுகம் செய்து வெளியிடப்பட்டு மெகா ஹிட் ஆகிறது.தற்செயலாக டிவியில் அப்படத்தை பார்க்க நேரும் கலைஞானம் பிலிம் சேம்பர் தலைவராக இருந்த முக்தா சீனிவாசன் மூலம் மும்பை சென்று அங்குள்ள தயாரிப்பாளரிடம் இதுபற்றி கேட்க அவர் கதறி அழுதபடி இவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.நிதி நெருக்கடியால் இதை செய்துவிட்டதாக சொல்கிறார்(இவர் ஏற்கெனவே இளஞ்சோடிகள் பட உரிமையை வாங்க கலைஞானத்தை சந்தித்து பிறகு நிதியில்லை என்று மும்பை திரும்பியவர்) .பிறகு அறுபதாயிரம் தான் தன்னால் தர முடியும் என்று சொல்லி மன்னிப்பு கேட்க இவர் பெருந்தன்மையுடன் அதை ஏற்கிறார்.


 
-மிஸ்டர் இந்தியா படத்தை பாலாஜி தமிழில் தயாரிக்க முடிவுசெய்து பாக்யராஜை அணுகுகிறார்.இந்த மாயாஜால கதைகள் எல்லாம் தனக்கு சரியா வராது என்று சொன்னவர் பிறகு ஒருமாதிரி ஒப்புக்கொண்டு "வசனப்பகுதிகளை மட்டும்தான் நான் எடுப்பேன்.மாயாஜால பகுதிகளை வேறு யாரையாவது வைத்து இயக்கி கொள்ளுங்கள்.எனக்கு அது சரி வராது" என்கிறார்.அந்த மாயாஜால காட்சிகளை எடுப்பதற்கான பட்ஜெட்டும் இல்லை தொழில்நுட்பமும் இங்கில்லை என்பதை பாக்யராஜ் உணர்கிறார்.இடையில் பாலாஜிக்கும் இவருக்கும் பெரிய முட்டல் மோதல்.ரஜினி வந்து சமாதானம் முயன்றும் தோல்வி."பாலாஜி துப்பாக்கி எல்லாம் வச்சிகிட்டு மிரட்டுகிறார்" என்கிறார் பாக்யராஜ்.பிறகு பூர்ணிமா பாக்யராஜின் தலையீட்டால் சமாதானம் ஏற்படுகிறது.பாக்யராஜும் பாலாஜியும் ராசியாகி போகிறார்கள்!படம் வெளியாகி படத்தில் பாக்யராஜுக்கு பெரிய பங்கில்லை என்று தெரிந்ததும் மக்கள் கூட்டமும் வருவது நிற்க பெருத்த தோல்வி.
 


    போனி கபூர் தனது தம்பி அனில் கபூரை பெரிய ஹீரோ ஆக்கியே தீர்வது என்ற வெறியில் இருநூறு பிலிம் ரீல்களில் (ஒரு ரீல் ஆயிரம் அடி!!!!!) படமாக்கி அதை பதினான்கு ரீல்களாக எடுத்த படத்தை குறைந்த பட்ஜெட் வச்சு எப்படி எடுக்க முடியும் என்று கேட்கிறார் கலைஞானம்.

 
- கே.பாலச்சந்தரை ஒருமுறை சந்தித்து ஒரு 'கண் மாற்று ' கதையை சொல்கிறார் கலைஞானம்.அதாவது ஒரு  பெண் தனது காதலனை சந்தர்ப்பவசத்தால் பிரிந்து வேறு ஒருவனுக்கு மனைவி ஆகிறாள்.அவனுக்கு விபத்து ஏற்பட்டு பார்வை போகிறது.அப்போது அந்த காதலன் வேறு ஏதோ ஒரு வகையில் இறந்துவிட அவனது கண்களை கணவனுக்கு பொருத்தி விடுகிறார்கள்.அந்த கண்ணின் வெண் விழி படலத்தில் மச்சம் போன்று ஒரு புள்ளி.கணவனின் கண்களில் காதலனின் கண்களை ஒவ்வொருமுறை கண்டதும் அலறியபடி மயங்கி விழுகிறாள் என்பதாக கதை செல்கிறது."கண்களை இவ்வளவு க்ளோசப்பில் படமாக்குற அளவுக்கு கேமரா வசதியெல்லாம் இல்லையே" என்று சொல்லி அனுப்புகிறார் கேபி.பல ஆண்டுகள் கழித்து சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் பத்து கதைகள் சொல்ல வேண்டும் என்று இவரிடம் கேட்க இவர் கடகடவென பத்து கதைகள் சொல்கிறார். அதில் இந்த கண் கதையும் ஒன்று!இதை சொல்லி அடுத்த ஆண்டே அந்தக்கதையை இவரிடம் சொல்லாமல் வேறொரு இயக்குநர் படமாக்கி விட்டதையும் குறிப்பிடுகிறார்!
 

அது என்ன படமென்று உடனே புரிந்திருக்குமே! (ஆனால் இதில் ஒரு தவறாக கண் மாற்று சிகிச்சை என்றால் விழிப்படலத்தை மட்டும் தான் மாற்றுவார்களே அன்றி மொத்த கண் உருண்டையையும் மாற்ற மாட்டார்கள்).
 - ஶ்ரீதர் இயக்கத்தில் அண்ணா நீ என் தெய்வம் நாலாயிரம் அடி எடுத்ததோடு எம்ஜியார் முதல்வர் ஆகிவிட்டதால் நின்றுபோனது.சில ஆண்டுகள் கழித்து அப்படத்தின் தயாரிப்பாளர் நலிந்த நிலையில் இருப்பதை அறியும் எம்ஜியார் பாக்யராஜிடம் அந்த ஃபுடேஜ் ஐ கொண்டு ஒரு முழுநீள படம் எடுத்து தர சொல்கிறார்.அகமகிழும் பாக்யராஜ் கலைஞானம் உதவியுடன் அவசர போலீஸ் படத்தை எடுக்கிறார்.முதல் இரண்டு நாட்கள் திரையரங்கில் கடும் கூட்டம்.அதன்பின் ஒருவரையும் காணோம்! படம் பிளாப்.காரணம் எம்ஜியார் மறைந்த பின்னர் வந்த படமென்பதால் "தலைவரை" காண எம்ஜியார் ரசிகர்கள்  அடித்து மோதி வந்து பார்த்தால் அது பாக்யராஜ் படமாகவே இருந்ததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்!  சம்மந்தமே இல்லாமல் ஒரு பாக்யராஜ் தெலுங்கு பேசி நடித்தது ஒருவித அந்நிய தன்மையை உண்டாக்கி விட்டது மற்றொரு காரணம் என்பது நம் கருத்து!

 
 
- தான் எடுத்த மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் உமையாள்புரம் சிவராமனின் இறுதி காட்சி மிருதங்க வாசிப்பை கேட்டு யாரையுமே எளிதில் பாராட்டாத சங்கீத விமர்சகர் சுப்புடு "இந்தமாதிரி உலகத்திலேயே வேறு யாராலும் வாசிக்க முடியாது" என்று பாராட்டியதை சிவராமன் நன்றியுடன் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டதை குறிப்பிடுகிறார்.இதே படத்தை பார்க்கும் அப்போதைய முதல்வர் எம்.ஜி. ஆர் சிவராமனிடம்  அந்த வாசிப்பை சிலாகித்து சொல்லி "என்ன பிரமாதமா வாசிச்சிருக்க!உனக்கு என்ன வேணும்?" என்று கேட்க "உங்க அன்பிருந்தா போதும்" என்று சிவராமன்  சொல்கிறார்.படத்தை பார்த்துவிட்டு தம்பி சிவாஜி மாதிரி உலகத்திலேயே யாராலும் நடிக்க முடியாது" என்று எம்ஜியார் மனமார பாராட்டியதையும் சொல்கிறார்.
உமையாள்புரம் சிவராமன் 


 

-வேதம் புதிது கண்ணன்  என்ற பெயர் வெகு பிரபலம்.ஆனால் உண்மையில் வேதம் புதிது கதையை ஒருமாதிரி தயார் செய்து பாரதிராஜாவிடம் சொல்கிறார் கண்ணன்.அது ஒரு ஹோட்டல் அறை. அதில் பாரதிராஜா சில மாற்றங்களை சொல்ல கண்ணன் அதை மறுக்க வழக்கம்போல கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் பாரதிராஜா அந்த கதை பேப்பர்களை கண்ணனின் முகத்தில் விட்டெறிந்து விட்டு "கலைஞானம் நாளைக்கு நீங்க இன்னொரு கதை ரெடி பண்ணி கொண்டுவாங்க.இவன் வேண்டாம்" என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறார்.

வேதம் புதிது கண்ணன்

    
 மற்றொருவராக இருந்தால் 'இதான்டா ஜாக்பாட்' என்று பாரதிராஜாவுக்கு தனியாக கதை பண்ணி கொடுத்து எங்கோ சென்றிருப்பார்.ஆனால் கலைஞானம் ஒரு சக படைப்பாளி இப்படி அவமானப்படக்கூடாது என்று நினைத்து கண்ணனிடம் " தம்பி நா இந்தக்கதையை மாத்தி தரேன்.நீ எழுதுனதா சொல்லி எடுத்துட்டுப்போய் முதல்ல அவர் கால்ல விழுந்துடு.அப்பத்தான் அவர் அமைதி ஆவார்" என்று சொல்லி கதையில் திருத்தங்கள் செய்துகொடுத்து அனுப்புகிறார்.பிறகு நடந்தது எல்லாருக்கும் தெரியும்!
-யேசுதாஸ் இவரது படத்திற்கு பாட வருகிறார்."பொதுவாகவே யேசுதாஸ் பாடுகிறார் என்றால் இசையமைப்பாளர் பயத்தில் அவர்கள் வராமல் உதவியாளரை அனுப்பி வைப்பார்கள்.அந்தளவு நுட்பமாக பாடலில் உள்ள ராகத்தில் சந்தத்தில் பல்லவியில் சரணத்தில், வார்த்தைகள் ராகத்துக்குள் மிகச்சரியாக பிசிரில்லாமல் உட்காருகிறதா என்றெல்லாம் நுட்பமாக குறைகளை கண்டுபிடித்து துளைத்து எடுப்பார்" என்கிறார் கலைஞானம். சங்கர் கணேஷ் வராமல் அவரது உதவியாளர் சொல்லி கொடுக்கிறார்.அப்படித்தான் அன்றும்!கலைஞானம் இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய பாடலுக்கு மெட்டமைத்திருந்தார் சங்கர் கணேஷ்.அதை பாடும் முன்பு  குறிப்பிட்ட சில வரிகள் சந்தத்துத்துக்குள் வரவில்லை என்று கடிந்து கொள்கிறார் யேசுதாஸ்.

 

     கலைஞானத்துக்கு திடீரென்று ஒரு கோபம் அவர் பதிலுக்கு திட்டுகிறார். வார்த்தைகள் தடிக்க கடும் சொற்போர்!பிறகு கலைஞானம் கோபித்து கொண்டு ஸ்டுடியோவின் வேறொரு அறைக்கு சென்றுவிட பிறகுதான் யேசுதாசுக்கு தான் சண்டை போட்ட நபர்தான் படத்தின் தயாரிப்பாளர் என்று தெரிகிறது.அவரே ஓடிவந்து மன்னிப்பு கேட்கிறார். ஜீசஸ் தனக்கு இதன்மூலம் பெரிய பாடம் புகட்டிவிட்டதாக சொல்கிறார்.கலைஞானம் அந்தக்கணமே உருகிப்போய்  கண்ணீர் விட்டு ஒரு மகா கலைஞனை தான் அப்படி பேசி இருக்க கூடாது என்று அவரும் வருந்த நட்பு உறுதியாகிறது.
    "சார் இனி நீங்க தயாரிக்கும் எல்லா படத்திலும் நான் பாடுவேன். ஜீசஸ் மீது ஆணையாக அதுக்கு சம்பளமும் வாங்க மாட்டேன் " என்று உறுதி அளிக்கிறார் யேசுதாஸ்.அகமகிழ்ந்து போகிறார் கலைஞானம்.
    ஆனாலும் அவருக்கு மனசு கேட்கவில்லை.எப்படியாவது இவர் பாடிய பாடல்களுக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்துவிட வேண்டுமென்று முடிவெடுக்கிறார்.மற்றொரு சொந்த தயாரிப்பு படத்திற்கு யேசுதாஸ் பாடவரும் போது அதற்கு இராம.நாராயணன் தான் தயாரிப்பாளர் என்று நம்ப வைத்து அவர் கையாலேயே ஒரு பெரிய தொகையை யேசுதாசிடம் கொடுக்க வைக்கிறார் கலைஞானம்!

- கே. பி.சுந்தராம்பாள் வயதான காலத்தில் இவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கிறார்.சுந்தராம்பாள் தினமும் ஒருவேளை மட்டுமே உணவருந்துவார்.சரியாக மதியம் பனிரெண்டு மணிக்கு சாப்பாடு கொடுத்துவிட வேண்டும்.சில நிமிடங்கள் தாமதமானாலும் அன்று முழுவதும் உபவாசம் போல இருந்துவிடுவார் என்கிறார் கலைஞானம். 
 

சுந்தராம்பாளின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது குடும்பத்தினர் சிலரே அவருக்கு எதிராக செய்வினை வைத்தது; கலைஞானம் தனக்கு தெரிந்த ஜோதிடர் மூலம் அதை எடுத்து காப்பாற்றியது, சுந்தராம்பாளின் கொடுமுடி சொத்துக்கள் (கொடுமுடி பேலஸ் மர்மங்கள் என்று மர்மப்படம் போல விளக்குகிறார்)அனைத்தையும் முறையாக மதிப்பீடு செய்து அதை அவரது வாரிசுகளுக்கு சரியான விகிதப்படி சொத்துக்களை பிரித்து கொடுத்தது என்று அனைத்தையும் செய்கிறார் கலைஞானம்.
- சிறுமி மீனா தனது தாய் ராஜ்மல்லிகாவுடன்ஒருமுறை இவரை சந்திக்கிறார்.அப்போது மீனாவின் முன் பற்கள் சற்று தெத்தலாக இருப்பதை கவனித்து ஒரு பல் மருத்துவரை குறிப்பிட்டு அவரிடம் சென்றால் இதை சரி செய்வார் என்கிறார்.மீனாவின் தாயும் அதை மதித்து மருத்துவரிடம் சென்று மீனாவின் பற்களை செம்மையாக்குகிறார்.இதையே தயங்கி தயங்கி தான் மீனாவின் தாயாரிடம் சொல்கிறார்.
 

அதற்கு ராஜ்மல்லிகா " என்னண்ணே இதுக்கு ஏன் இவ்வளவு தயங்கிறீங்க?" என்று கேட்க கலைஞானம் முன்பு ஒருமுறை ஶ்ரீதேவியின் தாயிடம் ஒரு யோசனை  சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்ட அனுபவத்தையும் சொல்கிறார்.ஶ்ரீதேவியின் மூக்கை சரி செய்யும் விதமாக இவர் ஒரு மருத்துவரை குறிப்பிட்டு யோசனை சொல்ல ஶ்ரீதேவியின் தாய் கொதித்துப்போய் உங்க படமே வேண்டாமென்று கதை சொல்லவந்த இவரை வீட்டை விட்டே அனுப்புகிறார்.சில ஆண்டுகள் கழித்து ஶ்ரீதேவி நடித்த ஏதோ ஒரு ஹிந்தி படத்தை இவர் பார்க்கும்போது இவர் சொன்ன மூக்கு தொடர்பான மாற்றங்களுடன் அவர் இருப்பதை காண்கிறார்!

 
- அண்ணாவின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்துவந்த தருணம். எஸ்.ஏ.சந்திரசேகர் நேரடியாக கலைஞானம் அலுவலகத்திற்கு சென்று காத்திருக்கிறார்.கலைஞானம் பதறிப்போய் "என்ன சார் நீங்க சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்திருப்பேனே!" என்று கேட்க "இல்லண்ணே நா வர்றதுதான் முறை" என்று சொல்லிவிட்டு அண்ணாவின் படங்கள் தொடர் தோல்வி அடைவதை சொல்லி "நீங்கதான் ஒரு படத்தை பாத்துட்டு அதுல உள்ள குறைகள் இல்லாம விஜய்க்கு தகுந்தமாதிரி ஒரு கதை பண்ணி கொடுக்கணும்" என்று கேட்க தேவா படத்தை பார்த்துவிட்டு தோல்விக்கு இதெல்லாம் காரணம் என்று குறிப்பிட்டு பிறகு விஷ்ணு படத்தின் கதையை சொல்ல அது வெற்றி பெற்றதாக குறிப்பிடுகிறார்.
 

.
இவ்வளவு வருட அனுபவங்கள் இருந்தாலும் பிழைக்கத்தெரியாத ஒருவனாகவே தான் திரையுலகில் இருந்து விட்டதாக சொல்கிறார்.பெரிதாக காசு பணம் சம்பாதித்தில்லை என்கிறார்.இவரின் கதைகளை வாங்கிக்கொண்டு சில்லறை காசாக கொடுத்தவர்கள்,பைசா கொடுக்காமல் இவர் கதைகளை களவாடி எடுத்து பல லட்சம் பார்த்தவர்கள்,இவரால் ஆதாயம் பல பெற்று இவரை கண்டுகொள்ளாமல் போனவர்கள் என்று எவரை பற்றியும் இந்த புத்தகத்தொகுப்பில் அவர் குறையாக கூறவில்லை."அவர்களது சூழ்நிலை அப்படி!" என பெருந்தன்மையாகவே கடந்து செல்கிறார்!